Thursday, August 19, 2021

ஆப்கான் போர் நீண்டது அமெரிக்க ஆயுத விற்பனைக்கா?

 ஜனவரி 17 1961-இல் தன் பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த போது ஜனாதிபதி ட்வைட் ஐசன்ஹோவர் ஓர் உரையில்ராணுவ-தனியார் நிறூவன கூட்டுக்கு” (Military-Industrial Complex) எதிராக கவனமாக இருக்க வேண்டுமென்றார். அது முதல் அச்சொற்றொடர் இடது சாரியினருக்கு சுவாசம் போல் ஆனது. ஐசன்ஹோவர் வலது சாரி :-). 

நண்பர் கே.வீ ஆப்கான் போர் பற்றி ஐந்து பதிவுகள் எழுதினார் அதன் கடைசிப் பகுதியில் (https://www.facebook.com/kay.vee.716970/posts/381022000249749 ) அப்போர் 20 வருடம் நீடித்ததற்கு இந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்களே பெரும் காரணம் என்றார். அங்கே மறுமொழியிட்ட பலரும் அமோதித்தனர், சிலர்குத்துங்க எஜமான், இந்த அமெரிக்காவே இப்படித் தான், இந்த ஆயுத கம்பனிகளே இரண்டு தரப்புக்கும் சப்ளை செய்தார்கள்என்று கமெண்டுகள். கொஞ்சம் உண்மை என்ன என்று பார்ப்போமா?

ஆப்கான் போரினால் நிகழ்ந்த இழப்புகள், ஏமாற்றங்கள், நிறைவேறா நோக்கங்கள் இன்று நிகழ்ந்திருக்கும் வெளியேற்றத்தால் உண்டாகும் பின் விளைவுகள் இக்கட்டுரையின் எல்லைக்கப்பால். இக்கட்டுரை போர் நீண்டதற்கு ஆயுத நிறுவனங்கள் காரணமா என்பது மட்டுமே பேசுப் பொருள். 




தீவிர இடது சாரி இணைய தளம் “Intercept”இந்த ஆப்கான் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இப்போரில் பயன் பெற்றவர்கள் ஒரேயொரு தரப்பு தான், அது அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் என்றது. போரின் ஆரம்பத்தில் அந்த நிறுவனங்களில் $10,000 போட்டிருந்தல் அதுவே இன்று $97,795 மதிப்புப் பெறும் ஆனால் அதே பணத்தை S&P 500-இல் போட்டிருந்தால் $61,612 தான் மதிப்பு பெறும் என்றார்கள். கொசுறு செய்தி, அதே $10,000-த்தை ஆப்பிளில் 2001-இல் முதலீடு செய்திருந்தால் 2012-இல் அது $667,159 மதிப்புப் பெறும் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இது மாதிரி பல கணக்குகள் இருக்கின்றன.




ஆச்சர்யமாக "Intercept" கட்டுரைக்கான மறுப்பு "Slate" என்கிற இடது சாரி தளத்தில் ஃபிரெட் காப்லன் என்பவரால் எழுதப்பட்டது. காப்லன் முக்கிய அமெரிக்க ஆயுத நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ரோப் கிரம்மன் ஆகியவற்றின் தளவாட விற்பனைகளை சுட்டிக் காட்டி, அவை பெரும்பாலும் மிகப் பெரிய விமானங்கள் அல்லது மிக நுட்பமான விலையுயர்ந்த கருவிகள் போன்றவையே, அவற்றுக்கு ஆப்கான் போரில் பெரும் பங்கு எதுவுமில்லை என்கிறார். மேலும் ஆப்கான் போரே நடக்கவில்லை என்றாலும் இந்த நிறுவனங்கள் கிட்டத் தட்ட இதே லாபத்தை அடைந்திருக்கும் என்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இந்தியா ரபேல் விமானத்தை காஷ்மீர் தீவிரவாதத்துக்காகவா வாங்கியது? பாகிஸ்தானை உத்தேசித்து தான் இந்தியா வாங்கியது. போபர்ஸ் பீரங்கியும் அப்படி வாங்கியது தான். 

தலிபான் வைத்த்திருக்கும் ஆயுதங்கள் பெரும்பாலும் தோற்று ஓடிய ஆப்கான் படையினரிடம் இருந்து கைப்பற்றியதும் கள்ள மார்க்கெட்டில் வாங்கியதும் தான். அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் நினைத்தப் படி ஆயுதங்களை விற்க முடியாது. ஆயுத நிறுவனங்கள் யாருக்கு விற்கலாம், விற்க கூடாதென்பதற்கெல்லாம் அநேக சட்டங்கள் இருக்கின்றன. உடனே "ஆஹா அதெல்லாம் இடைத் தரகர் மூலம் நடக்கும்" என்று சொல்வதெல்லாம் தீவிர இடதும்/வலதும் சமைக்கிற கனவு சூழ்ச்சிகள், ஆதாரமில்லை. விதிகளை மீறி ஆயுதம் விற்றால் இந்த கம்ப்பெனிகளுக்கு கடும் தண்டனைகள் உண்டு. பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கே அவர்களிடையே புழங்கும் நிதிக்கு நதிமூலம், ரிஷிமூலம் தெரியாமல் பணம் பரிவர்த்தனை செய்து அது தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்தால் அந்நிறுவனங்கள் மிகக் கடுமையான சட்டங்கள் பாயும். 

மேலே சொன்னதெல்லாம் பொதுப்ப்படையான கருத்து தான். ஆயுத நிறுவனங்கள் மற்ற எல்லா அமெரிக்க நிறுவனங்களையும் போல் லாபியிஸ்டுகள் வைத்திருப்பார்கள் அதன் மூலம் தங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்க செயல்படுவார்கள். அதெல்லாம் இங்கு சாதாரணம். ஆனால் அதற்காக அரசையே கட்டுபடுத்துகிறார்கள் என்பதெல்லாம் கற்பனை. அமெரிக்க ஆயுத நிறுவனங்களா பின் லேடனை அமெரிக்காவை தாக்கு எங்களுக்கு வியாபாரம் நடக்கும் என்று ஊக்குவித்தார்கள்? இல்லையே? 9/11 சராசரி அமெரிக்கர் எல்லோருமே போருக்கு ஆதரவாகவே இருந்தனர். அன்று புத்தரே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் போருக்கு போயிருப்பார். 

அமெரிக்காவின் தற்காப்பு பொருளாதார ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி சம்பளம், பயிற்சி, மருத்துவம் ஆகியவற்றுக்கு தான். 




அமெரிக்கா நிச்சயமாக உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிட்டால் பல நூறு பில்லியன் டாலர் அதிகமாக ராணுவத்துக்கு செலவழிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் செலவை அமெரிக்க வருடாந்திர மொத்த உற்பத்தியோடு ஒப்பிட்டால் அது அவ்வளவு பெரிதல்ல என்று புரியும். 1980-களில் பனிப்போரின் உச்சத்தில் மொத்த பொருளாதாரத்தில் 7% இருந்த ராணுவ ஒதுக்கீடு இன்று 4% தான். இன்று அது கிட்டத்தட்ட $700 பில்லியன் டாலர். 



ஆயுத விற்பனையில் அமெரிக்காவின் பங்கு, உலக சந்தையில், 2016-2020 ஆண்டுகளுக்கு, 37%. அதே காலக் கட்டத்தில் ருஷ்யாவின் பங்கு 20%, பிரான்ஸ் 8.2%, ஜெர்மனி 5%, சீனா, 5%. இதில் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவுக்கு தளவாடம் விற்பது கூட அதிக கவலைத் தருவதல்ல மாறாக நுட்பமான தகவல் கருவிகள், சாப்ட்வேர் போன்றவற்றை விற்பதே பிரச்சனை. இதில் எங்கே தாலிபானுக்கும், அல் கொய்தாவுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் விற்பது. 



2005-இல் ஐரோப்பாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட ஜார்ஜ் புஷ் ஐரோப்பிய அரசுகள் தங்கள் ராணுவத்துகாக செலவு செய்வதை விட சீனாவுக்கு விற்பதில் மும்முரம் காட்டுவதை கண்டித்தார் என்றது எகானமிஸ்டு பத்திரிக்கை. (https://www.economist.com/leaders/2005/02/24/merci-yall ). நேட்டோ ஒப்பந்தப் படி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பாதுகாப்புக்கென்று வருடாந்திர மொத்த பொருளாதாரத்தில் ஒரு விகிதத்தை செலவு செய்ய வேண்டும் ஆனால் பிரான்ஸும், ஜெர்மனியும் அதை செய்வதில்லை மாறாக அமெரிக்கா செலவு செய்யும் என்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டிரம்ப் குற்றம் சாட்டியது நியாயமே. அமெரிக்க ராணுவ செலவு என்பது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல.

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ராணுவ ஒதுக்கீடு எவ்வளவு? மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடு எவ்வளவு. இதோ 2020-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு. (https://www.cbo.gov/publication/57170 )




ராணுவ ஒதுக்கீடு $714 பில்லியன், வயதானோருக்கான மருத்துவக் காப்பீடு $769 பில்லியன், வசதியற்றோருக்கான மருத்துவக் காப்பீடு $458 பில்லியன், கோவிட்டால் பணி நீக்கம் செய்யாமிலிருக்க நிறுவனங்களுக்கு அளித்தது $526 பில்லியன், பென்ஷன் ஒதுக்கீடு $1.1 டிரில்லியன். என்னமோ அமெரிக்காவே ஆயுத கம்பெனிகளுக்கு தாரை வார்த்து எல்லோரும் பசி, பட்டினியால் வாடுவது போல் யாரும் நினைக்க வேண்டாம். நிச்சயமாக போர் செலவினங்கள் வேறு செலவுகளுக்கு உதவியிருக்கலாம். அது வேறு விவாதம். ஆப்கான் போர் அமெரிக்கா மீது திணிக்கப்பட்ட போர் தான். 

அமெரிக்கா போரிடுகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். சீனாவும், ரஷ்யாவும் என்ன பூப்பரித்துக் கொண்டிருக்கிறார்களா? சீனா ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்கிறது, தெற்காசிய கடல் பகுதிகளில் கோலோச்ச நினைக்கிறது, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது. ரஷ்யா உக்ரைனை சுவாஹா செய்கிறது, ஜார்ஜியாவை அடக்குகிறது, சிரியாவில் மிகப் பெரிய படு பாதகங்களை பஷார் அசாத்துடன் கைக்கோர்த்து செய்கிறது. சிரியாவில் விஷ வாயு குண்டு பிரயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஒபாமா அப்புறம் கை கழுவியது தான் மிச்சம். ஈரான் அனுகுண்டு தயாரிக்கிறது அதை அமெரிக்கா தடுக்க முயன்றது, முயல்கிறது. அது இந்தியாவுக்கு பயன் தான். அதற்கான பணத்தில் என் வரிப்பணமும் உண்டு. 

அமெரிக்க பரிசுத்த நாடு அல்ல. உலகமும் பரிசுத்தமல்ல. ஆனால் நிச்சயம் இன்று அமெரிக்க தலைமையின்றி உலகின் சுதந்திர பகுதிகள் பாதுகாப்பாக இருக்க முடியாது. America, for good reason, remains the leader of the free world. 


Wednesday, August 11, 2021

உ.வே.சா. சனாதனியா?

 உ.வே.சா. பற்றி இன்று அடிக்கடி கேள்விப்படும் ஒரு சித்தரிப்பு அவர் 'சநாதனி' என்று. இன்றைய அரசியல் சூழலில் ஒருவரை, அதுவும் குறிப்பாக பிராமணரை, சநாதனி என்றழைப்பது, ஆங்லத்தில் சொல்வதென்றால், ஒரு "loaded term". உ.வே.சா சநாதனியா? ஆம் என்றால் எந்த அர்த்தத்தில். 

எழுத்தாளரும் வரலாற்றாய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் "பெயரழிந்த வரலாறு" பற்றி உரையாற்றிய பேராசிரியர் கல்யாணராமன் அவர் உரையினைடையே உ.வே.சா ஒரு சநாதனி என்றார். அவர் நிச்சயமாக அந்த சித்தரிப்பை உ.வே.சா பற்றி தி.க.வினர் பேசும் அர்த்தத்தில் அதை சொல்லவில்லை. ஆனால் அந்த சித்தரிப்பு சட்டென்று உறுத்தியது. அப்போதே ஒரு சிறு குறிப்பை எழுதினாலும் மனத்தில் எண்ணங்கள் சுழன்றதால் இப்பதிவு.



பெருமாள் முருகன் தொகுத்த "உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்" நூலில் பொ.வேல்சாமியின் இரண்டு கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பே, "ஒரு சனாதனியின் நவீனத்துவம்". கட்டுரையின் முதல் பத்தியே உ.வே.சா பெயர் காரணம் பற்றி. உ.வே.சா.வுக்கு பெற்றோர் இட்டப் பெயர் "வேங்கடராமன்" ஆனால் சைவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு வைணவப் பெயரை அழைக்க விருப்பமில்லாததால் 'சாமிநாதன்' என்று உ.வே.சா.வுக்கு பெயரிட்டார் என்ற்று சொல்லி, மேலும் எழுதுகிறார் பொ.வேல்சாமி, "சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர். தங்களுடைய ஆசாரத்தைக் காட்டிலும் தங்கள் மகனின் தமிழ்க் கல்வி மேன்மையுடையது என்னும் கருத்தை அவர்கள் ஒத்துக் கொண்டது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்".

அந்த வரிகளை உற்று நோக்குவோம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சூத்திரர் என்று அறிமுகப் படுத்துகிறார். உ.வே.சா.வின் குடும்பம் "ஆசாரமான பார்ப்பனக் குடும்பம்" என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையை சைவர் என்று அறிமுகப்படுத்தாமல் பொ.வேல்சாமி உ.வே.சா.வுக்கு எதிர் நிலையில் வைத்து "சூத்திரர்" என்று அறிமுகப் படுத்தப்படுகிறார். இதுவே விஷமத்தனமானது. மேலும் இந்த நிகழ்வில் உண்மையான ஆசாரவாதி மீனாட்சிசுந்தரம் தான். ஆனால் "சனாதனி" என்கிற பட்டம் உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமியின் கட்டுரையை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் புதுமைப் பித்தனின் ஒரு மேற்கோளையும் சேர்த்துக் கொள்வோம். "(உ.வே.சாமிநாத)அய்யரவர்கள் தமிழ் இலக்கியத்தின் மெய்க்காப்பாளர் மட்டுமல்ல; பழைய சம்பிரதாயங்கள், பழைய மனப்பான்மைகள் இவற்றின் பிரதிநிதி" என்கிறார் புதுமைப் பித்தன். புதுமைப் பித்தன் உ.வே.சா ஏதோ உலகப் புரட்சி செய்திருக்க வேண்டும் என்று ஏனோ எதிர்ப்பார்த்திருக்கிறார். அதுவும் என்னமோ உ.வே.சா காலத்தில் மற்றவர்களெல்லாம் சமூக நீதி போராளிகளாகத் திகழ்ந்ததுப் போலவும் உ.வே.சா மாத்திரம் மரபுகளின் காவலனாக இருந்ததுப் போலவும் வருத்தப்படுகிறார். 

ஆசார சனாதனியான உ.வே.சா சமண காவியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த வரலாற்றை வேல்சாமி விரிவாக, உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' நூலை ஆதாரமாகக் கொண்டு, எழுதுகிறார். அதனிடையே ஒரு செய்தியைச் சொல்கிறார், "திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் 'இலக்கணக் கொத்து' என்னும் நூலை இயற்றியுள்ளார். அதில் சைவ நூல்களைத் தவிர பிற நூல்களைப் பயில்வோர் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் என்று கூறுகிறார்". கவனிக்கவும் அவ்வரிகளில் எங்கும் சுவாமிநாத தேசிகர் ஆசாரவாதி என்றோ சனாதனி என்றோ குறிக்கப்படுவதில்லை. 

திராவிட இயக்கச் சொல்லாடலின் தாக்கம் "சனாதனி", "ஆசாரவாதி" ஆகியச் சொற்களை பிராமணர்களை மட்டுமே குறித்துச் சொல்லப்படுவனவாக மாற்றியதன் விளைவாகக் கூட பொ.வேல்சாமியும் அப்படி தேசிகரை சனாதனி என்றழைக்காததற்கு காரணமாக இருக்கலாம். வேல்சாமி திராவிட இயக்கத்தை ஏற்றவர் என்பது பொருளல்ல. திராவிட இயக்கதை முழு மூச்சாக எதிர்த்த ஜெயகாந்தனின் மேடைப் பேச்சுகள் திராவிட இயக்க ஸ்டைலிலேயே இருக்கும். 

சீவகசிந்தாமணி பதிப்பின் போது "சம்வசரணம்" என்கிற சொற்றொடரின் பொருள் அறிய ஒரு சமண அம்மையார் உதவுகிறார், அதுவும் ஒரு மறைவில் நின்றுக் கொண்டு உரையாடலின் மூலம். உ.வே.சா.வின் சமணம் பற்றிய ஞானத்தைக் கேட்டு வியந்து அப்பெண்மணி, "இவர் பவ்யஜீவன் போல் இருக்கிறது" என்றார். புலவர்களோடு பழகும் உ.வே.சா அச்சாதாரணப் பெண்ணின் பாராட்டை பெருமையாகச் சொல்வதை வேல்சாமி எடுத்துக் காட்டுகிறார். மேலும் சொற்களுக்கான பொருள் அறிய பொதுச் சமூகத்தில் சாதாரணர்களைத் தொடர்ந்து உ.வே.சா நாடியிருப்பதையும் சொல்கிறார் வேல்சாமி. புலமை என்பது சமூகத்தில் எங்கும் இருக்கலாம் என்று உ.வே.சா நினைத்தார் எனக் கொள்ளலாம் என்கிறார் வேல்சாமி. 

அவ்வளவையும் சொல்லிவிட்டு கட்டுரையின் முடிவில் வேல்சாமி எழுதுகிறார், "சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து, பிற்போக்குக் கலாச்சாரமாகிய ஆசார அனுஷ்டானங்களையெ தன்னுடைய அன்றாட வாழ்வாகக் கொண்ட வருணாசிரமவாதி, செம்மையான தமிழ்ப் புலமையின் ஊடாக நவீன உலகத்தைப் புரிந்துக் கொண்டு அவர் காலத்தில் வாழ்ந்த முற்போக்காளர்க்கள் என்று கருதப்பட்ட பல தமிழ்ப் புலவர்களை விடவும் பல தளங்களில் மேம்பட்டுத் தம்முடைய துறையில் சிகரத்தைத் தொட முடியும் என நீரூபித்தவர் உ.வே.சாமிநாதையர்".

"சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து", "பிற்போக்கு கலாச்சாரமாகிய", "ஆசார அனுஷ்டானங்கள்", அப்பாடி மூச்சுத் திணறுகிறது. போதாக்குறைக்கு, "வருணாசிரமவாதி". ஒரு நிமிடம் இங்கு நின்று நிதானிப்போம். இதையெல்லாம் நாம் ஒரு பிராமணருக்கு மட்டும் தான் சொல்ல முடியுமா? மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் முதலாக பலருக்கும் நாம் அவற்றை எளிதாகச் சொல்லலம். ஆறுமக நாவலரின் சாதியப் பார்வை பிரசித்தம். ஆனால் இது வரை அவரை யாரும் "சனாதனி", "வருணாசிரமவாதி" என்றழைத்துப் பார்த்ததில்லை. அந்த கொடுப்பினை உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமி மிகக் கவனமாக தொழில் முறையில் ஆசாரங்களை மீறிய உ.வே.சா சொந்த வாழ்வில் அதை மீறவில்லை என்று ஒரு சித்திரம் வரைந்து தனி வாழ்வில் (private life) ஒருவர் ஆசாரவாதியாக இருப்பினும் தொழில் முறை புலமையில் வேறு மாதிரி இருக்கலாம் என்று முடிக்கிறார். அதையும் பார்ப்போம்.

அந்த பவ்ய ஜீவன் நிகழ்வையே எடுத்துக் கொள்வோம். அது வெறும் தனி வாழ்வில் ஆசாரவாதியாகவும் புலமைத் தேடலில் நவீனத்துவராகவும் இருக்கும் ஒருவர் செய்யும் செயலா? உ.வே.சா என்ன அந்நியன் அம்பியா? இல்லை ஆசாரம் என்ன வீட்டில் மட்டும் போட்டுக் கொள்ளும் சட்டையா? ஆசாரம் என்பது என்ன? சந்தியாவந்தனம் செய்வதா? பிள்ளைகளுக்கு தன் சமூகத்தில் சம்பந்தம் பார்ப்பதா? பூணூல் தரிப்பதா? அதெல்லாமும் தான் ஆனால் அது மட்டுமல்ல. அந்த சமணப் பெண்மணியை தன் புலமைத் தேடலினால் அனுகினார் என்றே வைத்துக் கொள்வோம் அதுவும் அவர் அனுஷ்டித்த ஆசாரத்தின் தளர்வே. இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றறியப்பட்ட சாமுவேல் வேதநாயகம் பிள்ளை திருவாடுதுறை மடத்தின் பேராபிமானம் கொண்டு பாடல்கள் எழுதியதன் மூலம் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானார். அதன் வழியே உ.வே.சா.வின் மதிப்பையும் வேதநாயகம் பிள்ளை பெற்றிருந்தார். உ.வே.சா கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளை விட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

உ.வே.சா.வின் வாழ்வில் உதவிப் புரிந்தோரும், சேர்ந்து பணியாற்றியப் பலரும் பல்வேறு சமூகத்தினர். முதலியார், பிள்ளை, சமணர்கள், ஆங்கிலேயர், கிறிஸ்தவர். தனக்குப் பணம் உதவிச் செய்தவர்கள் பட்டியலை உ.வே.சா வெளியிட்டிருக்கிறார் சென்னையை தவிர அநேக நகரங்களில் அவருக்கு உதவியர்கள் அநேகர் பிராமணரல்லாதோர். அப்படியென்றால் அத்தனைப் பேரிடமும் அவருக்கு நல்லுறவு இருந்தது. இங்கு ஒரு கேள்வி எழலாம், 'அவர்கள் வீடுகளில் உணவு உண்டாரா?' என. தெரியாது என்பதே பதில் (அல்லது யாரேனும் தகவலறிந்தால் சொல்லலாம்). அவர் உணவு உண்ணவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அவர் காலத்தில் வேறு சமூகத்தினர் பலரும் வெளியிடங்களில் உணவு உண்ணாதவர்கள் தாம். 

கி.வா.ஜ எழுதிய "என் ஆசிரியப்ப்பிரான்" நூலில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி. இராமநாதபுரம் ஜமீனை சேர்ந்த கமுதி என்கிற கிராமத்தில் நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குள் நுழைந்தது கலவரத்தை உண்டாக்கியது. தனக்கு நாடார்கள் நண்பர்களாக இருப்பினும் மரபு மீறல் கூடாதென்று நாடார்கள் கோயில் நுழைவிற்கு எதிராக இராமநாதபுரம் அரசர் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சியளிக்க உ.வே.சா.வை அரசர் அழைத்தார். உ.வே.சா "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாதென்று வற்புறித்தினார்" என்றும் அந்த சாட்சியமே வழக்கில் முக்கியமானதென்றும் கி.வா.ஜ எழுதுகிறார். இவ்விடத்தில் "ஆஹா சாதியவாதி உ.வே.சா" என்று நாம் இன்று கூப்பாடு போட்டால் அதை முக்கியமாக இராமநாதபுரம் அரசரை நோக்கித் தான் செய்ய வேண்டும். 

தான் கம்பராமாயணம் படித்த போது அதில் சந்தேகங்களை கேட்டறிய உ.வே.சா.வும் சக மாணவர்களும் திரிசிபுரம் கோவிந்த பிள்ளை என்பவரிடம் பாடம் கற்கலாம் என்று ஆசைப்பட்டனர். கோவிந்தப் பிள்ளை கம்ப ராமாயணத்தை முழுதுமாக அச்சிட்டவர் என்றும் "பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி" இருந்ததென்றும் உ.வே.சா சொல்கிறார். கோவிந்த பிள்ளை அப்போது கபிஸ்தலத்தில் "ஶ்ரீமான் துரைசாமி மூப்பனார்" அவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து கம்பராமாயணமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். திருவாடுதுறை வந்த கோவிந்த பிள்ளை சில சங்கடங்களை சந்தித்தார். மடத்து மாணவர்களும் அவரிடம் கொஞ்சம் முறுக்கு காட்டினார்கள் என்று சொல்லும் உ.வே.சா, "வைஷ்ணவராகிய அவருக்கு சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது" என்கிறார். இது தான் அக்காலத்திய நிலை. ஏதோ உ.வே.சா.வும் பிராமணர்கள் மட்டுமே சனாதனிகள் என்கிற பிம்பம் இப்போது நிலவுவது உண்மைக்குப் புறம்பானது. அந்த துரைசாமி மூப்பனார் "ஶ்ரீகருடபுராணவசனம்" என்ற நூலை வெளியிட்டியிருக்கிறார். 

உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' வாயிலாக நமக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியப் புரிதல் கல்வியறிவு பிராமண சமூகத்திடம் மட்டும் இருந்தது என்கிற திராவிட இயக்க பிரச்சாரம் பொய் என்பதே அது. பல சமூகத்தினரிடமும் கல்வியறிவும், செல்வமும் இருந்தது. அதற்காக கல்வியறிவில் தடைகள் இல்லை என்பதல்ல பொருள்.

"பிராமணர்களுக்கு மட்டுமே உ.வே.சா பாடம் சொல்லிக் கொடுத்தார்" என்று ஒரு அபவாதம் உலவுகிறது. இது அப்பட்டமானப் பொய். "மடத்துக்கு வருவோர்" என்ற தலைப்பிட்டக் கட்டுரையில் தன்னிடம் பயின்ற மாணவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறார் உ.வே.சா:

"என்னிடம் அக்காலத்தில் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்க தம்பிரான், விசுவலிங்கத் தம்பிரான், சொக்கலிங்கத் தம்பிரான், பொன்னம்பலத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணிய தம்பிரான், சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.

வெள்ளை வேஷ்டிக்காரர்களுள் பேரளம் இராமகிருஷ்ண பிள்ளை, சிவகிரிச் சண்முகத் தேவர்,                            ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாடுதுறை பொன்னுசாமி செட்டியார்,திருவாடுதுறை சன்முகம் பிள்ளை என்போற் முக்கியமானவர்கள்"

அதே கட்டுரையில் காவடிச் சிந்து இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் தன்னிடம் பாடம் பயின்றவர் என்றும் இலக்கணத்தை விட செய்யுள் இயற்றுவதில் நாட்டமுடையவர் என்றும் சொல்கிறார் உ.வே.சா. 

வெகு எளிதாக "சனாதனி" என்கிற வார்த்தையை வீசி விடுகிறார்கள். சி.வை.தாமோதரம் பிள்ளை பிறப்பால் கிறிஸ்தவர் ஆனால் அதன் பின் சைவ மதத்தை தழுவியதோடு 'விவிலிய விரோதம்' என்கிற கிறிஸ்தவ எதிர்ப்பு நூலையும் எழுதினார். அதோடு "சைவ மகத்துவம்" என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார். இப்போது சி.வை.தா.வை நாம் என்னவென்று அழைப்பது? 

சமணம், பௌத்தம் ஆகிய மதங்களை மையமாகக் கொண்ட இலக்கியங்களைப் பதிப்பித்தாலும் அதனால் எவ்வகையிலும் தன் பிறப்பு சார்ந்த மத நம்பிக்கைகளை உ.வே.சா மாற்றிக் கொள்ளவில்லை என்று பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு. உ.வே.சா.வே அது குறித்து எழுதியிருக்கிறார். இன்று பௌத்தம், இந்து மதம் பற்றி அநேக மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் அவர்களுள் பலர் கிறிஸ்தவர்கள் ஆனால் யாரும் பௌத்தத்துக்கோ, இந்து மதத்துக்கோ மாறியதில்லை. அப்படி மாற வேண்டுமென்றும் யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனோ உ.வே.சா. மீது மட்டும் அத்தகைய எதிர்ப்பார்ப்பை ஏற்றுகிறோம். 

காந்தி தன்னை சனாதனி என்றே அழைத்துக் கொண்டார் ஆனால் அவர் தன்னை சனாதனி என்று குறிப்பிட்டதற்கும் இன்று தீவிர மத வெறுப்புகள் உள்ளடக்கிய இந்துதுவர்கள் தங்களை சனாதனிகள் என்று அழைத்துக் கொள்வதற்கும் சம்பந்தமேயில்லை. உ.வே.சா.வை சனாதனி என்றழைப்பது சரியல்ல. வேல்சாமி அதை அறிவு நேர்மையில்லாமலே செய்கிறார். வேறு பலர் அதே காரணத்துக்காகவோ அறியாமலோ அதை செய்கிறார்கள். 

பதிப்பு வரலாற்றில் உ.வே.சா ஒரு துருவ நட்சத்திரம். ஆமாம் அவருக்கு முன்னோடிகள் உண்டு. ஐசக் நியூட்டன் தன் முன்னோடிகளை விட தான் அதிக தூரம் பார்க்க முடிந்தது ஏனென்றால் தான் அவர்கள் தோள் மீது நின்றதால் என்றார். அது உ.வே.சா.வுக்கும் பொருந்தும். முன்னோடிகள் இருந்தார்கள் என்பதால் ஐசக் நியூட்டனின் இடம் தவறா? இல்லை. விஞ்ஞானத்தில் நியூட்டன் ஒரு துருவ நட்சத்திரம். அப்படித் தான் உ.வே.சா.வும். 

 

நூல்கள்:

1. 'என் சரித்திரம்' - செம்பதிப்பு. ஆசிரியர் ப.சரவணன்

2. உ.வே.சா: பன்முக ஆளுமையின் பேருருவம் -- தொகுப்பு பெருமாள் முருகன்



Monday, August 2, 2021

ஸ்டாலின் ராஜாங்கம்: வரலாறு என்னும் மொழி

 ஜூலை 31 2021 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி "வரலாரு என்னும் மொழி" என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு எப்படி கட்டமைக்கப்படுகிறது, 'எழுத்து' மட்டுமே வரலாறா என்று பல புள்ளிகளை விவாதம் தொட்டுச் சென்றது. "பெயரழிந்த வரலாறு: அயோத்தி தாசரும் அவர் கால ஆளுமைகளும்", "எண்பதுகளின் தமிழ் சினிமா", "எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்" ஆகிய மூன்று நூல்களும் மூன்று வெவ்வேறு தளத்துக்கானவை ஆனால் மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்று இருக்கும்.




இந்நிகழ்வுக்கென்று நூல்கள் குறித்தும் பேஸ்புக்கில் எழுதிய குறிப்புகளின் தொகுப்பை இங்கு அளிக்கிறேன். இவை முறையான நூல் விமர்சனங்களல்ல. ஓர் அறிமுகம் மட்டுமே.


பெயரழிந்த வரலாறு: ஒரு குறிப்பு

-------------------------------


இப்புத்தகம் தமிழ் வரலாற்றெழுத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அயோத்திதாசரை மையமாகக் கொண்டு உ.வே.சா, பாரதி, இரட்டைமலை சீனிவாசன் முதலானோர் பரஸ்பரம் ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றியதை வைத்து வெகு நேர்த்தியாக ஊடும் பாவுமாய் ஸ்டாலின் வரலாற்றை நெய்த்திருக்கிறார்.


சீவக சிந்தாமணியை பதிப்பித்த உ.வே.சா அக்காப்பியத்துக்கு உரை எழுத சம காலத்தில் வாழ்ந்த சமணர்களை சந்தித்து கற்றுக் கொண்டார். ஆனால் மணிமேகலைக்கு உரை எழுத சம காலத்தில் "அழிந்தது" என கருதப்பட்ட பௌத்தத்திற்கு அவர் மேற்குலக பௌத்தர் அல்லாத ஆசிரியர்க்களின் நூல்களை, நேரடியாகக் கூட அல்ல, நண்பர் மூலம் கேட்டறிந்து (ஏனெனில் அவை ஆங்கிலத்தில் இருந்ததால்), அதன் மூலம் அறிந்த பௌத்தத்தையும் தன் பாரம்பர்யம் சார்ந்த புரிதலையும் சேர்த்து காப்பியத்துக்கு துணை நூலாக "பௌத்த மும்மணி" ஒன்றை எழுதினார், அது புத்தரின் வரலாற்றையும் அடக்கியது.


பௌத்தம் அழிந்தது என்று கொள்வது சரியா? என்ற கேள்வியில் தொடங்கி அயோத்திதாசர் அத்தகைய நூலினை, உ.வே.சா. பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றுகிறார். பௌத்தம் அறியாத மேற்குலகின் ஆசிரியர்களின் புரிதலையும் உ.வே.சா.வின் புரிதலையும் அயோத்திதாசர் கேள்விக்குட்படுத்துகிறார்.
மேற்க்கத்திய ஆய்வாளர்களும் வாயிலாக பௌத்தத்தை அறிந்த உ.வே.சா எழுதிய பௌத்தம் பற்றிய துணை நூல் வாசகனுக்கு காப்பியத்துக்குள் ஒரு நுழை வாயில் மட்டுமல்ல காப்பியத்துள் இருக்கக் கூடிய பௌத்தத்தை கூட வாசகன் உ.வே.சா அளித்த சட்டகத்தின் வழியாகவே புரிந்துக் கொள்ளக் கூடும். அது முழுமையானப் புரிதலா?

அயோத்திதாசரின் எழுத்தின் நோக்கம் இரண்டு. "1)சாதி பேதம் நீண்ட காலத்தவை அல்ல. 2) ஒன்றைக் காலத்தால் பழமையாக்கிக் காட்டுவதால் ஏற்படும் நிரந்தரத் தன்மையின் பிரச்சினை"
"அவரின் வரலாற்று துல்லியத்தை விட இவ்வாறு காலத்தால் பழமையாக்குவதால் சாதியமைப்புக்குக் கிடைக்கும் சமூக ஏற்பைப் பற்றிப் பேசியிருப்பது கவனிக்க வேண்டியதாகிறது"
"பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தொன்மை என்பது அவர்கள் பௌத்தத்திடமிருந்து இடையிலே 'போலச் செய்து' பலவற்றை தங்களவையாக உருமாற்றி ஏற்றம் பெற்றுக் கொண்டதை மறைக்கிறது என்று கருதினார். இவ்வாறு அவர்களுக்கு தரப்படும் தொன்மை என்பது சாதியமைப்புக்குத் தரப்படும் தொன்மையாக ஆகிவிடுகிறது என்றும் யோசித்தார்".

இவ்விடத்தில் யொஹானஸ் பிராங்க்ஹர்ஸ்ஸ்ட் (Johannes Bronkhorst) எழுதிய "பிராமணியத்தின் நிழலில் பௌத்தம்" (Buddhism in the shadow of Brahminism) நூலில் சொல்வது கவனிக்க வேண்டியது, "The rule of the Mauryas, it appears, was remembered in various ways, by Brahmins and Buddhists alike....This shared memory, it appears, could be moulded by Brahmins in a manner that suited their purposes. Such colonization of the past became all the easier in later days when the influence of Brahmins at the court had become a fact.....Buddhists of the sub continent came to reformulate their own past in Brahminical terms".


மௌர்ய ராஜ்யம், பௌத்தம் பற்றிய நினைவுகள் பிற்காலத்தில் அரச சபையில் கோலோச்சிய பிராமணர்களால் எந்தளவு கட்டமைக்கப்பட்டதென்றால் காலப் போக்கில் பௌத்தர்களே பிராமணவயமான சொல்லாடல்களையும் கதையாடல்களையும் ஸ்வீகரித்தார்கள் என்கிறார் பிராங்க்ஹர்ஸ்ட். அவர் முக்கியமாக சுட்டிக் காட்டுவது சாணக்கியனால் சந்திரகுப்தன் சாம்ராஜ்யம் உருவானதென்கிற தொன்மம் கட்டமைக்கப்பட்ட விதம். பௌத்தம் செழித்த காந்தாரத்தில் பிராமணியம் அரச கொள்கையாக இல்லாததை சுட்டிக் காட்டும் பிராங்க்ஹர்ஸ்ட் சாதியம் எப்படி பிராமணர் அதிகாரம் செலுத்தாத காலங்களிலும் இடங்களிலும் நிலைப் பெறவில்லை என்கிறார். இப்போது மீண்டும் ஸ்டாலின் அயோத்திதாசர் பற்றிச் சொல்வதை படித்துப் பாருங்கள்.

இந்நூலின் பலம் என்பது ஸ்டாலின் கையாளும் ஜாக்கிரதையுணர்வு. நிறைய யூகங்களின் அடிப்படையில் நெய்யப்படும் வரலாற்றில் அடிப்படையல்லாத யூகங்களை தவிர்ப்பதோடு தன் யூகங்களுக்கான குறைந்தப் பட்ச முகாந்திரங்களை ஸ்டாலின் அளிக்கிறார். அதை விட முக்கியம் தன் யூகத்தையோ கருத்தையோ, தரவுகளைக் கூட, வாசகன் எப்படி புரிந்துக் கொள்ளக் கூடாதென்று தெளிவாகச் சொல்கிறார். உதாரணத்துக்கு இரட்டமலை சீனிவாசன் தரப்புக்கும் அயோத்தி தாசர தரப்புக்குமான பெயர் குறிப்பிடாத வாக்குவாதங்களை தெளிவாக ஒவ்வொரு தரப்பின் மனச் சாய்வுகளை அடையாளப் படுத்தி வாசகன் தன்னையறியாமல் ஏதேனும் ஒரு பக்கம் சாய்வதை தடுக்கிறார். 

"வரலாறு என்றால் என்ன, தரவுகள் என்பவை எவை, வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம், எவ்வாறு எழுதுகிறோம் என்பதான கேள்விகளினூடாகவும் விவாதித்தப் படியே நகர்ந்துள்ளது. வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எவ்வாறு பொருள்கொள்கிறோம் என்பதையும் சார்ந்தது தான்"


எண்பதுகளின் தமிழ் சினிமா - ஓரு குறிப்பு

-----------------------------------------
தமிழர்களுக்கு சினிமா உயிர்மூச்சு. அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களே ஆளும் மாநிலம். தற்போதய முதல்வர் உட்பட. சினிமா எங்கோ வானில் இருந்தா விழுகிறது? சினிமா நம் சமுகத்தை பிரதிபலிக்கிறது. அதே சமயம் நம் சமூகத்தை கட்டமைக்கவும் செய்கிறது. இவ்விரண்டிலும் துலக்கமாக பண்பாட்டு வரலாறு, சாதியம், பெண்கள் குறித்த கட்டமைப்புகள் நிகழ்ந்த சினிமாக்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.“எண்பதுகளின் தமிழ் சினிமா” என்று தலைப்பிட்டாலும் 90-களையும் சேர்த்தே கணக்கில் எடுக்கிறார் ஸ்டாலின். அந்த 90-களின் அடிப்படை எண்பதுகளின் சினிமா என்பதால் அத்தலைப்பு.



ரஜினி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோடு, தமிழ் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், கொண்டிருந்த எதிர்ப்பையும் ரஜினியின் வெற்றிப் படங்களான ‘மன்னன்’, ‘படையப்பாவையும்’ ஸ்டாலின் தொடர்பு படுத்தி பார்க்கிறார். ரஜினியின் திரைக்கு வெளியான பெண் முதல்வரை எதிர்க்கும் நிலைக்கும் திரையில் தன் சுயமாக நிற்கும் பெண்களை எதிர்க்கும் பிம்பத்துக்கும் தொடர்புண்டு. 


தமிழ் பண்பாட்டு தளத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களான நீலியையும், கண்ணகியையும் ‘மன்னன்’, ‘படையப்பா’, ‘பாட்ஷா’ படங்களின் கதையம்சங்களோடு ஸ்டாலின் விவாதிக்கிறார். காப்பிய கண்ணகி எப்படி ‘பத்தினி’யாக முன்னிறுத்தப்பட்டாள் என்பதை சுட்டி படையப்பாவில் நீலாம்பரி நிராகரிக்கப்பட்டு வேலைக்காரப் பெண்மணி முன்னிறுத்தப்படும் ஒற்றுமையை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார்.இத்தொகுப்பில் அற்புதமான ஒரு கட்டுரைல் “பொதுமகளும் குலமகளும்: 1990 சினிமாக்களில் நடந்த ஊடாட்டம்”. தமிழ் சினிமாவில் வெகு காலம் நிலவி வந்த தேவதாசி சித்தரிப்பை விவரிக்கிறார். “மூவலூர் ராமாமிர்தத்தின் நாவலின் தலைப்பே கூட தேவதாசி மரபை எதிர்மறையாக குறிப்பிடும் வகையில் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிப்பெற்ற மைனர்’ என்றே அழைத்தது. இவ்விடத்தில் முற்போக்கு இயக்கம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திமுகவினரின் சினிமாவிலும் இத்தகைய சித்தரிப்பே தொடர்ந்தது. பின்னாளில் ஜெயலலிதாவை வசந்தசேனை என்று மேடைகளில் விளிக்கப்பட்டதும் நடந்தது. 1990-களின் ஆரம்பத்தில் வெளி வந்த கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, சின்னத்தாயி ஆகியப் படங்களில் பொது மகளிரின் சித்தரிப்பு குடுமபத்தை சிதைப்பவர்கள் என்கிற நிலையில் இருந்து மாறுகிறது.

இன்னொரு கட்டுரையில் “பல்வேறு அம்மன்களும் வழிபாடுகளும் சாதிமாறிக் காதலித்ததால் கொல்லப்பட்டுத் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதைகளாக இருக்கின்றன” என்பதை சுட்டிக் காட்டி திரைப்படங்களில் மரபு கதைகள் எப்படி மாற்றமடைகின்றன என்றும் விளக்குகிறார். ‘துளசி’, தெய்வவாக்கு’, ‘சின்னத்தாய்’ படங்களில் பிரதான கதாபாத்திரங்களை “முன்பிருந்த தெய்வ நிலையோடு விட்டுவிடாமல் அதிலிருந்து மனித நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறார்கள். மூன்று இடத்திலும் காதல் தான் மீட்பை நிகழ்த்துகிறது. அது யாரோடு கொண்ட காதல் என்பது முக்கியமானது. அவ்விடத்தில் தெய்வ நிலையிலிருந்து மனித நிலைக்கு கொணருபவர்களாக தலித் கதா பாத்திரங்கள் இருக்கின்றன”.

பாரதிராஜாவின் மண் வாசனை படம் பற்றி ஸ்டாலின் எழுதுகிறார், “நிஜத்தில் அறுத்துக்கட்டும் கலாச்சாரமுடைய ஒரு இனக்குழுவை சித்தரித்த படம். முத்துப் பேச்சி இன்னொருவரை மணம் செய்யாமல் இருப்பதை தமிழ்பண்பாடு என்று உயர்ந்தோர் பண்பாடாக்குகிறார் (பாரதிராஜா). பாலியல் தூய்மையைப் புனிதமாக்குகிறார்.

தேவர் மகன் படத்தின் மிகப் பிரபலமான வசனம், “போங்கடா, போய் புள்ளக் குட்டிங்களை படிக்கை வைங்கடா”. “படித்த அவனை பாரம்பர்யம் என்னவாக்கியது என்பதை அவன் ஏனோ அனுபவமாக்கிக் கொள்ளவில்லை” என்று ஆசிரியர் சுட்டிக் கேட்கிறார்.

தமிழ் சினிமா பற்றி பேசும் போது திரையிசைப் பாடல்கள் பற்றி பேசாமலிருக்க முடியாது. அவ்வகையில் தமிழ் சினிமாவில் வட்டாரப் பாடல்கள் சினிமாவில் ராஜாவும் தேவாவும் எடுத்தாண்டதை ஸ்டாலின் தனிக் கட்டுரையில் சொல்கிறார்.

சினிமா என்பது தமிழருக்கான மிக முக்கியமான பண்பாட்டு அடையாளம். அவ்வடையாளத்தில் மக்களிடையேப் புழங்கும் தொன்மன்ங்கள், சாதியம், பெண்கள் பற்றியப் பார்வைகள், பட்லர்கள் பற்றிய பரிகாசங்கள் எல்லாம் அங்கம் வகிக்கின்றன. ஸ்டாலின் பெண்களின் ஒடுக்குதல் பற்றி அதிகமாக எழுதியது இக்கட்டுரைகளில் தான் என்று நினைக்கிறேன்.சினிமாக்களில் எத்தனையோ சித்தரிப்புகள் மதம், சார்ந்து தான் இருக்கின்றன. ‘நாயகன்’ படத்தில் வரும் படித்த, பயந்த சுபாவம் உள்ள ஐயர் கதாபாத்திரம் முதல் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வரும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஸ்டீரியோடைப், அப்புறம் இஸ்லாமியர் குறித்து வரும் சித்தரிப்புகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதும் சிலர் இப்புத்தகம் குறித்து விரிவான விமர்சனம் எழுதினால் இன்னும் நன்று. ஒரு கமல் ரசிகனாக சின்ன வருத்தம் அட்டைப் படத்தில் கமல் இல்லாதது

எழுதாக் கிளவி: ஒரு குறிப்பு.

-----------------------------
“பெயரழிந்த வரலாறு” பண்டைய வரலாறு பற்றி 19,20-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து வரலாறு என்றால் என்ன? வரலாறு எவ்வாறு உருவாக்கப்படுகிறாது, தரவுகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளைக் கேட்டது. “எண்பதுகளின் தமிழ் சினிமா” அதையே பண்பாட்டு தளத்தில் செய்தது. ‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்’ அதே வழியில் சம கால அரசியலை, குறிப்பாக திராவிட இயக்கதையும் தலித் அரசியல் இயக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.



ஸ்டாலினின் முன்னுரை புத்தகத்தின் நோக்கத்தைச் சொல்கிறது, “தலித் வரலாற்றை எதிர்மறையாக அமையும் விமர்சன வரலாறாகவே சுருக்கிவிடக் கூடிய அபாயத்திலிருந்து விலகி தனக்கான சுயமான தரவுகளிலிருந்து தலித் வரலாற்றியல் தன்னை இங்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தலித் வரலாற்றாஇ விரிந்த தளத்தில் விவாதிப்பதே கூட இன்றைய திராவிட இயக்க விடுபடல்களுக்கான பதிலாக இருக்க முடியும்”.
“பரந்த சமூக அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ‘உண்மை’களின் பதிவே வரலாறு என்று ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களைத் திரும்ப அழைத்து வரௌவதன் மூலம் நிலவி வரும் வரலாற்றை எதிர்க் கொள்ள விரும்புகின்றன இக்கட்டுரைகள்” என்று வாசக முன்னுரையில் சொல்கிறார் ஸ்டாலின்.

“வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களை” என்றவுடன் பல சராசரி வாசகர்கள் தவறாக ஸ்டாலின் ஏதோ அடிப்படைகளே அற்ற கற்பனைக் கட்டுக் கதைகளை வரலாறு என்று ஜோடித்து விடுகிறார் என்று நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. 

ரெட்டியூர் பாண்டியனின் கதை ஸ்டாலினின் வரலாற்று முறைமைக்கு நல்ல எடுத்துக் காட்டு. காட்டு மன்னார்குடிப் பேருந்து நிலையத்தின் வாயிலில் ஒரு மார்பளவு சிலை ‘ரெட்டியூர் பாண்டியன்’ என்கிற பெயர் பொறிக்கப்பட்டு நிற்கிறது. அச்சிலை பிரபலமான யாருடையச் சிலையும் அல்ல. ஸ்டாலின் அச்சிலையின் கதையை விவரிக்கிறார். (இக்கட்டுரை தினமலரில் வெளி வந்திருக்கிறது https://m.dinamalar.com/weeklydetail.php?id=15028)

என் போன்ற பலருக்கும் தெரியாத, இன்னும் அநேக பேருக்கும், ஒரு செய்தி தமிழ் நாட்டில் சிறிதும் பெரிதுமாக பல இடங்களில் தலித்துகள் ‘இழி தொழில் செய்ய மறுப்பு’ போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது வரை நான் படித்த எந்த வரலாற்று நூலும் அது பற்றி பேசியதில்லை. எண்பதுகளில் கூட தலித் தலைவர் எல். இளைய பெருமாள் அத்தகையப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். “செத்த மாட்டெடுக்க மறுப்பு, பிணக்குழி தோண்ட மறுப்பு” போன்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.1962-ஆம் ஆண்டு முதல் காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் யாரும் பறையடிக்கப் போகக் கூடாது, உள்ளூரில் பறை அடிக்கப்படவும் கூடாதென்று என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 1985 ஆகஸ்டு மாதம் தீ மிதி விழாவுக்கு பறையடிக்க யாரும் வராததால் வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட ஊர் கலவர பூமியானது. கலவர்த்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த பாண்டியன் என்பவர் கொல்லப்பட்டார். போலீஸுக்கோ, எதிர் தரப்புக்கோ எந்த பாதகமுமில்லை. அப்படி இறந்த பாண்டியனின் நினைவாக பாடல் இயற்றப்பட்டு இன்றளவும் ஒப்பாரியாகவும், வயற்காட்டில் நடவுப் பாட்டாகவும் பாடப்படுகிறது. அக்கட்டுரையில் இளையபெருமாளின் போராட்டங்கள் குறித்து சொன்னாலும் ஸ்டாலின் தெளிவாக அப்போராட்டங்களால் பாண்டியன் உந்த பட்டாரா என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறார். மேலும் அந்த சிலை பாண்டியனின் உருவமாக கூட இருக்காது, அது ஒரு நினைவுச் சின்னம் தான் என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை வரலாற்றாய்வாளராக நான் வியப்பது இங்கு தான். ஒரு சிலை இருக்கிறது, அதற்கென்று மக்களிடையே ஒரு கதை இருக்கிறது ஆனால் அது வெறும் கதையாக இருந்தால் அதற்கு மதிப்பிராது. அதையொட்டி நாம் வரலாறு என்று புரிந்துக் கொள்ளும் தரவுகளுடைய நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி வரலாற்றின் இடை வெளியை நிரப்புகிறார். அவர் குறிப்பிடும் பாடல் இன்றும் புழக்கத்தில் இருப்பது ஒரு வகை தரவு தான். இக்கட்டுரை வாயிலாக ஒரு வாசகன் அறிந்துக் கொள்ளக் கூடியச் செய்திகள் அநேகம். சரி, பாண்டியன் வரலாற்றையே ஒதுக்கி விட்டு பார்ப்போமே. இளையபெருமாள் நடத்திய போராட்டங்கள் பொய் அல்லவே!! அப்போராட்டங்கள் பற்றி பொதுவில் பலரும் அறியாததே நமக்கு செய்திகளும் வரலாறும் எப்படி கட்டமைக்கப்படுகிறதென்று சொல்கிறதே. அதுவும் 1980-களில் இப்படிப்பட்ட போராட்டங்களின் தேவைகள் சமூகத்தைப் பற்றி ஒரு சித்திரத்தையும், இங்கு தமிழகத்தில் சமூக நீதியின் நிலைப் பற்றிய புரிதலையும் அளிக்கிறதே. 

அரிஜன சேவா சங்க செயல்பாட்டாளர் ஆனந்ததீர்த்தரின் கதையை ஸ்டாலின் ஒரு துப்பறிவாளனின் ஊக்கத்தோடு தேடித் தேடி தொகுத்து, “தலித்துகள் மத்தியில் காந்தி தொண்டர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கக் கூட யாருமில்லை. அப்படியே இருந்தார்கள் என்று அறியப்பட்டாலும் அவற்றை உள் நோக்கமாக ‘கட்டுடைத்து’விட்டு, அது பற்றி தலித்துகளின் நினைவுகள் எவை என்று ஆராயமலேயே விட்டிருக்கும் அரசியல் வரலாறுகளே இங்குண்டு”. இதை பேஸ்புக் விவாதத்திலேயே கண்டிருக்கிறேன். ஸ்டாலின் சொல்வது நிஜம். 

“இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்” கட்டுரையும், “டி.எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம்” கட்டுரையும் முக்கியமானவை. ஸ்டாலின் எவ்வித சார்பும் இன்று எழுதுபவர் என்பதற்கு சான்று மீனாம்பாள் குறித்து திராவிட இயக்க சார்புடைய நம்பி ஆரூரனின் மேற்கோள்களையும் நேர்மையாகவே கொடுத்திருப்பது. ஓரிடத்தில் இந்தி எந்திர்ப்பு போராட்டத்தின் போது ராஜாஜி வீட்டின் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை பெரியார் நிறுத்தியதையும் ஸ்டாலின் பதிவுச் செய்கிறார். 

ஏன் ஸ்டாலினின் எழுத்து இன்று முக்கியமானது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் என்று பலரும் சொல்வது, ‘தாளமுத்து-நடராசன்’ என்கிற இருவரை. இருவரில் தலித் இளைஞரான நடராசனே முதல் உயிர் நீத்தவர். அப்புறம் ஏன் வரிசை மாறியது? தலித் சமூகத்துக்கும் பொதுப் பிரச்சனையான இந்தி எதிர்ப்புக்கும் எப்படி இணைப்பு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? நீதிக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் தலித் சமூகமும் எம்.சி.ராஜாவும் எப்படி ஆதரவளித்தார்கள்? நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் சமூகத்தின் உறவுகள் எப்படி இருந்தன? ஏன் டி.எம். நாயரை எம்.சி.ராஜாவும் அயோத்தி தாசரும் உயர்த்திப் பேசினார்கள்? என்று பல கேள்விகளுக்கான விடைகள் ஸ்டாலினின் புத்தகம் மூலம் “சான்றுகளோடு” கிடைக்கின்றன.நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் அரசியலின் உறவைப் பற்றி சொல்லும் போது ஸ்டாலின் அநேகமாக நிகழ் காலத்தையும் மனத்தில் வைத்து எழுதுகிறார், “தலித்துகளின் அரசியல் உறவு நிலையற்றதாக மாறிக் கொண்டிருப்பதற்குத் தலித்துகள் மட்டுமே காரணமல்ல”.


மூன்று தகவல்கள் இங்கு குறிப்பிடக் கூடியன.

“சிதம்பரம் தாலுகா போர்டுக்கு ஆதி திராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்ட போது, ‘தாலுகா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டத்தில் ஆதி திராவிடர் நுழௌவதை விரும்பாததா; பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை’ என்றார் அமைச்சர்”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை “கொச்சைப்படுத்த” நினைத்த அரசு அப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட அநேக தலித்துகளைச் சுட்டிக் காட்டி, “அற்பக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களென்றும் சிறையில் ஒழுங்காகச் சோறு கிடைக்குமென்பதாலும் பல அரிஜனங்கள் கைதாகியிருந்ததாக ராஜாஜி மட்டுமல்லாமல் பிராமணரல்லாத தமிழரான டாக்டர் சுப்பராயனும் சட்ட மன்றத்திலேயே கூறினார்.”

“1920 முதல் 1927 வரை நீதிக் கட்சி ஏழு முறை அமைச்சரவைகளை அமைத்தும் ஒரு முறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைத் தலித்துகளுக்கு வழங்கியதில்லை. 1929-ஆம் ஆண்டில் தான் ஓர் இக்கட்டான சூழலில் எம்.சி.ராஜாவை சட்டமன்ற துணைத் தலைவராக்கியது.”

Eugene Irschick-இன் “Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil Separatism 1916-1929” மிக அற்புதமான புத்தகம். தலித் சமூகத்துக்கும் நீதிக் கட்சிக்குமிடையே நடந்த உரசல்களை 1969-இலேயே இர்ஷ்சிக் எழுதியிருக்கிறார். ஆனால் அப்புத்தகத்தில் எம்.சி.ராஜாவுக்கு கிடைத்த இடம் ஒன்றரை பக்கம். 1969-இல் ஓர் அமெரிக்க ஆய்வாளர் இவ்வளவு தெளிவாக எழுதியிருப்பதே ஆச்சர்யம். இர்ஷ்சிக்கைத் தாண்டி செல்ல நமக்கு முரசொலி மாறன், நெடுஞ்செழியன் எழுதிய வரலாறுகள் போதாது அந்த இடத்தில் நம் தேவையை இன்று பூர்த்திச் செய்வது ஸ்டாலினின் புத்தகம்.


ஜெயமோகனும் தலித் ஆளுமைகளும்:

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “பெயரழிந்த வரலாறு: அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்” படித்துக் கொண்டிருக்கிறேன். ராஜ் கௌதமன் பற்றிய ஒரு கட்டுரையை படித்தப் போது தோன்றியது, தலித் தரப்பில் தான் எவ்வளவு அறிவுத் தள கருத்தியல் முன்னெடுப்புகள் நிகழ்கின்றன என. ஸ்டாலின் அக்கட்டுரை ராஜ் கௌதமனின் “தலித்திய அரசியல்” நூல் பற்றியது. அந்நூலே பேராசிரியர் பெ. தங்கராசுவின் “சாதி ஒழிப்பின் வரலாற்று படிப்பினை” என்கிற நூலுக்கு எதிர் வினை.
எனக்கு தங்கராசு யாரென்று தெரியாது. ராஜ் கௌதமனை ஜெயமோகன் வாயிலாக தெரியும். தலித் வட்டாரத்துக்கு வெளியே பலருக்கு எம்.சி. ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அயோத்தி தாசர் ஆகியோரை ஜெயமோகன் வாயிலாக அறிந்தவர்கள் அதிகம் என்றால் மிகையில்லை. ஸ்டாலினையும் அப்படித் தான் அறிந்தேன் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் பற்றியும் ஜெயமோகன் தொடர்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்பேத்கரை பற்றியும் அநேகம் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். தர்மராஜின் நூல் அறிமுக விழாவில் முக்கிய உரை ஜெயமோகனுடையது.



ஜெயமோகன் அளவுக்கு தலித் ஆளுமைகள் பற்றி மற்றவர்கள் யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஸ்டாலினின் “பெயரழிந்த வரலாறு” தமிழில் வெளிவந்த வரலாற்றெழுத்தில் மிக முக்கியமானதும், அபாரமான நுட்பத்தோடும் எழுதப் பட்டது. நாளை சிறு குறிப்பாவது எழுதுகிறேன். அந்நூலை வைத்து ஒரு அரை நாள் விவாத மேடையே நடத்தலாம்.
அதேப் போல் தலித் வரலாறுகளை பதிப்பித்ததில் காலச்சுவடின் பங்களிப்பும் மெச்சக் கூடியது.