Monday, February 20, 2017

சபாநாயகர் தனபால் திராவிட இயக்கத்திற்கு கடன்பட்டவரா? தாழ்த்தப்பட்டோரின் கல்விக்கு திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது?

தமிழகச் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தான் தலித் என்பதாலேயே எதிர்க்கட்சி திமுகவினர் இழிவுச்செய்யும் விதமாக நடந்து கொண்டனர் என்றார் சபாநாயகரான தனபால். இதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு திமுக உறுப்பினரான மனுஷ்யபுத்திரன், "திமுக என்ற இயக்கம் இல்லாவிட்டால் நீங்கள் படித்துச் சபாநாயகாராக வந்திருக்க மாட்டீர்கள்" என்றார். இது கடைந்தெடுத்த ஆணவம் என்பதோடு பல காலமாகப் பரப்பட்டு வரும் பொய்யும் கூட.



திராவிட இயக்கத்தினால் வந்த படிப்பு என்றே வைத்துக் கொண்டாலும் அவமதிப்புச் செய்தால் அமைதிக் காக்க வேண்டுமா? ஹமீதின் இந்த வார்த்தைகளை யாரேனும் ஓர் ஐயர் சொல்லியிருந்தால் இந்நேரம் பேஸ்புக் போராளிகளெல்லாம் ஒன்று திரண்டு கல்லெறிந்து இருப்பார்களே. மேட்டிமைத் தனமும் ஆண்டப் பரம்பரை குணமும் எந்த ஒரு இனத்துக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. 

பெ.சு.மணியின் "நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு" நூல் படிக்கக் கிடைத்த போது மிக ஆச்சர்யமான தகவல்கள் தெரிய வந்தன. தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாகத் தலித்துகள், என்னமோ இருளில் மூழ்கிக் கிடந்தது போலவும் ஈ.வெ.ரா தான் பகலவனாகத் தோன்றி அவர்களுக்கு வாழ்க்கைக் கொடுத்தார் என்பது போலவும் திராவிட இயக்கத்தினர் ஒரு பெரும் பிரச்சாரம் செய்து அதில் ஈடில்லாத வெற்றியும் அடைந்துவிட்டனர். இன்று தமிழகத்தில் சராசரி தமிழன் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்தது ஈ.வெ.ரா மட்டுமே என்று நம்புவதோடு அவரல்லாத வேறெந்த தலைவரையும் அறியாமல் இருப்பது தான் நிதர்சனம். அயோத்தி தாசர், எம்.சி. ராஜா, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் பற்றிய எளிய அறிமுகம் கூட இன்று தமிழகத்தில் பலருக்குக் கிடையாது. 

மணியின் நூலில் இருந்து சில துளிகள். 

பட்டியல் இனத்தவரை "ஆதி திராவிடர்" என்று குறிப்பது எம்.சி.ராஜாவின் முயற்சியால் 1922-ஜனவரியில் அரசானையானது. இப்படிக் குறிப்பதற்கு ஒரு நீண்ட மரபு இருந்தது மகாத்மா பூலேவில் தொடங்கி டி. ஜான் ரத்தினம் வரை. ஜான் ரத்தினம் "1885-ல் தொடங்கிய இதழிற்கு 'திராவிடப் பாண்டியன்' என்று பெயரிட்டார். 1892இல் தொடங்கிய ஓர் அமைப்பிற்குத் 'திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டினார்" எனப் பெ.சு.மணி குறிப்பிடுகிறார். 

இந்தியாவில் ஆங்கிலேய அரசின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயனம் மேற்கொண்ட மாண்டேகு செம்ஸ்போர்டை ஒரு மிகப் பெரிய ஆதி திராவிடர் தலைமைக் குழு சந்தித்து ஆதி திராவிடர்களின் சார்பில் விண்ணப்பித்தது. அதன் தொடர்ச்சியாக எம்.சி.ராஜா ஆதி திராவிடர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 

திராவிட இயக்கம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பாகத் தலித்துகள் தமக்கென அரசியல் அமைப்புகளைக் கொண்டிருந்தனர். 1882-இல் உருவாக்கிய ஆதி திராவிடர் மகாஜன சபை; 1893-இல் 'பறையர் மஹாஜன சபை'; 1928-இல் "அகில இந்திய ஆதி திராவிட மஹாஜன சபை" ஆகியவை அவை. 

அது மட்டுமல்ல ஆதி திராவிடர்கள் தங்களுக்கென முக்கியமான தமிழ் இதழ்களையும் நடத்தி வந்தனர். அவற்றின் பட்டியலை மணி தருகிறார் கீழே: 

மகாவிகடதூதன் - 1886 
பறையன்-1893 
ஒரு பைசாத் தமிழன் - 1907 
சூரியோதயம் - 1869 
பஞ்சமன் - 1871 
சுகிர்தவசனி - 1877 
திராவிட மித்திரன் - 1885 
ஆதி திராவிடன் (கொழும்பு) - 1919 

ரெட்டைமலை ஸ்ரீனிவசன் ஆங்கிலேயே அரசால் ராவ் பகதூர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். அம்பேத்கரோடு 1930-31 நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவர். "இவர் தொடக்கப் பள்ளிக் கல்வி வளர்ச்சிக் குழுவின் உறுப்பினராக ஆளுநர் பெண்ட்லாந்து பிரபுவால் 1917-இல் நியமிக்கப் பட்டார்"."ஆதி திராவிடர்களின் இருப்பிடங்களில் அடிப்படைக் கல்வி அறிவுப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார்". "பச்சயப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள 21.11.1927இல் தான் எம்.சி.ராஜாவின் பெரு முயற்சியால் முடிவு செய்யப்பட்டது (வ.வே.சு. ஐயரின் குருகுலத்தில் சமபந்தி போஜனம் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் பச்சயப்பன் கல்லூரியில் ஆதி திராவிடருக்கு அனுமதியில்லை என்பது பற்றி எழுதியதில்லை) 

இட ஒதுக்கீட்டின் முன்னோடி வகுப்புவாரி பிரதிநித்துவம். செப்டெம்பர் 16 1921-இல் முதல் அரசாணை, ஆகஸ்டு 15 1922-இல் இரண்டாம் ஆணை, டிசம்பர் 15 1928-இல் மூன்றாம் அரசாணை அகியன நீதிக் கட்சியின் சாதனைகளாகச் சொல்லப் படுவன. 

ஈ.வெ.ரா மற்றும் திராவிட இயக்கம் என்று இன்று குறிக்கப்படும் எதுவும் முளைப்பதற்கு முன்பே ஒரு நீண்ட எதிர்ப்பு மரபும், சீரிய அறிஞர்களின் தலைமையும் ஆதி திராவிடர்களிடையே இருந்திருக்கிறது என்பதே நமக்குப் புலனாகிறது. ஈ.வெ.ரா ஆகட்டும் காந்தி ஆகட்டும் யாரும் வானத்தில் இருந்து வந்து குதித்து முன்னெப்போதும் இல்லாத சிந்தனைகளைத் தேவ தூதன் போல் உறைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு பெரு நிலத்தில் காலனியாதிக்கம் கொண்டு வந்த நவீனக் கல்வியும், தொழில்களும் பல்லாயிரகணக்கான ஆண்டு மரபுகளைப் புரட்டிப் போட்டு நிலப் பரப்பெங்கும் பற்பல அறிவியக்கங்கள் குமிழிகளாகத் தோன்றி ஒன்றோடொன்று இயைந்தும் முரன் பட்டும் ஒரு முரனியக்கத்தை உருவாக்கின. 

"இன்று ஒளி உண்டாவதாக" என்று ஆண்டவர் ஆணையிட்டவுடன் உலகில் ஒளித் தோன்றியது எனக் கிறித்தவ வேதாகமம் சொல்கிறது. அப்படி எந்தச் சுக்கும் நடக்கவில்லை. அதே போல் ஒரு இனமே இருளில் தத்தளித்தது போலவும் தேவதூதனாக ஈ.வெ.ராவும் அவர் அடிப்பொடிகளும் வந்ததுமே இரட்சிப்பு நிகழ்ந்ததாகவும் சொல்வது மடமை. 

அயோத்திதாசரை மறைத்த பெரியார் பிம்பம்: 

பெரியாரின் பிம்பப்படுத்தலினால் ஆதி திராவிடர்களின் தலைவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டனர். ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "அயோத்தி தாசர்: வாழும் பௌத்தம்" இது குறித்து முக்கியமான செய்திகளைத் தருகிறது. 

எழுத்தாளரும் 'விடுதலை சிறுத்தைகள்' கட்சி உறுப்பினருமான ரவிக்குமார் என்பவர் அயோத்திதாசரை மீட்டெடுப்புச் செய்தார். அது குறித்து ராஜாங்கம் இவ்வாறு எழுதுகிறாறர்: "பெரியார் என்ற திராவிட இயக்க பிம்பத்திற்கு மாற்றான தலித் பிம்பமாக அயோத்திதாசரை ரவிக்குமார் முன் வைத்தார். அதோடு பெரியார் பேசிய கருத்துகள் பலவும் அயோத்திதாசரால் பேசப்பட்டவையே; அவற்றை உள்வாங்கியே திராவிட இயக்கமும் பெரியாரும் செயற்பட்டனர். ஆனால் 'தாழ்த்தப்பட்டோரான' அயோத்தி தாசரை மறைத்துவிட்டனர் என்று அவரின் விமர்சனம் அமைந்தது" 

ரவிக்குமார் அயோத்தி தாசரை முன்னிறுத்தியதை பெரியார் அன்பர்கள் எதிர்கொண்ட விதம் ரொம்ப எளிமை. அயோத்தி தாசர் தன் இனமான பறையர்களையே முன்னிறுத்தினார் என்றும் அருந்ததியருக்கு எதிரானவர் என்றும் விமர்சித்து அதற்குத் துணையாக அருந்ததியரையும் அமைத்துக் கொண்டனர் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "தங்களுடைய கருத்திற்கு உடன்பட்ட அல்லது கீழ்படிந்த பிம்பமாகவோ கருத்தியலாகவோ இருந்தால் உங்களிடம் முரண்கல் இருந்தால் கூடச் சொல்லமாட்டோம். மாறாக உடன்படாவிட்டால் முரண்களைச் சொல்லுவோம்; மறுப்போம்; நிராகரிப்போம்" என்பதாகப் பெரியாரின் பிம்பத்தின் மீது ஈடுபாடுள்ளவர்கள் கையாண்ட தந்திரோபாயம் என்கிறார் ராஜாங்கம். 

திராவிட இயக்கத்தினர் கொடுத்த அழுத்ததின் காரணமாக ரவிக்குமார் அயோத்திதாசர் பற்றியும் பெரியார் பற்றியும் எழுதியவை நிறுத்தப்பட்டு அவர் "திராவிட இயக்கிற்கு வெளியேயும் முன்பேயும் செயல்பட்ட தலித் அமைப்புகளையும் அவர்தம் புரிதல்களையும் பேசும் செயல்பாடு உருவானது. எல்லோரும் நம்புவதுபோலத் தலித் மக்கள் திராவிட இயக்கதினாலோ பிறராலோ கண்விழிக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே நடத்தி வந்த நெடிய போராட்டங்களினா இன்றைய உரிமைகளைப் பெற்றனர் என்று கூறுவதே இதன் அடிப்படை. திராவிட இயக்கம் மீதான எதிர்மறை விமர்சனத்தைத் தலித் வரலாறு என்கிற நேர்மறை தேடல் மூலம் சமப்படுத்தும் முயற்சியாக இதைக் கருதலாம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். 

கல்வியைச் சீரழித்த கருணாநிதியும் திமுகவும்: 

1967-1977 வரை நடந்த திமுக ஆட்சியில் எந்த அரசு பொறியியல் கல்லூரியோ, அரசு மருத்துவக் கல்லூரியோ திறக்கப்படவில்லை. தமிழகத்தின் தொழில் கல்லூரிகளில் பெரும்பான்மை 1947-67 காலக் கட்டத்தில் திறக்கப்பட்டவை தான். சில கல்லூரிகள் காலனி அரசால் தொடங்கப்பட்டவை. 1990-இல் 4 கோடிப் பேர் கொண்ட மாநிலத்தில் ஏழே அரசு பொறியியல் கல்லூரிகள் இருந்தன. கலைக் கல்லூரிகளின் கதையும் இதே தான். 

திராவிட இயக்கத்தினர் சமூக நீதி என்றவுடன் இட ஒதுக்கீட்டின் மாண்பு குறித்தும் அதற்குத் தாங்களே பிதாமகன்கள் என்றும் பேசுவர். 

நவீனக் கல்வி என்று ஒன்று அறிமுகமான காலம் தொட்டே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீடு இருந்தே வந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுக் காலம் கல்வி மறுக்கப் பட்டது என்பதெல்லாம் வெற்று கோஷமே. உண்மையான வரலாறு அல்ல. கட்டாயமாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்விக் கிடைப்பதிலும் கல்வியை அடைவதிலும் முட்டுக் கட்டைகள் இருந்தன. அதற்கு ஜாதியம் மட்டும் காரணமன்று. மேலும் அந்த முட்டுக்கட்டைகளைப் போட்டவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. 

இட ஒதுக்கீடு என்பது இன்று வோட்டு வங்கி அரசியலானதோடு அக்கொள்கை சமூக நீதியைப் பொறுத்தவரை ஒரு மழுங்கிய ஆயுதமே (a blunt instrument). அரசாங்கங்கள் கல்வியில் முதலீடு செய்யாமல், கல்லூரிகளையும் கல்விச் சாலைகளையும் பெருக்காமல் இருக்கின்ற சீட்டுகளில் ஒதுக்கீடு கொள்கையைப் பயன்படுத்துவது ஒரு குறுகியக் காலத்திற்கு வேலைச் செய்யும். செய்தது. அப்புறம் அது அர்த்தமிழக்கத் தொடங்கும். தொடங்கியது.



ஆதி திராவிடர்களின் பிரச்சனை கல்லூரிகளில் இடம் கிடைப்பது மட்டுமல்ல. அவர்களில் பலர் இன்றும் கிராமங்களிலிருந்து பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருந்து வருபவர்கள். மாநிலத்தில் ஏழே அரசுக் கல்லூரிகள் இருந்தன என்றால் பெரும்பாலான பட்டியல் ஜாதி மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்க வேண்டும். அதற்கான உதவித் தொகைகள் மிகச் சொற்பம். மேலும் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில், பெரும்பாலும் நகரங்களில், உள்ள கல்லூரிக்குச் செல்வது பணம் செலவாகும் ஒன்று. போதாக்குறைக்கு நகரத்தில் படித்த மாணவர்களோடு போட்டியிட வேண்டிய சூழல், தன் வீட்டில் இருந்தும் தன் சூழலிலில் இருந்தும் அந்நியப்பட்ட தனக்கு எந்த விதத்திலும் பின்புலம் இல்லாத சூழலில் கல்விப் பயில்வதில் அம்மாணவர்கள் கொடும் மன உளைச்சலுக்கு ஆளாவது அன்றாடம் நடப்பது. மேற்சொன்னதில் பலவும் பொருளாதாரத்தால் தாழ்ந்த நிலையில் இருக்கும் மேல் ஜாதியினருக்கும் பொதுவானதே. 

பள்ளிக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி இன்று தமிழகத்தில் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் வேறு எந்த மாநிலத்திலும் நடந்துள்ளதா என்பது கேள்விக் குறியே. இத்தனியார் மயத்தினால் உண்டான ஆங்கிலக் காண்வெண்டு பரவலாக்கம், தனியார் கல்லூரிகளில் எம்ஜியார் கொண்டு வந்த இட ஒதுக்கீடு ஆகியவை நன்மை பயத்தன ஆனால் அதற்கான விலை? 

இட ஒதுக்கீடு எனும் சாக்லேட்டை காண்பித்து ஏமாற்றிவிட்டு கல்வியின் தரம், பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் தரம் என்று எந்தத் தரத்திலும் கவனம் செலுத்தாது கழக அரசியலின் கொடை. சமீபத்தில் மத்திய கல்வி மையம் நடத்திய ஆராய்ச்சியில் தமிழக மாணவர்கள் பின் தங்கிய மாநிலங்கள் என்று கருதப்படும் நாகாலாந்து, ஒடிஷா மாணவர்களை விடப் பின் தங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. இன்னொரு ஆய்வோ தமிழகப் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 85% எவ்வித நேர்காணலுக்கும் லாயக்கில்லை என்றது. சமச்சீர் கல்வியினால் மாணவர் தேர்ச்சி உயர்ந்திருக்கிறது என்று மார் தட்டினார்கள் உடன் பிறப்புகள். ஆனால் தரம்? பாதாளம். கணிதத்தில் 200/200 வாங்கிய மாணவர்கள் பலர் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்பில் இரண்டாமாண்டு கணிதத் தேர்வில் பாஸ் ஆகவில்லை. மற்ற மாநிலங்கள் பின்பற்றும் மத்திய கல்வி முறையின் (CBSE) தரத்தின் முன் தமிழகச் சமச்சீர் கல்வியின் தரம் உரைப் போட காணாது. இதெல்லாம் பட்டியல் இனத்து மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். 

நுழைவுத் தேர்வு என்றாலே தமிழ் நாட்டு மாணவன் தொடை நடுங்குகிறான். இந்திய அளிவிலான எந்தத் தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றிப் பெறுவது அருகி வருகிறது. ஐஐடி நுழைவுத் தேர்வில் சமச்சீர் கல்வியில் பயின்றவர்கல் 9 பேர் தான் தேர்ச்சிப் பெற்றனர். அவமானம். ஐ.ஏ.எஸ்; UPSC என்றூ அதை எடுத்தாலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவமானகரமானது. (கீழே சுட்டிகளைக் காண்க). 

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் செய்தி வருகிறது திமுகவினர் சபாநாயகர் தனபாலுக்குப் புடவை, வளையல் ஆகியவற்றை அஞ்சல் செய்துள்ளனர் என்று. திமுகவினருன் ஆணாதிக்க மனோபாவத்துக்கும் ஆண்டை மனோபாவத்திற்கும் சான்று.

சபாநாயகருக்கு திமுகவினர் அனுப்பிய அஞ்சல் ( http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-from-pollachi-sent-saree-in-courier-to-speaker-dhanapal-117022000051_1.html
"பிளேடு வச்சுருக்கோம்" - ஸ்டாலின் பயமுறுத்தல்:

சட்டசபையில் இருந்து வெளியேற்ற வந்த போலீஸாரிடம் ஸ்டாலின் "பிளேடு வச்சுருக்கோம், தொட்டீங்க தற்கொலை பண்ணிக்குவோம்" என்று அச்சுறுத்தினாராம். ஆனால் போலீஸார் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்களை வெளியேற்றினர். இதில் எதை நினைத்துச் சிரிப்பது என்றுத் தெரியவில்லை. ஸ்டாலினின் குழந்தைத் தனமான நடத்தையை நினைத்துச் சிரிப்பதா அல்லது எதிர்கட்சித் தலைவர் அப்படிச் சொன்னதை ஒருப் பொருட்டாகக் கூட கருதாத போலீஸாரின் அலட்சியத்தை நினைத்துச் சிரிப்பதா?

தூக்கிச் செல்லப்படும் "பிளேடு வைத்திருக்கும்" ஸ்டாலின் (http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-threatern-police-that-he-will-commit-suicide/slider-pf222458-274570.html)

கருணாநிதி அடிக்கடி தான் "சூத்திரன்" என்றுச் சொல்லிக் கொள்வதோடு தன் தவப் புதல்வன் ஸ்டாலின் மட்டும் "வேறுக் குலத்தில் பிறந்திருந்தால் அக்கினிக் குஞ்சு என்றுப் போற்றப்பட்டிருப்பார்" என்பார். ஸ்டாலின் எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அக்கினிக் குஞ்சாகியிருக்க மாட்டார்.

பிற் சேர்க்கை:

சற்று முன் நினைவுக்கு வந்த இன்னொருத் தகவல். முன்பே எழுதியது தான். கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 21 2010 அன்று சென்னையில் இருக்கும் ஆதி திராவிடர் நல விடுதி ஒன்றின் மாணவர்கள் நகரின் மையச் சாலையான மவுண்ட் ரோடில் தர்னா செய்தனர் தங்கள் விடுதியின் நிலையைச் சீர் செய்ய சொல்லி. பார்ப்பன ஏடு என்றும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்றும் திமுகவினர் இகழும் இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் பிரண்ட்லைன் பத்திரிக்கை தான் முழுக் கட்டுரை வெளியிட்டது. மனிதர்கள் வசிக்க சற்றும் லாயக்கில்லாத விடுதிகள் அவை. மாணவர்கள் உணவை கொண்டு செல்வதற்கு பாத்திரங்கள் இல்லாமல் வாளியைப் பயன்படுத்த வேண்டிய நிலை. தெரு நாய்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தன விடுதியில். "Hell Hole Hostels" என்று பிரண்ட்லைன் அக்கட்டுரைக்குத் தலைபிட்டது. இந்த லட்சணத்தில் தலித் சமூகத்தினர் திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது கயமை.

ஆதி திராவிடர் நல விடுதியில் தெரு நாய்கள். மேலும் படங்களுக்கும் கட்டுரைக்கும் பிரண்ட்லைன் சுட்டியை "சான்றுகள்" பட்டியலில் காண்க

சான்றுகள்:

1. நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு -- பெ.சு. மணி. பூங்கொடி பதிப்பகம்
2. அயோத்திதாசர்: வாழும் பௌத்தம் -- ஸ்டாலின் ராஜாங்கம். காலச்சுவடு பதிப்பகம்.
3. "திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது!": Tamil Nadu's Debt To Kamaraj And M.G.R On Education. --- என்னுடைய பழையப் பதிவு http://contrarianworld.blogspot.com/2013/05/tamil-nadus-debt-to-kamaraj-and-mgr-on.html
4. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டின் சுருக்கமான வரலாறு - விக்கிப்பீடியா https://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu
5. தமிழ் நாட்டில் அரசுக் கல்வி நிலையங்கள் https://en.wikipedia.org/wiki/List_of_Tamil_Nadu_Government_educational_institutions
6. தமிழ் நாட்டு மாணவர்களின் UPSC தேர்ச்சி விகிதம் பற்றி http://indiatoday.intoday.in/education/story/upsc-result-tamil-nadu/1/430289.html
7. ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ் நாட்டு மாணவர்கள் http://www.deccanchronicle.com/141015/nation-current-affairs/article/400-tamil-nadu-candidates-clear-ias-prelims
8.  பிளஸ்–2 வில் 200–க்கு 200: அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தோல்வி! -- விகடன் கட்டுரை http://www.vikatan.com/news/article.php?module=news&aid=12311
10. "தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் என் மீது திமுக தாக்குதல்" - http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-speaker-plays-caste-politics-274539.html
11. பிளேடு வச்சுருக்கோம் - ஸ்டாலின் மிரட்டல் http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-threatern-police-that-he-will-commit-suicide-274570.html
12. "Hell Hole Hostels" http://www.frontline.in/static/html/fl2802/stories/20110128280209000.htm


6 comments:

poornam said...

அண்மையில் ஜெயமோஹனின் புறப்பாடு படித்தேன். அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து ஆதிதிராவிடர் ஹாஸ்டலில் தங்கியிருந்த அனுபவங்கள் (அது ஒரு வேளை 70களின் கடைசியாக இருக்கலாம்.) உள்ளன. அதில் வரும் வர்ணனைகளை நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அங்கு தங்கியிருந்த ஆதி திராவிட மாணவர்களின் அனுபவங்களை சொல்லக்கேட்ட வர்ணனைகளுடன் ஒப்பு நோக்கினேன். (80கள் இறுதி) 2010லும் இதுவே நிலைமை. இனி மாறுமா என்பதும் ஐயமே. ஆதி திராவிடத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களோ அதிகார வர்க்கமோ அவர்களை சக மனிதர்களாக எண்ணுகிறதாகவே தெரியவில்லை. ஆதிதிராவிட விடுதிகள் பற்றி மேலும் விரிவான பதிவிட முடியுமா?

Gokulnath said...

HATS OFF SIR, FOR ME YOU ARE THE REAL TEACHER TO YOUNGER GENERATION, PLEASE KEEP ON RIGHTING TRUTHS. YOU ARE AN EYE OPENER,

- GOKUL

A.SESHAGIRI said...

குறைந்தபட்சம் ஒரு சிலரின் 'கண்ணை திறக்க கூடிய கட்டுரை.நான் இதை எனது முகநூல் பக்கத்தில் பகிர தங்கள் அனுமதி தேவை.

Anonymous said...

The speaker is a chakkiliar caste. He is not a parayar.

In one sense, Manushyaputhiran is correct.

A chakkilar was appointed to the chair of Speaker that happened only during the dravidian party rule.

So, he is indebted to the dravidian movement from which came AIADMK.

No use going back in time. Just think about him and his appointment.

Anonymous said...

Hi,

Very well written article with detailed notes and references that exposes illusionary, fake and fraud Dravidam.

Please join twitter so you can post. I post regularly on fraud illusionary dravidam at twitter.com/onlytruthtb

Thanks

kuttygnanam said...

Well done. An article to reveal the true face of the "Dravida" based parties. All points well substantiated with facts and statistics.

siva