Tuesday, May 23, 2017

நேருவின் வாழ்வில் பெண்கள்: தொடரும் சர்ச்சைகளும் உண்மைகளும்.

ஜவஹர்லால் நேருவின் காதல்கள் மற்றும் அவரின் நிர்வாகத் திறன் குறித்து இன்றும் சர்ச்சைகள் தொடர்கின்றன. என் கடந்த கட்டுரைக்குப் பதிலளித்த ஜெயமோகன் அவை இரண்டு குறித்தும் பல வருடங்களாகப் பொது வெளியில் சொல்லப் படும் சர்ச்சைகளைத் தன் விமர்சனமாக முன் வைத்தார். உண்மை என்ன?

முதலில் ஒரு விளக்கம். அதி தீவிர இந்துத்துவர்களுக்கு நேருவின் பெயரே ஓர் ஒவ்வாமையைக் கொடுக்கும் அவரின் மதச் சார்பின்மை கொள்கையினால். ஜெயமோகன் பல காலமாக நேருவின் மீது மரியாதையும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் ஆனால் அவரின் விமர்சனத்தின் வேர் வேறு. நேரு இந்திய ஞான மரபை உதாசீனப்படுத்தி மேற்கின் விஞ்ஞானப் போக்கில் மையல் கொண்டு நம் பாரம்பரிய ஞானத்தின் தொகை நீர்த்து மரியாதை இழக்கத் துணைப் புரிந்தார் என்பது ஜெயமோகன் அடிக்கடி முன் வைப்பது, என் புரிதலில் பிழை இருக்கலாம். இந்துத்துவர்களிடம் பேச இயலாது. ஜெயமோகன் எதிர் தரப்போடு, ஒப்புக் கொள்கிறாரோ இல்லையோ, உரையாடவாவது செய்வார். அவரின் பதிலுக்கு நான் எழுதிய சிறு குறிப்பை அவர் தளத்தில் வெளியிட்டார். ஆயினும் அதைப் பற்றி விரிவாக எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.

இப்பதிவை எழுத பல புத்தகங்களையும், ஜெயமோகனின் பதிவுகள் உட்பட, ஆராய்ந்த போது காந்தியின் பிரம்மசர்ய சோதனைகள் குறித்தும் விரிவாகப் படித்தேன். காந்தியின் பிரம்மசர்ய சோதனைகள் பற்றிய ஜெயமோகனின் வாதங்களைப் பின் தொடர்ந்த போது விடுதலை இயக்கம் முகிழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஒரு பாலியல் புரட்சியும் நடந்தது என்றே சொல்லலாம். சமூகத்தில் பெண்களின் இடம், ஆண்-பெண் உறவு, பெண்களின் உரிமைகள் எல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள் கண்ட நேரம் அது. இது இன்னும் முழுமையாக ஆராயப் பட வேண்டிய ஒன்று.

செக்ஸ் பற்றி நேரு:

நேருவின் சுய-சரிதையில், அவர் மனைவிக்கு அர்ப்பனிக்கப் பட்டது, செக்ஸ் பற்றிய காந்தியின் பார்வைக்கும் தன் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகச் சொல்கிறார். காந்தி சந்ததி உருவாக்கும் ஒன்றுக்காக மட்டுமே ஆணும்-பெண்ணும் இணையலாம் இல்லையென்றால் அது பாவச் செயல் என்றும் மனிதன் தன் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகும் தருணம் என்றும் கூறியதை நேருவால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மொழிப்பெயர்க்க அவகாசமில்லாததால் அந்தப் பகுதிகள் மட்டும் இங்கே ஆங்கிலத்தில்.

Nehru quotes Gandhi, "No, I must declare with all the  power I can command that sensual attraction, even between husband and wife, is unnatural".

Nehru responds in a confessional lengthy response:
"In these days of the Oedipus complex and Freud and the spread of psychoanalytical ideas this emphatic statement of belief sounds strange and distant.....Sexual restraint is certainly desirable, but i doubt if Gandhi's doctrine is likely to result in this to any widespread extent....I do not know why he is so obsessed by this problem of sex, important as it is. For him it is a 'soot or whitewash' question, there are no intermediate shades. At either end he takes up an extreme position which seems to me most abnormal and unnatural. Perhaps this is a reaction from the deluge of literature on sexology that is descending on using these days. I presume I am a normal individual and sex has played its part in my life, but it has not obsessed me or diverted me from my other activities. It has been a subordinate part"
He finishes that chapter with these words, "I had an interview in gaol with Kamala. That cheered me up tremendously, and my feeling of isolation left me. Whatever happened, I felt we had one another". Nehru would return to the topic of his relationship with Kamala in a more touching manner in 'Discovery of India' as he recounts what he felt accompanying an urn containing the ashes of Kamala from Switzerland. Nehru's dalliances with women were all after he became a widower, unlike Gandhi or Radhakrishnan.

நேருவும் பெண்களும்:

எட்வினா

நேருவின் மிகப் பிரபலமான காதலி எட்வினா மௌண்ட்பேட்டன். இன்று நம் சினிமாவிலும், மஞ்சள் பத்திரிக்கைகளிலும், நாலாந்தரக் கதைகளிலும் மிகவும் மலினப்பட்டுப் போய்விட்ட வார்த்தைகள் காமமும் காதலும். 'நேருவின் காதலி எட்வினா' என்று எழுதுவது ரசக் குறைவாக இருக்கிறது. அதற்காக 'நேருவின் சினேகிதி எட்வினா' என்று எழுதினால் அது இடக்கரடக்கல் கிடையாது மாறாகப் பச்சைப் பொய். It sure sounds nicer to say 'Edwina was Nehru's love'.

நேரு-எட்வினா உறவு பற்றி ஓரளவு நேர்மையுடன் கிசு கிசு தன்மையில்லாமல் எழுதியது எம்.ஜே.அக்பர். அக்பரின் "நேரு" எனும் வாழ்க்கை வரலாறு 1988-இல் வெளிவந்த போது இப்பகுதி சர்ச்சையானது நினைவில் இருக்கிறது. அப்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். நேரு வைஸ்ராய் மாளிகையில் நீச்சலடிக்கப் போவார். வேவலின் மனைவியும் நேருவும் நட்புடன் இருந்தார்கள். பின்னர் மௌண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆன போது எட்வினா நேருவோடு நீச்சலுக்குச் சேர்ந்தது புரளியானது. நேருவும் எட்வினாவும் கட்டித் தழுவிக் கொண்டதை நேரில் பார்க்க நேர்ந்த, பின்னாளில் டாடா குழுமத்தின் தலைவரான, ருஸ்ஸி மோடி அதை அக்பரிடம் சொல்லியுள்ளார்.

லண்டன் செல்லும் போதெல்லாம் எட்வினாவைக் காண நேரு செல்வதுண்டு. ஒரு முறை நள்ளிரவில் சென்று எட்வினா வீட்டுக் கதவை நேரு தட்டும் போது அருகில் அவரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ஒரு புகைப்படக் காரர் அதைப் படம் பிடித்து அடுத்த நாள் லண்டன் செய்தித் தாள்களில் வெளியிட்டார். நேருவை அருகில் இருந்து கவனிக்கும் பொறுப்பு அப்போது இந்தியத் தூதரகத்தில் வேலைப் பார்த்த குஷ்வந்த் சிங்குக்கு இருந்தது. இப்படி நேருவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் நிலை வராமல் குஷ்வந் தவறிவிட்டார் அதனால் நேரு தொல்லைக் கொடுப்பார் என்று குஷ்வந்தை அவர் உயரதிகாரி மிரட்டினாராம். ஆனால் அப்படி எதையும் நேரு செய்யாததோடு அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று குஷ்வந்த் எழுதியதாக நினைவு.

நேருவிடம் பல பெண்கள் மயங்கினர். அமெரிக்க டைம் பத்திரிக்கை 1942-இல் வெளியிட்ட நேரு பற்றிய அட்டைக் கட்டுரையில் 52-வயதிலும் வசீகரமாகத் தோன்றும் நேருவை மணமுடிக்க 6 பெண்கள் காத்திருப்பதாக எழுதியது. (நேரு டைம் பத்திரிக்கையில் 7 முறை அட்டையில் இடம் பெற்றார். பட்டேல் ஒரு முறை).

எட்வினாவோடு நேருவுக்கு இருந்த உறவு மௌண்ட்பேட்டனை இந்தியாவின் பக்கம் தள்ளியதோடு பாகிஸ்தானை வஞ்சிக்கத் தூண்டியது என்று கிசு கிசு பிரச்சாரத்தைத் தொடங்கியவர் ஜின்னா என்கிறார் எம்.ஜே. அக்பர். அதில் சில காங்கிரசாரும் சேர்ந்துக் கொண்டனர். அக்பரும் மற்ற ஆய்வாளர்களும் இதில் எந்த உண்மையும் இருப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை.

ஆங்கிலேய அரசாங்கம் மிகப் பெரிய தொகுதிகளாக 12-தொகுதிகள் பிரிவினைக்கு முன்பான அனைத்து ஆவணங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. எல்லாப் பரிவர்த்தனைகளும் வெளிப்படையாகவே நடந்தன. தலையனை மந்திரம் என்றெல்லாம் பேசுவது வரலாறு அறியாத அல்லது வன்மம் நிறைந்த பேச்சு. (இதைப் பொதுவில் சொல்கிறேன்). அத்தொகுதியில் ஒன்றை சாம்பிளுக்கு வாங்கிப் புரட்டினேன். அசர வைக்கும் ஆவணத் தொகுப்பு. கே.எம். பணிக்கர் அந்த 12- தொகுதிகளையும் சாராம்சப் படுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை இலக்கியத்தை விட ஆராய்ச்சிகள் நிறைந்தது. 'யாருடனும் உறவு வைத்துக் கொள் ஆனால் என் மனைவியாக இரு வெளிப் பார்வைக்கு' என்ற லேடி சாட்டர்லியின் காதல் எட்வினா மௌண்ட்பேட்டன் வாழ்வில் கிட்டத்தட்ட உண்மை. மௌண்ட்பேட்டன்களின் மண வாழ்வு சிக்கல்களும் இடைவெளிகளும் நிறைந்தது. நேரு எட்வினாவுக்கு ஓர் மகிழ்ச்சியைக் கொடுத்தார் என்பதையும் அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மௌண்ட்பேட்டன் கூறியதாக அவர் வரலாற்றாஇ எழுதியவர்கள் சொல்கிறார்கள். இங்கே 'நெருக்கம்' என்பது தோழமைக்கும் காமம் சார்ந்த இடைவெளிக்கும் இடையே ஊசலாடும் அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. "They really dote on each other in the nicest way, Pammy (Mountbatten's daughter) and I are doing everything we can to be tactful and of help" என்று மௌண்ட்பேட்டன் தன் இன்னொரு மகளுக்கு எழுதினாராம்.

நேரு-எட்வினா புகைப்படங்களில் மிகவும் பிரசித்தமானது, நேரு, எட்வினா, மௌண்ட்பேட்டன் சேர்ந்திருக்கும் இந்தப் போட்டோ. இதில் மௌண்ட்பேட்டன் எங்கோ நோக்கியிருக்க ஒரு சிறூவனின் குதூகலத்தோடு சிரித்துக் கொண்டே எட்வினாவைப் பார்த்தப்படி இருக்கிறார் நேரு.



டண்ஸல்மேன் அதிகம் அறியாத இன்னொரு புகைப்படம் பற்றி ஒரு பேட்டியில் சொன்னதை இணையத்தில் தேடிய போது கிடைத்தது இது. ஒரு மலை வாசஸ்தலத்திற்குச் நேரு, எட்வினா, மௌண்ட்பேட்டன் சென்ற போது ஒரு புகைப்படம் அருகருகே நடக்கும் நேருவையும்-எட்வினாவையும் ஒரு சிறந்த தருணத்தில் காண்பிக்கிறது.



நேரு பற்றிய அவதூறுகளுக்கு இன்று முக்கிய ஆதாரம் அபுல் கலாம் ஆஸாத்தின் தன் வரலாறு. ஆஸாத் தன் புத்தகத்தின் முப்பது பக்கங்கள் அரை நூற்றாண்டு கழித்தே வெளியிட வேண்டும் என்று மறைத்து வைத்தார். அதில் ஒன்று மௌண்ட்பேட்டன் - எட்வினா வருகைக்கு முன் பிரிவினையை எதிர்த்த நேரு அவர்களின் வருகைக்குப் பின் மனம் மாறியது ஏன் என்று பூடகமாகக் கேள்வியை எழுப்பி இருப்பார். பிரிவினையால் மிக வேதனையுற்றவர் ஆஸாத் ஆனால் காந்தி, பட்டேல், நேரு என்று எல்லோருமே ஆரம்பத்தில் பிரிவினையை எதிர்த்துப் பின் வேறு வழியே இல்லை என்பதால் ஏற்றனர். ஆஸாத் தன் புத்தகத்தை நேருவுக்குத் தான் அர்ப்பனித்தார். மேலும் பட்டேலைவிட நேருவே ஆஸாத்துக்கு ஆதர்சம்.



எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் பலவும் வெளியிடப்பட்டுவிட்டன ஏனென்றால் அவை எட்வினாவிடம் இருந்தன. ஆனால் நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்கள் சோனியாவின் கையில் இருக்கிறது, அவை அவ்வளவாக வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட வேண்டும் சரித்திர முக்கியத்துவத்துக்காக. வேறு காரணம் இல்லை. நிச்சயம் நேருவும்-எட்வினாவும் மிக ஆத்மார்த்தமான் உறவை கொண்டிருந்தார்கள். நேரு செக்ஸை குறித்து அலட்டிக் கொள்ளாதவர். ஆதலால் நேரு-எட்வினா உறவில் செக்ஸ் இருந்ததா இல்லையா என்பது அலுப்பான கேள்வி. இருந்ததா இல்லையா என்பது 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' வகை. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் எட்வினாவின் உறவுக்கும் நேருவின் எந்த அரசியல் முடிவுக்கும் சம்பந்தமில்லை. பன்னெடுங்காலமாக எழுதி குவித்தவர் நேரு. அவரின் ஒவ்வொரு அரசியல் முடிவுக்கும் நம்மால் மிக எளிதாக அவரின் எழுத்துகளினூடாக முடிவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்தறிய முடியும். சோம்பேறிகள் தான் தலையனை மந்திரத்திற்காக முடிவுகளை நேரு எடுத்தார் என்பார்கள்.



பத்மஜா நாயுடு:

"எனக்கு ஆசைகளைத் துறந்து வாழ ஆசையில்லை" என்று பத்மஜா நாயுடுவுக்கு நேரு கடிதமெழுதினார். சரோஜினி நாயுடுவின் பெண் பத்மஜாவும் நேருவும் காதலர்களே. மொழியைக் கவித்துவமாகப் பயன்படுத்த தெரிந்த நுண்ணுனர்வாளர் நேரு என்பது அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்களில் ஒன்றைப் படித்தாலே தெரியும். இந்திராவின் இயற்பெயரிலுள்ள ப்ரியதர்ஷினி, பார்வைக்கு இனியவள், என்பதைச் சிலேடையாக வைத்து ஒரு கடிதத்தை 'Priyardarshini, dear to sight, dearer still when sight is denied' என்று சிறையில் இருந்து எழுதியிருப்பார் அந்தத் தந்தை. 'பிபீ' (Bebee) என்று செல்லப் பெயரிட்ட நாற்பது வயதான பத்மஜாவுக்கு, "keep growing younger and thus make up for those who grow older' என்று எழுதினார். இன்னொரு கடிதம் பத்மஜாவின் கடிதத்துக்கான பதில், அதுவும் தந்தியாக, அதில் "My dear, your telegram has reached me. How foolish and womanlike and extravagant. Or was it a kind of prayaschitta or atonement for having made love to Subhas?" இக்கடித்தத்தைக் குறிப்பிட்டு மிகவும் பூடகமாக எம்.ஜே.அக்பர் நேருவும் சுபாஷும் அரசியலில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை என்கிறார். நேருவின் படுக்கை அறையில் தன் புகைப்படத்தை வைக்குமாறு ஒரு புகைப்படத்தைப் பத்மஜா கொடுத்தார்.

இந்திரா காந்தி பற்றிய வாழ்க்கைச் சரித்திரம் எழுதிய குடும்ப நண்பர் புபுல் ஜெயகர் விஜயலக்‌ஷ்மி பண்டிட்டிடம் நேரு ஏன் பத்மஜாவை மணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதாகவும் அப்படிச் செய்திருந்தால் இந்திராவின் மனம் புன்பட்டிருக்கும் அதனாலேயே நேரு அப்படிச் செய்யவில்லை என்றாராம் விஜயலக்‌ஷ்மி பண்டிட்.

தாகூரின் உறவினரும் நடிகையுமான தேவிகா ராணியுடன் தன் பெயர் கிசுகிசுக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்ட தன் அம்மா கோபப்பட்டதாக நேரு பத்மஜாவுக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்தார். தேவிகா ராணி முதலில் சினிமாத் தயாரிப்பாளரான ஹிமான்ஷு ராயை மணந்தார் அவர் இறந்த பின் ஒரு ருஷ்யரை மணந்தார். உண்மையில் அந்தக் காலக் கட்டத்தில் தன் ஜாதி, மதம் விட்டு, ஏன் வெளிநாட்டவரைக் கூட மணந்த இவரைப் போன்றவரின் வாழ்க்கை விசித்திரமே. நேருவின் இரண்டு தங்கைகளும் காதலித்து மணம் புரிந்தனர். அப்படியே இந்திராவும், தேவதாஸ் காந்தியும். போஸ் ஜெர்மானியப் பெண்ணை மணந்தார்.

பத்மஜா பின்நாளில் ஆளுநரானார். பத்மஜாவை நேருவின் காதலியாகக் கிசுகிசு வரலாற்றின் வழி அறிந்தவர்களுக்கு இது நேரு அளித்த பரிசாகத் தோன்றலாம். உண்மை அதுவல்ல. பத்மஜா இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு அவர் அம்மா சரோஜினி நாயுடுவும் உத்தரப் பிரதேசத்தில் ஆளுநராக இருந்தவர். தீவிர அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த பெண் தான் பத்மஜா. பத்மஜா 'வெண்ணிற ஆடை' நிர்மலா அல்ல, நேருவும் எம்.ஜி.ஆர் அல்ல.

ம்ருநாளினி சாராபாயும் மிருதுளா சாராபாயும்:

விக்ரம் சாராபாய் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியும் நேருவின் நண்பரும். நேருவுக்குப் பெண்களைத் தவிர அன்றைய இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானிகளும் உலக அறிஞர்களும் உற்ற நண்பர்கள்.

விக்ரம் சாராபாயின் மனைவி மிருநாளினி சாராபாய் நாட்டியத்தில் ஈடுபாடுடையவர். ஒரு நாட்டிய நிகழ்வுக்குப் பின் மிருநாளினியை அனைத்தவாறு இருக்கும் நேருவின் புகைப்படத்தை ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கை விஷமமானத் தலைப்புடன் வெளியிட்டப் போது அதைக் கிண்டலான குறிப்போடு விக்ரம் சாராபாய் நேருவுக்கு எழுதினாராம். மிருநாளினியின் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நேரு செல்வது வழக்கம், நேரம் தவறாமல் வந்து விடும் நேரு தான் வராவிட்டாலும் நிகழ்ச்சியை நேரத்தோடு ஆரம்பிக்கச் சொன்னாராம்.

Mrinalini Sarabhai and Nehru
எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் பாடலைக் கேட்டுவிட்டு "இசையின் அரசியின் முன் நான் வெறும் பிரதமர்" என்றார் நேரு. அறிஞர்களோடு கலைஞர்களோடும் நேரு என்றுமே நட்பு கொண்டிருந்தார். நேருவின் உலகளாவிய நட்புகள் பிரமிக்கத்தக்க பட்டியல். அவர் ஒரு முழுமையான மனிதர்.

மிருநாளினி, மல்லிகா மற்றும் மல்லிகாவின் பெண், அவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி சுவாரசியமானது இங்கே.

மிருதுளா சாராபாய்:

சாராபாய் குடும்பத்தில் இருந்த இன்னொரு பெண் மிருதுளா, இவர் விக்ரம் சாராபாயின் சகோதரி. நேரு-மிருநாளினி சாராபாய் உறவை பற்றி ஆராய்ந்தப் போது மிருதுளா சாராபாய் பற்றியும் அவருக்கும் நேருவுக்குமான உறவுத் தெரிய வந்தது.

மிருதுளா நேருவுக்கு நெருங்கிய நட்பு. நட்பு மட்டுமே. பிரிவினையின் போது எல்லைப் பகுதியில் இரண்டாகப் பிரிந்த நாடுகளிடையே மிருதுளா முன்னும் பின்னுமாகச் சென்று உயிரை பணயம் வைத்து பலரைக் காப்பாற்றினார். பின்னர்க் காஷ்மீரின் ஷேக் அப்துல்லாவை நட்போடு ஆதரித்தார். ஆனால் ஷேக் அப்துல்லா, அவரும் நேருவுக்கு நெருங்கிய நண்பர், பிரிவினைப் பாதையில் அடியெடுத்து வைத்த போது அப்துல்லாவையும் மிருதுளாவையும் நேருவின் அரசு கைதுச் செய்தது.

தோழியோ, நண்பனோ, தேசம் என்று வந்துவிட்டால் நேருவின் சிந்தையும் செயலும் தெளிவாகத் தேசத்தின் சார்பில் தான் இருந்தது.

ஷ்ரத்தா மாதா:

1981-82-இல் ஷ்ரத்தா மாதா என்பவர் குஷ்வந்த் சிங்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் நேருவுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறினார். இது பற்றிச் சமீபத்தில் அவுட்லுக் பத்திரிக்கைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

ஷ்ரத்தா மாதா என்பவர் ஒரு கத்தோலிக்க ஆஸ்பித்திரியில் 1949-இல் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கே அவருக்கு ஒரு குழந்தை இறந்துப் பிறந்ததாகவும் அவர் சொல்லிக் கொள்ளாமல் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினாரென்றும் அவர் சென்ற பிறகு அவர் மறந்து விட்டுச் சென்ற ஒரு கத்தைக் கடிதங்கள் அம்மருத்துவமனை உரிமையாளர்கள் கையில் கிடைத்ததாகவும் அவை நேரு எழுதியது என்று நேருவை பெரிதும் மதிக்கும் ஒருவர் கையகப்படுத்தி நேருவிடம் சேர்ப்பிக்க முற்பட்டார் என்கிறது. கடிதங்களை விலைக் கொடுத்து வாங்கியவர் நேருவின் காரியதரிசியிடம் தொடர்பு கொண்டார் ஆனால் காரியதரிசியும் நேருவும் அதைப் பொருட்படுத்த விரும்பவில்லை என்றும் ஆனால் மனம் தளராத அம்மனிதர் எருவை நேரில் சந்தித்துக் கடிதங்களை அளித்தாராம். நேரு அவற்றில் இருந்து ஒரு சாதாரணக் கடிதத்தை அவரிடமே பரிசாகக் கொடுத்ததாகவும் அக்கட்டுரைச் சொல்கிறது.

அக்கட்டுரையில் சுவாரசியமான பகுதி ஷ்ரத்தா மாதா இந்து மகாசபையால் இந்து மதச் சீரமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர முனைப்பாக இருந்த நேறுவின் மனத்தை மாற்ற அனுப்பப் பட்டவர் என்கிறது. அவுட்லுக் தன் புலனாய்வில் அக்கால உளவுத் துறை இந்து மகாசபையின் அஷுடோஷ் லாகிரி சவர்க்கரிடம் ஷ்ரத்தா மாதா நேருவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் என்றும் அதனால் நன்மைகள் நடக்கலாம் என்றும் எழுதிய குறிப்பு சிக்கயதாகவும் அதைப் பட்டேலிடம் சேர்ப்பித்ததாகவும் கூறுகிறது. அக்குறிப்பை பட்டேல் நேருவுக்கு அனுப்பி விளக்கம் கேட்டாராம். நேரு, "ஆமாம் அந்தப் பெண்மனியைச் சந்தித்திருக்கிறேன் சில முறை...(நாங்கள்) பொதுவாக Hindu Code Bill மற்றும் மொழிக் கொள்கைப் பற்றியும் விவாதித்தோம். அவர் என்னை மாற்ற முயன்றார், நான் அவரை மாற்ற முயன்றேன். என் முயற்சி வெற்றிப் பெற்றதோ இல்லையோ அவர் முயற்சிகள் தோல்வி அடைந்தன" என்று எழுதினாராம்.

ஷ்ரத்தா மாதா நேரு தன்னிடம் கை ஜோஸியம் பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார். அவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்ததை இன்னொருவருக்கு, ராதாகிருஷ்ணனை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, நிரூபித்தாராம். நேரு கடைசி வரை பகுத்தறிவாளரே. விளையாட்டாக 'ஜோஸியம் பாரேன்' என்பதற்கு ஜோஸியத்தை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. ராதாகிருஷ்ணன் அவர் வீட்டு வேலைப் பெண் முதல் பல பெண்களோடு உறவு கொண்டார் என்று அவரின் மகனும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான எஸ்.கோபால் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் சொல்கிறார்.

இந்தியாவின் முதல் பிரதமருக்கு இறந்துப் பிறந்த குழந்தை ஒன்று இருந்திருக்கலாம் என்று முடிகிறது கட்டுரை. இருக்கட்டுமே. தாமஸ் ஜெபர்சனிடம் அடிமையாக இருந்த சேல்லி ஹெமிங்குக்கு அவர் மூலம் குழந்தைப் பிறந்ததாக இன்று மரபியல் மூலம் நிரூபிக்கப் பட்டு விட்டது. அதற்காக அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் எழுதி மிக முக்கியமான மரபுகளைத் துவக்கி அமெரிக்காவின் ஜனாதிபதியான அவர் சாதனைகள் பொய்யாகிவிடுமா? அப்படி எந்த அமெரிக்கனும் வாதிட்டு நான் பார்த்ததில்லை.

இந்து மதச் சீரமைப்புச் சட்டத் திருத்தம் நேருவின் பெரும் சாதனைகளில் ஒன்று. லிண்டன் ஜான்ஸன் கொண்டு வந்த கறுப்பினத்தவருக்கான உரிமைச் சட்டத் திருத்ததுக்கு நிகரான வரலாற்று முக்கியத்துவம் நேரு செய்தது. இரண்டு சாதனைகளையும் நான் சட்டத் திருத்தங்கள் சந்தித்த ஏகோபித்த எதிர்ப்பையும் அதை அவ்விரு தலைவர்களும் மீறி வெற்றி அடைந்ததையும் தான் ஒப்பிடுகிறேன், வேறெதையுமல்ல.

ஷ்ரத்தா மாதாவை நேரு சுரண்டினார் என்கிறார் ஜெயமோகன். அப்படி ஷ்ரத்தா மாதாவே சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பது தான் உண்மை. அவுட்லுக் கட்டுரையிலேயே ஊர்ஜிதப் படுத்தக் கூடியது பட்டேலின் கடிதமும் அதற்கு நேருவின் பதிலும் தான், மற்றதெல்லாம் செவி வழிச் செய்திகள்.

நேருவின் 'புகை' படம்:

நேரு புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் புகைப்பிடிக்கும் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன அதில் மிகச் சுவாரசியமானதும் சுவாரசியமான பின் கதையும் உள்ளப் படம் கீழே. இப்படம் இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் ஹோமாய் வியாரவல்லா எடுத்தது. இப்படத்தைப் பார்த்தவுடன் "ஆஹா பார்த்தாயா நேருவை" என்று ஆர்ப்பரிக்கும் சின்னப் புத்திக் காரர்கள் காண மறுப்பது ஒரு நல்ல தோழமையான தருணம். இன்றும் இந்தியாவில் புகைப் பிடிக்கும் பெண்கள் தரக்குறைவாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். சினிமாவிலும் நடிகைகள் பிகினி அணிந்துக் கூட நடிப்பார்கள் ஆனால் புகைப் பிடிக்கும் காட்சியில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள். இங்கே நேரு தன்னோடு பயனிக்கும் இங்கிலாந்து ஹை கமிஷனரின் மனைவிக்குச் சிகரெட்டைப் பற்ற வைக்கிறார். இப்படத்தில் பெண் ஆணாக இருந்தால் யார் கண்ணையும் உறுத்தாது. இது போன்ற படங்கள் தான் இன்றும் நேருவை 'அவர் மேற்கத்தியவர்' எனும் பிம்பத்தைக் கட்டமைக்க உதவுகிறது. எனக்கு இந்தப் படத்தில் தெரிவதெல்லாம் ஒரு மனிதர் பெண்ணைச் சகப் பயணியாகப் பாவிக்கும் தோழமையும் அதைப் புகைப்படம் எடுக்க இன்னொரு பெண்ணை அனுமதிக்கும் மனோபாவமும்.

Prime Minister Nehru with Mrs Simon, the wife of British Deputy High Commissioner.  Photo by Homai Vyarawalla (Courtesy Hindu)
சமூக வலைத் தள நண்பர் நேரு பிரதமாரனதும் அவர் புகைப் பிடிக்கும் போட்டோ எடுக்கத் தடை விதித்ததாக யாரோ எழுதியதை மேற்கோள் காட்டினார். இது அடுத்தப் பிரச்சினை இப்போது இந்தியாவில். பெரும் தலைவர்களைப் பற்றி அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் எதையாவது எழுதிகிறார்கள் வாசகர்களும் அதில் உண்மை இருக்கிறாதா இல்லையா என்பதை விடத் தங்கள் நம்பிக்கைகளாஇ அவை ஊற்ஜிதப்படுத்திகிறதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இந்தப் புகைப்படம் நேரு பிரதமராக இருந்த போது எடுத்தது. ஒரு பிரதமரைச் சுற்றி அதிகார மையங்கள் உருவாகும் அவர்கள் ஆவலாதியாகப் பிரதமரின் பிம்பத்தைக் காக்கும் பொருட்டு ஏதாவது கட்டுப் பாடுகள் விதித்திருக்கலாம் ஆனால் அவற்றுக்கும் நேருவுக்கும் சம்பந்தமிருப்பதாக ஆதாரமில்லை. கவனிக்கவும் பிராங்க்லின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி ஆனப் பிறகு சக்கர நாற்காலியில் அவ்வளவாகப் புகைப்படம் எடுக்க அனுமதித்தில்லை. கென்னடி உடல் உபாதைகள் வெளியில் தெரியாதவாறுப் பார்த்துக் கொண்டார்.

மனைவி, மகள், தங்கையோடு நேருவின் உறவுகள்:

கமலா நேருவைப் பற்றித் தன் சுய சரிதையில் அவ்வளவாக நேரு எழுதவில்லை. கமலா நேருக் குடும்பத்துப் பெண்களோடு ஒட்டவேயில்லை ஏனெனில் அவர்களைப் போல் கமலா மெத்தப் படித்தவரல்ல. இதனாலேயே பிற்காலத்தில் இந்திரா காந்தி தன் அத்தைகளோடு சுமுகமான உறவில் இருந்ததில்லை, முக்கியமாக விஜயலக்‌ஷ்மி பண்டிட்டோடு.

கமலா இறந்த பின் எழுதிய 'டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்தில் நேரு கமலாவின் இறுதி நாட்கள் பற்றிச் சோகம் இழையோட எழுதிவிட்டுத் தன்னை மணமுடித்துப் போகப் போகக் கமலா நேரு மாறினார் என்கிறார். கமலா, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது, சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அது கனவன் மனைவி இடையே ஓர் உறவை திறந்தது.

தாகூரின் நாடக நாயகி சித்ராவோடு கமலாவை ஒப்பிட்டு அழகாக, "Like Chitra in Tagore's play, she seemed to say to me: 'I am Chitra. No goddess to be worshipped, nor yet the object of common pity to be brushed aside like a moth with difference. IF you deign t keep me by your side in the path of danger and daring, if you allow me to share the great duties of your life, then you will know my true self." என்று சொல்லி, 'இதை அவள் வார்த்தைகளில் சொல்லவில்லை. அதைப் போகப் போக அவள் கண்களில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்கிறார். தன் தந்தையின் மரணத்தின் போது சிறையில் இருந்து வந்த நேரு கமலாவையும் குடும்பத்தையும் சந்தித்தார். பின்னர் இலங்கைக்குக் குடும்பச் சுற்றுலா சென்ற போது இருவருக்கும் ஓர் புரிதல் மலர்ந்தது என்கிறார். நேரு தன்னைச் சிக்கலான மனிதர் என்றும் அதுவே கமலாவை அச்சுறுத்தியது என்றும் ஒப்புக் கொள்கிறார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் கமலாவுக்கு நேரு பெர்ல் பக் எழுதிய நாவலைப் படித்துக் காண்பித்தார். மனைவி, மகள், தங்கை, காதலிகள் என்று யாராயிருந்தாலும் அவர்களோடு புத்தகங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவர்களுக்குப் புத்தகங்களை அறிமுகப் படுத்துவதும் நேருவின் பழக்கம். இதெல்லாம் அக்காலத்தில் மட்டுமல்ல சமீபத்திய இந்தியாவிலும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நேரு இந்திரா காந்திக்காகச் சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்புகளில் முக்கியமானது 'Glimpses of World History'. அது ஒரு அற்புதமான கல்வி. நேரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஒரு தந்தையாக நேரில் இருந்து அறிவு புகட்ட முடியாத நிலையில் கடிதங்களைக் கொண்டு ஒரு தந்தையாக அல்ல ஒரு சிநேக பாவமுள்ள ஆசிரியனாக எழுதினார். அவர் கடிதங்களில் எவ்விதமான போதனா தொனியும் இருக்காது, எங்கே இளகி நுண்ணுணர்வோடு எழுத வேண்டுமோ அங்கெல்லாம் வரலாறு எப்படி முரன்களும் தெளிவின்மையும் உடையதென்பதை விளக்கியிருப்பார்.

கிருஷ்ணா ராஜா ஹுதீசிங் நேருவின் தங்கை. நேருவுக்கும் அவர் தங்கைக்கும் கிட்டத்தட்ட 18 வருட இடைவெளி. ஆங்கிலேய ஆட்சியில் 9 வருடங்கள் சிறையில் கழித்த நேரு சிறையில் இருந்து புத்தக்க்கள் படிப்பது, எழுதுவது, கடிதங்கள் எழுதுவது என்று பழக்கம் வைத்திருந்தார். கிருஷ்ணாவுக்கு நேரு எழுதிய கடிதங்களை அவர் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். இது அதிகம் அறியப்படாதத் தொகுதி. இத்தொகுதியைச் சமீபத்தில் படித்த போது நேரு எப்போதும் ஆச்சர்யம் அளித்தார்.

தந்தை இறந்த பின் அவர் சொத்துகளுக்குச் சட்டப்படித் தான் மட்டுமே வாரிசாக இருந்தாலும் 'உனக்கும் அதில் உரிமை உண்டு' என்று எழுதுகிறார். தொகுதியின் முதல் கடிதத்திலேயே 23 வயது தங்கையைப் புத்தகக் கடைக்குப் போகச் சொல்லி தன் பரிசாகப் பழங்கால வரலாறு, இடைக்கால வரலாறு பற்றிப் புத்தகம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். பின் தனக்குப் பிடித்த தலைப்புகள் இருந்தால் அதை வாங்கி அனுப்பச் சொல்கிறார். கூடவே தந்தை படித்துக் கொண்டிதுக்கும் கரிபால்டி பற்றிய புத்தகத்தை (வ.வே.சு ஐயர் பாரதியின் 'இந்தியா' பத்திரிக்கையில் கரிபால்டி பற்றி எழுதி இருக்கிறார் என்பதை நினைவு கூர்கிறேன்) அவர் படித்து முடித்து விட்டால் அனுப்பும் படியும் அப்படி முடிக்கவில்லையென்றால் தனக்கு இன்னொரு பிரதியை வாங்கி அனுப்பும்படியும் சொல்கிறார்.

இன்னொரு கடிதத்தில் கிருஷ்ணாவுக்கு நீண்டதொரு புத்தகப் பட்டியலை அனுப்பிக் குறிப்பாகச் சமஸ்கிருதத்தில் காளிதாசனின் மேகதூதத்தைக் கேட்கிறார் நேரு. நான்கு மாதங்கள் கழித்து எழுதும் கடிதத்தில் சென்னையில் சுவராமமூர்த்தி எழுதி மயிலை சமஸ்கிருத அகாதமி வெளியிட்ட 'Sculpture inspired by Kalidasa' புத்தகத்தைக் கேட்கிறார்.

வேறொரு கடிதத்தில், இதுவும் சிறையில் இருந்து தான், பௌத்தத்திற்கு முந்தைய இந்தியா பற்றிய புத்தகத்துக்கு நன்றி கூறி கே.எம்.முன்ஷியின் வரலாற்றுப் புத்தகம் ஒன்றின் தலைப்பு அலங்கார வார்த்தைகளுடையதென்றும் வரலாற்றெழுத்தில் அவை பொருந்தாது என்று கூறிச் சற்று நக்கலாக "முன்ஷிக்கு அலங்கார மொழியைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது அது சில சமயம் நன்றாக இருக்கிறது சில சமயங்களில் அர்த்தமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக அவரது சொற்பொழிவுகளைச் சொல்கிறேன். அவை எங்களுக்குச் சற்றே நகைப்பைத் தரும் வகை. ஒரு வேளை எழுதும் போது கட்டுப்பாட்டோடு எழுதுவார் போலும்".

நேருவால் பெண்களைச் சக மனித ஜீவனாகப் பார்த்துப் பழக முடிந்தது. மனைவி, காதலி, மகள் என்று யாராயிருந்தாலும் அவர்களோடு என்ன வகையான உறவை கொண்டிருந்தாலும் அவர்களோடு அறிவுத் தளத்திலும் அவர்களை மதித்து உறவாடினார்.

நேருவின் படுக்கையறை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர் பெண்களோடு எப்படிப் பண்போடும், அந்த உறவுகள் இலக்கணத்தை மீறிய போதும், இருந்தார் என்பதைக் கற்றுக் கொண்டால் நாம் சந்திக்கும் பெண்கள் சந்தோஷப் பட வாய்ப்புண்டு.

'காந்தியின் காமம்':

காந்தி பெண்களோடு கொண்டிருந்த உறவு சிக்கலானது என்று சொல்வது ஒரு 'understatement'. தான் குளிக்கும் போதும் சுஷீலா நாயரும் குளிக்கலாம் என்று சொல்லிப் பின்னர் அப்படிச் சுஷீலா குளிக்கும் போது தான் கண்களை மூடிக் கொள்வதால் சுஷீலா நிர்வாணமாகக் குளிக்கிறாரா இல்லை உள்ளாடையோடு குளிக்கிறாரா என்று தெரியவில்லையென்றாலும் ஓசையை வைத்துச் சுஷீலா சோப் உபயோகிப்பதாகத் தெரிகிறது என்றார்.

'காந்தியின் காமம்' என்ற தலைப்பில் ஜெயமோகன் மிக விரிவாகக் காந்தியின் பிரம்மச்சரிய விரதம், சோதனைகள் குறித்து எழுதி இருக்கிறார். நீளம் கருதி அதைப் பற்றித் தனியாக இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.


References:

1. Alex Von Tunzelman's interview http://www.outlookindia.com/magazine/story/nehru-was-generally-happy-to-be-among-either-mountains-or-interesting-women/292519
2. Mallika Sarabhai and Nehru http://www.livemint.com/Leisure/NrXSXRMjG5dXxdASSvd5AI/Family-matters.html
3. Outlook Article on Shraddha Mata http://www.outlookindia.com/magazine/story/if-i-werent-a-sanyasin-he-would-have-married-me/223036
4. Hindu article on Homai Vyarawalla http://www.thehindu.com/opinion/op-ed/Farewell-Homai-Vyarawalla/article13376991.ece
5. Nehru: The Making of India -- M.J. Akbar
6. Indira Gandhi - Pupul Jayakar
7. Nehru's :etters to his Sister -- Krishna Nehru Hutheesingh
8. Discovery of India - Nehru
9. Autobiography, 'Towards Freedom' -- Nehru
10. India wins freedom -- Abul Kalam Azad
11. Mridula Sarabhai: Rebel with a cause.
















6 comments:

poornam said...

இந்த தேசத்தை மிகவும் நேசித்த ஒருவராகத் தம்மை நினைவுகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் நேரு. அதற்கும் மேல் மனிதர், சக மனிதர்களை நேசித்த மனிதர். அவரது "குறைகளே (கிசுகிசுக்கள்)" அவரை மனதுக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன. காந்தி மஹாத்மாவாக இருக்கலாம். நேரு வெறும் ஆத்மாவாக இருப்பதாலேயே நமக்கு அணுக்கமாகிறார். (எனக்கு எப்போதுமே காந்தியைவிட நேருதான் ஒருபடி உயர்வு) அந்த அணுக்கத்தை உணர ஒரே நிபந்தனை, அவரை அணுகும் மனது திறந்ததாக, எல்லைகள் கடந்த மானுடத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். அவரது காதல்கள் அவரது பலவீனமல்ல. இந்துத்துவ ஒழுக்கவாதிகளிடம் கண்டிப்பாக இதுபற்றிய புரிதலை எதிர்பார்க்க முடியாது. அவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத உயரத்தில் இருப்பதே அவரது மகத்துவம். I LOVE THIS POST. Thank you Mr AK.

விஜி ஸ்ரீரங்கம் said...

அருமையான பதிவு

Unknown said...

Dear Sir,

Thanks for such a long article with many research it.

Please publish articles in tamil. So that it is easy for person like me to read and understand.

Reading ur blogs for above 3 years and ur writing encourages me. Though i cann't accept all ur ideas, it gave me alternate vision in approach.

Take care.

Regards,
Ravi.L

Raj Chandra said...

>>நேரு-எட்வினா உறவு மௌண்ட்பேட்டன் இறந்த பிறகும் தொடர்ந்ததைச் சுட்டுகிறார்
- May need a correction here. Edwina passed away in 1960. I think you meant "Nehru-Mountbatten friendship continued even after Edwina's death"?

Unknown said...

Nice.did you see"The Maker of Modern India" in yesterday's Business India? by Uday Balakrishnan.

Unknown said...

Nice.did you see"The Maker of Modern India" in yesterday's Business India? by Uday Balakrishnan.