Wednesday, September 29, 2021

புதைந்த பாதை: ஒரு கிராமத்தின் தலித் நினைவும் வரலாறும்

 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பணி கரிசல்குளம் என்கிற கிராமத்தின் 300 வருட கதையை சமூகத்தின் நினைவுகளில் இருந்து மீட்டெடுத்து தலித் சமூக-அரசியல் வரலாற்றை ஒரு சித்திரமாக அளிக்கிறது ஜெ. பாலசுப்பிரமணியமின் “புதைந்த பாதை: ஒரு கிராமத்தின் தலித் நினைவும் வரலாறும்”. அப்புத்தகம் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.




முகவுரையிலேயே பாலசுப்பிரமணியம் வரலாற்று ஆவணங்களை தேடித் தொகுத்து இந்நூல் எழுதப் படவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆயினும் இது வெறும் செவி வழி புராணமல்ல ஏனென்றால் சம காலத்தில் நிகழ்ந்தவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

2000-ஆம் வருடம் ஒரு போகிப் பண்டிகையின் போது வெளியி வீசப்பட்ட ஒரு பெட்டியில் மூன்று ஆவணங்கள் கிடைக்கின்றன. 1942-ஆம் ஆண்டு "ஆதி திராவிட மகாஜன சபை"யின் அழைப்பு, ஒரு இரங்கல் கடிதம், ஒரு இரங்கல் தீர்மானத்தின் நகல். இங்கிருந்து பாலசுப்பிரமணியம் நினைவுகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் ஒரு கதையை வாசகனுக்கு மீட்டெடுத்து அளிக்கிறார்.
கிராமம் “வடக்கூர்”, ‘தெற்கூர்” என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கூரில் பிள்ளைமார், நாயுடு, மறவர், ஆசாரி ஆகியோரும், தெற்கூரில் மறவர், நாடார், பள்ளர், பறையர், அருந்ததியர், புதிவரை வண்ணார் ஆகியோரும் வசிக்கின்றனர். வடக்கூர் மறவரும் தெற்கூர் மறவரும் வெவ்வேறு.

பிஷப் கால்டுவெல்லின் திருநெல்வேலி பற்றிய குறிப்புகள் பள்ளர், பறையர் சாதியினருக்கு மட்டும் இங்கு குடிப் பெயர்ந்து வந்ததாக சான்றுகள் இல்லையென்றும் மற்றவர்கள் குடிப் பெயர்வு மூலம் இங்கு வாழ வந்ததற்கு ஆதாரம் இருப்பது அவ்விரு இனத்தாரும் பூர்வ குடிகளாக இருக்க வாய்ப்புண்டு என்பதைச் சொல்கிறது. 

தலித்துகளின் நினைவுகளில் ஒன்பது தலைமுறைக்கு முன் ஆதிதிராவிடர்களும் தேவேந்திரர்களும் ஊரின் மத்தியில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு கோயில் திருவிழாவில் சப்பரம் உலா வரும் போது பறையர்கள் வீட்டில் இருந்த மாட்டிறைச்சியை காகம் ஒன்று கொத்திச் சென்று சப்பரத்தின் மீது போட அதனால் கோபமுற்ற ஆதிக்க சாதியினர் தேவேந்திரர்களையும், ஆதி திராவிடர்களையும் சேர்த்து விரட்டி விடுகின்றனர் தெற்கூருக்கு. இதில் தேவேந்திரர் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் அவர்களையும் ஏன் சேர்த்தார்கள் என்று யோசித்தால் ஒரு சேர இவர்களை விரட்டி விட்டு நிலம் கையகப் படுத்துவதற்காகவே இருக்கலாம் என்பது புலனாகிறது. 

மீண்டும் மீண்டும் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் தலித் வரலாற்றில் அடிக்கோடிடுவது தலித்துகளின் சுய அரசியல்-சமூக முயற்சிகளை. பொது புத்தியில் ஆழப் பதிந்து விட்ட “அவர்களுக்கு எல்லாமே கற்றுக் கொடுத்து கைத் தூக்கி விட வேண்டிய நிலையில் இருந்தார்கள்” என்பதை மறுப்பதே இவ்வரலாறுகள் உணர்த்துவது. அநேக நிகழ்வுகள் தரவு அடிப்படையிலேயே இருக்கிறது. 

1905-இல் ஆதி திராவிடர்கள் தன் முயற்சியாலேயே ஒரு பள்ளி துவக்கப்பட்டது, பின் 1920-இல் அது “திருப்பணி கரிசல்குளம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம்” என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்தப் பள்ளி ஆரம்பத்தில் ‘ஆதி திராவிட ஆரம்ப பள்ளி” என்ற பெயரிலும் அதன் பின் ‘அரிசன துவக்கப் பள்ளி’ என்றும் பின் “டாக்டர் அம்பேத்கர் பள்ளி” என்றும் வழங்கியதே நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது.

1940-கள் தொடங்கி திராவிட இயக்கத்தோடு ஆதி திராவிடர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். செப்டம்பர் 13 1942-இல் திருமதி மீனாம்பாள் சிவராஜ் தலைமையிலான மாநாட்டுக்கு பெரியாரும் ஒரு பேச்சாளர். பின்னர் 1949-க்கு பின் திமுகவோடு இக்கிராமத்து தலித் அமைப்புகளும் தலித்துகளும் நெருக்கமாயினர். அவ்வுறவை சிதைத்தது ஒரு கொலை.

மறவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க 1968-இல் “திருப்பணி கரிசல்குளம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்’’ ஆரம்பிக்கப்பட்டது. ஆதி திராவிடரும், நாடாரும் இச்சங்கத்தில் உறுப்பினர்கள். இதை தொடர்ந்து இரட்டை டம்பளர் ஒழிப்பு என்று எழுச்சிப் போராட்டங்களும் நடந்தன. இந்த அரசியல் எழுச்சி ஆதிக்க சாதியினரை உறுத்த முக்கியஸ்தரான மந்திரமூர்த்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட மறவர்களை காப்பதற்கு திமுக துணை செய்ததால் ஆதி திராவிடர்கள் பின்னர் அதிமுக நோக்கி நகர்ந்தனர். அதுவரை பெரும் அரசியல் ஈடுபாடு காட்டாத மறவர்கள் திமுக பக்கம் சாய்ந்தனர். ஆசிரியர் முக்கியமாக சுட்டுவது கொலைச் செய்த மறவர்கள் பலர் ஏழைகள் அவர்கள் குடும்பங்கள் வழக்குக்குகளைச் சந்திக்க இயலாமல் பொருளாதார சிக்கலுக்கு ஆளாயின. 

சமகால நிகழ்வுகளுக்கு நகர்ந்தது ஆசிரியர் ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக சுட்டுவது புலம் பெயர்தலை. மும்பைக்கும், இலங்கைக்கும் பிழைக்கச் சென்றவர்கள் செல்வம் ஈட்டி கிராமத்தை விட்டு நகரத்துக்கு போகும் வெள்ளாளரின் நிலங்களை வாங்கும் அளவுக்கு உயர்ந்தனர் என்கிறார் பாலசுப்பிரமணியம். இடப்பெயர்வு தலித்துகளின் முன்னேற்றத்திற்கு பெரும் காரணம். ஒரு காலத்தில் பண்ணையில் வேலைச் செய்பவர்களாக இருக்கும் போது தங்கள் திருமணங்களைக் கூட இரவில் நடத்த நிர்பந்திக்கப்பட்டவர்கள், பகலில் திருமணம் நடந்தால் வேலைத் தடைபடும் என்று நிலவுடமையாளர்கள் விடுவதில்லை, வீடு, நிலம் வாங்கும் அளவுக்கு இடப் பெயர்வால் உயர்ந்தனர். 
இந்த இடத்தில் எனக்க் இஸபெல் வில்கர்ஸனின் “The Warmth of the Other Suns: The Epic story of America’s Great Migration” நினைவுக்கு வந்தது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இருந்து வடக்கு நோக்கி இடப்பெயர்வு செய்தே முன்னேறினார்கள்.

கிராமங்கள் சாதிய அமைப்பின் இறுக்கத்தில் மூச்சுத் திணற வைக்கும். எனக்கு, பண்பாடு, கிராமியம், இயற்கை என்ற வார்த்தைகளைக் கேட்டால் ஓட்டம் எடுக்கத் தோன்றும். நகரமும், நகரம் சார்ந்த பொருளியலுமே தான் முன்னேற்றத்துக்கு வழி என்று நம்புகிறேன். காந்தியோடு நேருவும் அம்பேத்கரும் முரன்பட்ட இன்னொரு இடம் கிராமம் பற்றிய காந்தியின் பார்வை. காந்தியாவது கொஞ்சம் நிதர்சனத்தோடு அனுகினார் ஆனால் காந்தியவாதிகள் கிராமத்தை புனிதப்படுத்துவார்கள். சமீபமாக இன்னொரு கூட்டமும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நூலின் குறைபாடுகளை வாசகன் உணரும் முன்பே ஆசிரியரே சொல்லிவிடுகிறார். இது ஒரு முழு ஆய்வு நூல் அல்ல. ஒரு எளிய வாசகன் படிக்கக் கூடியது தான். ஆயினும் படித்து முடித்தப் பின் நினைவில் தங்கிவிடக் கூடிய ஒரு படைப்பு என்பதில் தான் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது. நினைவில் நிற்பதோடல்லாமல் நம் பொதுப் புரிதலை இன்னும் ஒரு முறை அசைத்து வரலாற்றுப் புரிதலை விரிவாக்கும் இன்னொரு படைப்பு. கிண்டிலில் கிடைக்கிறது.

தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை

 "தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை" என்றா தலைப்பில் செப்டம்பர் 18 அன்று இணையத்தில் நடத்திய நிகழ்ச்சியினை ஒட்டி நிகழ்ச்சியின் பேசுப் பொருளான தலித் இதழியல் வரலாறு பற்றியப் புத்தகங்களுக்கு எழுதிய சிறு குறிப்புகளின் தொகுப்பே இப்பதிவு. 

நிகழ்ச்சி நிரல்

பங்கேற்பாளர்கள்: ஜெ. பாலசுப்பிரமணியம், ரத்னமாலா, அரவிந்தன் கண்ணையன்



1. தலித் இதழியல் வரலாறு: சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (1869-1943); வழிக்காட்டுவோன், பூலோக வியாஸன் ஆகியவற்றை முன் வைத்து வரலாற்றை பேசுதல் 2. அம்ப்தேகரின் இதழியல் செயல்பாடு 3. சமகால இதழியியலும், ஊடகங்களும் தலித்த்துகளும்: Media and Minorities - Media Representation of Dalits in Tamil Nadu. தலித்துகள் பற்றி இன்று இருக்கும் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கும் முக்கிய வரலாறு, தலித் தலைவர்கள் அரசியல் மற்றும் இதழியல் செயல்பாடுகள். இந்த வரலாற்றை மீட்டு நம்முன் கொண்டு வருவதில் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருப்பவர் எழுத்தாளரும் ஆய்வாளாருமான ஜெ.பாலசுப்பிரமணியம். சமகாலத்தில் ஊடகங்களில் தலித் பங்களிப்பு பற்றியும் அதிலுள்ள அரசியல்கள் குறித்தும் தலித் சித்தரிப்புக் குறித்தும் எழுதி வருபவர் ஆய்வாளர் ரத்னமாலா அவர்கள்.




“சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: தலித் இதழ்கள், 1869-1943” - ஒரு குறிப்பு

காலனி ஆட்சிக் காலத்தில் உருப்பெற்ற முக்கியமான கருத்தியல் இன்னின்ன சாதிகளே இன்னின்ன தொழில் சாமர்த்தியம் உள்ளவர்கள் என்ற வரையறை. அதனாலேயே தான் “போர்க்குணமிக்க சாதிகள்” (Martial Classes) என்று ஒரு வகையேற்படுத்தி தலித் அல்லாத சில சாதியினருக்கே ராணுவத்தில் சேர முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே போல் குறிப்பாக பிராமணர்கள் அறிவுச் சமூகம் என்கிற கட்டமைப்பும் ஆரம்பித்தது. ��மஹர் ரெஜிமண்டுக்காக அம்பேத்கர் முன்னெடுத்தப் போராட்டங்கள், பீமா-கோரேகான் நினைவு நாள் அரசியல் எல்லாம் ஒரு தளத்தில் தலித்துகளும் ராணுவ பங்களிப்புகளுக்கு ஏற்றவர்களே என்று, வரலாற்றின் அடிப்படையில், நிறுவியது. அதே போல் தலித்துகளின் அறிவுப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டி அறிவுச் செயல்பாட்டில் தலித் தரப்பின் முக்கியப் பங்களிப்பை நமக்கு காட்டும் வரலாறு தலித் இதழியல் வரலாறு. 

அதிகமாக நேரடி ஆவணங்கள் கிட்டாத ஒரு செயல்பாட்டினை வரலாற்றாசிரியனின் நேர்த்தியோடு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம். முதல் தலித் இதழ் 1869-இல் ஆரம்பிக்கப்பட்டதால் அவ்வருடத்தில் ஆரம்பிக்கும் வர.லாறு 1943-வரை மட்டுமே புத்தகத்தில் கருத்தில் கொள்ளப்படுவதற்கு காரணாம் 1944-இல் பெரியார் தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு முன்பான தலித் செயல்பாடுகளை பார்க்கும் நோக்கமே. அதாவது இன்று திராவிட இயக்கம் தங்களால் தான் தலித்துகள் முன்னேறினார்கள் என்று கட்டமைப்பதை இத்தொகுப்பு கேள்விக்குள்ளாக்குகிறது, திராவிட இயக்கத்துக்கு முன்பான அறிவுச் செயல்பாட்டை வலியுறுத்துவதன் மூலம்.
இப்புத்தகத்தின் வெற்றி தலித் சமூகம் பற்றி இருக்கும் பொரு வாசகனின் புரிதலை மொத்தமாக கலைத்துப் போட்டு நிலைப்பெற்று விட்ட பல கதையாடல்களை கேள்விக்குள்ளாக்குவது தான். 

“அறிவுத் தளத்தில் செயல்பட்ட தலித்துகள் முதரபாஷிதம், புலவர், பண்டிதர், நாவலர் போன்ற பட்டங்களை” கொண்டிருந்தார்கள் என்பது வெறும் செய்தியல்ல. 

சாதிவாரி கணக்கெடுப்பால் நிகழ்ந்த சாதிய எழுச்சி, ஐ.சி.எஸ் பரீட்சையை இந்தியாவில் நடத்துவதற்கு எதிராக ரெட்டமலை சீனிவாசனின் ‘பறையன்’ இதழ் நடத்திய அறிக்கைப் போர், தலித்துகளுக்கான தனிப் பள்ளி கோரிக்கைகள் ( அதே காலத்தில் நடந்த அமெரிக்க தனிப்பள்ளிகள் போல்), தலித் அடையாள உருவாக்கம், சீர்திருத்தம், மத நம்பிக்கைகளைக் கேள்விக் கேட்பது என்று அடிப்படை வாழ்வாதாரம் தாண்டி அநேக பேசுப் பொருள்களை தலித் இதழ்கள் பேசியிருப்பதாலேயே இதனை நாம் ‘அறிவுச் செயல்பாடு’ எனலாம்.

1909-இல் “மது விலக்கு தூதன்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “Temperance Herald” என்றும் இரு மொழிகளில் டி.மனுவேல் நடத்தியிருக்கிறார். இன்று மது விலக்கு என்றாலே காந்தியைத் தான் நினைக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கை தலித் ஆசிரியரால் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் மது விலக்குக்கு ஆதரவாக சங்கமும் நடத்தியிருக்கிறார்கள். அச்சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் அயோத்திதாசரும் தமிழில் உரையாற்ற, எஸ்.அஜீம் உதீன் சாயபு ஆங்கிலத்தில் உரையாற்றினாராம். “தருமதொனி (1932)” என்ற பத்திரிக்கையும் இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. இரு மொழிகளில் பத்திரிக்கை நடத்துவது பரவலாகவே இருந்திருக்கிறது. 

எம்.சி.ராஜாவும் மற்றவர்களும் சிறார்களுக்காக பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். “ஜாதி பேதமற்றோன் (1922)” என்ற பத்திரிக்கை கத்தோலிக்க சங்கம் ஒன்றின் சார்பில் டி.ஆதிநயினார் வெளியிட்டார், அவர் ஜைன சமயத்தை சார்ந்தவர். “சந்திரிகை (1932)” என்.கிருஷ்ணமூர்த்தி என்கிற பிராமணரை ஆசிரியராக கொண்டு மாசிலாமணி தேசிகர் என்கிற ஆதி திராவிடர் வெளியிட்டார். 
‘திராவிடன்’ என்கிற சொல்லையே பிரதானமாக பயன்படுத்திய தலித் தலைவர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் 1916-இல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை திராவிடர்கள் என்று குறிப்பிடத் தொடங்கிய பின் “அதி திராவிடர்” என்று மாற்றிக் கொள்கிறார்கள். 1907-இல் “திராவிட கோகிலம்” வெளிவருகிறது. அதன் பின் 1919-இல் வெளிவந்த தலைப்புகள் ஆதி திராவிடன் (கொழும்புவில் இருந்து வெளிவந்தது), மெட்ராஸ் ஆதி திராவிடன், ஆதி திராவிட பாதுகாவலன் (1927-31).

வெறும் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றங்களைத் தாண்டிய விஷயங்களை தலித் பத்திரிக்கள் பேசியதற்கு ய்தாரணம் 1872-இல் சுவாமி அரங்கையாதாஸால் தொடங்கபட்ட “சுகிர்தவசனி”. “மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தங்களை” இப்பத்திரிக்கை பேசியிருக்கிறது. வள்ளலாரின் “தெய்வீக சக்தி”யை ஒரு கட்டுரையே எழுதி மறுத்திருக்கிறார்கள்.
பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை நிறுவிய “மஹாவிகடதூதன்” 1886-1927 வரை வெளிவந்துள்ளது. 1893-இல் இப்பத்திரிக்கை 1500 பிரதிகள் விற்றிருக்கிறது. அது அக்காலத்துக்கு பெரும் சாதனை. 

முதல் உலகப் போர் நடந்த போது இப்பத்திரிக்கை போர்ச்செய்திகள் என்று தனிப்பத்தியே நடத்தியிருக்கிறது. ஒரு சமூகத்தில் அறிவுச் செயல்பாடு நிகழ்ந்திருக்கிறது / நிகழ்கிறது என்பதற்கு அடிப்படை தேவைகள் தாண்டிய பேசுப் பொருள்கள் (அது நடந்தால் தான் என்பதல்ல பொருள்) முக்கியம், அதே போல் முக்கியத்துவம் கருத்தியல் ரீதியான உட் பூசல்களும். மஹாவிகடதூதன் ஜான் ரத்தினம் நடத்திய “திராவிட பாண்டியன்” இதழ், ரெட்டமலை சீனிவாசன் நடத்திய “பறையன்” இதழ்களொடு கருத்தியல் மோதல்களை முன்னெடுத்திருக்கிறது. “பறையன்” இதழும் அயோத்திதாசரின் “தமிழன்” இதழுமே கூட முரன்பட்டிருக்கின்றன.

தலித் இதழியலில் தலித் அல்லாதோரும் பங்காற்றியிருக்கிறார்கள். இராஜேந்திரம் பிள்ளை நடத்திய இரண்டு பத்திரிக்கைகளிலும் எஸ்.ஜி.ராமானுஜல நாயுடு துணை ஆசிரியராக பணியாற்றினார்.
இப்புத்தகத்தின் முக்கிய சவால் நேரடி ஆதாரங்கள் இல்லாமை. ஆங்கிலேய ஆட்சியில் பத்திரிக்கைகளும் அதன் கட்டுரைகளும் கண்காணிக்கப்பட்டன. பத்திரிக்கைக் கட்டுரைகளை மொழிப் பெயர்த்து அரசுக்கு எதிரான கருத்துகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவே அதிகாரிகள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஆதாரங்கள் தான் இப்புத்தகத்தின் பெரும்பான்மை அடிப்படை. அதிலுள்ள சிக்கல் அந்த அதிகாரிகள் அரசியல் சார்ந்த செய்திகளைத் தான் அதிகம் சேகரித்திருக்கிறார்கள். ஆதலால் இவ்விதழ்களின் முழு பார்வை நமக்கு கிடைக்கவில்லை என்பதை ஆசிரியர் கவனமாக சுட்டிக் காட்டுகிறார்.

தலித் இதழ்கள் குறித்து பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் விமர்சனம் அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது. அது மேம்போக்காக பார்த்தால் உண்மை தான். நாளை பூலோக வியாஸன் குறித்து எழுதும் போது மேலும் சொல்கிறேன். “விடுதலை” என்பது தேச விடுதலை மட்டுமல்ல. தேச விடுதலையை ஒரு சாரார் முன்னெடுத்தார்கள் இன்னொரு சாரார் சமூக விடுதலையை முன்னெடுத்தார்கள் என்பதே உண்மை.






பூலோகவியாஸன்

தலித் இதழியலின் வரலாறு ஏன் முக்கியமானதென்றால் இதன் மூலமே நாம் தலித்துகள், காந்திய அல்லது திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்கு முன்பே, முன்னெடுத்த சமூக-அரசியல் முன்னெடுப்புகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. அப்படி கிடைக்கும் புரிதல் தலித் சமூகம் பற்றிய பொதுப் புரிதலை தகர்ப்பதோடு இன்று தாங்களே மீட்பர்கள் என்று கட்டமைக்கும் வரலாறுகளையும் தகர்க்கும். 

பூஞ்சோலை முத்துவீர நாவலரால் 1903-1917 வரை நடத்தப்பட்ட பூலோகவியாஸன் இதழின் 1909-வருடத்துக்கான சில இதழ்கள் கிடைக்கப்பெற்று அதனடிப்படையில் ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதியது “பூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு” (காலச்சுவடு வெளியீடு)

“பொருளும் பொருளாளிகளும்” என்ற ஏப்ரல் 1909 கட்டுரை செல்வத்தின் நிலையாமைக் குறித்த ஜைன முனிவர் பாடலொன்றை மேற்கோள் காட்டி செல்வம் சேர்ப்போரை நல் வழியில் சம்பாத்திப்பவர்கள், தீய வழிகளில் சம்பாதிப்பவர்கள் என்று வகைப் படுத்தி அவர்களுள்ளும் சேர்த்த செல்வத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை வகைப்படுத்தும் அருமையான கட்டுரை இப்பத்திரிக்கைகள் வெறும் அன்றாட பிழைப்புச் சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி தத்துவார்த்த விசாரணையிலும் ஈடுபட்டன என்று சொல்கிறது. அதே வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு கட்டுரை “அத்வைத நிரூபணம்”. கட்டுரையின் உபதலைப்பு, “விஷ்டாத்வைத வெற்றியின் மறுப்பு”. “உங்கள் மதம் ஆராய்ச்சி மதமா, நம்பிக்கை மதமா?’ எனக் கேள்விக்கேட்டு மிக சுவாரசியமாக எழுதப்பட்ட தத்துவார்த்தமான கட்டுரை. 

தலித் இதழ்கள் நிச்சயமாக ஆங்கிலேய அரசை வெகுவாகப் புகழ்ந்தே எழுதிகின்றன. சுதேசிக் கப்பல் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டு வாழ்த்தும் போதும் அம்முயற்சி அரசுக்கு எதிராக மாறக் கூடாதென்றே வாழ்த்துகின்றது பத்திரிக்கை (டிசம்பர் 1909)

பூலோகவியாஸன் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை சிலாகித்து பாராட்டுகிறது. அதே வரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியாவை சூறையாடிவிட்டார் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வழக்குத் தொட்டுத்தார் எட்மண்ட் பர்க் (Edmund Burke). பர்க்கின் ஆங்கில உரைகள் இலக்கிய உலகில் பிரசித்தம். பாராளுமன்றத்தில் அவ்வழக்கு தோல்வியுற்றது. ஹேஸ்டிங்க்ஸின் ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக கீதை மொழிப் பெயர்க்கப்பட்டது அதற்கு நல்ல முன்னுரையும் ஹேஸ்டிங்க்ஸ் எழுதினார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சு புரட்சியை எதிர்த்திருக்கிறார். ஆக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பல முரண்களை கொண்டிருந்திருக்கிறார்கள்.

தலித் அல்லாதோரும் இப்பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள். “பிராமண விதவைகளின் கஷ்ட விமோசன சாதகம்” என்ற கட்டுரை சி.வி.பாஸ்கரன் என்பவர் எழுதியிருக்கிறார். “தமிழ் மாது” என்ற பத்திரிக்கை நடத்திய எஸ்.ஸவப்பநேஸ்சரி அம்மாள், “இளவயதில் கலியாணம் செய்தல்” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

“அரிஜன சேவா சங்கம்”, திராவிட இயக்கம் இவற்றுக்கெல்லாம் முன்பாகவே தலித்துகள் சுய முன்னேற்றத்துக்கு சங்கங்கள் தோற்றுவித்து அச்சங்கங்களின் குரலாக பத்திரிக்கைகளும் நடத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு பத்திரிக்கை தான் 1918-இல் துவங்கப்பட்ட “வழிகாட்டுவோன்”. 




1908 சென்னையில் காங்கிரஸ் கூட்டம்: பூலோகவியாஸனும் பாரதியும்

டிசம்பர் 28-30 1908-இல் சென்னையில் காங்கிராச் ஒரு மாநாடு நடத்தியது பற்றி பூலோகவியாஸன் "1908ஆம் வருடத்திய இந்தியன் நாஷனல் காங்கிரஸ், சென்னை" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை ஜனவரி 1909-இல் வெளியிட்டிருக்கிறது.

புலோகவியாஸனின் கட்டுரையில் மாத இதழான பூலோகவியாஸனை விட நாளிதழ்கள் அதிகம் அம்மாநாடு பற்றி எழுதியதை ஏற்கனவே வாசகர்கள் படித்திருக்கலாம் என்று சொல்லி சிறு குறிப்பு மட்டுமே அம்மாநாடு பற்றி வெளியாகி இருக்கிறது. அக்குறிப்பில் "இப்பெருங்கூட்டம்" என்று மாநாடு பற்றி சொல்கிறது, தலைமை வகித்த ராஷ்விஹாரி கோஷை "கிழச்சிங்கம்" என்று குறிப்பிட்டு மாநாடு இனிதே நடந்ததாகச் சொல்கிறது. மாநாட்டில் மார்லியின் சீர் திருத்தம் ஏற்கப்பட்டதையும், இராணுவத்தில் இந்தியர்களுக்கான இடம், "தேச பிரஷ்டம் செய்யும் ரெகுலேஷனை ரத்து செய்தல்" முதலிய தீர்மணங்கள் அடங்கிய 21 தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் அதற்கு முந்தைய வருடத்தில் நடந்ததப் போல் "அயோக்கிய காரியங்கள்" நடக்கவில்லையென்றும் கட்டுரை சொல்க்கிறது. 

இப்படி ஒரு நிகழ்வ்வுப் பற்றி பாரதி எழுதாமலிருப்பானா என்ற உந்துதலோடு பாரதி தொகுப்பைப் புரட்டினேன். சிக்கியது கட்டுரை. ஜனவரி 2 1909-இல் இந்தியா பத்திரிக்கையில், "சென்னைப்பட்டணத்தில் ஆட்டு மந்தை" என்ற தலைப்பில் தாளித்து எடுத்திருக்கிறான்.

1905, 1906, 1907 காங்கரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்பட்டதென்றும் இம்மாநாட்டில் பாடவில்லை என்றும் கொதிக்கிறான் பாரதி. "1908-ம் வருஷத்துச் சென்னைத் துரோகக் கூட்டத்தில், நமது ஜாதீய மஹாகீதத்தை மறந்து விட்டார்கள். ஜாதிக்கெட்ட மிலேச்சர்கள் சேர்ந்த அந்தச் சபையிலே ஏதோ ஒரு அன்னிய பாஷையிலே ஒரு பாட்டுப் பாடினார்கள்"

ராஷ்விஹாரி கோஷை திட்டித் தீர்க்கிறான் பாரதி. அவர் உரையில் மார்ல்லியின் சிர்ர்திருத்ததை ஏற்றதை கிண்டலடிக்கிறான், அரசாங்க அடக்கு முறையை சரியாக கண்டிக்கவில்லை என்று ஏசுகிறான், கடைசியாக அவர் உரை "உண்மையிற் சுருங்கியது; தேசாபிமானத்தில் சுருங்கியது; அறிவுத் திறமையில் சுருங்கியது; ஸகலத்திலும் சுருங்கியது. ஆனால் நடிப்பு ராஜபக்தியிலும், தெச துரோகத்திலும் வெகு விசாலமானது" என்கிறான். கோஷ் மிதவாத-தீவிரவாத காங்கிரஸ் உறுப்பினர்களிடையேயான பிளவை இன்னும் தீவிரமாக்கியதையும் அவரை விட அநேக காலம் தொண்டாற்றியவர்கள தூஷித்ததையும் பாரதி கண்டிக்கிறான். வேறு பத்திரிக்கைகளும் கோஷின் அப்போக்கைக் கண்டித்திருக்கின்றன. 




மேலும் ராஸ்விஹாரியை அவர் பணத்துக்காகவே சுரேந்திரநாத் பானர்ஜி கட்சியில் சேர்த்தார் என்கிறான் பாரதி. மாநாடு கூட்டம் பற்றி, "ஆறேமுக்கால் மனிதர்களைக் கொண்டு" நடந்த கூட்டம் என்று கிண்டலடிக்கிறான். (மற்ற பத்திரிக்கையாளர்களும் பாரதியின் கருத்தை ஒட்டியே கோஷை விமர்சித்து எழுதினார்கள் என்று சில எடுத்துக் காட்டுகளை சீனி விஸ்வநாதன் கொடுத்திருக்கிறார்)

பூலோகவியாஸன் கட்டுரையாளர் தெளிவாக தன் குறிப்பு ஒரு சாரம்சம் என்கிற அளவில் தான் என்கிறார். அவர் குறிப்பிட்டதைப் போலவே வேறு பத்திரிக்கைகள், 'இந்தியா', 'சுதேசமித்திரன்','இந்து', 'ஆந்திர கேசரி' போன்றவை விரிவாக எழுதியிருக்கின்றன. 

ஒரே காலத்தில் இவ்விரு பார்வைகளும் சுவாரசியமானவை. தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை இது வரை பரவலாக அறியப்படாத ஒரு தலித் இதழும் பாரதியும் ஒரு சேர எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தி.


வழிக்காட்டுவோன்

விருதுபட்டியில் (விருநகர்) மே மாதம் 21-ஆம் தேதி 1915-இல் ஆரம்பிக்கப்பட்ட “தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “South India Oppressed Classes Union” என்ற பெயரிலும் சங்கம் தொடங்கி நாளடைவில் 49-கிளைகள் தொடங்கி அதன் பின் தங்கள் குரலாக ஒரு பத்திரிக்கை வேண்டுமென்று 1918-இல் “வழிகாட்டுவோன்” தொடங்கினார்கள்.

பிப்ரவரி 1918 சில மாதங்கள் முன் மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பிய மகஜரை பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். 6 பக்க மகஜர் அபாரமான கோரிக்கைகள் அடங்கியது. 1909-இலேயே “மது விலக்கு தூதன்” என்றொரு பத்திரிக்கை வெளிவந்ததையும் மது விலக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் நேற்று எழுதினேன். இந்த 1917-இல் சமர்பிக்கப்பட்ட மகஜரிலும் “மதுபானம் (liquor traffic)” என்ற பகுதியில், கள்ளு மற்றும் மதுபான கடைகள் மூடச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். காந்தியோ, ராஜாஜியோ இக்கோரிக்கைகளை வைக்கும் முன்பே நடந்தது இது. 

“ஜீவனார்த்தம் (Economic Condition)” என்ற பகுதியில் தலித் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் கூலி வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்றும் அக்கூலி “முன்னூறு வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதென்பதை கவர்மெண்டார் கவனித்திருக்கலாம்”. வில்வைவாசி உயர்வை கூலி பிரதிபலிக்கவில்லை என்று 1918-இல் சொன்னதை தான் 81 வருடம் கழித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் சொன்னார்கள்.

“கல்வி (Education)” பகுதியில் கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்தால் தான் கல்வியின் தேவையறியாதவர்கள் கூட கல்விக் கற்க பிள்ளைகளை அனுப்புவார்கள் என்று மிக முக்கிய கோரிக்கை வைக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வேறு யார் வந்து என்ன சொல்லிக் கொடுக்கத் தேவையிருந்தது என்று புரியவில்லை? 

அரசு வேலையில் பிரதிநிகள் வேண்டுமென்று கேட்கிறார்கள். முக்கியமாக பத்திரப் பதிவுகளில் எழுதப் படிக்கத்தெரியாத தங்கள் சமூகத்தினர் ஏமாற்றப்படுவதால் தங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் சாட்சி கையெழுத்து இருந்தால் தான் பத்திரம் செல்லுபடியாகும் என்று சட்டம் கேட்கிறார்கள்.

1918-இலேயே, அநேகமாக அயோத்திதாசரின் பாதிப்பாக இருக்கலாம், திருவள்ளுவரையும், ஔவையையும் “தம் குலத்தவர்” என்கிறார்கள் “விவசாயம்” என்ற கட்டுரை நிலம், நீர், உரமிடுதல் ஆகியவற்றின் தன்மைகளைப் பேசுகிறது. புதிதாக கோவையில் தொடங்கப்பட்ட (1906-ஈல்) வேளாண் கல்லூரி பற்றியும் அக்கல்லூரி நிபுணர்கள் மூலம் அறிய வரும் பயிர்கள், பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பற்றியும் அறிய நேர்ந்ததை நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். இவர்கள் யாரும் “இயற்கை வேளாண்மை”, “மரபே பெரிது” என்றெல்லாம் பேசவில்லை. 

“வழிகாட்டுவோன்” சுய சாதி விமர்சனமும் செய்கிறது. “ஏமாளியில்லாமல் ஏய்க்கிறவனில்லை” என்று சொல்லி “சண்டாளர்களென்றும், பஞ்சமர்களென்றும், தீண்டா ஜாதிகளென்றும் இதர ஜாதிகளாகிய மெய்சண்டாளர் சொல்லி வருவதற்கு இவர்களுடைய தரித்திர நிலமையே காரணம்” என்று ஒரு கட்டுரை சாடுகிறது.

““தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” ஒரு கூட்டுறவு நிதியுதவி மையமும் நடத்தியிருக்கிறார்கள். “வழிகாட்டுவோன்” தஞ்சை பகுதிகளில் அடிமை பத்திரங்கள் இருந்ததையும் அதில் குடும்பத்தையே அடிமைகளாக எழுதி வாங்கும் வழக்கமிருந்ததையும் குறிப்பிடுகிறது. அந்நிலை நீங்கத்தான் தாங்களே நிதியுதவி வழங்க முன்னெடுத்தார்கள்.

'வழிகாட்டுவோன்' ஒரே நேரத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்கள். வேறு சில தலித் இதழ்களும் இவ்வழக்கத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். இது இன்று தொழில் நுட்ப வசதியோடு செய்யக் கூடிய ஒன்று ஆனால் 100 வருடம் முன்பே செய்திருக்கிறார்கள். 

ஜெ.பாலசுப்பிரமணியமின் இந்நூல்கள் மிக முக்கியமான வரலாற்று தரவுகள். நம் வரலாற்று புரிதலை மொத்தமாக கலைத்து வேறு தளத்துக்கு இந்நூல்கள் கொண்டு செல்கின்றன. “வழிகாட்டுவோன்” இதழின் இந்த ஒரு வருட தொகுப்பு ஜெர்மனியிலிருந்து பிரதியெடுத்து உதவியது “The Pariah Problem” என்ற இன்னொரு முக்கியமான நூலை எழுதிய ரூபா விஸ்வநாத் அவர்கள்.



சமகால ஊடகங்களில் தலித் சித்தரிப்புகளும் ஒதுக்குதலும் - ஒரு குறிப்பு

ரத்னமாலாவின் “Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu” சமகால ஊடகங்களில் தலித்துகள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள், ஊடக நிறுவனங்களில் தலித்துகள் ஒதுக்கப்படுவது ஆகியனப் பற்றிய ஓர் ஆய்வு.



மாஞ்சோலை படுகொலையும் அதையொட்டி தினத்தந்தி, தினமலர், தினமணி பத்திரிக்கைகளில் அச்செய்தி எப்படி வாசகர்களை சென்றடைந்தது என்பதை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார் ரத்னமாலா. கலவரம், சம்பவம் போன்ற வார்த்தைகளால் போலீஸ் அராஜகம் பூசி மெழுகப்பட்டது, செய்திகளை அரசு தரப்பு குறிப்புகளை அப்படியே சுவீகரித்து எழுதுவது, அரசு தரப்புச் செய்திகளோடு முதல்வர் மற்ற அதிகாரிகளின் புகைப்படத்தோடு வெளியிடும் வேளையில் புதிய தமிழகம் தலைவரின் புகைப்படம் அதே அளவு வெளியிடாமை முதலிய பாரபட்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.
வன்கொடுமை நிகழ்வுகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக போலீஸின் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செய்திகளைத் தருவது தங்களுக்கு பாதுகாப்பு என்று வெளிப்படையாகவே பத்திரிக்கை நிருபர்கள் சொல்கிறார்கள்.
தலித் இருட்டடிப்புக்கு நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ் கூட்டங்களை தவறாமல் தங்கள் செய்திகளில் பிரசுரித்த சுதேசமித்திரன் அம்பேத்கர் சென்னைக்கு வந்து உரையாற்றியதை கண்டு கொள்ளாததை “சமத்துவம்” என்ற தலித் இதழ் கண்டித்திருக்கிறது. (ரத்னமாலாவின் புத்தகத்தில் இதைப் படித்த போது தலித்துகள் பற்றி எழுதிய பாரதியும் தலித் சங்கங்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியதாக நினைவில்லை).
காந்தி, பாரதி, பின்னர் திராவிட இயக்கம் ஆகியோரின் பத்திரிக்கை செயல்பாடுகள் பிரசித்தம். அம்பேத்கரின் பத்திரிக்கை செயல்பாடுகள் அந்தளவு இன்னும் பேசப்படவில்லை. அம்பேத்கரின் மூக்நாயக் பத்திரிக்கைப் பற்றிய விளம்பரத்தை வெளியிட கேசரி (திலகரோடு தொடர்புடையது) மறுத்தது. தீண்டாமையின் எல்லைகள் மிக அதிகம்.
தினமலர், தினமணி ஆசிரியர்கள் (எடிட்டர்கள்) தங்கள் நியமனங்களில் ஜாதி பார்ப்பதில்லை, ‘மெரிட்’ மட்டுமே என்று கிட்டத்தட்ட தம்பட்டமாகவே சொல்கிறார்கள். அவர்கள் உள்ளிட்டு பல செய்தி நிறுவனங்களில் ரிப்போர்ட்டர் நிலையைத் தாண்டி தலித்துகள் முன்னேறுவது அபூர்வம் என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ரத்னமாலாவும் ஜெ.பாலசுப்பிரமணியமும் தலா ஒரு கட்டுரை “Caste, Communication and Power” தொகுப்பில் எழுதியிருக்கிறார்கள்.
ரத்னமாலாவும் சுரேஷும் “Imagined caste in Digital Banners of Tamil Nadu” என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இப்போது பரவியிருக்கும் ப்ளெக்ஸ் போர்ட் கலாச்சாரத்தில் சாதியம் எப்படி பேணப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள். தேவர், அகமுடயார், வெள்ளாளர், கோனார், தேவேந்திர குல வெள்ளாளர் சாதிகள் வைக்கும் டிஜிட்டல் பேனர்களில் என்னென்ன குறியீடுகள், ஆளுமைகள் முன்னிறுத்தப்படுகின்றன என கட்டுரை விளக்குகிறது. 1997-இல் இந்தியாவை விட்டு வெளியேறிய நான் மிகச் சொற்பமாகவே ஊருக்கு வந்திருக்கிறேன். 2015-இல் செப்டம்பர் மாதம் வ.உ.சி நினைவு நாளுக்கு சென்னை நகரில் பல இடங்களில் வெள்ளாளர் சங்கங்கள் வைத்த தட்டிகளும், டாடா சுமோ ஊர்வலமும் ஆச்சர்யமளித்தது. அது போலவே தஞ்சையில் யாதவர்கள் கோகுலாஷ்டமிக்கு தட்டி வைத்து கிருஷ்ணன் படம் வைத்தது ஆச்சர்யமே. மற்ற சாதி போஸ்டர்களிலும் யாரேனும் ஒரு பண்டைய வீரன் உருவிய வாளும் சிவந்த கண்ணுமாய் இருப்பதைப் பார்த்தேன். இந்த கட்டுரை அதையெல்லாம் விளக்குகிறது.
ஜெ.பாலசுப்பிரமணியமின் “Pariyan: Print, Media, Mobilization and Resistance in Colonial Madras” ரெட்டமலை சீனிவாசன் நடத்திய பறையன் இதழ் முன்னெடுத்த அரசியல், சமூக கருத்தியலை பேசுகிறது. “பறையன்” என்ற வார்த்தையின் தோற்றம் ‘பறை’ அடிப்பவர்களை குறிப்பதாக இருக்க முடியாது ஏனெனில் அச்சமூகத்தில் பறையடித்தவர்கள் சொற்பமே. “பறையன்” இதழ் நடத்திய முக்கிய கருத்தியல் முன்னெடுப்புகள் காங்கிரசார் இந்தியன் சர்வீஸ் பரீட்சையை இந்தியாவிலும் நடத்தக் கோரியதை எதிர்த்ததும், பறையர்களின் கல்விக்காக வாதிட்டதும்.
அரசு எல்லோருக்கும் கல்வி நிலையங்களில் அனுமதி வேண்டும் என்றதை உயர் சாதியினர் மீண்டும், மீண்டும் மீறியதையடுத்து ஜோதிபா புலே போல் “பறையன்” இதழும் தலித் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிகள் கோரியது.



Tuesday, September 7, 2021

பெரியார் விவாதம்: சில குறிப்புகள்

 பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி..கே-வும் ஆழி செந்தில்நாதனும் மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள்




ஒன்றே குலம் ஒருவனே தேவன்


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அது திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல


சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றே சொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பது வெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே திமுகவின் தொடர் நிலைப்பாடு என்றார். மேலும், "திமுகவுக்கு என்று தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு. இவை யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை. யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களும் அல்ல." அதாவது, செந்தில்நாதன் சொல்கிறாரே "திமுக-திக இரட்டை குழல் துப்பாக்கி என்று" அது திமுகவின் நிலைப்பாடு அல்ல. (https://www.hindutamil.in/news/tamilnadu/564560-one-tribe-one-god-position-dmk-must-instruct-volunteers-to-realize-and-act-on-the-tactical-politics-of-internet-scandals-2.html)


இது தொடர்பாக சுப.வீ அவர்கள் ஒரு பேட்டியில் சொல்கிறார் "பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ள சமூகத்தில் அவர்களது நம்பிக்கைக்கு மாறாகப் பேசி தேர்தல் அரசியல் நடத்துவது கடினம். எனவே பெரியாரைப் போலல்லாமல் இணக்கமாகப் போகவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. எனவே திருமூலரிடம் இருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வரியை எடுத்துக்கொண்டார்." (https://www.bbc.com/tamil/global-41292186)


பெரியார்-அண்ணா உறவு


திமுக ஆட்சி என்பது தி.கவின் அரசியல் பாதை அவ்வளவே என்று பூசி மெழுகுகிறார் செந்தில்நாதன். இதுவும் மேலோட்டமாகத்தான் உண்மை. அண்ணா பெரியாரை முதலில் மறுத்ததே விடுதலை நாளை கறுப்பு தினமென்று குறிப்பிட மறுத்தது. (https://www.bbc.com/tamil/india-45527633)


அண்ணாதுரை பெரியாரிடமிருந்து தத்துவார்த்தமாகவே விலகினார் என்பது தான் உண்மை. அது ஜனநாயக அரசியல் நிர்பந்தத்துகாக மட்டும் என்று சுருக்குவது நியாயமில்லை. பெரியாரின் பார்ப்பண எதிர்ப்பை அண்ணாதுரை பார்ப்பணீய எதிர்ப்பு என்று மாற்றினார்


பி..கே. சொல்வது போல் திமுக என்றுமே பெரியாரின் முக்கியமான கருதுகோள்கள் பலவற்றை நிராகரித்தது என்பதே உண்மை. பெரியார் முக்கியமாக கருதிய சாதி மறுப்புக் கூட பெயரளவில் தான் திமுக ஏற்றது. சாதி ஒழிப்புக்காக ஒரு சிறு அசைவைக் கூட செய்யாததோடு சாதிப் பார்த்தே வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. அண்ணாதுரை தன் சாதியை வினவியப் பின் தேர்தலில் இடமளித்தார் என்று ஆற்காடு வீராசாமி வெளிப்படையாகச் சொன்னார்


பெரியாரையும் அண்ணாதுரையையும் மீண்டும் ஓரளவு இணைத்ததில் சுய மரியாதை திருமண மசோதா நிறைவேற்றத்திற்கு பங்குண்டு. ஆனால் மசோதா பற்றி உரையாற்றிய அண்ணாதுரை சுட்டிக் காட்டியது சுய மரியாதை திருமணங்கள் தமிழ் மரபே என்று திரு.வி.க.வும் மறைமலை அடிகளும் சொன்னார்கள் என்பதே. இவ்விடத்தில் நேரு இந்து மத சீரமைப்பு மசோதா மேலான விவாதத்தின் போது கையாண்ட உத்தியையே அண்ணா கையாண்டார். இது பெரியாரின் மொழி அல்ல. பெரியாரின் வழிகள் ஜனநாயக வழிகளுக்கு ஒவ்வாதது என்று தெளிந்த அண்ணாவின் சாதுர்யமான பயணம் இது.


சார்லஸ் ரையர்சன்  அவருடைய "Regionalism and Religion: The Tamil Renaissance and Popular Hinduism" அண்ணாதுரை பெரியார் போன்று பூரண நாத்திகத்தை வலியுறுத்தாது தமிழ்க் கடவுள்கள் ஆரிய கடவுள்கள் போலல்ல என்று நுட்பமாக பிரித்துப் பேசியதை அடையாளம் காட்டுகிறார்.


காந்தி-பெரியார்-அண்ணா


காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் கடைசி மூச்சு வரை காந்தியை எதிர்த்தார். மிக மூர்க்கமாகவே. காந்தி கொல்லப்பட்டதும் பெரியார் இந்தியவுக்கு காந்தி தேசம் என்று பெயரிடச் சொல்லி தலையங்கம் எழுதினார். இதை அடிக்கடி குறிப்பிடும் திராவிட இயக்கத்தனர் பூசி மெழுகுவது பெரியார் அதனை பின்னர் மிக சிக்கலான விளக்கங்கள் கொடுத்தார். காந்தி கொலையுண்டதை விட அக்கொலையை செய்தவன் பிராமணன் என்பதில் பெரியாருக்கு மிக அதிக திருப்தி. இத்தருணத்தில் கீழ வெண்மனி படுகொலைத் தொடர்பாக பெரியாரின் அறிக்கையை நினைவுப் படுத்திக் கொள்ளவும். நாகூரில் 28 பிப்ரவரி 1948-இல் பெரியார் பேசுகிறார், "காந்தி தான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்கு காரணம்". பின்னர் சிதம்பரத்தில் 29 செப்டம்பர் 1948-இல் உரையாற்றிய பெரியார் விடுதலைக்குப் பின் காந்தி பல தவறுகளை உணர்ந்து மாற ஆரம்பித்ததாகவும் தானே மறுபடி அவருக்கு சிஷ்யனாக மாறும் வாய்ப்பு வாய்க்கும் என்று எண்ணியதாகவும் சொல்கிறார். முதுகுளத்தூர் கலவரத்தின் போது மீண்டும் வன்மத்தோடு காந்தியை தாக்கிப் பேசினார். மொத்தத்தில் பெரியார் காந்தி குறித்து முன்ன்னும் பின்னுமாக கருத்துகள் உதிர்த்தார்.


அண்ணாதுரை 1948, காந்தி இறந்த பின், "உலகப் பெரியார் காந்தி" எழுதிய புத்தகம் சுவாரசியமானது. காந்தியை வெகுவாகப் புகழ்ந்து அண்ணா எழுதினார். ரையர்சன் ஒரு முக்கிய நிகழ்வைச் சுட்டிக் காட்டினார். "The Rising Sun" பத்திரிக்கையில் 15 அக்டோபர் 1971 அன்று குடிசை மாற்று வாரியம் துவக்கியதைப் பற்றிய செய்திக் குறிப்பில் திமுக அரசு "மகாத்மா காந்தி ஏழையின் முன் கடவுள் தோன்றினால் ரொட்டியாகத் தோன்ற வேண்டும் என்றார், அண்ணா இன்னும் ஒரு படி மேலே போய் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார்" என எழுதியது. அண்ணாவையும் காந்தியையும் கழக அரசு தொடர்ந்து தொடர்பு படுத்தியது என்கிறார் ரையர்சன்.


கருணாநிதியும் பெரியாரும்

2021 தேர்தலை ஒட்டி நான் எழுதிய ஒரு பேஸ்புக் பதிவில் ரையர்சனின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பெரியார் இன்று பெரும் அடையாளமாக கட்டமைக்கப்பட்டச் சூழல் 1971-க்குப் பின் கருணாநிதியினால் தான் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முக்கிய பிண்ணனியாக அமைந்தது சேலத்தில் பெரியார் ஜனவரி 24-25 தேதிகளில் 1971-இல் நடத்திய "மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்தரங்கு". விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பேரணியில் இந்து கடவுள்களை, குறிப்பாக ராமனை, ஆபாசமாக சித்தரித்து தட்டிகள் ஏந்தி சென்றனர். மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது. பேரணியில் எடுத்துச் செல்லப்பட்ட தட்டிகளின் போட்டோக்களை 'துக்ளக்' வெளியிட திமுக அரசு பத்திரிக்கையை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டது.


தன் அரசு பிராமணர்களுக்கு எதிரானதல்ல என்று நிரூபணம் செய்ய கருணாநிதி பிப்ரவரி 7 அன்று ஒரு உரையில், "திமுக பிராமணர்களை பாதுகாத்திருக்கிறது" என்றும் தான் நியமித்த பிராமண மாவட்ட அட்சியர்கள் பற்றியும், தன் நிதி அதிகாரி ஒரு பிராமணர் என்றும் சொன்னார் (சமீப அரசு நிதி சார்ந்த குழுவிலும் பிராமணர்கள் உண்டு. திமுக என்றுமே பிராமணர்களை ஆதரிக்கும் கட்சி தான். மேடையில் சவடால் விடுவது வேறு).


சர்ச்சையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட காமராஜரும், ராஜாஜியும் கைக் கோர்த்தனர். ஆரம்பத்தில் கொஞ்சம் சமாதானமாக பிரச்சனையை முடிக்க நினைத்த முதல்வர் கருணாநிதி அரசியல் எதிர்ப்பைக் கண்டு தன் நிலைப்பாட்டை உஷ்ணமாகவே வெளிப்படுத்தினார் என்கிறார் ரையர்சன். "நாங்கள் செய்த பாவம் என்ன? எங்களை அழிக்க ஏன் துடிக்கிறார்கள்? உயர் குடியில் பிறக்காதது தான் நாங்கள் செய்த பாவம். நான் ஒரு சாதாரண ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்....பெரியாரும், அண்ணாவும் தான் எங்கள் சுய மரியாதையை மீட்டெடுத்தனர்.." என்றார் கருணாநிதி. மேலும் விநாயகர் சிலையை உடைத்தப் போது சும்மா இருந்த ராஜாஜி ராமனை அவமதித்ததற்காக கோபம் கொள்வது அவர் விநாயகரை பூஜிக்காதவர் என்பதால் என்றார் கருணாநிதி. இன்னொரு அறிக்கையில் "இது வரை தமிழகத்தில் நடைபெறாத சாதி, இனக் கலவரம் நடக்குமோ என்று அச்சப்படுகிறேன்" என்றார். அடுத்த நாள் நடைப்பெற்ற ராஜாஜி-காமராஜர் தலைமையிலான கூட்டம் முடிவுப் பெறும் போது பெரும் கலவரம் நடந்தது. மீண்டும் கருணாநிதி பத்திரிக்கைகள் தான் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்ததால் தான் இப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குகின்றன என்றார்.


தேர்தல் பிராமணர்-பிராமணரல்லாதோர் என்று பிளவுப்பட்டது. 1971 தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றது. வெற்றிக்குப் பின் கடவுளுக்கு எதிராக பொது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் எதையும் அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி. ஆனால் அவர் தெளிவாக அண்ணாவின் மிதவாத போக்கில் இருந்து மாறி பெரியாரின் பாதைக்கு திரும்பினார் என்கிறார் ரையர்சன். அண்ணாவின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு கழக அரசு அண்ணாவின் பிராபல்யத்தை அறுவடைச் செய்து கிடைத்த தேர்தல் வெற்றிக்கான நன்றியாகத் தான் இந்த பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறது என்றது விகடனின் தலையங்கம்.


சினத்தின் உச்சிக்கே சென்ற கருணாநிதி முரசொலியில் 20 செப்டம்பர் 1971-இல் வெளியான உரையில் கொதித்தார், "பிராமணர்கல் கழக அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்...எத்தனை சாம்ராஜ்யங்களை இவர்கள் கவிழ்த்திருப்பார்கள் என்று தெரியாதா? கைபர் கனவாய் வழியே வந்தவர்கள்...பெரியார் போர்க் கொடி தூக்கியதே உங்களை எதிர்த்து தான்".


தேர்தல் வெற்றிக்குப் பின் சென்னையில் ஜூன் 7 (அல்லது 8) 1972-இல் பகுத்தறிவு மாநாடு நடத்தினார் கருணாநிதி. பெரியார் பற்றி புகைப்படங்கள், இந்து கடவுள்களை விமர்சித்த (மோசமாக சித்தரித்த) படங்கள் எல்லாம் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. அதன் பின் பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே கருனாநிதி இந்து மதத்தை விமர்சித்தார் ஆனால் தெளிவாக அண்ணாவின் கொள்கையான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றார். பழனியில் பேசும் போது ஒரு முறை கருணாநிதி ஆய்வாளர்கள் முருகனே தமிழ் கடவுல் என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென்றார்.


இப்போது ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம் பெரியார் திமுகவுக்கு எதற்கு பயன்பட்டார்?


திமுகவின் பெரியார் தேவை

பெரியாரின் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சாதி ஓழிப்பு எதிலும் திமுகவுக்கு நம்பிக்கை என்றுமே இருந்ததில்லை. அதெல்லாம் மேடை பேச்சோடு சரி. இன்று ஆத்திகர்கள் நிரம்பியக் கட்சி திமுக தான். அந்த விவாத நெறியாளர் சொல்வதுப் போல் சமூக நீதி, பெண் விடுதலை என்பதெல்லாம், மற்றவர்கள் அவற்றை முன் எடுத்திருந்தாலும், பெரியாரால் தான் சாத்தியமானது என்பது அப்பட்டமான திரிபு, வரலாற்றை மறைப்பது. நீதிக் கட்சி, தலித் அரசியல் முன்னெடுப்புகள், காந்திய பேரியக்கத்தால் உண்டான முன்னெடுப்புகள், தமிழக காங்கிரஸ் ஆட்சியல் நடந்தவை, மத்திய அரசு நிறைவேற்றிய அரசியல் சாசனம், இந்து மத சீரமைப்பு மசோதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று வரை தி.க.வின் தலைமை ஆண்கள் மட்டுமே. திமுகவிலும் அது தான் நிலை.


திமுகவுக்கு, குறிப்பாக கருணாநிதிக்கு, பெரியார் தேவைப்பட்டது ராஜாஜி, சோ, விகடன் ஆகிய பிராமண எதிர்ப்பை சமாளிக்கத்தான். பெரியாரின் பிராமண துவேஷம் வேர் விட்ட அளவு வேறு எந்த பெரியாரியக் கொள்கையும் தமிழகத்தில் நிலைக்கவில்லை. இன்றும் சாதி வேற்றுமை மற்றும் சாதி வன்முறையில் தமிழகம் யாருக்கும் சளைத்ததல்ல.


திமுக, குறிப்பாக கருணாநிதி, முன்னெடுத்த பண்ப்பாடு சார்ந்த கருத்தியல்கள் பெரியாரிமா என்று தாராளமாக கேள்விக் கேட்கலாம். தமிழை முன் வைத்து பழம் பெருமைப் பேசுவது, பாரம்பர்ய பெருமைப் பேசுவது, கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும் முன் வைத்தது, ராஜராஜனுக்கு சதய விழா, ராஜேந்திர சோழனுக்கு விழா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அடிப்படையில் திமுக பிராமண எதிர்ப்பைத் தாண்டி வேறு பல கருத்தியல்களில் பெரியாருக்கு எதிர் திசையில் தான் பயணித்தனர். கருணாநிதியின் பிராமண எதிர்ப்பும் கூட பல சமயங்களில் அரசியல் நாகரீகம் என்ற பெயரில் பின் வாங்கியது என்பதே நிஜம்.


பெரியாரின் மொழி சமூக நீதிக்கான மொழியல்ல. அதே சமயம் பி.ஏ.கிருஷ்ணன் அதனை நாஜித்தனம் என்று சித்தரிப்பதையும் நான் ஏற்றதில்லை. அது பற்றி நீண்ட விவாதமே அவரோடு செய்திருக்கிறேன். யூட்யூப் காணோளி கீழே. (சுட்டிhttps://youtu.be/s9Gic-vpRaM )






திமுக இன்று பல தரப்பட்ட சமூகத்தினரையும் திருப்திப் படுத்துவதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்துக்களுக்கு தாங்கள் இந்து மதத்தின் நண்பர்கள் என்று காட்டிக் கொள்ள அதீதமாகவே பிரயத்தனப்படுகிறார்கள். அதே சமயம் தாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் என்பதையும் நிலை நாட்டிக் கொள்ள பெயரளவில் இந்த சமூக நீதி நாள் போன்ற முன்னெடுப்புகளையும் செய்கிறார்கள். அந்தளவில் தான் பெரியார் இன்று பயன்படுகிறார். 


குறிப்பு: ஒரு சாதாரண பேஸ்புக் பதிவாகத்தான் ஆரம்பித்தேன் வளர்ந்து விட்டது. கட்டுரை என்றும் சொல்ல இயலாது. அதற்கான கட்டமைப்பும் கொஞ்சம் சிதைந்திருக்கிறது.