Wednesday, September 29, 2021

தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை

 "தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை" என்றா தலைப்பில் செப்டம்பர் 18 அன்று இணையத்தில் நடத்திய நிகழ்ச்சியினை ஒட்டி நிகழ்ச்சியின் பேசுப் பொருளான தலித் இதழியல் வரலாறு பற்றியப் புத்தகங்களுக்கு எழுதிய சிறு குறிப்புகளின் தொகுப்பே இப்பதிவு. 

நிகழ்ச்சி நிரல்

பங்கேற்பாளர்கள்: ஜெ. பாலசுப்பிரமணியம், ரத்னமாலா, அரவிந்தன் கண்ணையன்



1. தலித் இதழியல் வரலாறு: சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (1869-1943); வழிக்காட்டுவோன், பூலோக வியாஸன் ஆகியவற்றை முன் வைத்து வரலாற்றை பேசுதல் 2. அம்ப்தேகரின் இதழியல் செயல்பாடு 3. சமகால இதழியியலும், ஊடகங்களும் தலித்த்துகளும்: Media and Minorities - Media Representation of Dalits in Tamil Nadu. தலித்துகள் பற்றி இன்று இருக்கும் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கும் முக்கிய வரலாறு, தலித் தலைவர்கள் அரசியல் மற்றும் இதழியல் செயல்பாடுகள். இந்த வரலாற்றை மீட்டு நம்முன் கொண்டு வருவதில் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருப்பவர் எழுத்தாளரும் ஆய்வாளாருமான ஜெ.பாலசுப்பிரமணியம். சமகாலத்தில் ஊடகங்களில் தலித் பங்களிப்பு பற்றியும் அதிலுள்ள அரசியல்கள் குறித்தும் தலித் சித்தரிப்புக் குறித்தும் எழுதி வருபவர் ஆய்வாளர் ரத்னமாலா அவர்கள்.




“சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: தலித் இதழ்கள், 1869-1943” - ஒரு குறிப்பு

காலனி ஆட்சிக் காலத்தில் உருப்பெற்ற முக்கியமான கருத்தியல் இன்னின்ன சாதிகளே இன்னின்ன தொழில் சாமர்த்தியம் உள்ளவர்கள் என்ற வரையறை. அதனாலேயே தான் “போர்க்குணமிக்க சாதிகள்” (Martial Classes) என்று ஒரு வகையேற்படுத்தி தலித் அல்லாத சில சாதியினருக்கே ராணுவத்தில் சேர முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே போல் குறிப்பாக பிராமணர்கள் அறிவுச் சமூகம் என்கிற கட்டமைப்பும் ஆரம்பித்தது. ��மஹர் ரெஜிமண்டுக்காக அம்பேத்கர் முன்னெடுத்தப் போராட்டங்கள், பீமா-கோரேகான் நினைவு நாள் அரசியல் எல்லாம் ஒரு தளத்தில் தலித்துகளும் ராணுவ பங்களிப்புகளுக்கு ஏற்றவர்களே என்று, வரலாற்றின் அடிப்படையில், நிறுவியது. அதே போல் தலித்துகளின் அறிவுப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டி அறிவுச் செயல்பாட்டில் தலித் தரப்பின் முக்கியப் பங்களிப்பை நமக்கு காட்டும் வரலாறு தலித் இதழியல் வரலாறு. 

அதிகமாக நேரடி ஆவணங்கள் கிட்டாத ஒரு செயல்பாட்டினை வரலாற்றாசிரியனின் நேர்த்தியோடு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம். முதல் தலித் இதழ் 1869-இல் ஆரம்பிக்கப்பட்டதால் அவ்வருடத்தில் ஆரம்பிக்கும் வர.லாறு 1943-வரை மட்டுமே புத்தகத்தில் கருத்தில் கொள்ளப்படுவதற்கு காரணாம் 1944-இல் பெரியார் தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு முன்பான தலித் செயல்பாடுகளை பார்க்கும் நோக்கமே. அதாவது இன்று திராவிட இயக்கம் தங்களால் தான் தலித்துகள் முன்னேறினார்கள் என்று கட்டமைப்பதை இத்தொகுப்பு கேள்விக்குள்ளாக்குகிறது, திராவிட இயக்கத்துக்கு முன்பான அறிவுச் செயல்பாட்டை வலியுறுத்துவதன் மூலம்.
இப்புத்தகத்தின் வெற்றி தலித் சமூகம் பற்றி இருக்கும் பொரு வாசகனின் புரிதலை மொத்தமாக கலைத்துப் போட்டு நிலைப்பெற்று விட்ட பல கதையாடல்களை கேள்விக்குள்ளாக்குவது தான். 

“அறிவுத் தளத்தில் செயல்பட்ட தலித்துகள் முதரபாஷிதம், புலவர், பண்டிதர், நாவலர் போன்ற பட்டங்களை” கொண்டிருந்தார்கள் என்பது வெறும் செய்தியல்ல. 

சாதிவாரி கணக்கெடுப்பால் நிகழ்ந்த சாதிய எழுச்சி, ஐ.சி.எஸ் பரீட்சையை இந்தியாவில் நடத்துவதற்கு எதிராக ரெட்டமலை சீனிவாசனின் ‘பறையன்’ இதழ் நடத்திய அறிக்கைப் போர், தலித்துகளுக்கான தனிப் பள்ளி கோரிக்கைகள் ( அதே காலத்தில் நடந்த அமெரிக்க தனிப்பள்ளிகள் போல்), தலித் அடையாள உருவாக்கம், சீர்திருத்தம், மத நம்பிக்கைகளைக் கேள்விக் கேட்பது என்று அடிப்படை வாழ்வாதாரம் தாண்டி அநேக பேசுப் பொருள்களை தலித் இதழ்கள் பேசியிருப்பதாலேயே இதனை நாம் ‘அறிவுச் செயல்பாடு’ எனலாம்.

1909-இல் “மது விலக்கு தூதன்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “Temperance Herald” என்றும் இரு மொழிகளில் டி.மனுவேல் நடத்தியிருக்கிறார். இன்று மது விலக்கு என்றாலே காந்தியைத் தான் நினைக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கை தலித் ஆசிரியரால் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் மது விலக்குக்கு ஆதரவாக சங்கமும் நடத்தியிருக்கிறார்கள். அச்சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் அயோத்திதாசரும் தமிழில் உரையாற்ற, எஸ்.அஜீம் உதீன் சாயபு ஆங்கிலத்தில் உரையாற்றினாராம். “தருமதொனி (1932)” என்ற பத்திரிக்கையும் இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. இரு மொழிகளில் பத்திரிக்கை நடத்துவது பரவலாகவே இருந்திருக்கிறது. 

எம்.சி.ராஜாவும் மற்றவர்களும் சிறார்களுக்காக பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். “ஜாதி பேதமற்றோன் (1922)” என்ற பத்திரிக்கை கத்தோலிக்க சங்கம் ஒன்றின் சார்பில் டி.ஆதிநயினார் வெளியிட்டார், அவர் ஜைன சமயத்தை சார்ந்தவர். “சந்திரிகை (1932)” என்.கிருஷ்ணமூர்த்தி என்கிற பிராமணரை ஆசிரியராக கொண்டு மாசிலாமணி தேசிகர் என்கிற ஆதி திராவிடர் வெளியிட்டார். 
‘திராவிடன்’ என்கிற சொல்லையே பிரதானமாக பயன்படுத்திய தலித் தலைவர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் 1916-இல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை திராவிடர்கள் என்று குறிப்பிடத் தொடங்கிய பின் “அதி திராவிடர்” என்று மாற்றிக் கொள்கிறார்கள். 1907-இல் “திராவிட கோகிலம்” வெளிவருகிறது. அதன் பின் 1919-இல் வெளிவந்த தலைப்புகள் ஆதி திராவிடன் (கொழும்புவில் இருந்து வெளிவந்தது), மெட்ராஸ் ஆதி திராவிடன், ஆதி திராவிட பாதுகாவலன் (1927-31).

வெறும் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றங்களைத் தாண்டிய விஷயங்களை தலித் பத்திரிக்கள் பேசியதற்கு ய்தாரணம் 1872-இல் சுவாமி அரங்கையாதாஸால் தொடங்கபட்ட “சுகிர்தவசனி”. “மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தங்களை” இப்பத்திரிக்கை பேசியிருக்கிறது. வள்ளலாரின் “தெய்வீக சக்தி”யை ஒரு கட்டுரையே எழுதி மறுத்திருக்கிறார்கள்.
பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை நிறுவிய “மஹாவிகடதூதன்” 1886-1927 வரை வெளிவந்துள்ளது. 1893-இல் இப்பத்திரிக்கை 1500 பிரதிகள் விற்றிருக்கிறது. அது அக்காலத்துக்கு பெரும் சாதனை. 

முதல் உலகப் போர் நடந்த போது இப்பத்திரிக்கை போர்ச்செய்திகள் என்று தனிப்பத்தியே நடத்தியிருக்கிறது. ஒரு சமூகத்தில் அறிவுச் செயல்பாடு நிகழ்ந்திருக்கிறது / நிகழ்கிறது என்பதற்கு அடிப்படை தேவைகள் தாண்டிய பேசுப் பொருள்கள் (அது நடந்தால் தான் என்பதல்ல பொருள்) முக்கியம், அதே போல் முக்கியத்துவம் கருத்தியல் ரீதியான உட் பூசல்களும். மஹாவிகடதூதன் ஜான் ரத்தினம் நடத்திய “திராவிட பாண்டியன்” இதழ், ரெட்டமலை சீனிவாசன் நடத்திய “பறையன்” இதழ்களொடு கருத்தியல் மோதல்களை முன்னெடுத்திருக்கிறது. “பறையன்” இதழும் அயோத்திதாசரின் “தமிழன்” இதழுமே கூட முரன்பட்டிருக்கின்றன.

தலித் இதழியலில் தலித் அல்லாதோரும் பங்காற்றியிருக்கிறார்கள். இராஜேந்திரம் பிள்ளை நடத்திய இரண்டு பத்திரிக்கைகளிலும் எஸ்.ஜி.ராமானுஜல நாயுடு துணை ஆசிரியராக பணியாற்றினார்.
இப்புத்தகத்தின் முக்கிய சவால் நேரடி ஆதாரங்கள் இல்லாமை. ஆங்கிலேய ஆட்சியில் பத்திரிக்கைகளும் அதன் கட்டுரைகளும் கண்காணிக்கப்பட்டன. பத்திரிக்கைக் கட்டுரைகளை மொழிப் பெயர்த்து அரசுக்கு எதிரான கருத்துகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவே அதிகாரிகள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஆதாரங்கள் தான் இப்புத்தகத்தின் பெரும்பான்மை அடிப்படை. அதிலுள்ள சிக்கல் அந்த அதிகாரிகள் அரசியல் சார்ந்த செய்திகளைத் தான் அதிகம் சேகரித்திருக்கிறார்கள். ஆதலால் இவ்விதழ்களின் முழு பார்வை நமக்கு கிடைக்கவில்லை என்பதை ஆசிரியர் கவனமாக சுட்டிக் காட்டுகிறார்.

தலித் இதழ்கள் குறித்து பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் விமர்சனம் அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது. அது மேம்போக்காக பார்த்தால் உண்மை தான். நாளை பூலோக வியாஸன் குறித்து எழுதும் போது மேலும் சொல்கிறேன். “விடுதலை” என்பது தேச விடுதலை மட்டுமல்ல. தேச விடுதலையை ஒரு சாரார் முன்னெடுத்தார்கள் இன்னொரு சாரார் சமூக விடுதலையை முன்னெடுத்தார்கள் என்பதே உண்மை.






பூலோகவியாஸன்

தலித் இதழியலின் வரலாறு ஏன் முக்கியமானதென்றால் இதன் மூலமே நாம் தலித்துகள், காந்திய அல்லது திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்கு முன்பே, முன்னெடுத்த சமூக-அரசியல் முன்னெடுப்புகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. அப்படி கிடைக்கும் புரிதல் தலித் சமூகம் பற்றிய பொதுப் புரிதலை தகர்ப்பதோடு இன்று தாங்களே மீட்பர்கள் என்று கட்டமைக்கும் வரலாறுகளையும் தகர்க்கும். 

பூஞ்சோலை முத்துவீர நாவலரால் 1903-1917 வரை நடத்தப்பட்ட பூலோகவியாஸன் இதழின் 1909-வருடத்துக்கான சில இதழ்கள் கிடைக்கப்பெற்று அதனடிப்படையில் ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதியது “பூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு” (காலச்சுவடு வெளியீடு)

“பொருளும் பொருளாளிகளும்” என்ற ஏப்ரல் 1909 கட்டுரை செல்வத்தின் நிலையாமைக் குறித்த ஜைன முனிவர் பாடலொன்றை மேற்கோள் காட்டி செல்வம் சேர்ப்போரை நல் வழியில் சம்பாத்திப்பவர்கள், தீய வழிகளில் சம்பாதிப்பவர்கள் என்று வகைப் படுத்தி அவர்களுள்ளும் சேர்த்த செல்வத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை வகைப்படுத்தும் அருமையான கட்டுரை இப்பத்திரிக்கைகள் வெறும் அன்றாட பிழைப்புச் சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி தத்துவார்த்த விசாரணையிலும் ஈடுபட்டன என்று சொல்கிறது. அதே வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு கட்டுரை “அத்வைத நிரூபணம்”. கட்டுரையின் உபதலைப்பு, “விஷ்டாத்வைத வெற்றியின் மறுப்பு”. “உங்கள் மதம் ஆராய்ச்சி மதமா, நம்பிக்கை மதமா?’ எனக் கேள்விக்கேட்டு மிக சுவாரசியமாக எழுதப்பட்ட தத்துவார்த்தமான கட்டுரை. 

தலித் இதழ்கள் நிச்சயமாக ஆங்கிலேய அரசை வெகுவாகப் புகழ்ந்தே எழுதிகின்றன. சுதேசிக் கப்பல் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டு வாழ்த்தும் போதும் அம்முயற்சி அரசுக்கு எதிராக மாறக் கூடாதென்றே வாழ்த்துகின்றது பத்திரிக்கை (டிசம்பர் 1909)

பூலோகவியாஸன் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை சிலாகித்து பாராட்டுகிறது. அதே வரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியாவை சூறையாடிவிட்டார் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வழக்குத் தொட்டுத்தார் எட்மண்ட் பர்க் (Edmund Burke). பர்க்கின் ஆங்கில உரைகள் இலக்கிய உலகில் பிரசித்தம். பாராளுமன்றத்தில் அவ்வழக்கு தோல்வியுற்றது. ஹேஸ்டிங்க்ஸின் ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக கீதை மொழிப் பெயர்க்கப்பட்டது அதற்கு நல்ல முன்னுரையும் ஹேஸ்டிங்க்ஸ் எழுதினார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சு புரட்சியை எதிர்த்திருக்கிறார். ஆக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பல முரண்களை கொண்டிருந்திருக்கிறார்கள்.

தலித் அல்லாதோரும் இப்பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள். “பிராமண விதவைகளின் கஷ்ட விமோசன சாதகம்” என்ற கட்டுரை சி.வி.பாஸ்கரன் என்பவர் எழுதியிருக்கிறார். “தமிழ் மாது” என்ற பத்திரிக்கை நடத்திய எஸ்.ஸவப்பநேஸ்சரி அம்மாள், “இளவயதில் கலியாணம் செய்தல்” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

“அரிஜன சேவா சங்கம்”, திராவிட இயக்கம் இவற்றுக்கெல்லாம் முன்பாகவே தலித்துகள் சுய முன்னேற்றத்துக்கு சங்கங்கள் தோற்றுவித்து அச்சங்கங்களின் குரலாக பத்திரிக்கைகளும் நடத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு பத்திரிக்கை தான் 1918-இல் துவங்கப்பட்ட “வழிகாட்டுவோன்”. 




1908 சென்னையில் காங்கிரஸ் கூட்டம்: பூலோகவியாஸனும் பாரதியும்

டிசம்பர் 28-30 1908-இல் சென்னையில் காங்கிராச் ஒரு மாநாடு நடத்தியது பற்றி பூலோகவியாஸன் "1908ஆம் வருடத்திய இந்தியன் நாஷனல் காங்கிரஸ், சென்னை" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை ஜனவரி 1909-இல் வெளியிட்டிருக்கிறது.

புலோகவியாஸனின் கட்டுரையில் மாத இதழான பூலோகவியாஸனை விட நாளிதழ்கள் அதிகம் அம்மாநாடு பற்றி எழுதியதை ஏற்கனவே வாசகர்கள் படித்திருக்கலாம் என்று சொல்லி சிறு குறிப்பு மட்டுமே அம்மாநாடு பற்றி வெளியாகி இருக்கிறது. அக்குறிப்பில் "இப்பெருங்கூட்டம்" என்று மாநாடு பற்றி சொல்கிறது, தலைமை வகித்த ராஷ்விஹாரி கோஷை "கிழச்சிங்கம்" என்று குறிப்பிட்டு மாநாடு இனிதே நடந்ததாகச் சொல்கிறது. மாநாட்டில் மார்லியின் சீர் திருத்தம் ஏற்கப்பட்டதையும், இராணுவத்தில் இந்தியர்களுக்கான இடம், "தேச பிரஷ்டம் செய்யும் ரெகுலேஷனை ரத்து செய்தல்" முதலிய தீர்மணங்கள் அடங்கிய 21 தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் அதற்கு முந்தைய வருடத்தில் நடந்ததப் போல் "அயோக்கிய காரியங்கள்" நடக்கவில்லையென்றும் கட்டுரை சொல்க்கிறது. 

இப்படி ஒரு நிகழ்வ்வுப் பற்றி பாரதி எழுதாமலிருப்பானா என்ற உந்துதலோடு பாரதி தொகுப்பைப் புரட்டினேன். சிக்கியது கட்டுரை. ஜனவரி 2 1909-இல் இந்தியா பத்திரிக்கையில், "சென்னைப்பட்டணத்தில் ஆட்டு மந்தை" என்ற தலைப்பில் தாளித்து எடுத்திருக்கிறான்.

1905, 1906, 1907 காங்கரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்பட்டதென்றும் இம்மாநாட்டில் பாடவில்லை என்றும் கொதிக்கிறான் பாரதி. "1908-ம் வருஷத்துச் சென்னைத் துரோகக் கூட்டத்தில், நமது ஜாதீய மஹாகீதத்தை மறந்து விட்டார்கள். ஜாதிக்கெட்ட மிலேச்சர்கள் சேர்ந்த அந்தச் சபையிலே ஏதோ ஒரு அன்னிய பாஷையிலே ஒரு பாட்டுப் பாடினார்கள்"

ராஷ்விஹாரி கோஷை திட்டித் தீர்க்கிறான் பாரதி. அவர் உரையில் மார்ல்லியின் சிர்ர்திருத்ததை ஏற்றதை கிண்டலடிக்கிறான், அரசாங்க அடக்கு முறையை சரியாக கண்டிக்கவில்லை என்று ஏசுகிறான், கடைசியாக அவர் உரை "உண்மையிற் சுருங்கியது; தேசாபிமானத்தில் சுருங்கியது; அறிவுத் திறமையில் சுருங்கியது; ஸகலத்திலும் சுருங்கியது. ஆனால் நடிப்பு ராஜபக்தியிலும், தெச துரோகத்திலும் வெகு விசாலமானது" என்கிறான். கோஷ் மிதவாத-தீவிரவாத காங்கிரஸ் உறுப்பினர்களிடையேயான பிளவை இன்னும் தீவிரமாக்கியதையும் அவரை விட அநேக காலம் தொண்டாற்றியவர்கள தூஷித்ததையும் பாரதி கண்டிக்கிறான். வேறு பத்திரிக்கைகளும் கோஷின் அப்போக்கைக் கண்டித்திருக்கின்றன. 




மேலும் ராஸ்விஹாரியை அவர் பணத்துக்காகவே சுரேந்திரநாத் பானர்ஜி கட்சியில் சேர்த்தார் என்கிறான் பாரதி. மாநாடு கூட்டம் பற்றி, "ஆறேமுக்கால் மனிதர்களைக் கொண்டு" நடந்த கூட்டம் என்று கிண்டலடிக்கிறான். (மற்ற பத்திரிக்கையாளர்களும் பாரதியின் கருத்தை ஒட்டியே கோஷை விமர்சித்து எழுதினார்கள் என்று சில எடுத்துக் காட்டுகளை சீனி விஸ்வநாதன் கொடுத்திருக்கிறார்)

பூலோகவியாஸன் கட்டுரையாளர் தெளிவாக தன் குறிப்பு ஒரு சாரம்சம் என்கிற அளவில் தான் என்கிறார். அவர் குறிப்பிட்டதைப் போலவே வேறு பத்திரிக்கைகள், 'இந்தியா', 'சுதேசமித்திரன்','இந்து', 'ஆந்திர கேசரி' போன்றவை விரிவாக எழுதியிருக்கின்றன. 

ஒரே காலத்தில் இவ்விரு பார்வைகளும் சுவாரசியமானவை. தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை இது வரை பரவலாக அறியப்படாத ஒரு தலித் இதழும் பாரதியும் ஒரு சேர எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தி.


வழிக்காட்டுவோன்

விருதுபட்டியில் (விருநகர்) மே மாதம் 21-ஆம் தேதி 1915-இல் ஆரம்பிக்கப்பட்ட “தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “South India Oppressed Classes Union” என்ற பெயரிலும் சங்கம் தொடங்கி நாளடைவில் 49-கிளைகள் தொடங்கி அதன் பின் தங்கள் குரலாக ஒரு பத்திரிக்கை வேண்டுமென்று 1918-இல் “வழிகாட்டுவோன்” தொடங்கினார்கள்.

பிப்ரவரி 1918 சில மாதங்கள் முன் மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பிய மகஜரை பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். 6 பக்க மகஜர் அபாரமான கோரிக்கைகள் அடங்கியது. 1909-இலேயே “மது விலக்கு தூதன்” என்றொரு பத்திரிக்கை வெளிவந்ததையும் மது விலக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் நேற்று எழுதினேன். இந்த 1917-இல் சமர்பிக்கப்பட்ட மகஜரிலும் “மதுபானம் (liquor traffic)” என்ற பகுதியில், கள்ளு மற்றும் மதுபான கடைகள் மூடச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். காந்தியோ, ராஜாஜியோ இக்கோரிக்கைகளை வைக்கும் முன்பே நடந்தது இது. 

“ஜீவனார்த்தம் (Economic Condition)” என்ற பகுதியில் தலித் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் கூலி வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்றும் அக்கூலி “முன்னூறு வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதென்பதை கவர்மெண்டார் கவனித்திருக்கலாம்”. வில்வைவாசி உயர்வை கூலி பிரதிபலிக்கவில்லை என்று 1918-இல் சொன்னதை தான் 81 வருடம் கழித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் சொன்னார்கள்.

“கல்வி (Education)” பகுதியில் கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்தால் தான் கல்வியின் தேவையறியாதவர்கள் கூட கல்விக் கற்க பிள்ளைகளை அனுப்புவார்கள் என்று மிக முக்கிய கோரிக்கை வைக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வேறு யார் வந்து என்ன சொல்லிக் கொடுக்கத் தேவையிருந்தது என்று புரியவில்லை? 

அரசு வேலையில் பிரதிநிகள் வேண்டுமென்று கேட்கிறார்கள். முக்கியமாக பத்திரப் பதிவுகளில் எழுதப் படிக்கத்தெரியாத தங்கள் சமூகத்தினர் ஏமாற்றப்படுவதால் தங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் சாட்சி கையெழுத்து இருந்தால் தான் பத்திரம் செல்லுபடியாகும் என்று சட்டம் கேட்கிறார்கள்.

1918-இலேயே, அநேகமாக அயோத்திதாசரின் பாதிப்பாக இருக்கலாம், திருவள்ளுவரையும், ஔவையையும் “தம் குலத்தவர்” என்கிறார்கள் “விவசாயம்” என்ற கட்டுரை நிலம், நீர், உரமிடுதல் ஆகியவற்றின் தன்மைகளைப் பேசுகிறது. புதிதாக கோவையில் தொடங்கப்பட்ட (1906-ஈல்) வேளாண் கல்லூரி பற்றியும் அக்கல்லூரி நிபுணர்கள் மூலம் அறிய வரும் பயிர்கள், பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பற்றியும் அறிய நேர்ந்ததை நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். இவர்கள் யாரும் “இயற்கை வேளாண்மை”, “மரபே பெரிது” என்றெல்லாம் பேசவில்லை. 

“வழிகாட்டுவோன்” சுய சாதி விமர்சனமும் செய்கிறது. “ஏமாளியில்லாமல் ஏய்க்கிறவனில்லை” என்று சொல்லி “சண்டாளர்களென்றும், பஞ்சமர்களென்றும், தீண்டா ஜாதிகளென்றும் இதர ஜாதிகளாகிய மெய்சண்டாளர் சொல்லி வருவதற்கு இவர்களுடைய தரித்திர நிலமையே காரணம்” என்று ஒரு கட்டுரை சாடுகிறது.

““தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” ஒரு கூட்டுறவு நிதியுதவி மையமும் நடத்தியிருக்கிறார்கள். “வழிகாட்டுவோன்” தஞ்சை பகுதிகளில் அடிமை பத்திரங்கள் இருந்ததையும் அதில் குடும்பத்தையே அடிமைகளாக எழுதி வாங்கும் வழக்கமிருந்ததையும் குறிப்பிடுகிறது. அந்நிலை நீங்கத்தான் தாங்களே நிதியுதவி வழங்க முன்னெடுத்தார்கள்.

'வழிகாட்டுவோன்' ஒரே நேரத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்கள். வேறு சில தலித் இதழ்களும் இவ்வழக்கத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். இது இன்று தொழில் நுட்ப வசதியோடு செய்யக் கூடிய ஒன்று ஆனால் 100 வருடம் முன்பே செய்திருக்கிறார்கள். 

ஜெ.பாலசுப்பிரமணியமின் இந்நூல்கள் மிக முக்கியமான வரலாற்று தரவுகள். நம் வரலாற்று புரிதலை மொத்தமாக கலைத்து வேறு தளத்துக்கு இந்நூல்கள் கொண்டு செல்கின்றன. “வழிகாட்டுவோன்” இதழின் இந்த ஒரு வருட தொகுப்பு ஜெர்மனியிலிருந்து பிரதியெடுத்து உதவியது “The Pariah Problem” என்ற இன்னொரு முக்கியமான நூலை எழுதிய ரூபா விஸ்வநாத் அவர்கள்.



சமகால ஊடகங்களில் தலித் சித்தரிப்புகளும் ஒதுக்குதலும் - ஒரு குறிப்பு

ரத்னமாலாவின் “Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu” சமகால ஊடகங்களில் தலித்துகள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள், ஊடக நிறுவனங்களில் தலித்துகள் ஒதுக்கப்படுவது ஆகியனப் பற்றிய ஓர் ஆய்வு.



மாஞ்சோலை படுகொலையும் அதையொட்டி தினத்தந்தி, தினமலர், தினமணி பத்திரிக்கைகளில் அச்செய்தி எப்படி வாசகர்களை சென்றடைந்தது என்பதை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார் ரத்னமாலா. கலவரம், சம்பவம் போன்ற வார்த்தைகளால் போலீஸ் அராஜகம் பூசி மெழுகப்பட்டது, செய்திகளை அரசு தரப்பு குறிப்புகளை அப்படியே சுவீகரித்து எழுதுவது, அரசு தரப்புச் செய்திகளோடு முதல்வர் மற்ற அதிகாரிகளின் புகைப்படத்தோடு வெளியிடும் வேளையில் புதிய தமிழகம் தலைவரின் புகைப்படம் அதே அளவு வெளியிடாமை முதலிய பாரபட்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.
வன்கொடுமை நிகழ்வுகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக போலீஸின் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செய்திகளைத் தருவது தங்களுக்கு பாதுகாப்பு என்று வெளிப்படையாகவே பத்திரிக்கை நிருபர்கள் சொல்கிறார்கள்.
தலித் இருட்டடிப்புக்கு நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ் கூட்டங்களை தவறாமல் தங்கள் செய்திகளில் பிரசுரித்த சுதேசமித்திரன் அம்பேத்கர் சென்னைக்கு வந்து உரையாற்றியதை கண்டு கொள்ளாததை “சமத்துவம்” என்ற தலித் இதழ் கண்டித்திருக்கிறது. (ரத்னமாலாவின் புத்தகத்தில் இதைப் படித்த போது தலித்துகள் பற்றி எழுதிய பாரதியும் தலித் சங்கங்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியதாக நினைவில்லை).
காந்தி, பாரதி, பின்னர் திராவிட இயக்கம் ஆகியோரின் பத்திரிக்கை செயல்பாடுகள் பிரசித்தம். அம்பேத்கரின் பத்திரிக்கை செயல்பாடுகள் அந்தளவு இன்னும் பேசப்படவில்லை. அம்பேத்கரின் மூக்நாயக் பத்திரிக்கைப் பற்றிய விளம்பரத்தை வெளியிட கேசரி (திலகரோடு தொடர்புடையது) மறுத்தது. தீண்டாமையின் எல்லைகள் மிக அதிகம்.
தினமலர், தினமணி ஆசிரியர்கள் (எடிட்டர்கள்) தங்கள் நியமனங்களில் ஜாதி பார்ப்பதில்லை, ‘மெரிட்’ மட்டுமே என்று கிட்டத்தட்ட தம்பட்டமாகவே சொல்கிறார்கள். அவர்கள் உள்ளிட்டு பல செய்தி நிறுவனங்களில் ரிப்போர்ட்டர் நிலையைத் தாண்டி தலித்துகள் முன்னேறுவது அபூர்வம் என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ரத்னமாலாவும் ஜெ.பாலசுப்பிரமணியமும் தலா ஒரு கட்டுரை “Caste, Communication and Power” தொகுப்பில் எழுதியிருக்கிறார்கள்.
ரத்னமாலாவும் சுரேஷும் “Imagined caste in Digital Banners of Tamil Nadu” என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இப்போது பரவியிருக்கும் ப்ளெக்ஸ் போர்ட் கலாச்சாரத்தில் சாதியம் எப்படி பேணப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள். தேவர், அகமுடயார், வெள்ளாளர், கோனார், தேவேந்திர குல வெள்ளாளர் சாதிகள் வைக்கும் டிஜிட்டல் பேனர்களில் என்னென்ன குறியீடுகள், ஆளுமைகள் முன்னிறுத்தப்படுகின்றன என கட்டுரை விளக்குகிறது. 1997-இல் இந்தியாவை விட்டு வெளியேறிய நான் மிகச் சொற்பமாகவே ஊருக்கு வந்திருக்கிறேன். 2015-இல் செப்டம்பர் மாதம் வ.உ.சி நினைவு நாளுக்கு சென்னை நகரில் பல இடங்களில் வெள்ளாளர் சங்கங்கள் வைத்த தட்டிகளும், டாடா சுமோ ஊர்வலமும் ஆச்சர்யமளித்தது. அது போலவே தஞ்சையில் யாதவர்கள் கோகுலாஷ்டமிக்கு தட்டி வைத்து கிருஷ்ணன் படம் வைத்தது ஆச்சர்யமே. மற்ற சாதி போஸ்டர்களிலும் யாரேனும் ஒரு பண்டைய வீரன் உருவிய வாளும் சிவந்த கண்ணுமாய் இருப்பதைப் பார்த்தேன். இந்த கட்டுரை அதையெல்லாம் விளக்குகிறது.
ஜெ.பாலசுப்பிரமணியமின் “Pariyan: Print, Media, Mobilization and Resistance in Colonial Madras” ரெட்டமலை சீனிவாசன் நடத்திய பறையன் இதழ் முன்னெடுத்த அரசியல், சமூக கருத்தியலை பேசுகிறது. “பறையன்” என்ற வார்த்தையின் தோற்றம் ‘பறை’ அடிப்பவர்களை குறிப்பதாக இருக்க முடியாது ஏனெனில் அச்சமூகத்தில் பறையடித்தவர்கள் சொற்பமே. “பறையன்” இதழ் நடத்திய முக்கிய கருத்தியல் முன்னெடுப்புகள் காங்கிரசார் இந்தியன் சர்வீஸ் பரீட்சையை இந்தியாவிலும் நடத்தக் கோரியதை எதிர்த்ததும், பறையர்களின் கல்விக்காக வாதிட்டதும்.
அரசு எல்லோருக்கும் கல்வி நிலையங்களில் அனுமதி வேண்டும் என்றதை உயர் சாதியினர் மீண்டும், மீண்டும் மீறியதையடுத்து ஜோதிபா புலே போல் “பறையன்” இதழும் தலித் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிகள் கோரியது.



No comments: