Thursday, August 9, 2018

கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.

கருணாநிதி என்கிற சகாப்தம் முடிந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மற்றும் இந்திய அரசியலிலும் ஓர் பெரும் சக்தியாக விளங்கியவர் மறைந்துவிட்டார். 94 வயது வரை வாழ்ந்து ஓர் யுகத்தின் அடையாளமாக இருந்தவர் ஓய்ந்துவிட்டார். ஆம் அவர் ஒரு வரலாறு தான். ஆனால் வரலாற்றின் சிக்கலே அவர் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் அவரின் ஏற்றத் தாழ்வுகளும் தான். கடந்த ஒரு வார காலமாகத் திகட்டத் திகட்ட அவரைப் புனிதராக்கி விட்டார்கள். வாசகர்கள் பயப்பட வேண்டாம் நான் ஒன்றும் அவர் வாழ்வின் ஓவ்வொரு தருணத்தையும் பிரித்து மேய்ந்து வரலாறு எழுதப் போவதில்லை. 2016 மாநிலத் தேர்தலுக்கு முன் எழுதிய பதிவு மிக விரிவானது (சுட்டி கட்டுரையின் முடிவிலுள்ளது) . ஆனால் சில உண்மைகளை மீண்டும் சொல்ல வேண்டும். இந்த மரணம் உறுதிப் படுத்திய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும்.

நல்லவை:


முதலில் நல்லவை சில. கருணாநிதி ஊக்கத்தோடு செயல்பட்டிருந்தால் இப்படி நடக்கவிட்டிருப்பாரா என்று எண்ணிய சமீபத்திய தருணம் வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையின் போது. வைரமுத்து கிட்டத்தட்ட அநாதையாகியிருந்தார் அவரை மிக மிகக் கீழ்த்தரமாக எட்டுத் திக்கிலிருந்தும் பிராமணர்கள் தாக்கினார்கள். சிவாஜியை மரணத்துக்குத் தள்ளியது ஜெயலலிதா அவர் குடும்பத்தைப் படுத்திய பாடு. சிவாஜி இறந்த போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. இரங்கல் தெரிவிக்க வந்தவர் சிவாஜியை உடலைப் பார்த்து அழுது "போறதுன்னு முடிவாயிடுச்சுன்னா நான் ஆட்சியில் இருக்கும் போது போயிருக்கலாமே" என்றார். ஆம், அவர் ஆட்சியில் இருக்கும் போது சிவாஜி இறந்திருந்தால் அரசு மரியாதையே செய்திருப்பார். சிவாஜிக்கு கொடுத்து வைக்கவில்லை.

கருணாநிதியின் உழைப்பு அசாத்தியமானது. கடவுளோ இயற்கையோ எதுவோ அவருக்கு நீண்ட ஆயுளையும் கிட்டத்தட்ட இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரையிலாவது நல்ல செயல்பாட்டுடன் இருக்கும் அறிவுத் திறன் இருந்தது. அவரின் நினைவாற்றல், கூர்மையான சாதுர்யம், அரசியல் சதுரங்க ஆட்டம், நிர்வாகத் திறன், போராட்ட குணம், தோல்விக் கண்டு துவளாமை என்று எந்தச் சராசரி மனிதனும் வியக்கும் குண நலன்கள் உண்டு அவரிடம். எங்கோ ஒரு கிராமத்தில் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கானோர், அதுவும் பல தலைமுறைகள், கண்ணீர் சிந்த வாழ்க்கைப் பயணம் முடிவடைவது மாபெரும் சாதனை.

ஏன் இந்தப் பதிவு:


ஒரு மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் பயணத்தை நேர்மையோடு தொகுத்துப் பார்க்கத் தூண்டும் நேரம். தமிழ் நாட்டிலோ மரணம் என்பது புனிதர்களை உருவாக்கும் தருணங்களாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த போது "இரும்பு மனுஷி இறந்தார்" என்று அலறினப் பத்திரிக்கையெல்லாம். இன்று அதே பத்திரிக்கைகள் வேறு விதமாகக் கூவுகின்றன. ஜெயலலிதா பற்றி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன் அவரின் நல்லவை, அல்லவைகளைப் பட்டியலிட்டு. அது அவர் 2014-இல் கைதானப் போது எழுதியது. அவர் இறந்த போது இப்படிப் பிரத்தியேகமாக எழுதத் தோன்றவில்லை. அதற்கான காரணம் இணையத்தில் திமுகவுக்கு இருப்பது போல் அதிமுகவுக்குக் கம்பு சுத்த அவ்வளவாக யாருமில்லை, மேலும் ஜெயலலிதாவை யாரும் இன்று கருணாநிதியைப் புனிதராக்குவது போல் ஆக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது அவர் மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருந்தது எல்லோர் மனத்திலும் எழுத்திலும் தெரிந்தது. இன்று அப்படியல்ல. அதற்கு மேலாக ஜெயலலிதா இறந்த போது பார்க்காத சில அவலங்களை இப்போது பார்க்க நேர்கிறது ஆகவே எழுதுகிறேன்.

ஒரு விளக்கம்


மேலும் படிப்பதற்கு முன் ஒரு விளக்கம். சிலர் நினைப்பது போல் கருணாநிதி 'மருத்துவர் பிள்ளைகள் மருத்துவர் ஆகக் கூடாது' என்ற பிரகடனத்தோடு கொண்டு வந்த பட்டம் பெறாத பெற்றோறின் பிள்ளைகளுக்கு மொத்த மதிப்பெண்ணோடு 5 மதிப்பெண் இலவசம் என்ற மோசடித் திட்டத்தால் பாதிக்கப்பட்டதால் அவர் மீது வன்மமெல்லாம் இல்லை. இன்று நான் சுபிட்சமாகவே இருக்கிறேன். கனவுக் காணும் உரிமைகளற்ற முன்னேறிய வகுப்பினன் என்பதால் +2 படிக்கும் போதே மருத்துவமோ பொறியியலோ எது கிடைக்கிறதோ அதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தது. ஆகா "நீ சமூக நீதிக்கு எதிரானவன்" என்று யாரும் மூக்கை சிந்த வேண்டாம். சமூக நீதிப் போராளிகளில் எத்தனை பேர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை பயனாளர்கள், எத்தனை பேர் போலி சான்றிதழளாளர்கள் என்பது ஊரறியும். 1996-இல் கருணாநிதி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் இல்லை. நானும் ஒருவன். கல்லூரி மேடைகளில் அக்காலத்தில் ஜெயலலிதாவை விமர்சித்தே தான் பேசியிருக்கிறேன். 2001-லும் திமுகவே ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினேன் ஏனென்றால் தர்மபுரி பஸ் எரிப்பெல்லாம் பார்த்ததால். நம்ப முடியாதவர்கள் நம்பத் தேவையில்லை. சரி அந்த 5-மார்க் விவகாரம் தான் காரணம் என்றாலும் என் விமர்சனம் பொய்யாகிவிடுமா? நான் வைக்கும் தர்க்கங்களை முறிக்க என் உந்துதல் பற்றிய ஆராய்ச்சித் தேவையில்லாதது முடிந்தால் உங்கள் பக்கத்துத் தர்க்கங்களை முன் வையுங்கள், தர்க்க ரீதியாக.

தரம் தாழ்ந்த 'தி இந்து' பத்திரிக்கை: 


'தி இந்து' பத்திரிக்கை குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் கூறுகிறார், "இந்தியர்கள் நடத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளி 'தி இந்து' அளவுக்குச் சிறப்பானது வேறில்லை. அப்பத்திரிக்கை வரம்பு மீறிய குறும்பான சொல் ஒன்றைக் கேட்டால் முகம் சுளிக்கும் கண்டிப்பான ஒழுக்கமுடைய மூதாட்டியைப் போன்று எனக்குத் தோன்றும். அது வாழ்வில் மேட்டுக்குடிகளுக்கானது. ஏற்றத் தாழ்வுகள் ஊடைய வாழ்வின் நிழற்பக்கங்கள் அதுக்கு ஒவ்வாதது. வேறு பத்திரிக்கைகளும் இந்த ஒழுக்கமான மூதாட்டி மனநிலையோடு செயல்படுகின்றன ஆனால் அவை 'தி இந்து' போல் சிறப்பாக இல்லை" (roughly translated).

கருணாநிதிக்கும் இந்துப் பத்திரிக்கைக்கும், இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களுக்கும், என்றும் ஓரு அன்பும்-கடிதலும் மாறி மாறி வரும் உறவுண்டு. அவருக்குப் பிடிக்காதது அல்லது அவரை விமர்சித்தால் இந்துப் பத்திரிக்கையை 'மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு' என்பார். அவரைப் பாராட்டி இந்துப் பத்திரிக்கை தலையங்கம் தீட்டினால் 'உடன் பிறப்பே இந்துப் பத்திரிக்கையே சொல்கிறது' என்று புளங்காகிதம் அடைவார். அவர் மகள் கனிமொழி ஒரு காலத்தில் இந்துவில் தான் பணியாற்றினார். என்.ராம் அடிக்கடி திமுக மேடைகளில் தோன்றுவார். 'இந்து' பத்திரிக்கை கருணாநிதியை விட ஜெயாவோடு தான் அதிகம் மோதியது.

கருணாநிதி இறந்தவுடன் முரசொலியோடு போட்டிப் போட்டது 'தி இந்து'. 'தமிழ் தி இந்து' சமஸ் புண்ணியத்தில் எப்போதோ முரசொலியை விஞ்சிவிட்டது. மொரார்ஜி, இந்திரா ஆகியோரை சமாளித்த கருணாநிதி என்றொரு கட்டுரை. கர்மம். மிகச் சாதாரணச் சொல்லாடல்களை என்னமோ சாக்ரடீஸ் ரேஞ்சுக்குக் கொண்டாடியிருந்தது. சரி அது தான் தொலயட்டும் என்றால் கருணாநிதி 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக' என்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த அந்தர் பல்டியை அது கேவலமான அரசியல் பிழைப்புவாதம் என்ற விமர்சனம் இல்லாமலே கடந்து சென்றது. ஆனால் அதையெல்லாம் விஞ்சியது ஒரு நிகழ்வைப் பற்றிய நினைவுக் கூறல்.

எமெர்ஜன்ஸி காலத்தின் போது சிறைப்பட்ட திமுகவினர் வீடுகளுக்கு ரூ.200 அனுப்பி வைத்தாராம் மாதா மாதம். பிற்காலத்தில் ஏதோ ஒரு விழாவில் ஆபாச நாராச பேச்சுகளுக்குப் பெயர் போன வெற்றிக் கொண்டான் "என் வீட்டுக்கு மட்டும் ரூ.100 தான் வந்தது என்று என் மனைவி சொன்னாள்" என்றாராம். அடுத்துப் பேசிய முத்தமிழ் அறிஞர் "அதற்குக் காரணம் உன் இரண்டாவது மனைவிக்கு அடுத்தப் பாதி ரூ.100 அனுப்பப்பட்டது. இரண்டு பெண்டாட்டி கஷ்டம் எனக்குத் தெரியும்" என்றாராம். இந்த அசிங்க கர்மத்தை 'தி இந்து' வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறது. இதுக்குப் பேசாமல் பத்திரிக்கையை மூடி விட்டு 'வண்ணத் திரை' நடத்தலாம்.

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி வாழ்நாள் போராளி என்றும் கடைசிக் காலத்தில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர் என்றும் ஒரு கட்டுரைச் சொன்னது. கருணாநிதியைப் பொறுத்தவரை பல விஷயங்கள் 'பொய்யாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போனதுவே தான்'. தமிழ் மொழி, இலங்கைப் பிரச்சினை எல்லாமே ஆரம்பத்தில் கொள்கை, சித்தாந்தம் என்று தான் ஆரம்பிக்கும் அப்புறம் பாதி வழிக்கு மேல் அது வெறும் பிழைப்புவாதமாகி இருக்கும். 1980-களில் இலங்கைப் பர்ச்சினை அவருக்கு அரசியல் சித்து விளையாட்டுக்குத் தான் பயன் பட்டது. அதற்கு மகுடம் வைத்தது அந்த 2009 உண்ணாவிரதம் என்கிற கூத்து. நடப்பதோ இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் போர். இவரோ மாநில அரசியல் தலைவர். இவர் உண்ணாவிரதம் இருந்தாராம், மத்திய அரசு இலங்கையோடு பேசியதாம், போர் நிறுத்தம் ஏற்பட்டதாம், இவர் உண்ணாவிரதத்தைக் கலைத்தாராம். இதை விட அத்தைக்கு மீசை முளைத்தது பார் என்று சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் உடன் பிறப்புகள் விடலைத்தனமாக நரம்பு புடைக்கச் சொல்லலாம் ஒரு பத்திரிக்கை அதைச் செய்யலாமா?

கருணாநிதியின் தமிழ் சினிமா வசனத்தின் வசீகரம் போல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் வேறொன்றுமில்லை. 'மனோகரா' தர்பார் வசனத்தைப் பேப்பரில் எழுதிப் படித்துப் பாருங்கள். வெறும் குப்பை. 'உன் குடலை உருவிடுவேன். உன் எலும்ப நொறுக்கிடுவேன், எங்க ஆத்தா மேல சத்தியம், அந்த அவுசாரிய என்ன பன்றேன் பாரு' இது தான் அந்த நெடிய வசனத்தின் சாரம். குப்பை. இவர் 'நான் தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பார். கண்ணதாசன், 'தென்றலை நாம் தீண்ட முடியாது அதுவாக நம்மைத் தீண்டினால் தான் உண்டு' என்று கிண்டலோடு திருத்துவார். சும்மாவாச்சும் 'விதவை என்று எழுதினால் கூடப் பொட்டு வைக்க முடிவதில்லையே' என்று யாரோ புலம்ப இவர் 'விதவை என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகக் கைம்பெண் என்ற தமிழ் சொல் பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்' என்று சொன்னதை இன்னமும் கண்ணீர் மல்க உடன் பிறப்புகள் குறிப்பிடுவார்கள். கர்மம். இது தான் நம்மவர்களுக்குத் தமிழ்ப் புலமை.

வெள்ளித் திரைக்குத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு சென்றாராம். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கண்ணாம்பா உருகிப் பேசும் வசனம் மடமையும் மூட நம்பிக்கையும் போட்டிப் போடும் வசனம். சிலப்பதிகாரத்தைக் கிட்டத்தட்ட மதமாகவே மாற்றினார் கருணாநிதி. அதுவோ அவர் பார்வையில் சொன்னால் மூட நம்பிக்கைகள் கொண்ட சமணக் காவியம். அதை எதிர்த்திருக்க வேண்டியவரே அவர் தான்.

இன்னொரு கட்டுரை கருணாநிதி நடத்திய 2010-ஆம் ஆண்டுச் செம்மொழி மாநாட்டை ஆகா ஓகோவென்று புகழ்கிறது. அது வெறும் தண்டம். மக்கள் வரிப்பணத்தைத் தற்பெருமைக்காக வாரியிறைத்தார் தன் வாழ் நாளெல்லாம் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தியவர். அதே நாட்களில் நான் தஞ்சையில் இருந்தேன். எம்ஜியார் கட்டினார் என்பதற்காகவே தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தைச் சீரழிய விட்டிருந்தார் இந்தத் தமிழ்ப் போராளி. பல்கலைக் கழகம் சிதிலமடைந்திருந்தது அப்போது. அதெல்லாம் மவுண்ட் ரோடில் உட்கார்ந்து கொண்டு காலாட்டிய படியே கட்டுரை எழுதும் ராமகிருஷ்ணன்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி தான் பயின்றனர் அதுவும் நகரின் விலையுயர்ந்தப் பள்ளிகளில்.

ஜெயகாந்தன் முன்பு அண்ணாதுரை பற்றிப் பேசியது:

"பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"

அது இன்றும் கருணாநிதிக்கும் பொருந்தும். கலைஞர் விருதை பின்னாளில் கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் மேற்சொன்ன எதையும் பின் வாங்கவில்லை. கருணாநிதி கொடுத்தார் ஜெயகாந்தன் வாங்கிக் கொண்டார். அவ்வளவு தான்.

'தி இந்து' பத்திரிக்கை ஆசிரியர் திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

கருணாநிதியின் கவித் திறனும் ஆபாச மனமும்: 


கருணாநிதிக்கு இல்லாதது கவித் திறன். அபாரமாக இருப்பதோ இரட்டை அர்த்தம், இல்லையில்லை அதெல்லாம் விடலைகள் செய்வது, நேரடியாக ஆபாசமாகப் பேசுவது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் அவர் படிக்கும் கவிதை ஒன்றை ஒரு தற்குறி இன்று ஒரு பேட்டியில் பெருமைப் பொங்க குறிப்பிட்டார். மேற்கொண்டு படிப்போருக்கு ஓர் எச்சரிக்கை இது சரோஜா தேவி வகை. கருணாநிதி விவகாரமாச்சே.

கவிதையை, அப்படித்தான் அதைச் சொல்கிறார்கள், கேட்டால் எம்ஜியார் காலத்தில் ஏதோவொரு இடைத் தேர்தலில் தோற்றப் பிறகு நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் படித்தது, தோற்றவர்கள் ஏன் விழா எடுக்கிறார்கள் என்று யாரோ கிண்டல் செய்திருக்கிறார்கள் அதற்குப் பதில் சொல்லும் விதமாகக் கவிதை என்ற பெயரில் ஒன்றை படிக்கிறார் முத்தமிழ் ஆசான்.

பின்னாளில் இவரும் இவர் மகனும் கட்டவிழ்த்துவிட்ட 'திருமங்கலம் பார்முலா' எம்ஜியார் காலத்து இடைத் தேர்தல் தில்லுமுல்லுவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டாக்கியது. அந்தக் கவிதையில் எம்ஜியார் என்னமோ தில்லாலங்கடிச் செய்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எம்ஜியாரின் பெயரான ராமச்சந்திரனை சிலேடையாக்கி ராமனின் வாலி வதத்தோடு முடிச்சுப் போட்டிருப்பார். என்ன செய்வது நம்மவர் தரத்துக்கு அது தான் சிலேடை. அதற்குப் பின் தான் கச்சேரி களைக் கட்டும். இப்படித் தோல்வியுற்றப் பின் ஏன் விழா எடுக்கும் மனோபாவம் என்பதற்கு விவரிக்கத் தொடங்குகிறார், "படுக்கையில் இருந்தேன், அப்போது பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டு, வெட்கமது சிறிதுமில்லாமல், என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவிக் கொண்டாள்". அப்போது திமுக விடலைகளின் சீட்டி சத்தமும் கரவொலியும் காதைப் பிளக்கிறது. மேலும், "அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும், தள்ளிவிட மனமில்லை, தழுவட்டும் என்றிருந்தேன், அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்". அரங்கம் அதிர்கிறது இப்போது. அநேகமாகப் பல உடன் பிறப்புகள் உச்சம் எய்தியிருப்பார்கள். "என்ன இது இரு மங்கை ஒரு படுக்கை எனக் கேட்பீர், பொறுத்திடுக". கூட்டம் கெக்கலிக்கிறது. "முதலில் வந்தவள் பெயர் தூக்கம், மற்றொருத்தி கனவு மங்கை". ஆஹா இதல்லவோ தமிழ்ப் புலமை. இவனல்லவோ நமக்கு வாய்த்திட்ட 20-ஆம் நூற்றாண்டு கவிச் சக்கரவர்த்தி என்கிறார்கள். அற்பர் கூட்டம். மூடர் கூடம்.

ஒரு வசன வரியை ஒரு முறைக்கு இரு முறை ஒவ்வொரு வரியையும் படித்தால் அதுவே அதைக் கவிதையாக்கிவிடும் என்று எந்தச் சண்டாளனோ அவரிடம் சொல்லிவிட்டான். ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை படிக்கிறார். ஒரு வேளை திமுகத் தற்குறிகளுக்குச் சரோஜா தேவி மேட்டர் என்றாலும் இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று நினைத்தாரோ அந்தப் புண்ணியவான்?

இன்னொரு காணொளி இருக்கிறது. சுந்தர்.சி படத்தைப் பார்த்துவிட்டுப் பேசுவது. 80-களில் இளமைத் துள்ள வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் ஒருவரின் வயோதிக-வாலிப பேச்சு. அப்போது அவர் முதல்வர். இவர் மட்டும் முழு நேர எழுத்தாளராகியிருந்தால் சரோஜா தேவி என்ற அந்தப் புனைப் பெயர் இவருடையதோ என்று எண்ணும் அளவுக்குக் காத்திரமான படைப்புகள் வந்திருக்கும்.

பகுத்தறிவு மாய்மாலம்:


ஒருவர் எழுதுகிறார் கலைஞரை இந்து மத ஆச்சாரங்கள் எதையும் செய்யாமல் நாத்திகராகவே அனுப்பி வைத்தார்களாம். அந்த அம்மணிக்குத் தெரியாது இறந்த ஒருவருக்கு பூ வைத்து அவரை நோக்கித் தொழுவது நாத்திகம் இல்லை. 'பிணத்தினைப் போற்றேல்' என்கிறான் நம் ஆசான் பாரதி. உடன் பிறப்புகள் 'எழுந்து வா' என்று கூக்குரலிட்டார்களாம் அவர் ஆயுள் நீண்டதாம். இது தான் பகுத்தறிவு மாய்மாலம் என்பது. பகுத்தறிவு என்பது மரணத்தின் நிச்சயம் உணர்வது. அதுவும் 94-வயது முதியவர் இறக்கலாம் எனும் போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது பகுத்தறிவு அல்ல. கருணாநிதி நல்ல ஆத்திகர். அவர் கடவுள்கள் ஈ.வெ.ராவும் அண்ணாதுரையும்.

வெறுப்பரசியல்: 


கருணாநிதியை மெரினா கடற்கரையில் புதைப்பதில் சிக்கல். மாநில செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பிராமணப் பெண், அங்கே புதைக்க அனுமதிப்பு சட்ட சிக்கல்கள் நிறைந்தது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அவ்வளவு தான் இணையம் தகித்தது. அவருக்கு நகரின் மையத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லப்பட்டது. 'கக்கூஸ்' என்ற ஆவணப் படம் எடுத்து அதனாலேயே தனக்குப் பின் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் திவ்யா பாரதி என்பவர், "நிங்க ஒதுக்கறதா சொன்ன அந்த இரண்டு ஏக்கர் நிலத்துல எடப்பாடிக்கும் கிரிஜாவுக்கும் வேணும்னா சமாதி கட்டி விளையாடுங்க" என்று எழுதினார். அதற்குப் பின்னூட்டத்தில் வந்தவற்றுள் ஒன்று, "கழுகளுக்குப் பசியாற கொடுக்கலாம்". இங்கே இந்தத் திரியில் வந்து பதவிசாக இப்படியெல்லாம் எழுத வேண்டாமே என்று வருடிக் கொடுத்த நாச்சியாள் சுகந்தி என்பவரின் பேஸ்புக் பக்கமும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது.

யமுனா ராஜேந்திரன் என்றொருவர் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகளைத் தவிர எல்லோரும் ஒன்று திரண்டு விட்டார்களாம் கலைஞரின் பின்னால் என்றார். அப்புறம் என்ன தலைமுடிக்கு அந்தக் கட்சி தொடர்ந்து மூன்று தேர்தலில் தோற்றது? இதை மறு பகிர்வு செய்த ஜெயகாந்தனின் பெண் 'Spot the Hyenas' என்கிறார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ.

எல்லோரும் தத்தம் புகைப்படம் எல்லாம் போட்டு இதையெல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். இன்னொரு பத்திரிக்கையாளர், பிரண்ட்லைனில் வேலைச் செய்பவர், குருமூர்த்தியை ஒரு துளி விஷம் என்றார். சரி அவர் ஒரு துளியென்றால் அவரால் விஷமாக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்படும் பால் குடம் என்ன பிராமணர்கள் அனைவருமா? அப்படியென்றால் அவர்களை அவர் என்ன செய்வதாக உத்தேசம்? கொலைக் களனா? பிராமணர்களில் சிலராவது கருணாநிதியை நாராசமாகப் பேசியிருக்கிறார்களா? நிச்சயமாக. ஆனால் நான் பார்த்த வரை யாரும் கருணாநிதி ஒரு துளி விஷம் என்று சொல்லி அவர் சார்ந்த ஜாதியினரை ஒட்டு மொத்தமாக விஷம் என்று உருவகிக்கவில்லை.

தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டுமே ஜாதி வெறியர்களாகவும் ஆண்டப் பெருமை பேசுபவர்களாகவும் இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் ஜாதியற்ற சமூகமாகியிருக்கும். ஆனால் கீழ் வெண்மணி முதல் தர்மபுரி வரை நிதர்சனமும் உண்மையும் வேறு.

உண்மையிலேயே எந்தக் கூச்சமோ அருவருப்போ இல்லாமல் பிராமணர்களை ஆபாசமாக வசைப் பாடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாகத் தமிழில் எழுதப் பட்ட பேஸ்புக் குறிப்புகளைத் தொகுத்து அயலான் ஒருவன் ஆராய்ந்தால் தமிழ் நாடு உலகின் மிகப் பெரிய மன நோய் விடுதி என்றும் நாஜி ஜெர்மனி போன்றது என்றும் நினைப்பான். ஐயா வாசகரே, பிராமண வாசகர்களையும் சேர்த்தே சொல்கிறேன், நான் ஒன்றும் பிராமணர்கள் யூதர்கள் என்றோ அவர்களைப் போல் ஒடுக்கப் பட்டார்கள் என்றோ சொல்லவில்லை. இங்கு நான் சொல்வது புழங்கும் வெறுப்பைத் தான்.

சக மனிதன் தன்னைத் தொடக் கூடாது என்று ஒருவன் நினைக்கக் கூடாது அப்படி நினைப்பதும் செய்வதும் வன்முறையே அது கேவலம் என்று நினைப்பவன் நான். அதே மாதிரி ஒருவனின் குலத்தை வைத்து "சமாதியில் போடு" என்பதும் கழுகு தின்னட்டும் என்பதும் மிருக நிலை. இப்படி வெளிப்படையாக ஒரு இனத்தை வெறுப்பதை அவர்களை இப்படிப் பேசுவதையும் பெருமையாக நினைக்கும் மன நோய் வேறெங்கும் இல்லை. இது தான் ஈ.வெ.ராவும், அண்ணாதுரையும், கருணாநிதியும் நெய்யூற்றி வளர்த்த வெறுப்பரசியல்.

பொது வெளியில் கருணாநிதியின் ஜாதியை எள்ளி நகையாடிப் பேசியது வைகோவும் காடுவெட்டி குருவும். பிராமணர்களல்ல. அதையெல்லாம் கண்டிக்கவோ சுட்டிக் காட்டவோ துப்பில்லாதவர்கள் தான் என்னமோ பிராமணக் குலமே ஒன்று திரண்டு கருணாநிதிக்கு எதிராக நிற்பதைப் போல் பிம்பம் உருவாக்குகிறார்கள். தமிழ் நாட்டில் ஒருவன் எத்தகைய கயவனாகவோ முட்டாளாகவோ மூர்க்கனாகவோ இருக்கலாம் ஆனால் அத்தனை பாவத்தையும் கழுவி புண்ணியம் தேடித் தரத்தக்க தாரக மந்திரம் 'பார்ப்பண எதிர்ப்பு'. இரண்டு வரியாவது 'பார்ப்பான்', 'பாப்பாத்தி' என்று எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் சமூக நீதி என்று முலாம் பூசி விற்று விடலாம்.

பிராமணர்கள் சத் புத்திரர்களா என்றால் நிச்சயமாக இல்லை. இன்று மோடிக்கு ஜால்ரா அடிக்காத இந்துத்துவத் தமிழ் பிராமணர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களுக்கு இரண்டு வரியாவது சிறு பான்மையினரை ஆபாசமாக எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் தேசியம் அல்லது பாரம்பர்யம் என்று முலாம் பூசி விற்று விடலாம். ஆனால் அதைக் கண்டிக்கும் உரிமை திராவிட இயக்க வெறுப்பு வியா

கழகக் கண்மணிகமள் "ஆகா நிலம் எங்கள் உரிமை. இறந்த பிறகும் என் தலைவன் போராட வேண்டியிருக்கிறதே" என்று ஆர்த்தெழுந்தார்கள். சோகமான உண்மை இதற்குச் சில தலித்துகளும், திருமாவளவன் உட்பட, இதில் சேர்ந்துக் கொண்டார்கள். ஐயா நியாயமாரே, அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம், பல நூறு கோடி பொறுமானுள்ளதை, அரசாங்கம் அளித்தது. நிலம் இங்குப் பிரச்சினையல்ல. பிரச்சனை எந்த இடம் என்பதில். புதைக்க இடமில்லாத ஒடுக்கப்பட்டவர்களையும் கருணாநிதியையும் ஒன்றாக்கி ஒடுக்கப்பட்டவர்களை அவமதிக்காதீர்கள்.

கருணாநிதியை திருமா சிறுது விமர்சித்தாலும் "எங்கள் தலைவர் திருமாவை சமமாக உட்கார வைத்துப் பேசியவர்" என்று உடன் பிறப்புகள் குத்தலாகச் சொல்லும் போதெல்லாம் சினம் கொள்வோர் கூட இரண்டு நாட்களாகக் கலைஞர் அப்படி, கலைஞர் இப்படி என்று உருகுகிறார்கள். அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்யப்பட்டாரே என்று மனம் வெதும்பியவர்கள் பெரியாரின் தலைமைப் புரோகிதருக்காக நெக்குரிகியது ஆச்சர்யம்.

கருணாநிதி நீண்ட நாள் வாழ்கிறார், அவர் எதிரிகள் பலரும் இறந்து கொண்டிருந்தார்கள் என்பதாலேயே உடன் பிறப்புகள் "அவர் எதிரிகளுக்கு அவர் இரங்கற்பா எழுதுவார்" என்று அருவருப்பாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட கேவலமான பேச்சுகள் வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. இது தான் திராவிட இயக்கத்தின் கலாசாரம். இன்று அவர் இல்லை ஆனால் அவரை விமர்சிப்பவர்களில் பலர் இருக்கிறார்கள்.

பெருந்தேவி என்பவர், கவிஞராம், பிராமணர் கூட, தன் பங்குக்கு எதையோ காட்டமாகக் கருணாநிதிக்கு ஆதரவாக எழுதியிருந்தார். இப்போது அவர் பேஸ்புக் பக்கமே இல்லை. போகன் சங்கர், அவரும் கவிஞர், இந்தியாவில் கேரளாவைத் தவிர வேறெங்குச் சென்றாலும் தமிழனாகப் பெருமையாக உணர்கிறாராம் அதற்குக் கலைஞரே காரணம் என்கிறார். ஐயா கவிஞர் கவிதாயினிகளே கடந்த 25 வருடங்களாகத் தமிழ் நாட்டை ஜெயாவும் கருணாவும் மாறி மாறித் தான் ஆண்டிருக்கிறார்கள். ஆகப் பெருமையைச் சரி பாதியாகப் பகிர்ந்துக் கொடுக்கவும். ஒரு வேளை இலக்கியவாதியாகி விட்டால் வரலாறு மறந்து விடுமோ? அல்லது வேறு ஏதும் கஷ்ட காலமோ என்ன எழவோ. 1947-67 20 வருட காங்கிரஸ் ஆட்சி. 1967-77 பத்து வருடம் திமுக. 1977-87 அதிமுக. அப்புறம் 25 வருடத்துக்கு ஒருவர் மாற்றி ஒருவர். இது தான் வரலாறு. பூனைக்குக் கண்ணாடி மாட்டினால் மட்டும் போதாது பூனை கண்ணையும் திறந்துப் பார்த்தால் தான் காட்சித் தெரியும்.

கீழிருக்கும் இந்தப் புகைப்படம் எப்போதும் என்னை உறுத்தும். முன்னர் எழுதிய பதிவில் இருந்து, "கருணாநிதி இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களிலேயே மிகவும் அருவருக்கத் தக்கது என்றால் நான் தயங்காமல் கீழிருக்கும் படத்தைச் சொல்வேன். கட்சிக்கு நிதி சேர்ப்பது எல்லோரும் செய்வது. பாவம் பல தொண்டர்கள் தங்களிடம் இருக்கும் கடைசிக் காசையும் கட்சி நிதிக்காகக் கரைத்த கதைகள் ஏராளம். அப்படிச் சேகரித்த பணத்தைக் கிரீடமாக்கி தலைவனுக்கு முடி சூட்டி அகமகிழ்ந்து இளித்துக் கொண்டு நிற்கும் இந்த அற்பர்களுக்குத் தெரியுமா இந்தச் சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்க என்ன விலைக் கொடுக்கப் பட்டதென்று? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா?" இந்த அற்பர்களின் கட்சியிலா ஜனநாயகம் வாழ்கிறது. ஜனநாயகம் என்பதைப் பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்"


                                              



முடிவுரை: 


கருணாநிதி ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும் அதன் தளகர்த்தராகவும் 50-ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார். அவ்வியக்கம் பற்றியோ அவரைப் பற்றியோ நேர்மையாகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் தீர்க்கமாகவும் கூற இன்று வரை ஒரு நல்ல நூல் இல்லை. தயவு செய்து யாரும் எனக்கு ஆர்.முத்துகுமாரின் நூலை பரிந்துரைக்க வேண்டாம்.

கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் பெரும் பாதிப்பாக நான் பார்ப்பது பொது வாழ்வில் கயமை, அரசியல் பிழைப்புக்காக எதையும் செய்வது, கலாசார அடிப்படைவாதம், பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள் தனங்கள். And a culture of mediocrity and crassness. எல்லாவற்றையும் விட அந்த மிக மிக அருவருப்பான வெறுப்பரசியல். என்னால் புரிந்துக் கொள்ளவே முடியாதது அது தான். இதில் துயரம் என்னவென்றால் 'பாப்பாத்திகளுக்குத் தான் பார்ப்பன வெறி அதிகம்" என்று எழுதி விட்டு பிராமண நண்பர்களோடு குலாவுவது. இந்த விஷயத்தில் எனக்கு அப்படிச் சொன்னவரின் பிராமண நண்பர்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே மாதிரி மிக மிக அருவருப்பாக எழுதும் இந்துத்துவர்களிடமும் பலர் பேஸ்புக்கிலும் நேரிலும் நட்பாகவே இருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது? இது என்ன மன நிலை? எனக்குப் புரியவில்லை.

கருணாநிதியை மெரினாவில் புதைக்க அனுமதி என்ற செய்தி கிடைத்தவுடன் உடைந்து அழும் மு.க.ஸ்டாலின் காட்சி உருக்கமானது. நான் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை ஆரம்பித்து 20 வருடமாகி விட்டது ஆயினும் அப்பா இறந்த பின் அவரைப் புதைத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் அங்கிருந்த வெறுமையும் புகைப்படத்தில் இருந்து சிரித்த அப்பாவும் மனத்தை வருத்தியது. இன்றும் அவருக்குப் பிடித்த ஏதேனும் பார்க்க நேர்ந்தால் கண நேரத்தில் நினைவு வந்து வெறுமையும் கூடவே வரும். கோபாலபுரத்தில் இத்தனை பல்லாண்டுகள் வளைய வந்த ஒருவர், அவர்கள் அனைவரின் வாழ்வின் அச்சாணி இன்று முதல் இல்லை. அவர் பிள்ளைகளுக்கு நிச்சயமாக இது வருத்தமான நாள் தான். அவர் தொண்டர்களுக்கும் அவரை ஏதோ ஒரு காரணத்துக்காக மாபெரும் ஆளுமையாகப் பார்ப்போருக்கும் இன்று இழப்பு தான்.

ஆனால், ஜெயகாந்தன் அண்ணாதுரையின் இரங்கலில் சொன்னதைப் போல், இறந்தவர் தனிப்பட்ட மனிதர் அல்லவே.

"ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது."  
              "இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது."





3 comments:

PV said...

ஜெயகாந்தன் முன்பு அண்ணாதுரை பற்றிப் பேசியது:

"பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"//

ஜயகாந்தனை இழுக்கவா அண்ணாத்துரை வாழ்ந்தார்? ஜயகாந்தனுக்குப் பிடிக்கவில்லையென்றால் குடிமுழுகிப்போய் விட்டதா அண்ணாவுக்கு? அண்ணாவின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பகுத்தறிவு வாதங்களை கண்டு களித்தோர் கோடானு கோடி அவர்களைப்பற்றியல்லவா பேசவேண்டும்? ஏதோ ஓர் எழுத்தாளர் - இவரின் நூலகள் மேற்தட்டு வாசகர்களுக்கு - இவர் சொல்லிவிட்டால் அஃதென்ன வேத மந்திரமா? Inexorabe gospel truth? ஜயகாந்தன் பேசினார் என்று எல்லாருக்கும் தெரியும். தி மு க வினருக்கும் தெரியும் எவருமே சட்டை செய்யவில்லை பேசியது வந்தது; போனது போலத்தான்.

//அது இன்றும் கருணாநிதிக்கும் பொருந்தும். கலைஞர் விருதை பின்னாளில் கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் மேற்சொன்ன எதையும் பின் வாங்கவில்லை. கருணாநிதி கொடுத்தார் ஜெயகாந்தன் வாங்கிக் கொண்டார். அவ்வளவு தான்.//

கருநாநிதி கொடுத்த போது ஜயகாந்தன் பேசி ஐம்பதாண்டுகளுக்குமேலாகிவிட்டன. முதலில் கருநாநிதி கேட்டாரா அப்பேச்சை வாபஸ் வாங்கு! அப்பதான் உனக்கு விருதென்று? மேலும் ஜயகாந்தன் மகனுக்கும் உதவியதாக கேள்வி. ஆக, இது கருநாநிதியின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது. ''அவர் கொடுத்தார்; இவர் வாங்கினாரெ''ன்று சுலபமாக போர்வைக்குக் கீழே தள்ளிவிடலாமா?

Anna died in 1969 and the speech was made in 1969 . Persons in public life (actors, politicians and writers) cannily construct their public personas and make life-long efforts to safeguard them. Jayakanthan crafted his own image of a maverick intellectual and writer of the avant garde themes, and he wanted to live up to it When sometimes the constructed persona gets overwhelmingly rankling, they commit suicide (as the machismo image brought guilt complex and led to suicide of Ernest Hemingway - but such cases are rare). He basked in the notoriety or glory of the image. They enjoy notoreity also as a bad publicity is worth than no publicity! Such persons, when they sense that the persona is in the stage of hibernation or out of public memory, lacking attention, make such things as speech in the grave yard denigrating the deceased. Jeyakanthan did a PR exercise for himself in the grave-yard speech! Alas it didn't succeed as it didn't attract anyone. People ignored it. His fame rests on his novels for the intellectual reading.. It's a pity you have fallen victim to the trap he laid.

By helping him, or conferring awards on him and offering other kinds of help, Karunanithi wanted to convey -m and you've failed to note - that he ignored his speech as a non-entity. Good behavior !!

வன்பாக்கம் விஜயராகவன் said...

Wholly agreeable assessment
"கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் பெரும் பாதிப்பாக நான் பார்ப்பது பொது வாழ்வில் கயமை, அரசியல் பிழைப்புக்காக எதையும் செய்வது, கலாசார அடிப்படைவாதம், பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள் தனங்கள். And a culture of mediocrity and crassness. எல்லாவற்றையும் விட அந்த மிக மிக அருவருப்பான வெறுப்பரசியல். என்னால் புரிந்துக் கொள்ளவே முடியாதது அது தான்".
Rise of Karunanidhi shows the positive and negative aspects of Indian democracy. Someone from a poor background rose to become one of the richest and influential man is a positive aspect of India. On the other side, this has been achieved by playing identity politics, encouraging a culture of political scapegoats (ie brahmins), using political power to enrich oneself and his family, instituting a dynatic rule within the party.

PV said...

யாரோ புலம்ப இவர் 'விதவை என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகக் கைம்பெண் என்ற தமிழ் சொல் பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்' என்று சொன்னதை இன்னமும் கண்ணீர் மல்க உடன் பிறப்புகள் குறிப்பிடுவார்கள். கர்மம். இது தான் நம்மவர்களுக்குத் தமிழ்ப் புலமை./

Just listen to his speech given in memory of Kannadasan in a function to celebrate Kannadasan's 60th birthday anniversary

https://www.youtube.com/watch?v=eyx9y3bpWR8

At 30 நான் அவர் பேசியதை எழுதுகிறேன் நீங்களும் நேர்டியாகவே கேட்டுக்கொள்ளலாம்

''மேத்தா ஒரு முறை என்னிடம் ஆனந்தவிகடனில் வந்த ஒரு புதுக்கவிதை ஒன்றைக் காட்டினார்; அதில் அந்த இளங்கவிஞர் ஒரு கிழவியின் துயரம் என்ற தலைப்பில் எழுதுகிறார்: ''விதவை என்றால் கூட பொட்டுவைக்கமுடியவில்லையே!'' இக்கவிதையை நான் இரசித்தேன் ஒரு மேடையில் இக்கவிதையைக் குறிப்பிட்ட போது, ''தம்பீ விதவை என்பது வடமொழிச்சொல். கைம்பெண் என்று தமிழில் சொன்னால், ஒரு பொட்டல்ல; இரு பொட்டுக்களும் வைக்கலாம்'' என்றேன். இதைச் சொன்னது அவ்விளம்கவிஞனை வெற்றி கொள்வதாக அல்ல. என் தமிழைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?''

இதற்குப் பிறகு தமிழில் எழுதும் இளங்கவிஞர்களை போற்றிப்பேசுகிறார் அவர்களை வாழ்த்துகிறார் முழுப்பேச்சையும் கேளுங்கள். உடன்பிறப்புகள் சொல்வதை நேரேயே எடுத்துப்போடாமல் நீங்களே நேரடியாக அவரின் பேச்சைக் கேட்டால் இப்படி ''யாரோ புலம்ப...என்றும் இவரின் புலமையைக்காட்ட என்றும் பொய்யுரைக்க தேவையிருக்காது. இன்றைய தலைமுறைக்கவிஞர்களை ஊக்குவிக்கும் பேச்சது கேட்டுப்பார்த்துவிட்டுப் பதில் போடுங்கள்.