Pages

Sunday, May 14, 2017

ரோமிலா தாப்பர், ஜெனரல் தாப்பர் பற்றி ஜெயமோகன்: கருவாடு மீனாகாது, கிசுகிசு வரலாறாகாது

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா - ஒரு கிசுகிசு வரலாறு" என்ற ஜெயமோகனின் பதிவு அவருக்கே உரித்தான விரிந்தப் பார்வையோடு எழுதப்பட்டது, சுவாரஸ்யமான வாசிப்புக்குரியது ஆனால் சில மனச்சாய்வுகளால் உண்டான சில புரிதல் திரிபுகளும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாசிரியரான ரோமிலா தாபர் பற்றி. இந்தப் பதிவே கிட்டத்தட்ட "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்துக்கான முதன்மை உதாரணம்.

ஜெயமோகன் மிகச் சரளமாகச் சில வார்த்தைகளை ஒன்றொடொன்று மாற்றிப் பொருத்துகிறார். மிகச் சரியாக ஆங்கிலத்தில் இதைத் தெளிவாகச் சொல்லலாம். He uses terms like 'official history' and 'history' rather loosely and interchangeably. They're not interchangeable terms. There's no such thing as 'gossip history'. It is either 'gossip' or 'history' but it cannot be a hybrid of both.

முதலில் இந்த வார்த்தை 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பதை வரையறுத்துக் கொள்வோம். இச்சொற்றொடர் பெரும்பாலும் அதிகார மையத்தோடு தொடர்புடைய அதிகார ஸ்தாபனங்களின் வெளியீடாக வரும் வரலாறுகளைக் குறிப்பது. அதுவும் முக்கியமாக அதிகார மையத்திடம் இருந்து சுதந்திரமாகவோ தன்னிச்சையாகவோ (autonomous) செயல்படமுடியாத ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களால் அரசாங்கத்தின் பண உதவிக் கொண்டோ, அரசாங்கத்தின் வெளியீடாகவோ எழுதப்படுவது தான் 'அதிகாரப் பூர்வ வரலாறு' எனப்படும். இதைப் பெரும்பாலும் செய்தவை கம்யூனிஸ்ட் நாடுகள் தான். அரசாங்கம் சார்ந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியாகும் வரலாறை பொத்தாம் பொதுவாக இவ்வகையில் வைக்கக் கூடாது. வரலாறை எழுதுபவர்களின் சுதந்திரம், வெளியீட்டில் அரசாங்கத் தலையீடு, வரலாறை எழுதும் விதத்தில் தலையீடு என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.



ஸ்தாபனங்களின் துணைக் கொண்டு எழுதப்படுவதைச் சந்தேகக் கண் கொண்டு மதிப்பிடலாம். தவறில்லை. ஆனால் ஸ்தாபங்களின் துணைக் கொண்டோ, நிதி ஆதாரத்தைக் கொண்டோ எழுதப்படுவதாலேயே ஒரு எழுத்து தன் கௌரவத்தை இழக்காது. எழுத்தை எழுத்தின் தரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். எப்படி நிதி ஆதாரம் பெற்று எழுதுவதனாலேயே உண்மைகள் பொய் ஆகாதோ, அப்படியே, சொந்தக் காசில் எழுதுவதனாலேயே பொய்கள் உண்மையாகாது.

பெரும் ஆராய்ச்சிகள் இன்றும் வளர்ந்த நாடுகளிலேயே அரசாங்கத்தின் நிதி ஆதாரம் கொண்டு தான் செய்யப்படுபவை. அது தான் சாத்தியம். வரலாறை எழுதுவதிலும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் ஆராய்ச்சிகளிலும் அரசாங்கத்தின் நிதியோ அல்லது பெரு நிறுவனத்தின், அது பல்கலைக் கழகமாகக் கூட இருக்கலாம், நிதியோ இல்லாமல் எங்கும் சாத்தியமில்லை.

ராதாகிருஷ்ணன், எஸ்.என்.தேஷ்பாண்டே இருவரும் பெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்திய தத்துவ இயல் பற்றி இன்றும் படிக்கப்படும் நூல்களை எழுதினார்கள். இருவரும் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் கொடுத்த உதவியை வைத்து தான் எழுதினார்கள். எழுத்தின் தரம், உலகத் தரம். பி.வி. கானே (P.V. Kane), பாரத ரத்னா வழங்கப்பட்ட இந்திய தத்துவ இயல் ஆசிரியர், முப்பது வருட உழைப்பில் எழுதிய 'இந்திய தர்ம சாஸ்திரம்' ஒரு ஸ்தாபனத்தின் உதவியும், காலனி அரசின் உதவியால் நடந்த 'ஏஷியாடிக் சொஸைட்டி' ஸ்தாபனத்தின் உதவியாலும் எழுதப்பட்டது தான். கானேயின் எழுத்தை ஸ்தாபன ரீதியான எழுத்து என்று புறங்கையால் தள்ளுவதை ஜெயமோகனே ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் அந்த ஸ்தாபனம் ஒரு மார்க்ஸிய வரலாற்றாசிரியருக்கு அத்தகைய உதவியைக் கொடுத்திருக்குமா? இருக்காது. அதற்காக அந்தப் பெரும் தொகுதி எஜமானர்களின் விருப்பத்துக்காக எழுதப்பட்டது என ஒதுக்கலாமா? கூடாது. கூடவே கூடாது. அந்த எழுத்தின் தரம் மட்டுமே நமக்கு உரைக்கல்லில் சோதித்துப் பார்க்க வேண்டியது.

இந்திய வரலாறு எழுத்தில் நிலகண்ட சாஸ்திரிக்கு தனி இடமுண்டு. அவர் முன்னெடுத்த ஆராய்ச்சிகளும் வெளியிட்டப் புத்தகங்களும் அரசாங்க ஸ்தாபன ரீதியான உதவிப் பெற்றவை தான். மௌரியர்கள் பற்றிய வரலாறுப் புத்தகம் ('Age of the Nandas and Mauryas') இந்திய வரலாறை எழுதுவதற்காகக் காங்கிரஸ் இயக்கம், ராஜேந்திர பிரசாத் தலைமையில், 1937-இல் நிறுவிய 'இந்திய வரலாறு பரிஷத்' ஸ்தாபனத்தின் உதவியில் எழுதப்பட்டது தான். அந்த ஸ்தாபனமே பின்நாளில் சுதந்திரத்தின் பின் அரசாங்க ஸ்தாபனமாக முகிழ்ந்தது. 14 ஜனவரி 1948 பிரசாத் மௌலானா ஆஸாத்துக்கு எழுதிய கடிதத்தில் அந்நிறுவனத்துக்குப் பணம் ஒதுக்குமாறு கேட்டு எழுதிய கடிதம் இணையத்தில் பிரசாத்தின் தொகுதிகளில் கிடைக்கிறது. கவனிக்கவும் 14 ஜனவரி 1948 என்பது மிக முக்கியமான காலம். மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இனக் கலவரத்துக்கு எதிராகவும் தலைநகர் தில்லியிலேயே உண்ணவிரதம் மேற்கொண்ட இரண்டாம் நாள். தில்லியும் வட இந்தியாவும் இனக் கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நாட்கள் அவை. தில்லி ரத்த பூமியான நாட்கள் அவை. இந்தச் சூழலில் வரலாறு ஸ்தாபனத்துக்கு அரசாங்கப் பணம் கேட்கிறார் பிரசாத். வரலாறு எழுதுவதில் தேசத் தலைமைக்கு இருந்த ஆவல் எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்று நீலகண்ட சாஸ்திரி எழுதியதை பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். ஆனால் இன்றைய புரிதலில் 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பது அரசாங்கங்கள் நேரிடையாகத் தலையிட்டுத் தகுதியில்லாதவர்களைப் பதவியில் அமர்த்தி ஆதாரங்களை வளைத்து நெளித்து எழுதப்படுவதைக் குறிப்பது. நீலகண்ட சாஸ்திரியை அந்த வரிசையில் வைக்க முடியாது. சுருங்கச் சொன்னால் நீலகண்ட சாஸ்திரி கோ.வி.மணிசேகரன் அல்ல.

முன்பொரு முறை வரலாறு எழுத்தை வல்லுநர்களே செய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் அல்லாதவர்களின் விலகி இருந்தால் நலம் எனும் கருத்தில் ஜெயமோகனே எழுதியிருக்கிறார். அந்த வல்லுநர்கள் எங்கிருந்து வருவார்கள்? கல்வி ஸ்தாபனங்களில் இருந்து தானே வர முடியும். பல்கலைக் கழகங்களில் இடது சாரிகள் கோலோச்சுவது இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய அமெரிக்காவிலும் உண்டு. அதற்கான காரணங்களுண்டு ஆனால் அவ்விவாதம் இந்தப் பதிவுக்கு அப்பாற்பட்டது. மார்க்சியம், இடது, வலது என்ற லேபிள்களைத் தாண்டி நாம் எழுத்தை அதன் தரம் கொண்டே நிர்ணையிக்க வேண்டும். சொல்லப்படும் கருத்தின் ஆதாரங்கள், அதைக் கொண்டு எழுப்பப்படும் கருத்தியலுக்கான தர்க்க நியாயங்கள், எதிர் கருத்தை கையாளும் நேர்மை, எதிர் கருத்துகள் எப்படி மறுக்கப்படுகின்றன ஆகியவற்றை உற்று நோக்கியே மதிப்பிட வேண்டும்.

உதாரணத்திற்கு, இர்பான் ஹபீப் எழுப்பிய பாரத மாதா சர்ச்சையைச் சொல்லலாம். 'பாரத மாதா' என்பது காலணியக் காலத்தின் கருத்தாக்கம் என்றார் ஹபீப். நான்கு திசைகளில் இருந்தும் 'தேசத்துரோகி', 'மார்க்சியன்' என்று அவர் மீது அமிலம் உமிழ்ந்தார்கள். ஜெயமோகனும் கடிந்து கொண்டார். ஆனால் எந்த லேபிளும் இது வரை ஒட்டப்படாத சுமதி ராமசாமி எனும் வரலாறாசிரியர் அமெரிக்கப் பல்கலையின் வெளியீடாக எழுதிய புத்தகமும் அதையே தான் சொன்னது. அந்தப் புத்தகத்தையும் அந்தச் சர்ச்சையையும் ஏன் ஹபீப் சொன்னது சரி என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன். ஹபீப்பை மறுக்கலாம் ஆனால் மறுப்பவர்கள் தர்க்க நியாயங்களுக்குட்பட்டுச் செய்ய வேண்டும், தரவுகளின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பல்கலைக்கழகங்களும் அவற்றின் நிழலில் உருவாகும் ஆராய்ச்சிகளும் சமீபத்தில் தான் அரசாங்கங்களின் கைப்பாவை ஆயின. தமிழ் நாட்டில் தமிழ் பற்றி ஆராய்ச்சி செய்யும் யாரும் திராவிட இயக்கம் முன் வைத்த எந்த முடிவுகளையும், ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, மறுதலித்து எழுதிவிட முடியாது, அதுவும் அரசாங்க வேலையில் இருந்து கொண்டு. திராவிட இயக்க பிதாமகன் அண்ணாதுரையின் எழுத்தின் தரம் பற்றியோ ஈ.வெ.ரா அடித்துவிட்ட கருத்துகளையோ எந்தப் பல்கலைக் கழக ஆசிரியரும் கேள்விக்கு உட்படுத்திப் பல்கலைக் கழக ஆய்வாக எழுதிவிட முடியாது. அண்ணாதுரைக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஆரியச் சதி என்று வேண்டுமானால் எழுதலாம்.

இந்தச் சமீபத்திய அவலம் வட இந்தியாவில் வேறு வகையாக வளர்கிறது. அங்கே இந்திய கலாசாரத்தில் இல்லாத எதையும் மேற்கத்திய அறிவியல் கண்டு பிடித்துவிடவில்லை என்றோ இன்று வரை பரவலாக, ஆதாரத்தின் அடிப்படையில், ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காத பட்சத்தில் ஆதாரங்களே இல்லாமல் தொன்மங்களைத் திரித்துச் சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாட்டு மூத்திரத்தில் புற்று நோய்க்கும் எய்ட்ஸுக்கும் மருந்து இருக்கிறது, ப்ரம்மாஸ்திரத்தின் சூத்திரத்தில் அணுப் பிளவின் சூத்திரம் இருக்கிறது என்று எழுதினால் கை மேல் விருது. இந்திய அரசாங்கத்தின் உதவியால் நிகழும் அறிவியல் கூட்டரங்கில் நடந்த கேலிக் கூத்துகள் பொறுக்க முடியாமல் நோபல் பரிசு வாங்கிய வெங்கி வெளியேறினார்.

ஜெயமோகன் எழுத வந்தது வலம்புரி ஜான் என்னும் பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பற்றி எழுதிய புத்தகத்தைப் பற்றி. வலம்புரி ஜான் பத்திரிக்கை நடத்தி அதில் எழுதியதால் பத்திரிக்கையாளர் என்று குறிக்கப்படலாம் மற்றப்படி அவரை எந்தத் தரப்பட்டியலிலும் சேர்த்துவிட முடியாது. இந்தியாவில் ஆளுமைகள் குறித்து நேர்மையோடு வெளிப்படையாக எழுதுவது கடினம். சட்டங்கள் அதற்கு அனுகூலமானவை அல்ல. இதனால் பல புத்தகங்களும் சினிமாக்களும் கிசு கிசு பாணியிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டில் இதன் ஆகச்சிறந்த உதாரணம், ஜெயமோகன் சுட்டியது போல், கண்ணாதாசனின் 'வனவாசம்'. சினிமாக்களில் 'இருவர்' திரைப்படமும் 'பம்பாய்' திரைப்படமும் அந்த வகை.

தன் வரலாறு எழுதும் பலர் இந்தக் கிசுகிசு உத்தியை இந்தியாவில் கையாள்கிறார்கள் அல்லது கிசுகிசு தரத்தில் எழுதுகிறார்கள். அபுல் கலாம் ஆஸாத் அவருடைய தன் வரலாறில் 30 பக்கங்களை 50 வருடங்கள் வெளியிடக் கூடாதென்று வைத்திருந்தார். அவை வெளியான போது சப்பென்று இருந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் வெளியுறவுத் துறையில் பெரும் பதவிகள் வகித்த ஜார்ஜ் கெண்னன் தன் வாழ்க்கையை எழுத ஓர் ஆசிரியரை நியமித்து அந்தப் புத்தகம் ஜார்ஜ் இறந்த பிறகே வெளியிட வேண்டுமென்றார். ஜார்ஜ் கெண்னன் 101 வயது வரை வாழ்ந்தார்.

வாழ்க்கை வரலாறு எழுத ஒருவரை நியமிப்பது மேற்குலகில் சகஜம். நைபால், தாட்சர், கெண்னன் ஆகியோர் அப்படிச் செய்தார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் தங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது வழக்கம். அப்படி எழுதப்படுவது அப்புறம் நேர்மையற்ற துதிப் பாடலாக வெளிவந்தால் எழுதியவரும் எழுதுப் பொருளாக இருந்தவரும் மதிப்பிழப்பார்கள். அது தான் நியாயம். நியமன எழுத்து என்பதற்காகவே ஒன்றை நிராகரிக்கக் கூடாது. கெண்னனின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த, 'Is this George Kennan?' (http://www.nybooks.com/articles/2011/12/08/is-this-george-kennan/) மதிப்புரையை நோக்கவும்.

டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் அன்றைக்குப் பொது வெளியில் தெரிந்திருந்த சமாசாரங்களையே சொன்னது, எம்.ஜி.ஆருக்கு எந்தத் தருணத்திலும் ஜானகியைத் தவிர வேறொரு பெண் மனைவி ஸ்தானத்தில் இருந்தார் என்பது உட்பட. உள் வட்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட மோகன் தாஸ் அதை எழுதிய போது அது பேசப்பட்டது.

கிசுகிசு வகையில் எழுதப்பட்ட இந்த நூல்களைப் பற்றி எழுதுமிடத்தில் இந்திய-சீனா போர் பற்றியோ, ரோமிலா தாபர் பற்றியோ எழுத என்ன நிர்பந்தம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்தக் கிசுகிசு நூல்களைக் கிசிகிசு-வரலாறு என்று புதியதொறு வகைமையை (genre) அறிமுகப்படுத்தி அதற்கு முகமனாக எம்.ஓ.மத்தாய், பிரிகேடியர் டால்வி என்று அஸிதிவாரத்தை அமைக்கிறார் ஜெயமோகன்.

பேஸ்புக் மற்றும் இணைய விவாதங்களில் நம்மவர்கள் கையாளும் ஒரு போக்கைப் பற்றி விரிவாக எழுத எண்ணம். சுருக்கமாக இங்கே. நம்மவர்களில் பலர் தமக்கு ஒவ்வாத, முக்கியமாகக் காந்தி மற்றும் நேரு சம்பந்தமாக, எங்கே எந்தத் துணுக்குக் கிடைத்தாலும் அதை "அஹா கிடைத்தது பாரீர் ஆதாரம்" என்று களிக் கொள்கிறார்கள். அதில் பலவும் இம்மாதிரியான தன் வரலாறுகளில் இருக்கும் துணுக்குகள்.

இறப்பதற்குச் சில காலம் முன்பு அம்பேத்கர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி மிகப் பிரசித்தம். அப்பேட்டியில் காந்தி ஒரு நேர்மையற்ற அயோக்கியர் எனும் அர்த்தம் வருமாறு அம்பேத்கர் பேசியிருப்பார். "ஆஹா அறிவாசான் அம்பேத்கர் சொல்லிவிட்டார்" என்று பலரும் அதை இன்றும் பகிர்கிறார்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படாமல். காந்தி ஆங்கிலத்தில் எழுதும் போது மிக நல்லவராகத் தோன்ற வைக்கும் வகையில் எழுதியதாகவும் குஜராத்தி/ஹிந்தியில் எழுதிய அவர் எழுத்துகள் வேறு வகையானவை என்றும் பெரும்பாலோர் ஆங்கில எழுத்துகளின் அடிப்படையிலேயே காந்தியைக் கொண்டாடுகிறார்கள் என்பார் அம்பேத்கர். இது முட்டாள்தனம். காந்தியின் வாழ்நாளிலேயே அவரைக் காட்டமாகவும், வன்மமாகவும் மறுத்துப் பேசியவர்கள் உண்டு அவர்களில் பலருக்கு இரு மொழிப் புலமையும் உண்டு. இதை ஒரு நிமிடம் மனத்தில் இருத்தினாலே அந்தப் பேட்டியை புறங்கையால் தள்ளிவிட முடியும்.

மத்தாயின் நூலை இது வரை பல முறை ஜெயமோகன் கிட்டத்தட்ட வரலாறு நூல் எனும் தரத்தில் பேசிவிட்டார் அதை 'அடப்பக்காரன் வரலாறு' என்று சில முறை குறிப்பிட்டுமுள்ளார். மத்தாயின் நூல் எந்த வகையிலும் சீரிய விவாதத்தின் போது வைத்துப் பேச தக்க நூல் அல்ல. நம்மவர்களின் சிக்கலே இது தான். இதோ இப்போது அரையும் குறையுமாகச் சஷி தரூர் பேசியதை தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் அதிலுள்ள வரலாற்றுப் புரிதலின் பிழைகளைக் கண்டு கொள்ளாமலே. 'அடப்பக்காரன் வரலாறு' என்று சொன்னப் பிறகு அதை ஏன் மேற்கோள் காட்டுவானேன்? கிசு கிசு என்றுமே வரலாறு ஆகாது. இரண்டு வார்த்தைகளையும் இணைப்பதே தவறு. இது 'வரலாறு' எனும் கருத்தாக்கத்தின் ஆணிவேரில் வெண்ணீர் ஊற்றுவதற்கு இணை.

கிசு கிசு தரத்திலான நூலைப் படிக்கலாம், தவறில்லை ஆனால் அதன் மேற்கொண்டு கறாரான நூல்களைக் கண்டடைய வேண்டும். இந்தியா-சீனா போரைப் போல் மிக அதிகமாகத் தவறாகவும், அரைகுறை தகவல்கள் வழியாகவும், காலாவதியான ஆதாரங்கள் வழியாகவும் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய நிகழ்வு வேறொன்று இருக்காது.

பிரிகேடியர் டால்வியின் நூலும், நெவில் மாக்ஸ்வெல்லின் நூலும் இன்று வரை இந்திய-சீனா யுத்தம் பற்றிய எந்த விவாதத்திலும் இடம் பெறுபவை. டால்வியின் நூலுக்கும் "அதிகாரப் பூர்வ வரலாற்றுக்கும் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. அது என்னை ஒரு வகையில் உலுக்கியது" என்கிறார் ஜெயமோகன். இந்திய-சீனா போரைப் பற்றி எந்த "அதிகாரப் பூர்வ வரலாறு" வெளியிடப்பட்டது? எதுவுமில்லை. அப்புறம் என்ன முரண்பாடு?

இந்திய-சீனா போர் மற்றும் நேருவின் முடிவுகள் பற்றி இவ்வருடம் விரிவாக எழுதவதாகத் திட்டம். ராணுவ வரலாறாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய 'War and Peace in Modern India' புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரையில் இந்திய-சீனா போர் பற்றித் தொட்டிருக்கிறேன். அந்த விரிவான விவாதத்திற்குள் செல்லாமல் ஜெயமோகன் முன் வைத்த ஜெனரல் தாப்பர், ரோமிலா தாப்பர் பற்றிய கருத்துகளுக்கு மட்டும் இங்கே மறுப்புச் சொல்கிறேன்.

மேக்ஸ்வெல் தன்னுடைய நூலின் முன்னுரையில் மிக மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறார். அந்த நூலில் ஒரு சமமின்மை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு அதற்குக் காரணம் தனக்குப் பிரச்சினையின் இரண்டு சாராரிடையே, இந்தியா-சீனா, ஒரு சார்பில் மட்டும், இந்தியாவின் பக்கத்தில், மிக வெளிப்படையாக அணுக முடிந்ததாகவும், வெளிப்படையாக ஆராய முடிந்ததாகவும், உலக நாடுகளிலேயே இந்தியா மிக வெளிப்படையான நாடு என்றும், சீனாவுக்குள் ஆராய எந்த அனுமதியும் கிட்டவில்லை என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளை மட்டுமே வைத்து எழுதியதாகவும் அதனாலேயே சீனாவின் தரப்பிலான முடிவுகள் இந்தியாவின் முடிவுகள் போலல்லாமல் எதார்த்தமாகத் தெரியுமாறு எழுதிவிட்டதாகச் சொல்கிறார்.

சில வருடங்களுக்கு முன் பிரின்ஸ்டனில் எனக்குப் பிடித்த புத்தகக் கடையில் மிக அரிதான ஒரு நூல் கிடைத்தது. சீன அரசாங்கம் இந்தியா-சீனா எல்லை சர்ச்சைப் பற்றி அப்போது வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ நூல் அது. அதில் வரைபடங்களோடு முக்கியமாகச் சீன அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ நாளேடுகளில் நேருவை ஏகாதிபத்தியவாதியாகச் சித்தரித்து எழுதப்பட்ட காட்டமான கட்டுரையும் வேறு சில கட்டுரைகளும் இருந்தன. இது போன்ற 'அதிகாரப் பூர்வ' பரப்புரையை இந்தியாச் செய்ததாக நான் படித்ததில்லை.

ஸ்ரீநாத் ராகவன் ஜெனரல் தாப்பர் நியமனம் பற்றித் தெளிவாக எழுதியுள்ளார். மாக்ஸ்வெல் தான் தாப்பர் "தர்பாருக்கு இனக்கமான அதிகாரி" என்று எழுதினார். அதை ராகவன் மறுக்கிறார். தாப்பர் தான் பணி மூப்பு முறைப் படி வந்தார் என்றும் ராணுவத்தில் இருக்கும் பிரமோஷன் முறைகளும் காரணம் என்கிறார் ராகவன். எல்லா நாட்டிலும், இன்றும் கூட, ராணுவத்தின் உயர் அதிகாரி நியமனத்தில் பணி மூப்பு மட்டுமல்லாது வேறு சில தகுதிகளையும், ஆட்சியாளர்களோடு அனுசரிப்பது ஆட்சியாளர்களின் ஆட்சி முறைப் பார்வை (outlook) அனுசரிக்கும் திறன், பார்த்து தான் நியமிக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஐசன்ஹோவர் நியமிக்கப்பட்டதும் அப்படித் தான்.

இந்திய ராணுவத்தை நேருவும் கிருஷ்ண மேனனும் நிர்வகித்த விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. சமீபத்தில் ஸ்டீவன் வில்கின்ஸன் எழுதிய 'Army and Nation' முக்கியமான புத்தகம் இந்தியாவில் ராணுவம் எப்படிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது என்பது பற்றியும், ராணுவ சீரமைப்பு, நேருவின் தலைமைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டது (அதற்கான மதிப்புரை இங்கே ).

இந்தியா-சீனா போர் என்றாலே இந்தியர்கள் பலர் இன்னும் நெவில் மேக்ஸ்வெல், டால்வி ஆகியோரை மட்டுமே சுட்டுகிறார்கள். மேக்ஸ்வெல் எழுதியது காலாவதியாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன் ஆனால் அவரைத் தாண்டி இன்று புதிய தகவல்களின் அடிப்படையில் புரிதல்கள் விரிவடைந்திருகின்றன.

இந்திய-சீனா போர் குறித்தும் பனிப்போர் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுகள் குறித்தும் புதிய தகவல்களோடு எழுதப் பட்ட கறாரான நூல்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன, அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் வாயிலாக. இந்திய-சீனா சிக்கலில் திபெத்தை வைத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆடிய சதுரங்க விளையாட்டை ப்ரூக்கிங்க்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் சி.ஐ.ஏவில் பணியாற்றிவருமான ப்ரூஸ் ரைடெல் (Bruce Reidel) எழுதிய புத்தகம் எப்படிப்பட்ட உலக அளிவிலான சதுரங்க விளையாட்டில் நேருவும் இந்தியாவும் காய் நகர்த்த வேண்டியிருந்தது என்பதை வெளிக் கொணர்ந்தது. அந்நூல் மிகக் கறாரானது அல்ல ஆனால் முக்கியமானது. நூல் ஆசிரியர்கள் ஒரு புதுப் பார்வையை முன்வைப்பதற்காக எழுதுவார்கள் அப்படி எழுதும் போது தங்கள் பார்வைக்குத் தேவையானதை மட்டுமே செதுக்கி முன் வைப்பார்கள். இந்திய-சீனா போர் மிகச் சிக்கலான பற்பல ஊடு-பாவுகளைக் கொண்டது. ஒரு வாசகன் ஒரே புள்ளியில் தேங்கி விடாமல் மென்மேலும் படித்து ஒரு சித்திரத்தை தனக்குத் தானே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்திய-சீனாப் போர் குறித்துத் தெளிவுப் பெற சமீபத்தில் வந்த நூல்களின் பட்டியலை இப்பதிவின் முடிவில் பரிந்துரைக்கிறேன்.

ஜெனரல் தாப்பர் இணக்கமானவர் என்று மேக்ஸ்வெல் சொன்னது தவறு மட்டுமல்ல நேர்மையற்றதும் என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். ராகவன் ஜெனெரல் புஷெர் (General Bucher) மேக்ஸ்வெல்லிடம் அவரின் முடிவுகள் ஏன் தவறானவை என்று மறுத்து எழுதியதை மேக்ஸ்வெல் மறைத்து விட்டார் என்கிறார் ராகவன். வெறும் உறவை வைத்து நாட்டின் மிக முக்கியமான பதவியைத் தூக்கிக் கொடுக்க நேரு என்ன கருணாநிதியா இல்லை எம்,ஜி.ஆரா?

தாப்பர் ஒன்றும் நேருவுக்கு நேரடிச் சொந்தமும் கிடையாது. தாப்பரின் மனைவி பிம்லா என்பவர் கௌதம் செஹ்காலின் தங்கை. கௌதம் செஹ்காலின் மனைவி நயந்தாரா செஹ்கல் விஜயலக்‌ஷ்மி பண்டிட்டின் மகள். அதாவது நேருவின் தங்கை விஜயலக்‌ஷ்மியின் மகளின் கனவரின் தங்கை தாப்பரின் மனைவி. அப்பாடா. மூச்சு முட்டுகிறது. அந்த ஜெனெரல் தாப்பரின் மகன் கரன் தாப்பர், ஜென்ரல் தாப்பரின் 'niece' ரோமிலா தாப்பர். அப்பப்பா. இதைத் தான் "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்து எனலாம். Guilt by association.

ஜெனெரல் தாப்பர் தகுதியை மீறி பதவிக்கு வந்தார், அப்படியாப்பட்ட தாப்பரின் உறவுப் பெண் ரோமிலா தாப்பர். இவர்கள் எல்லோரும் இந்திய வெறுப்பாளர்களாம். ராணுவத்தில் பணியாற்றும் யாரைக் குறித்தும் சொல்லக் கூடிய மிக வன்மமான வசை தேசத்தை வெறுப்பவர் என்பது.

போதாக்குறைக்கு ஜெனெரல் தாப்பர் செயலற்று கோல்ப் விளையாடினார் என்றும் அந்தச் செயலற்றத் தன்மைக்குக் காரணம் அவர் சீனா மற்றும் இடது சாரிகளோடு கொண்டிருந்த உறவுக் காரணமோ என்று வரலாறு ஆய்வாளர்கள் ஐயப்படுகிறார்களாம். ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணைக் கட்டுதே. அந்த ஆய்வாளர்கள் யாரோ? இணையத்தில் தேடியதில் கிடத்த சுட்டிகளில் இந்துப் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தாப்பரை பற்றி மிக நல்லதாகத் தான் சொல்கிறது. இந்தியா-சீனா போரில் இந்தியா அடைந்த தோல்வியை ஆராய்ந்த ஹெண்டர்ஸன்-ப்ரூக்ஸ் அறிக்கை இன்றும் ரகசியம். ஆனால் மேக்ஸ்வெல் அதில் ஒரு பகுதியை 2014-இல் வெளியிட்டார். அதைப் பற்றிய இந்தியா-டுடே கட்டுரை வெளியிடப்பட்ட பகுதியில் நேரு பற்றியும் தாப்பர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை என்கிறது. ஆக, எந்த வரலாறாசிரியர் தாப்பர் சீனாவின் கைக்கூலி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

ரோமிலா தாப்பர் இந்தியாவின் தலைச் சிறந்த வரலாறு ஆய்வாளரும் ஆசிரியரும். அவரின் மிக முக்கியமான ஆய்வு அசோகரின் ஆட்சிப் பற்றியது. ரோமிலாவை மார்க்சியர் என்று தூற்றி அவரின் இடத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஜெயமோகனை இந்துத்துவர் என்று தூற்றி தமிழ் இலக்கியத்தில் அவரின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு இணையானது. தாப்பர் மார்க்சியராகவே இருக்கட்டுமே. குடியா முழுகிவிடும். மீண்டும் மீண்டும் ரோமிலா தாபரை இந்திய வெறுப்பாளர் என்கிறார் ஜெயமோகன். அந்த அம்மாள் நினைத்திருந்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கலாம். அவர் அமெரிக்காவின் மிக உயரிய பல்கலைக் கழகங்களில் வருகை தரும் ஆசிரியராக இருக்கிறார். ரோமிலா தாப்பரின் நூல்களைக் கறாராக மறுத்து எழுதலாமே ஜெயமோகன் விதந்தோதும் மிஷெல் தானினோ, ராய் மாக்ஸ்ஹாம் போன்றவர்கள்.

இந்திய ஐஐடிக்களில் தலை விரித்தாடும் இந்துதுவத்தைப் பயன்படுத்திக்கொண்டு மிஷெல் தானினோ போன்றவர்கள் ஆய்வாளர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். அவரின் எந்தப் புத்தகமாவது சர்வதேச அரங்கில் வைக்க முடியுமா? அவர் ஆய்வாளரா? அதிகாரப்பூர்வ வரலாறை சமைப்பதில் இன்று தானினோ போன்றவர்கள் தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள்.

இடது சாரி ஆய்வாளர்கள் எழுத்தாளர்களுக்கு மாற்றாக இந்திய வலது சாரிகள் முன்னிறுத்தும் அநேகர் வெறும் 'charlatans'. இன்றைக்குத் தமிழ் நாட்டின் ஆகப் பெரிய வலது சாரி சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா ஆகியோர் தான். இவர்களின் எந்தக் கட்டுரையையாவது எந்த உலக ஆய்வரங்கிலாவது ஏற்றுக் கொள்ளப்படுமா? ரோமிலா தாபர், இர்பான் ஹபீப்புக்கு இணையாக வலது சாரிகளில் யாரும் இல்லையே? இங்கேயிருக்கும் வலது சாரிகள் கருணாநிதி, அண்ணாதுரை தரத்தில் தானே இருக்கிறார்கள்.

ஜெயமோகனின் கட்டுரை சம்பந்தமாக இணையத்தில் தேடியபோது 'Centreright.in' எனும் தளத்தில் வெளியானக் கட்டுரை ஒன்றுக் கிடைத்தது. ஜெயமோகன் தாப்பர் பற்றிக் கூறியது, நேருவின் குடும்பத்தோடு திருமண உறவு, தோராட், திம்மைய்யா பற்றியெல்லாம் அதேப் போல் கூறுகிறது. இதுப் போன்ற தளங்களும் அதில் வெளியாகும் கட்டுரைகளும் அவர் வட்டத்தில் பிரசித்தம். அந்த உரையாடலை ஒட்டி ஜெயமோகனும் தன் தகவல்களைத் தொகுத்திருக்கலாம் அதை எம்.ஜி.ஆர் பற்றி எழுதும் போது ஒரு தொகுத்துக் கொண்ட சிந்தனையாகவும் வரலாறுப் பற்றியப் பார்வையாகும் வைத்திருக்கிறார். ஆனால் தளத்தில் வந்தக் கட்டுரை கிசிகிசு வரலாறு அல்ல வெறும் கிசுகிசு. கட்டுரையின் சுட்டி http://centreright.in/2012/03/army-chief-row-will-history-repeat/#.WRef11LMxBw

ஜதுநாத் சர்க்கார் பற்றிய அற்புதமான புத்தகம் ஒன்றில் இந்தியாவில் வரலாறு என்பது கல்வி அமைப்பில் எப்படி மிகச் சமீபத்தில் தான் ஒரு தனித் துறையாக உருவானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. வி.ஏ.ஸ்மித் போன்றவர்கள் வரலாறாசிரியர்களோ ஆய்வாளர்களோ அல்ல. அவர்கள் காலனி அரசில் பணியாற்றியவர்கள் அவ்வளவே. வரலாறை ஒரு துறையாக அங்கீகரித்து அதற்கான வல்லுநர்கள் உருவானது மிகச் சமீபத்தில் என்கிறார் அந்த ஆசிரியர். இந்தியாவில் இன்னமும் வரலாறு படாதபாடு படுகிறது. ஆளுமைகளைப் பற்றியோ, இந்தியாவின் வரலாறுப் பற்றியோ சொல்லப்படும் நேர்மையான கருத்துகள் பல, அதுவும் கடந்த 20 வருடங்களில், பெரும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. பற்பல செய்திகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலேயே வரலாறு உண்மைகளாக இன்றும் இந்தியர்கள் மனத்தில் நின்று விட்டது. ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது, பெரியார் வைக்கம் வீரர் என்பது ஆகியவை இன்றைக்கும் சராசரியான தமிழன் மட்டுமல்ல தன்னை வரலாறாசிரியர் என்று அழைத்துக் கொள்ளும் சலபதி போன்றவர்களும் செய்வது தான். சில சமயங்களில் ஜெயமோகனே அதைக் குறித்தெல்லாம் எழுதும் போது எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறார்.

இன்று இரு வகை வரலாறுகள் இருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார். ஒன்று, அதிகாரப் பூர்வ வரலாறு, இரண்டு கிசு-கிசு வரலாறு. இல்லை. வரலாறு என்றும் ஒன்று தான். உண்மை தான் வரலாறு. உண்மையைக் கண்டடைதல் ஒரு பயணம், புத்தகங்கள் அதை நோக்கிய பயணம். நேர்மையற்ற கிசு கிசுக்கள் அப்பயணத்தில் மைல்கற்கள் அல்ல அவை பயணத்தைத் தடம் புரளச் செய்பவை.

இந்த இரண்டாம் வகை வரலாறுத் தோல்வி அடைந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் எழுதுவது என்கிறார் ஜெயமோகன். இது, ஜெயித்தவன் எழுதுவது வரலாறு ஆகிறது என்கின்ற க்ளீஷேவை புரட்டிப் போட்டுச் சொல்கிறது. தோல்வி அடைந்தவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும் மிக நேர்மையாக ரத்தம் தோய்ந்து எழுதியது தான் வரலாறு என்று கௌரவிக்கப்பட வேண்டும் மற்றதை நிர்தாட்சயனமாக நிரகரிக்க வேண்டும். சோல்சினெட்சின் எழுதியதையும் மத்தாய் எழுதியதையும் வெவ்வேறு வகை வரலாறு என்பது சோல்சினெட்சினை செறுப்பால் அடிப்பதற்குச் சமம். ஜெயித்தவனோ தோற்றவனோ எழுதுவதல்ல வரலாறு. எதில் உண்மை இருக்கிறதோ அது வரலாறு என்று மதிக்கப்பட வேண்டும்.

பி.கு: இந்தக் கட்டுரையில் ஒரு மிகப் பெரிய ஆறுதல் நேருவை நேரடியாகத் தாக்கவில்லை.

ஜெயமோகனின் கட்டுரை: http://www.jeyamohan.in/98396#.WReTWVLMxBw

Recommended Reading:

1. War and Peace in Modern India - Srinath Raghavan. My review is here http://contrarianworld.blogspot.com/2017/01/war-and-peace-in-modern-india.html
2. India's China War - Neville Maxwell
3. Protracted Contest: Sino-Indian Rivalry in the Twentieth Century -- Garver Joh
4. The Cold War in South Asia: Britain, the United State and the Indian Subcontinent, 1945-1965 -- Paul M. McGarr
5. The Global Cold War -- Odd Arne Westad
6. The Cold War on the Periphery: The United States, India and Pakistan -- Robert J. McMahon
7. The United States and India, Pakistan, Bangladesh - W. Norman Brown
8. Comrades at odds: The united States and India 1947-1964 -- Andrew J. Rotter
9. The Calling of history: Sir Jadunath Sarkar and his empire of truth -- Dipesh Chakrabarthy
10. JFK's forgotten crisis: Tibet, the CIA and the Sino-Indian war -- Bruce Reidel. My review is here http://contrarianworld.blogspot.com/2016/03/jfk-nehru-tibet-cia-and-sino-indian-war.html
11. Army and Nation: The military and Indian democracy since independence -- Steven Wilkinson. My review is here http://contrarianworld.blogspot.com/2016/05/army-and-nationthe-military-and-indian.html

Other References:
1. Book Review of Romila Thapar's 'Somanatha' -- http://contrarianworld.blogspot.com/2016/05/somanatha-temple-mahmud-of-ghazni.html
2. Bharat Mata ki Jai (and review of Sumathi Ramaswamy's 'The goddess and the Nation: Mapping mother India'. Published by Duke University) -- http://contrarianworld.blogspot.com/search?q=Bharat+Mata
3. Article in Hindu that speaks of General Thapar's role http://www.thehindu.com/opinion/lead/In-dubious-battle-at-heaven’s-gate/article12557779.ece
4. India Today article on Henderson-Brooks report released by Neville Maxwell http://indiatoday.intoday.in/story/the-guilty-men-of-1962-india-china-war-jawahar-lal-nehru-krishna-menon/1/350080.html
5. General Thapar https://en.wikipedia.org/wiki/Pran_Nath_Thapar
6. Article on leaked Henderson-Brooks report http://www.sunday-guardian.com/investigation/army-generals-not-nehru-and-krishna-menon-responsible-for-62-war-defeat

4 comments:

  1. மிகத் தெளிவான கட்டுரை.
    மிஷெல் தானினோ வையும் ராய் மாக்ஸ்ஹாமையும் ஒரே கோட்டில் இணைத்தது தவிர.

    இருப்பினும் தமிழ்நாட்டு திராவிட அரசியல் நிகழ்வுகளை பிற்காலத்தில் கிசுகிசுவின் துணையின்றி யாரேனும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் எனக்கு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  2. I fully agree with you Mr. Kannaiyan. Your analysis to differentiate the history from authenticated history and gossip is complete and valid.

    Siva

    ReplyDelete
  3. ஜெயமோகன், தெளிவாகவே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறாரே!

    இதில் ‘இடைவெளிகளை இட்டு நிரப்பி’ புரிந்துகொள்வது என்பதுதான் முக்கியமானது.

    /* இந்நூல்களின் ஆசிரியனுக்கு வழக்கமாக வரலாற்றாசிரியனுக்கோ காலப்பதிவாளனுக்கோ புனைவெழுத்தாளனுக்கோ அளிக்கும் கௌரவத்தை நாம் ஒருபோதும் அளிக்கலாகாது. அவர்கள் கிசுகிசு உரைப்பவர்கள் மட்டும் தான் அவர்கள் வெற்றி அவர்களுடைய தோல்வி அவர்கள் அதை எழுதுவதற்கான காரணம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் ஆகியவற்றை நன்கறிந்த பின்னர் இவற்றிலிருந்து எடுத்த தகவல்களால் நாம் அறிந்த வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள முடியும். அது வரலாற்றைப் பற்றிய புதிய நோக்கை நமக்கு அளிக்கும். */

    இதில் ‘இடைவெளிகளை இட்டு நிரப்பி’ புரிந்துகொள்வது என்பதுதான் முக்கியமானது. இதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை எனப்படுகிறது.

    ReplyDelete
  4. அற்புதம்! ஒரே ஒரு சந்தேகம்.

    “எட்வினா உறவு அரசியல் ஆதாயம் தேடி அல்ல என்பதற்கு நேரு-எட்வினா உறவு மௌண்ட்பேட்டன் இறந்த பிறகும் தொடர்ந்ததைச் சுட்டுகிறார்.” - மவுண்ட்பேட்டன் நேருவுக்கும் பிறகுதானே இறக்கிறார் 1979-ல்?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.