Friday, January 20, 2023

அமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி

 மகாத்மா காந்தி கொலையுண்டச் செய்தியினை இந்தியாவுக்கும் உலகுக்கும் அறிவித்த ஜவஹர்லால் நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டது, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதுஎன்றார். தொடர்ந்து பேசிய நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டதென்றேன் ஆனால் அது தவறு ஏனென்றால் இந்நாட்டில் ஒளிர்ந்த அந்த ஒளி சாதாரணமானதல்ல. இத்தனை வருடங்கள் நமக்கு வழிகாட்டிய அந்த ஒளி தொடர்ந்து பல்லாண்டுகளுக்கு, ஏன் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், இந்நாட்டில் காணப்படும், உலகம் அதனைப் பார்க்கும், பல உள்ளங்களுக்கு அமைதியை அவ்வொளி கொடுக்கும்என்றார். ஆம், அந்த பேரொளி உலகெங்கும் பரவியது. காந்தியப் பேரொளி அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டங்களில் இரண்டறக் கலந்தது பலரும் அறிந்த செய்தி ஆனால் பலரும் அறியாதது, காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான நெடுங்கால உறவு. இக்கட்டுரை அவ்வரலாற்றின் சில செய்திகளை அறிமுகம் செய்து கறுப்பினத்தவரின் மிக முக்கியப் போராட்டத்தில் எந்தளவு காந்தியம் நிலைப் பெற்றிருந்தது என்று விவரிக்கும்


அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டங்களைத் தாண்டி அமெரிக்க கிறிஸ்தவர்களையும், நிற பாகுபாடின்றி, காந்தி பாதித்திருந்தார். அது பற்றியும் சிறிதே முக்கியமான உதாரணத்தோடு விளக்குகிறேன்.




காந்தியும் மார்டின் லூதர் கிங்கின் முன்னோடிகளும்


ஒடுக்கப்பட்டோருக்கு எப்போதும் உலகமயமானதொரு பார்வை இருக்கும். ஒடுக்கப்படுகிறவர்கள் தங்களைப் போன்றவர்களின் நிலையும் அதற்கெதிரான போராட்டங்கள் எவ்வாறு சம காலத்தில் உலகில் வேறிடங்களிலும் வரலாற்றிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கற்று, தங்கள் சூழலுக்குள் அதிலிருந்து ஏதாவது செயலாற்ற முடியுமா என்று விவாதிப்பது உண்டு.


காந்தியை செதுக்கிய ஆசான்களில் பலர் அவரின் வாழ்க்கை வரலாறுகளில் எல்லாம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறார்கள் - ஹென்றி டேவிட் தோரூ, ஜான் ரஸ்கின், டால்ஸ்டாய், கீதாசார்யன், ராமன், இயேசு முதலானோர். ஆசான்கள் என்ற வகைமைக்கப்பால் காந்தி மாஜினி போன்ற வரலாற்று நாயகனிடமிருந்தும் புக்கர் டி. வாஷிங்டன் போன்ற சமகால உரிமைப் போராளிகளிடமிருந்தும் கற்றார். புக்கர் வாஷிங்டன் அமெரிக்க கறுப்பின உரிமைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். தென்னாப்பிரிக்க போராட்டங்களின் ஆரம்ப நாட்களில் கறுப்பினத்தவர் பற்றி தாழ்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்த காந்தி புக்கர் வாஷிங்டனை படித்து தன் கருத்துகளை மாற்றிக் கொண்டதோடு வாஷிங்டனின் உரிமைப் போராட்டம் குறித்த கருத்துகளையும் ஒரு காலம் வரை ஏற்றார். 1903-இல் காந்தி புக்கர் வாஷிங்டன் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார். அநேகமாக காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான முதல் தொடர்பு இதுவாகத் தான் இருக்கும்.


இந்தியாவில் காந்தி 1920-இல் ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கியதில் இருந்து அமெரிக்க கறுப்பினத்தவர் அவரை தொடர்ந்து கவனித்து தங்கள் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். மார்ச் 10, 1922-இல் காந்தி கைது செய்யப்பட்டார், இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 12, 1922 அமெரிக்க கறுப்பின உரிமைப் போராளி மார்கஸ் கார்வி காந்தியின் கைது பற்றி ஒரு நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டி “380 மில்லியன் மக்களின் உரிமையை நசுக்கும் அரசுகைது செய்திருக்கிறதென்றார். மார்கஸ் கார்வி தொடர்ந்து காந்தியை கவனப்படுத்துபவராக இருந்தார். “The Negro World” பத்திரிக்கை காந்தியின் வழக்கைத் தொடர்ந்து கவனித்து எழுதி வந்தது. மார்கஸ் கார்வியின் சுயசரிதையைப் படித்த காந்தி அதனால் உந்தப்பட்டு 1926-இல் எழுதிய “Race and Arrogance” கட்டுரையில் அமெரிக்க கறுப்பினத்தவர் பற்றி ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார்


காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான முக்கியமான தொடர்பாளர்களில் ஒருவர் டபிள்யு.. டு பாய் (W.E.B. Du Bois). லாலா லஜபதி ராய் அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் (1914 - 1919) இருந்த போது டு பாயை சந்தித்திருக்கிறார். 1928-இல் அமெரிக்கா சென்ற சரோஜினி நாயுடுவும் சந்தித்தார். காந்தியின் உற்ற நண்பர் சி.எஃப். ஆண்ட்ரூஸும் டூ பாயை சந்தித்திருக்கிறார். இவர்கள் மூலமாகவும் கறுப்பினத்தவரின் பத்திரிக்கைகள் வாயிலாகவும் காந்தியைப் பற்றி அறிந்த டு பாய் தான் 1929-இல் ஆரம்பித்த “The Crisis” பத்திரிக்கைக்கு காந்தியிடமிருந்து செய்தி வேண்டுமென்று கேட்டு கடிதமெழுத காந்தியும் அதற்கு பதில் செய்தி அனுப்பியிருக்கிறார். பின்னர் காந்தி குறித்து டு பாய் கட்டுரையும் எழுதினார்.


1930-களில் வெளிவந்த இரண்டு புத்தகங்கள் அமெரிக்காவில் காந்தியை பெருமளவு பேசுப் பொருளாக்கியது. ரிச்சர்ட் கிரெக் அமைதி விரும்பிகளான குவேக்கர் வகை கிறிஸ்தவர். இவர் சபர்மதி ஆஸ்ரமத்திலும் வேறு இடங்களிலும் இந்தியாவில் ஐந்து வருடம் தங்கியிருந்து காந்தியைப் பயின்றும், பரப்புரையும் செய்தவர். பின்னர் 1934-இல் “The Power of Non-Violence” புத்தகத்தை வெளியிட்டார். இரண்டாம் புத்தகம், 1939-இல் வெளிவந்த “War Without Violence”, இதனை எழுதியவர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கெடுக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு பின் அமெரிக்காவுக்கு சென்ற கிருஷ்ணலால் ஷ்ரீதாரணி . கிருஷ்ணாலால் ஷ்ரீதாரணியின் இப்புத்தகம் 1940-இல் ஸ்தாபிக்கப்பட்ட “Congress of Racial Equality” (CORE) நிறுவனத்துக்கு மிகப் பெரிய உந்துதல்


கிருஷ்ணலால் ஷ்ரீதாரணியின் புத்தகத்தால் ஊக்கம் பெற்ற போராளிகளுள் முக்கியமானவர் கறுப்பின பெண்மணி பாலி முர்ரே ( Pauli Murray). முர்ரே தன் நினைவு நூலில் 1940-களில் பல இளம் கறுப்பினத்தவர் காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் போராட்டங்களில் காந்திய வழிமுறைகளை இணைக்க முனைந்தனர் என்கிறார்


Pauli Murray

ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவரின் அறிவுத் தரப்பில் கல்விநிலயங்களில் செல்வாக்குடன் இருந்த மோர்தெகாய் ஜான்சன், பெஞ்சமின் மேய்ஸ், ஹோவர்ட் தர்மன் ஆகியோர் காந்தியுடன் கொண்டிருந்த தொடர்பும் காந்தியம் பற்றி அவர்கள் அமெரிக்காவில் செய்த உரையாடல்களும் மிக முக்கியமானவை. பெஞ்சமின் மேய்ஸ் 1937-இல் காந்தியை சந்தித்து விவாதித்திருக்கிறார். காந்தியத்தை சில விமர்சனங்களோடு தான் மேய்ஸ் ஏற்றார். ஹோவர்ட் தர்மன் 1935-இல் காந்தியை சந்தித்து விவாதித்தார். மார்டின் லூதர் கிங்குக்கு காந்தியை அறிமுகம் செய்ததில் மோர்தெகாய் ஜான்சனுக்கு பெரும் பங்குண்டு.


ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் உரிமைப் போராட்டத்தில் காந்தியத்தை அறிமுகம் செய்து பிணைத்ததில் மிக முக்கியமானவர் பேயார்ட் ரஸ்டின். ரஸ்டினும் கிருஷ்ணாலாலின் புத்தகத்தை படித்திருந்தார். ரஸ்டின் மீது செல்வாக்கு செலுத்திய ஒருவர்அமெரிக்க காந்திஎன்றழைக்கப்பட்ட .ஜே.மஸ்டி. மார்டின் லூதர் கிங் காந்தியை அறிந்திருந்தாலும் காந்தியத்தை செயல்பாடாக்க ரஸ்டின் தான் மிகப் பெரிய காரணி. ரஸ்டின் காந்தியை தத்துவார்த்த ரீதியாக மட்டும் பயிலாமல் யதார்த்த ரீதியாகவும் பயின்றார், மார்டின் லூதரும் அத்தகையதொரு அனுகுமுறையை காண்பித்தார். காந்தியைக் காண வரும் ஆயிரக் கணக்கானவர்களை அவர் கூட்டங்களில் எப்படி ஒழுங்கு செய்யப்பட்டார்கள் என்று அறிந்து அதனை பிற்காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க “March on Washington” கூட்டத்தில் செயல்படுத்தினார். அங்கு தான் மார்டின் லூதர் கிங்எனக்கு ஒரு கனவு இருக்கிறதுஉரையாற்றினார். ரஸ்டினும் மார்டின் லூதர் கிங்கும் இணைந்தது தான் வரலாற்றில்மண்ட்காமரி பேருந்து பிரயாண பகிஷ்கரிப்பு” (Montgomery Bus Boycott).

மார்டின் லூதர் கிங் காந்தியை அறிதல்


அமெரிக்க கல்லூரிகளில் கறுப்பினத்தவருக்காக அவர்களாலேயே நடத்தப்பட்ட பல கல்லூரிகளும் சில பல்கலைக் கழகங்களும் இன்றும் மதிக்கப்படுவன. அம்மாதிரி கல்லூரியான மோர்ஹவுஸ் (Morehouse College, Atlanta) கல்லூரியில் செப்டம்பர் 1944-இல் மார்டின் லூதர் கிங் சேர்ந்தார். அக்கல்லூரியின் பிரசிடெண்டான பெஞ்சமின் மேய்ஸ் மார்டின் மீது மிகப் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் என்று மார்டினே பதிவு செய்திருக்கிறார். பெஞ்சமின் மேய்ஸ் காந்தியை சந்தித்தது குறித்து முன்பு குறிப்பிட்டேன். மேய்ஸ் கல்லூரியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உரையாற்றுவது வழக்கம். அப்போதெல்லாம் மேய்ஸ் காந்தி பற்றி அடிக்கடி குறிப்பிடுவாராம். மோர்ஹவுஸ் கல்லூரியில் மார்டின் லூதர் கிங்குக்கு முன் பயின்று காந்தியால் ஈர்க்கப்பட்ட இன்னொருவர் ஹோவர்ட் தர்மன். தர்மன் முன்னர் குறிப்பிட்டது போல் மார்டின் லூதர் கிங்குக்கு முன்பே காந்தியால் ஈர்க்கப்பட்ட கறுப்பினத்தவரில் முக்கியமானவர்.


மோர்ஹவுஸ் கல்லூரிக்குப் பின் மார்டின் மேற்கொண்டு இறையியல் படிக்க பிலடெல்பியா நகரிலுள்ள குரோஸர் இறையியல் கல்லூரியில் சேர்ந்தார் (Crozer Theological Seminary). அங்குஅமெரிக்க காந்தி.ஜே.மஸ்டி  உரையாற்றியதை மார்டின் கேட்டார். மஸ்டியின் பூரண யுத்த எதிர்ப்பையும் நீட்ஷே வலிமையைப் போற்றுவதையும் தத்துவ மோதல்களாக மார்ட்டின் அவதானிக்க ஆரம்பித்தார். இவற்றுக்கிடையே 1950-இல் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தின் பிரசிடெண்ட் மோர்தெகாய் ஜான்ஸன் பிலடல்பியா நகரின் தேவாலயம் ஒன்றில் காந்தி பற்றி பேசியதை கேட்ட மார்டின் உடனே காந்தி பற்றி அறிய ஆறு புத்தகங்களை வாங்கிப் படித்ததாகச் சொல்கிறார். காந்தி பற்றிய புத்தகங்கள் அந்தளவு எளிதாக பிலடெல்பியாவில் கிடைத்ததே நமக்கு காந்தி எந்தளவு பிரபலமாக இருந்தார் என்பதைச் சொல்லும்


காந்தி ஏன் தன்னை ஆட்கொண்டார் என்று மார்டின் லூதர் கிங் தன்னுடைய “Stride Toward Freedom” நூலில் விளக்கியுள்ளார். “ அன்பை தனி மனிதர்களிடையேயான அறம் என்று மட்டுமே இருந்த புரிதலை காந்தி தனி மனிதனுக்கும் அதிகார திரட்சியான சமூகத்துக்கிடயே உறவுக்கும் பொருந்துமென்று புரிய வைத்தார். சமூக மாற்றத்துக்கு அன்பு ஒரு கருவியென்று காந்தி கருதினார். சமூக மாற்றத்துக்காக நான் பல மாதங்களாக தேடிக் கொண்டிருந்த கருத்தியலாக அன்பை வலியுறுத்தும் காந்தியம் எனக்குத் தோன்றியதுஎன்ற மார்டின் ஜெரமி பெந்தம், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ், லெனின், ரூஸோ, நீட்ஷே போன்றவர்களின் தத்துவங்களின் போதாமைகளோடு ஒப்பிட்டால் காந்தியின் தத்துவம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தத்துவமாக தெரிந்ததாகவும் சொல்கிறார்





காந்தியம் கோழைத்தனமல்ல என்றும் மார்டின் விளங்கிக் கொண்டார். “உண்மையான அமைதி மார்க்கம் தீமைக்கு அடி பணிவதல்ல மாறாக தீமையை வன்முறையற்ற முறையில் எதிர்கொள்வதேதீமையை வன்முறையைக் கொண்டு எதிர்ப்பவருக்கு சற்றும் சளைக்காத வீரியத்தோடு எதிர்ப்பவர் காந்தி, ஒரே வித்தியாசம் அவர் வெறுப்பை தவிர்த்து அன்பின் வழியை கைக் கொள்பவர்.”


மார்டின் லூதர் கிங்குக்கு இறையியலாளர் ரெயின்ஹோல்ட் நீபுர் (Reinhold Neibur) முன்மொழிந்த மனித மனத்தின் தீமையிழைக்கும் பண்பு முக்கிய கருதுகோள் எனினும் நீபுர் மனித மனத்தின் கீழ்மைகளை தீர்க்கமாக கண்டறிந்த அதே நேரத்தில் மனித மனத்தின் கருணைக்கான பண்பினை போதிய அளவு கருத்தில் கொள்ளாதது அந்த தத்துவத் தரப்பின் போதாமை என்று முடிவுக்கு வந்தார். இவ்விடத்தில் தான் அவர் காந்தியத்தின் மகிமையைக் கண்டுணர்ந்தார்

அகிம்சை (non-violence) குறித்து மார்டின் லூதர் கிங் அதன் முக்கிய அம்சங்களை அடையாளப்படுத்தி சொல்பவை காந்தியம் பற்றி அறிந்தவர்கள் உடனடியாக காந்தியோடு தொடர்புபடுத்தி புரிந்துக் கொள்ள முடியும்.


அகிம்சை எதிர் தரப்பினரின் தோல்வியை விரும்புவதற்கு மாறாக அவர்களின் புரிதலையும் நட்பையும் வேண்டும். சத்தியாகிரகி தன் எதிர்ப்பை ஒத்துழையாமை, பகிஷ்கரிப்பு போன்ற செயல்களால் தெரிவிப்பார் ஆனால் அவை எதிர் தரப்பின் மனதில் தங்கள் செய்கை அல்லது கருத்தியல் பற்றி வெட்கம் கொள்ளச் செய்வதற்கு அச்செயல்பாடுகள் ஒரு மார்க்கம் தானே தவிர முடிவல்ல. முடிவில் மனதின் மீட்பும், காழ்ப்புகள் மறைந்த நட்புறவுமே குறிக்கோள்


அகிம்சை வழியின் பண்பு தீமைக்கு எதிரான போராட்டமே தவிர அத்தீமையைச் செய்யும் சூழலில் இருக்கும் மனிதர்களுக்கெதிரானதல்ல……..மண்ட்கோமரி மக்களுக்கு நான் சொல்வது இது தான், “இந்த நகரில் வெள்ளைக்காரர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே உரசல் இல்லை. இங்கிருக்கும் உரசலின் அடித்தளம், நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே, ஒளிக்கும் இருளுக்குமான போராட்டம். இதில் வெற்றி என்பது 50,000 கறுப்பினத்தவரின் வெற்றி அல்ல மாறாக அது நீதிக்கும் ஒளிக்கும் கிடைத்த வெற்றி. நாம் அநீதியை வீழ்த்த தான் முறபடுகிறோமேத் தவிர அநீதியின் பால் நிற்கும் வெள்ளைக்காரர்களை வீழ்த்த அல்ல”. (‘We are out to defeat injustice and not white persons who maybe unjust”)”


அகிம்சையாளன் எதிரியின் ஓவ்வொரு அடியையும் திருப்பி அடிக்காமல் ஏற்க வேண்டும். ‘சுதந்திரம் கிடைக்கும் முன் ரத்தம் ஆறாக ஓடும் ஆனால் அது நம் ரத்தமாக இருக்க வேண்டும் (எதிரியின் ரத்தம் அல்ல) என்று காந்தி தன் தேசத்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்” (நேரு தன் சுயசரிதையில் போலீசாரின் லத்தி அடிகளால் வீழ்த்தப்பட்ட போது ஒரே பாய்ச்சலில் அவர்களை தாக்கும் உணர்வை கட்டுபடுத்திக் கொண்டதை நினைவுகூர்ந்திருப்பார்)


அகிம்சையின் இன்னொரு அம்சம் அது வெளிப்புற ஸ்தூலமான வன்முறையை மட்டும் தவிர்ப்பதல்ல, அது நம் ஆன்மாவினுள் இருக்கும் வன்முறையையும் தவிர்ப்பது. சத்தியாகிரகி எதிரியை சுட்டு வீழ்த்த மறுப்பதோடு அவனை வெறுக்கவும் மறுப்பவன்.”


இவ்விடத்தில் அன்பு செலுத்துவது என்பது மேம்போக்கான உணர்ச்சி அல்லது வெறும் பாசமல்ல. ஒடுக்குமுறையாளர்களை ஒடுக்கப்படுபவர்கள் பாசமாக நேசிக்க வேண்டுமென்பது முட்டாள்தனம். மாறாக, இங்கே அன்பு என்று குறிக்கப்படுவது மனங்களின் மீட்சிக்கான சாத்தியத்தின் புரிதல்” (‘Love in this connection means understanding, redemptive goodwill’).


இது வரை காந்தியத்தை தத்துவார்த்த புரிதலுக்குட்படுத்திய மார்டின் லூதர் கிங், ரஸ்டினைப் போல், அதிலிருந்து சற்றே நகர்ந்தி யதார்த்த புரிதலுக்கு வருகிறார். தங்கள் போராட்டத்துக்காக சிறைச் செல்ல வேண்டியிருக்கும் என்று உணர்ந்து அது குறித்த குற்ற உணர்வுக்கு பதில் சொல்ல மார்டின் காந்தியை மேற்கோள் காட்டுகிறார், “ஒருவன் நீதிக்காக கிளர்ச்சி செய்து சிறை செல்ல நேரிடுமென்றால் அவன் சிறைச் செல்வதை காந்தி சொல்வதுப் போல், 'முதலிரவு அறைக்குச் செல்லும் மணவாளன் போல்சிறிதே அச்சமும் மிகுதியான எதிர்ப்பார்ப்புடனும் செல்லட்டும்”. சிறைச் செல்வதை வெட்கம் கொள்ளத் தக்க செயலல்ல என்றும் கௌரவமாக நினைக்கக் கூடியதென்றும் காந்தியம் நிறுவியதால் பற்பல உயர்குடியினர், குறிப்பாகப் பெண்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்


இத்தகையப் புரிதல்களுடன் மார்டின் லூதர் கிங் மண்ட்கோமரி பேருந்து பகிஷ்கரிப்பு போராட்ட களத்துக்கு தலைமை ஏற்க வந்தார். அவருடன் களம் புகுந்த கறுப்பினத்தவர் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் மகத்தானதொரு அத்தியாயத்தை எழுத முற்பட்டனர்.


ரோஸா பார்க்ஸும் மண்ட்கோமரி போராட்டமும்


அமெரிக்க நிறப்பாகுபாடு சட்டங்கள்ஜிம் குரோ (Jim Crow) சட்டங்கள்என்று குறிக்கப்படும். அச்சட்டங்கள் வெள்ளைக்காரர்களும் கறுப்பினத்தவரும் சமூகத்தில் கலந்துறவாட தடை விதிக்கும் சட்டங்கள், அவை ஓவ்வொரு பொது இடத்திலும் கறுப்பினத்தவர் என்ன செய்யலாம், செய்யக் கூடாதென்று வரையறுப்பவை. பேருந்துகளில் வெள்ளைக்காரர்கள் முற்பகுதியும் கறுப்பினத்தவருக்கு பிற்பகுதி வரிசைகளும் விதிக்கப்பட்டவை அந்த பிற்பகுதி வரிசையிலும் சிலவற்றை வெள்ளைக்காரர்கள் கூட்டம் அதிகமானால் கறுப்பினத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டும். இப்படியான சட்டம் இருக்கும் அலபாமா மாநிலத்தில், மண்ட்கோமரி நகரில் ரோஸா பார்க்ஸ் என்கிற கறுப்பு பெண்மணி வெள்ளைக்காரர் ஒருவருக்கு இடமளிக்க மறுத்து தன் இருக்கையில் இருந்த எழாததற்காக டிசம்பர் 1, 1955 கைது செய்யப்பட்டார். ரோஸாவின் கைது ஒரு பெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. வெகு காலமாகவே இம்மாதிரி உள்ளூர் பேருந்துகளில் நிலவும் பாகுபாட்டிற்கு எதிராக பல இடங்களில் வழக்குகளும் போராட்டங்களும் நடந்துள்ளன. மண்ட்கோமரி நிகழ்வு தேசிய போராட்டமாக உருவெடுத்தது.


ரோஸா பார்க்ஸ் கைதான அடுத்த சில நாட்களிலேயே மார்டின் லூதர் கிங் போராட்டத்துக்கு தலைமையேற்க அழைக்கப்பட்டார். பேருந்துகளை தவிர்ப்பதென்று முடிவெடுத்த உடனே கார் வைத்திருந்த கறுப்பினத்தவர், டாக்ஸிகள் வைத்திருந்த கறுப்பினத்தவர் தங்கள் வாகனங்களை 10 செண்ட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அளித்தனர். கவனிக்கவும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்கு வர இயலாதவர்களுக்கு இடர்கள் உண்டு. இந்த ஏற்பாடுகளைத் தாண்டி பல்லாயிர கணக்கானோர் நடைப் பயணமாக சென்ற காட்சிகள் அமெரிக்கா எங்கும் பரவியது. கறுப்புப் பெண்களை வேலையை விட்டு துரத்தும்படி அறிவுறுத்திய மேயரை வெள்ளைக்கார எஜமானிகள் அவரே வந்து பாத்திரம் கழுவுவாரா என்று கேட்டு தங்கள் வீட்டில் வேலைச் செய்யும் கறுப்புப் பெண்களை தாங்களே காரில் அழைத்து வந்தனர்





டிசம்பர் மாதம் “The Montgomery Advertiser”  ஜூலியட் மார்கன் எனும் வெள்ளைக்காரப் பெண்ணின் கடிதமொன்றை வெளியிட்டது, அப்பெண்மணி எழுதினார், “காந்தியின் மீது தாக்கம் செலுத்திய தோரூவிடமிருந்தும் காந்தியிடமிருந்தும் நம் நீக்ரோக்கள் (அக்காலப் பிரயோகம்) பாடம் கற்று இருக்கின்றனர்”. அவர் மேலும் மண்ட்கோமரி போராட்டத்தை காந்தியின் தண்டி யாத்திரையுடன் ஒப்பிட்டார் என்கிறார் மேரி கிங் (மார்டினின் உறவினரலல்ல) தன் “Mahatma Gandhi and Martin Luther King Jr: The Power of Nonviolent Action” புத்தகத்தில். அப்புத்தகமே இக்கட்டுரை எழுத ஊக்கமும்  செய்திகளும் அளித்ததில் முக்கியம்.


போராட்டத்தை செவ்வனே நடத்த பல கறுப்பினத்தவர் நடத்தும் சர்ச்சுகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு போராட்ட நோக்கங்கள், போராட்ட வழி முறைகள், மனம் சோராதிருக்க கிறிஸ்தவ பிரசங்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய கூட்டங்களின் முக்கியமானதொரு அம்சம்காந்திய வழிமுறைகள் குறித்த குறு நாடகங்களும் பிரச்சாரங்களும்என்கிறார் மேரி கிங்.


போரட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு சர்ச் மீது வெள்ளைக்கார இனவெறியாளர்கள் குண்டு வீசி தாக்கினர். பழி வாங்க கறுப்பினத்தவர் ஆயுதங்களோடு ஆஜரான போது அவர்களை அமைதியின் வழி நடக்கச் சொல்லி அனுப்பி வைத்தார் மார்டின் லூதர் கிங். பின்னர் அவர் வேறொரு சமயத்தில்மண்ட்கோமரி போரட்டத்தின் போது எங்களுக்கு காந்தியின் வழிமுறை வழிகாட்டியாக இருந்ததுஎன்றார்


போராட்டத்தின் போது 27 வயதே மார்டின் லூதர் கிங் காந்தியப் போராட்டம் பற்றி அறிந்திருந்தாலும் அவருக்கு போராட்ட வழிகள் மிகப் புதிது என்றுணர்ந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பேயார்ட் ரஸ்டினை உதவிக்கு அழைத்துக் கொள்ளச் சொன்னார். ரஸ்டினின் காந்திய ஈடுபாடு குறித்தும் உரிமைப் போராட்ட குழுக்களில் அவர் முக்கிய பங்கு பெற்றதையும் முன்பே பார்த்தோம். மண்ட்கோமரி வந்த ரஸ்டின் செய்த முதல் வேலை சிறைக்குச் செல்வது கேவலமல்ல என்றும் அதனை கொண்டாட்டமாகச் செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது தான். இதைத் தான் பின்னர் இப்போராட்டம் குறித்து எழுதிய மார்டின் காந்தியின் அறிவுரையோடு தொடர்புபடுத்தி எழுதினார். போரட்டத்தின் இடையே முன்பே சுட்டிக்காட்டிய ரிச்சர்ட் கிரெக் எழுதிய “The Power of Nonviolence” புத்தகத்தையும் கிருஷ்ணலால் ஷ்ரீதாரணியின் “War Without Violence” புத்தகத்தையும் மீள் வாசிப்பு செய்தார் மார்டின். இது வரை குறிப்பிட்டத் தகவல்களை நம் மனதுள் தொகுத்துக் கொண்டால் மண்ட்கோமரி போராட்டத்தின் ஆன்மாவாக காந்தியும் காந்தியமும் இருந்தது துலங்கும்.


மண்ட்கோமரி போராட்டத்தின் போது மார்டின் லூதர் கிங் தன் பாதுகாப்புக்கென துப்பாக்கி வைத்திருந்தார். ரஸ்டினை அது உறுத்தியது. காந்தியப் போராட்டத்தின் தலைவர் அப்படி வைத்துக் கொள்ளலாகதென வாதிட்டார். பின்னர் மார்டின் அவ்வழகத்தை விட்டாலும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்தது ஒரு முரண் தான்.


கிட்டத்தட்ட ஒரு வருடம் நீண்ட போராட்டம் கடைசியாக நவம்பர் 1956-இல் உச்ச நீதிமன்றம் இத்தகைய பிரித்து வைக்கும் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்த போது முடிவுக்கு வந்தது. ஒரு வகையில் மிக நீண்ட காந்தியப் போராட்டம் இதுவாகத் தான் இருக்கும். தீர்ப்பு மொத்தமாக எல்லா பிரச்சனையையும் தீர்த்து வைக்கவில்லை. எங்கும் உட்காரலாம் என்று உரிமைப் பெற்ற கறுப்பினத்தவர் பேருந்துகளில் பிரயாணித்த போது தாக்கப்பட்டனர். மிக மோசமாக தாக்கப்பட்டப் பெண் ஒருவர் திருப்பி அடிக்கும் உணர்வை தவிர்த்ததாகச் சொன்னார்


மண்ட்கோமரி போராட்டத்தின் வெற்றி பற்பல உரிமைப் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. அவற்றுள் வட கரோலினா மாநிலத்தில் கிரீண்ஸ்பரோ நகரில் உணவகங்களில் கறுப்பினத்தவர் மீது திணிக்கப்பட்ட பாகுபாட்டிற்கு எதிராக மாணவர்கள் சிறிய அளவில் ஆரம்பித்த போராட்டம் பல நகரங்களுக்குப் பரவியது. உணவகங்களில் சரி சமமாக உட்கார்ந்து தாங்களும் கடை சர்வீஸ் செய்யப்பட வேண்டுமென்று கோரினர். அப்படி உட்கார்ந்தவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் தாக்குதல்கள் நடத்துவது வாடிக்கை. இப்படியானஉட்கார்ந்து போராடுவது” (Sit-ins) கல்லூரி மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது. அவர்கள் வகுத்துக் கொண்ட நெறிமுறைகள், “திருப்பி அடிக்கவோ வசைச் சொற்களை பயன்படுத்துவதோ கூடாது, கடை வாசல்களை மறிக்கக் கூடாது, எப்போதும் நட்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்ஆகியவை. இப்போரட்டங்களை ஆரம்பித்த ஒருவர் இந்தியா பற்றிய ஆவணப் படம் ஒன்றைன் மூலமாக காந்தியை அறிந்தததாகவும் காந்திய வழிமுறையால் ஈர்க்கப்பட்டதாகவும் சொன்னார். இப்போராட்டம் மண்ட்கோமரி போராட்டம் மாதிரி காந்தியப் போராட்டமாகவே இன்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.


நம் தமிழகத்தில் கடந்த எண்பதுகள் வரையும் கூட மீனாட்சிபுரம் போன்ற ஊர்களில் தலித்துகள் பேருந்துகளில் உட்கார்ந்து பயணிக்க முடியாது. ஆதிக்க சாதியினர், சிறு வயதினர் கூட, எவ்வளவு வயதான தலித்தையும் இருக்கையில் இருந்து எழச் சொல்ல முடியும். அமெரிக்கவிலாவது நிற வேறுபாடு ஒருவரை வேறுபடுத்திக் காட்டிக் கொடுக்கும் ஆனால் தமிழகத்தில் ஒரே மாதிரி இருக்கும் இருவருக்குள் இது எப்படி சாத்தியமாகின்றது என்பதே அவல ஆச்சர்யம். இப்படியான ஒதுக்குதலுக்கு எதிர்ப்பாகத் தான் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாமுக்கு மதம் மாறினர். அப்படி மதம் மாறிய ஒருவர் பேட்டியொன்றில் தான் இனி இருக்கையில் இருந்து எழத் தேவையில்லை என்றார். இப்படி ஒரு அநீதி சம காலத்தில் நம் மாநிலத்திலேயே நடப்பது பலரும் அறியாதது.


கிறிஸ்தவ இறையியலின் மீதான காந்தியின் செல்வாக்கு


காந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிக சுவாரசியமான உறவு இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற முயற்சிகளையும், மதம் மாறுபவர்களையும் அளவுக்கு அதிகமாகவே காந்தி கடிந்துக் கொண்டார். ஆயினும் கிறிஸ்தவ இறையியலாளர்கள் காந்தியை தேன் நிரம்பியப் பூவை மொய்க்கும் வண்டுகள் போல் மொய்த்தனர். காந்தி மேற்கத்திய கிறிஸ்தவ தேவாலயங்களில் பேசப்பட்டதுப் போல் இந்து மடங்களிலோ இந்து சமய அமைப்புகளிலோ பேசப் பட்டதில்லை. காந்தியில் ஒரு கிறிஸ்துவை பல இறையியலாளர்கள் கண்டனர். காந்தியை மதம் மாற்ற முயற்சிகளும் நடந்தன ஆனால் அம்மாதிரி அற்பத்தனங்களில் ஈடுபடாமல் அவரின் சத்தியாகிரக கருத்தியலில் கிறிஸ்துவின் போதனைகளின் சாரத்தைக் கண்டு அவற்றை அவர் நடைமுறைப்படுத்தும் ஆச்சர்யத்தை அறிந்து, விவாதித்து, சுவீகரித்து தங்கள் இறையியல் கற்பிதங்களுக்குள் அவரின் கருத்தியலைப் பொருத்தி கவுரவமான உறவினைக் கொண்டவர்கள் அநேகர். இங்கு இரண்டு உதாரணங்களைக் காண்போம்.


1936-இல் காந்தியை ஹோவர்ட் தர்மன் பார்டோலியில் சந்தித்தார். 1949-இல் தர்மன் எழுதிய “Jesus and the Disinherited” நூலில் காந்தியிடமிருந்து கறுப்பினத்தவர் கற்றுக் கொள்ளக் கூடியதென்று அவர் அடையாளப்படுத்தியது, சமரசமற்ற நேர்மையான சொல்லாடலை. ஒடுக்குமுறையை சமாளிக்கும் தந்திரமாக ஒடுக்கப்படுபவர்கள் கையாளும் தந்திரோபாயங்களுள் பொய்மையும் ஒன்று ஆனால் அது காலப் போக்கில் உள்ளத்தை காவு வாங்கக் கூடியதென்று சொல்லி காந்தி முன் வைக்கும் சமரசமற்ற நேர்மையைப் பரிந்துரைக்கிறார். தர்மன் காந்தியின் யோசனையை விவிலியத்தில் சொல்லப்படும்எக்கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்று தெளிவுறப் பேசினால் பொய்க்கு இடமிருக்காதுஎன்ற வசனத்தோடு தொடர்புபடுத்திச் சொல்கிறார்


Picture from:  https://www.beaconbroadside.com/broadside/2014/10/when-howard-thurman-met-mahatma-gandhi-nonviolence-and-the-civil-rights-movement.html


இரண்டாம் உதாரணம் மார்டின் லூதர் கிங்கின் ஓரு பிரசங்கத்தில் இருந்து. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்கு முன்பான ஞாயிறு குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். முக்கியமான அந்த நாள் ஒன்றில், மார்ச் 22 1959-இல், மண்ட்கோமரி போராட்டத்தின் போது தாக்கப்பட்ட்ட அதே தேவாலயத்தில் காந்தி பற்றி பிரசங்கம் செய்தார் மார்டின்


குருத்தோலை ஞாயிறன்று தான் கிறிஸ்து ஜெருசலேமிற்குள் நுழைந்தார், அவர் தங்கள் அரசர் ஆவார் என்று யூதர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆகவே இந்நாளில் சம்பிரதாயமான பிரசங்கங்கள் தேவனின் அரசத் தன்மை, இறைத் தன்மை என்ற கோணங்களில் இருக்கும் ஆனால் தான் இந்தியர் ஒருவர் பற்றி பேசப் போவதாகவும் அந்த இந்தியர் கிறிஸ்துவின் சாரத்தைப் பிரதிபலித்தவர் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தார் மார்டின் லூதர் கிங்.


காந்தியிடம் கிறிஸ்துவின் சாரமாக மார்டின் கண்டது காந்தி தன் வாழ்வில் தனி வாழ்வு, பொது வாழ்வு என்ற பிரிவினைகள் இல்லாமல் பூரண வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்த நேர்மையை. சராசரி மனிதன் தன் வாழ்வில் எப்பொதும் வாழும் வாழ்க்கைக்கும் வாழ நினைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு இடைவெளி இருக்கும். அப்படியான இடைவெளியில்லாத நேர்மையான வாழ்வை காந்தி வாழ்ந்தார் என்றார் மார்டின். “In his life there was no gulf between the “is” and the “oughts”. Here was a man who had absolved the “isles” of his being and the “lightness” of his being.”


மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், தலைவர்களும். தவறிழைக்கும் தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டுமென்று காந்தி வன்முறை நிகழ்வொன்றினுக்குப் பின் தேசமெங்கும் தீவிரமடைந்திருந்த ஒத்துழையாமை போரட்டத்தை மன்னிப்புக் கோரி திரும்பப் பெற்றதை மார்டின் சுட்டிக் காட்டினார்.


இந்த பிரசங்கத்தை மார்டின் இந்தியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டு திரும்பியப் பின் அளித்தது. இந்தியப் பயணத்தின் போது நேருவுடன் விருந்துண்ட போது அங்கிருந்த மற்றொரு விருந்தினர் இந்தியர்களை அடிமைப் படுத்திய காலனிய ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த வைஸ்ராயின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் என்று குறிப்பிட்டு இத்தகைய நிகழ்வு வெறுப்பை விலக்கிய காந்தியப் போராட்டத்தால் தான் சாத்தியமாயிற்று என்றார்


தேசத்தின் பிளவுகளை குணப்படுத்த முனைந்ததற்காகவே அபிரஹாம் லிங்கன் போல் காந்தியும் சுடப்பட்டார் என்று பிரசங்கத்தின் இறுதியில் இத்தகைய வாழ்வுகளின் முடிவுகள் பற்றி சொன்னார் மார்டின். அவர் வாழ்வும் அப்படியே முடிந்தது வரலாற்று சோகம்


பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே


ஜவஹர்லால் நேருவின் எழுத்துகளின் தொகுப்பு 90 தொகுதிகளைக் கடந்தது. அத்தொகுதிகளை தொகுத்து முடித்த வரலாற்றாசிரியர் சொன்னது ஓரிடத்தில் கூட நேரு யாரைப் பற்றியும், எந்த குழுவினரைப் பற்றியும் அவச்சொல் சொன்னதில்லை, அவர் முற்றிலுமாகப் பகைமையுணர்வைக் கடந்தவர் என்றார். காந்தியின் வாழ்வின் மையக் கருத்தே அது தான். மார்டின் லூதர் கிங், ஹோவர்ட் தர்மன், பெஞ்சமின் மேய்ஸ், பேயார்ட் ரஸ்டின் போன்ற பலருக்கு காந்தியின் வாழ்வில்பிதாவே இவர்களை மன்னியும்என்று தன்னை சிலுவையில் துடி துடிக்க அறைந்தவர்களுக்காக இறைஞ்சிய காவிய நாயகனை கண்டார்கள். அதுவரை விவிலியத்தில் தொன்மமாக மட்டுமே அறிந்த, தாங்கள் நிஜமென்று நம்பினாலும், அன்றாட வாழ்வில் சாத்தியப்படுமா என்று சந்தேகித்த வாழ்வை ரத்தமும் சதையுமாக காந்தி வாழ்ந்து கொண்டிருந்ததே அவர்களை ஈர்த்தது


காந்தி எப்படி டால்ஸ்டாய், மலை பிரசங்கம், தோரூ என்று பலரிடமிருந்து கற்றாலும் தன் இந்து பண்பாட்டு மரபில் அவற்றை பொருத்தி மீள் உருவாக்கம் செய்து கொண்டாரோ அதே போல் மார்டின் லூதர் கிங் போன்றவர்களும் தங்கள் பண்பாட்டு தளத்திலிருந்த கருத்துகளில் காந்தியத்தை கலந்து தான் மீள் உருவாக்கம் செய்து கொண்டனர். காந்தியும் மார்டினும் ஒருவர் மரபிலிருந்து இன்னொருவர் பெற்றும் கொடுத்தும் மானுடம் உய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்த மகான்கள் என்ற அளவில் தான் நான் புரிந்துக் கொள்ள வேண்டும். இன்று இந்தியாவின் தலித் செயல்பாட்டாளர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் போராட்டங்களில் இருந்து கருத்துகளைப் பெற்று இந்தியாவில் முன்னெடுப்புகள் செய்வதும் இந்த அபாரமான தத்துவ பரிமாற்றத்தின் ஒரு அங்கம்.


நம் போன்ற சாதாரணர்கள் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களைத் தான் முன்னெடுக்க வேண்டும் என்றில்லை. காந்தியும், மார்டின் லூதர் கிங்கும் நமக்கு காட்டும் அற உணர்வுகளின் சிறு துளியாவது நம் மனங்களில் குடியிருந்து ஒடுக்கப்படுகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம் மனக்குரல் ஒலிக்க வேண்டும், வெறுப்பகளில்லாமல்


நன்றி: இக்கட்டுரை காலச்சுவடு இதழில் ஜனவரி 2023-இல் வெளியானது. காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு நன்றி

உசாத்துணைகள்

சுட்டிகள்

  1. https://en.wikipedia.org/wiki/Sudarshan_Kapoor 
  2. https://www.ncronline.org/opinion/book-reviews/mentors-american-gandhi 
  3. https://en.wikipedia.org/wiki/Montgomery_bus_boycott 
  4. https://en.wikipedia.org/wiki/Martin_Luther_King_Jr (1929 - 1968)
  5. https://en.wikipedia.org/wiki/Ralph_Abernathy (1926 - 1990)
  6. https://en.wikipedia.org/wiki/Bayard_Rustin (1912 - 1987)
  7. https://en.wikipedia.org/wiki/Rosa_Parks (1913 - 2005)
  8. https://en.wikipedia.org/wiki/Congress_of_Racial_Equality Founded in 1942.
  9. https://en.wikipedia.org/wiki/Pauli_Murray (1910 - 1985)
  10. https://en.wikipedia.org/wiki/A._J._Muste (1885 - 1967)
  11. https://en.wikipedia.org/wiki/Marcus_Garvey (1887 - 1940)
  12. https://en.wikipedia.org/wiki/Reverdy_C._Ransom (1861 - 1959)
  13. https://en.wikipedia.org/wiki/Richard_Gregg_(social_philosopher) 
  14. https://en.wikipedia.org/wiki/Krishnalal_Shridharani (1911 - 1960)
  15. https://en.wikipedia.org/wiki/James_Lawson_(activist) (1928 -…) 94 years old.
  16. https://en.wikipedia.org/wiki/Reinhold_Niebuhr (1892 - 1971)
  17. https://crossculturalsolidarity.com/gandhis-connections-with-booker-t-washington-w-e-b-du-bois-and-marcus-garvey/ 
  18. https://thewire.in/history/howard-thurman-gandhi-nonviolence-civil-rights-movement 
  19. https://www.mkgandhi.org/chrono/arrestofmahatma.php 
  20. https://www.nytimes.com/1928/10/14/archives/indias-poetess-to-visit-america-sarojini-naidu-will-tell-of-the.html 
  21. https://theprg.files.wordpress.com/2009/07/puri-lala-lajpat-rai.pdf 
  22. https://credo.library.umass.edu/view/pageturn/mums312-b181-i613/#page/1/mode/1up 
  23. https://credo.library.umass.edu/view/pageturn/mums312-b210-i035/#page/1/mode/1up 
  24. https://gandhiking.ning.com/notes/Gandhi%27s_Influence_on_the_Modern_African_American_Freedom_Struggle 
  25. https://www.baltimoresun.com/news/bs-xpm-1998-01-19-1998019084-story.html 
  26. https://kinginstitute.stanford.edu/sites/mlk/files/publications/vol1intro.pdf#page=16 
  27. https://kinginstitute.stanford.edu/encyclopedia/johnson-mordecai-wyatt 
  28. https://kinginstitute.stanford.edu/encyclopedia/morehouse-college 
  29. https://www.beaconbroadside.com/broadside/2014/10/when-howard-thurman-met-mahatma-gandhi-nonviolence-and-the-civil-rights-movement.html

புத்தகங்கள்

    1. Mahatma Gandhi and Martin Luther King Jr. — Mary King
    2. The Radical King - Edited by Cornel West
    3. Lost Prophet: The Life and Times of Bayard Rustin - John D’Emilio
    4. American Gandhi: A.J. Muste and the History of Radicalism in the Twentieth Century — Leila Danielson
    5. Jesus and the Disinherited - Howard Thurman
    6. Rhetoric, Religion and the Civil Rights MOvement (1954-1965) - Davis W. Hook and David E. Dixon.
    7. Stride Toward Freedom: The Montgomery Story — Martin Luther King Jr.
    8. Negro With a Hat: The Rise and Fall of Marcus Garvey — Colin Grant
    9. Ella Baker and the Black Freedom Movement: A Radical Democratic Vision — Barbara Ransby
    10. The New Abolition: W.E.B. Du Bois and the Black Social Gospel - Gary Dorrien
    11. Pauli Murray: Song in a Weary Throat. Memoir of an American Pilgrimage.