Friday, October 8, 2021

உத்திரப் பிரதேசம்: பேயரசும் மனிதத்தின் வீழ்ச்சியும்

மனிதத்தின் சாயல் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் எவரும் கேட்டாலே மன பதைக்கும் படு பாதக செயல் ஒன்று உத்திரப் பிரதேச மாநிலத்தின் லகீம்பூர் கேரி நகரில் அக்டோபர் 3-ஆம் தேதியன்று பட்டப் பகலில் ஈவிரக்கமில்லாமல் நடந்தேறியது

விவசாயிகளுக்கான மசோதா என்றழைக்கப்படும் மசோதாவுக்கெதிராக ஒரு நிகழ்வில் பங்கெடுத்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள் கூட்டத்திடையே ஒரு வேன் தாறுமாறாக ஒடி எதிர்ப்பட்டவர்களை தூக்கி வீசிவிட்டு சென்றது. எட்டு பேர் இறந்தார்கள். வேனில் மத்திய துணை மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது



எல்லாமே அரசியலாகிவிட்ட காலத்தில் இப்படி ஒரு நிகழ்வின் அரசியல் பாரபட்சங்களூடாகவேத் தான் பார்க்கப்படுகிறது. நடந்தது விபத்து, என்ன நடந்தது என்று விசாரனை செய்து முடிவு தெரியும் வரை எதுவும் திட்டவட்டமாக எதிர்க்க முடியாது, பேரணி சென்றவர்கள் கல் வீசியதற்கு பின் ஓட்டுனர் நிலைத் தடுமாறி ஓட்டினார் என்றெல்லாம் பாஜக வாக்காளர்கள் வாதிட்டார்கள். மோடி, பாஜக என்றாலே சீற்றம் கொள்ளுவோர் இப்போதும் சீற்றம் கொண்டார்கள். பொதுவாக உண்மை இரண்டு அதீத எல்லைகளுக்கு நடுவே இருக்கும் என்பார்கள். இந்நிகழ்வில் அது பொய்த்தது. உண்மை ஒரு பக்கமே இருக்கிறது. அதை மறுப்பதில் அரசியலும் மனச் சாய்வுகளும் இருக்கிறது. இந்நிகழ்வுக்குள் மேலும் செல்லும் முன் ஓர் அமெரிக்க உதாரணம்.

ஓர் அமெரிக்க நிகழ்வு


ஆகஸ்டு 11-12 2017 வெர்ஜீனியா மாநிலத்தில் சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாத நம்பிக்கையுடையோர் “Unite the Right” என்ற கோஷத்துடன் பேரணி நடத்தினார்கள். அவர்களுக்கு போட்டியாக இடது சாரியினரும் மற்றவர்களும் இன்னொரு பேரணியும் எதிர் கோஷமும் எழுப்பினார்கள். அப்போது ஒரு கார் கூட்டத்திடையே சீறிப் பாய்ந்தது. ஒருவர் இறந்தார், 19 பேர் காயமுற்றனர். அரசியல் ரீதியாக நாடு பிளவுப்பட்டிருக்கிறது என்று அமெரிக்கர்களுக்குத் தெரியும் ஆனால் இத்தகைய வன்முறை எதிர்வினை, அதுவும் இப்படி வெளிப்படையாக, பரவலான அதிர்ச்சி அளித்தது. அப்போதும் 30% ரிபப்ளிக் கட்சியினர், ஜனாதிபதி டிரம்பை எதிரொலித்து, வன்முறைக்கு இனவாத சாரார் பொறுப்பில்லை என்று கருத்துக் கணிப்பில் சொன்னார்கள்.



வன்முறை நடந்த அன்று மாலை டொனால்ட் டிரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் துளைக்க டிரம்ப் எல்லாப் பக்கமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டு பத்திரிக்கை சந்திப்பே களேபரத்தில் முடிந்தது. அவர் கட்சி மூத்தவர்களும், அமைச்சரவை அங்கத்தினர்களுமே ஜனாதிபதி இனவாதத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதிர்க்காதது பற்றி எரிச்சலும் கோபமும் கொண்டனர். அடுத்த நாள் டிரம்ப் தான் இனவாதத்தை நியாயப்படுத்தவில்லை என்று மீண்டும் ஒரு காணொளி வெளியிட நிர்பந்திக்கப்பட்டார். இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது. நாடுகள், சமூகங்கள் கடந்து வெறுப்பரசியல் பொதுக் கூறுகள் உடையது என்பதே என் நம்பிக்கைடொனால்ட் டிரம்ப் கூட அந்த காரோட்டியை மோசமனாவன் என்று வர்ணித்தார்.


கேள்விகள்


தேர்தல் சமயத்தில் இப்படியொரு நிகழ்வு எங்கு நடந்தாலும் அதில் எதிர் கட்சியினர், யாராக இருந்தாலும், சிறிதேனும் அரசியல் ஆதாயம் தேடுவார்கள். அதே சமயம் இந்தியாவில் இந்நிகழ்வை அரசியல் கட்சியினர் கையில் எடுக்கவில்லையென்றால் இது மொத்தமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். உத்திரப் பிரதேசமும் அதன் முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநாத்தும் பாஜக எதிர்ப்பாளர்களால் குறி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ள சட்டத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு பிரச்சனையை வைத்து தொடர் போராட்டம் நடத்துவது முறையா? என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. சில பதில்களைத் தருகிறேன்.

தேர்தல் வெற்றியின் எல்லைகள்


தேர்தலில் ஒரு கட்சி பெரும் வெற்றி, அது பலம் வாய்ந்த பெரும்பான்மையாக இருப்பினும், எதேச்சாதிகாரத்துக்கான அனுமதி அல்ல. பாராளுமன்ற விதிகள், சட்டங்கள், அரசாட்சி அறம் ஆகியவை அதற்கு எதிரானது. தேர்தல் அறிக்கையில் சொன்ன எல்லாவற்றுக்கும் தேர்தல் வெற்றி நிபந்தனையற்ற ஒப்புதல் அல்ல. கட்சிகள் வெற்றிப் பெறுவது பல காரணங்களுக்காக நிகழும். கூட்டணிகள், எதிர்கட்சி ஓட்டு பிரிவது, பண பலம், முந்தய அரசின் மீதான அதிருப்தி, ஜாதி அரசியல், மதம் சார்ந்த அரசியல் என்று அநேக காரணங்கள். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் - இரண்டு முக்கிய ஜனநாயக அரசுகள் - வெற்றி மமதையில் ஆளும் கட்சியினர் ஏதேனும் செய்ய முனைந்து பெரும் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்ததுண்டு. An election victory is not a blank cheque. 
பா...வின் ஆட்சிக்குப் பின் மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்டு அதன் பின் பாராளுமன்ற ஓட்டெடுப்புக்கு கொண்டு வருவது வெகுவாக குறைந்து விட்டதை அரசியல் பார்வையாளார்கள் ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் போக்கு என்கிறார்கள்.

தொடர் போராட்டம் முறையா?


30 வருட காலம் ராமர் கோயில் பிரச்சனையை முன் வைத்து அரசியல் செய்து, பல கலவரங்களுக்கு வித்திட்டு அதன் பலனாக ஆட்சி அதிகாரத்தையும் அடைந்த ஒரு கட்சிக்கு ஏகோபித்த ஆதரவளித்தவர்கள் இப்படி கேட்பது கேலிக் கூத்து. உச்ச நீதிமன்றம், அரசமைப்பு  என எதிலும் பல நியாயங்களோடு அவ நம்பிக்கைக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அதனால் தான் நீதிமன்றம் நிறூத்தி வைத்தாலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். மேலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் யாரும் போராட்டம் நடத்தலாம், சட்டத்துக்குட்பட்டு.

மற்ற மாநிலங்கள் ஒழுங்கா?


உங்களில் குற்றமற்றவனே கல் எரியட்டும்என்பது தனி மனித விஷயங்களில் செல்லுபடியாகலாம் ஆனால் அதுவே எல்லா அநீதிகளுக்குமான அனுமதியளிப்பு அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மீது எல்லா அரசுகளும் எல்லா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. நெல்லி படுகொலை முதல் நாட்டின் தலைநகரிலேயே சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டெதெல்லாம் நடந்திருக்கிறது. இதோ இந்த மாதம் தமிழகத்தில் கூட ஒரு பட்டியல் இன வேட்பாளர் ஒருவர் தன் வேட்பு மனு சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டதென்று தீக்குளித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ளாட்ச்சித் தேர்தல்களில் சாதியும் பணமும் விளையாடுவதை பிரண்ட்லைன் பத்திரிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டியிருக்கிறது. கீழ வெண்மணி, தாமிரபரணி, படுகொலைகளை மறக்க முடியுமா. தலித் கட்சியினர் ஒரு கொடிக் கம்பம் நடுவதற்கு கூட ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் மாநிலம் தான் தமிழகம். யாரும் புனிதரல்ல. அப்படியாயின் யோகி ஆதித்யாநாத் குறி வைக்கப்படுகிறாரா? ஆம் எனில் ஏன்?

உத்திரப்பிரதேசம் குறி வைக்கப்படுகிறதா?


மேலேயிருக்கும் பத்தியில் சொன்ன நிகழ்வுகளெல்லாம் ஆட்சியினரின் தூண்டதலால் நடந்தவை அல்ல, கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளும் தங்களை மீறி சமூக அமைதியை சீர்குலைப்பவர்கள் செய்ததென்றும் அந்நிகழ்வுகள் தங்கள் கொள்கைகளுக்கு புரம்பானவை என்றும் சம்பிரதாயத்துக்காகவாவது சொல்வார்கள். அந்த சம்பிரதாய உணர்வுக் கூட இல்லாத பேயரசு தான் உத்திரப் பிரதேச அரசு

மிகக் கொடூரமாக வண்புணர்வு செய்து அதை விட கொடூரமாக உடல் சிதைக்கப்பட்ட பெண்னின் வழக்கை மூடி மறைக்க நினைத்தது, கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று இஸ்லாமியரின் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டியது, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததை அம்பலப்படுத்திய மருத்துவரை வேட்டையாடியது, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை அப்பட்டமான மதவாத பேச்சுகள் பேசுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம் உத்திரப் பிரதேசத்தின் வரலாற்று சிறப்புகளை. நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கொஞ்சமேனும் அற உணர்வுள்ளவர்கள் மனம் கூசும் நிகழ்வுகள், பல நிகழ்வுகள் கேட்டாலே குலை நடுங்க வைப்பவை. எதற்கும் அரசிடமிருந்தும் ஆதரவாளர்களிடமும் எந்த பச்சாதாபமுமற்ற எதிர்வினைகளே பதில்கள். இப்போது கூட டிரம்ப் காண்பித்த எள் முனையளவு குற்ற உணர்வுக் கூட முதல்வருக்கோ, பிரதமருக்கோ இல்லை

மிக முக்கியமாக யோகி ஆதித்யாநாத் மோடியின் அடுத்த வாரிசாக உருவாகலாம் என்று பாஜக ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கணிக்கிறார்கள். ஒரு தரப்பு அப்படி நடக்க வேண்டுமே என்றும் இன்னொரு தரப்பு அப்படி நடந்தால் மொத்தமாக இந்தியா தடம் புரளும் என்று அச்சப்படுபவர்கள். உத்திரப் பிரதேசம் புதிய இந்தியாவுக்கான முன் மாதிரியாகுமோ என்பதே அம்மாநிலத்தின் மீது அத்தனை கவனம் குவியக் காரணம்.

இந்த பாதக நிகழ்வில் உயிர் இழந்தோருக்கு ஆறுதல் சொல்ல, அரசியல் காரணங்களுக்காகவும், வரும் எதிர்கட்சியினரை கைது செய்யும் மும்முரத்தில் ஒரு சதவீதம் கூட குற்றம் சாட்டப்படும் அமைச்சர் மகனை கைது செய்வதில் அரசு காண்பிக்கவில்லை.

உத்திரப் பிரதேச மாடல்


பா.. ஆளும் மாநில அரசவைகளில் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியரும் கிட்டத்தட்ட மொத்தமாக எதிர்க் கட்சியினர் தான். அதாவது பாஜக சார்பில் இஸ்லாமியர் கிடையாது. உத்திரப் பிரதேசத்திலேயே இது தான் நிலை. எதிர்க் கட்சியினரும் பா..-வை எதிர்கொள்ள தத்தம் இஸ்லாமிய வேட்பாளர்களை குறைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் பா.. வாக்காளர்களுக்கு மிகவும் உவப்புடையது. இன்னும் சொல்லப் போனால் இதனாலேயே தான் குஜராத்திலும் .பி.யிலும் தொடர்ந்து ஜெயிக்க முக்கியக் காரணங்கள். பா... ஊழலற்றது, பொருளாதார முன்னேற்ற கொள்கைகள் உடையது என்பதெல்லாம் கற்பனாவாத புனைவுகள்

 கீழிருக்கும் காணொளி யோகி ஆதித்யாநாத் எம்.பி.யாக இருந்த போது பேசியதை கேள்விக் கேட்கும் நிகழ்ச்சி. உத்திரப் பிரதேச மாநில தேர்தலுக்கு முன் இவர் முதல்வராக வரக் கூடும் என்கிற தருணத்தில் அளித்த பேட்டி. 17-ஆவது நிமிடத்தில் இஸ்லாமியர் பற்றி இவர் பேசியது அப்பட்டமான வன்முறைத் தூண்டும் பேச்சு. அது பற்றிக் கேட்டதற்கு மிக எளிய புண்ணகையுடன் பதில் அளிக்கிறார். நிகழ்வு நடக்கும் இடம் ஒரி தொலைக் காட்சி செட், அங்கு அமர்ந்திருக்கும் பலர் நடுத்தர படித்த வேலைக்குப் போகும் வர்க்கத்தினர். யோகியின் பதிலுக்கு கூட்டம் பலத்த கைத் தட்டுகிறது. நாளை இவர் பிரதமாரகவும் ஆகக் கூடும். இப்போது சொல்லுங்கள் ஏன் இவர் மாநில நிகழ்வில் தேசிய அளவில் பேசப்படக் கூடாது. 


மீண்டும் சொல்கிறேன் சர்வதேச நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் யோகி பற்றி எதிர்மறையாகப் பேசப்படுவது அவர் கட்சியினரை உசுப்பேற்றி அதனால் வாக்களிக்கிறார்கல் என்பது வெற்று சால்ஜாப்பு. யோகிக்கு வாக்களிப்பவர்கள் ஊடக கருத்துகளாலெல்லாம் உந்தப் படவில்லை மாறாக வெறுப்பு, வெறுப்பினால் மட்டுமே உந்தப் படுகிறார்கள். BJP voters should own up their vote and many actually do. 

ஆக, ஏன் இப்படி ஒரு கொலைப் பாதக செயல் நடந்தேறியது?

பா...வும் தேசமும் ஒன்றே


பா...வின் எந்த ஒரு கொள்கையை எதிர்ப்பதும், மோடியை விமர்சிப்பதும் தேசத் துரோகம் என்று கட்டமைக்கப்பட்டதோடு அதனை எதிர்க்க எந்த குடிமகனும் எந்த முறையையும் கைக்கொள்ளலாம் என்று கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் யாரோ ஒருவன் சினிமா கொட்டகையில் தேசீய கீதம் ஒலிக்கும் போது எழாத ஒருவரை அடிப்பதற்கு தனக்கு தார்மீக உரிமை இருப்பதாக நினைத்துக் கொள்வது. அதனால் தான் விவசாய மசோதாவை எதிர்க்கும் பஞ்சாபியர்களை தேசத் துரோகிகள் என்று வசைப் பாடவும் முடிவில் இத்தகைய துராக்கிரதத்தை நடத்திடவும் மனத் துணிவுக் கொடுக்கிறது. கௌரி லங்கேஷை யாரோ ஒருவன் கொலைச் செய்யவும் இது தான் காரணம். இந்தியா மிக அபாயகரமானதொரு இடத்தில் நிற்கிறது என்றால் அது மிகையல்ல

பா.. ஆளும் மாநிலங்கள் மாநில அரசியலாக பார்க்கப்படாததற்கு இந்த பா...வும் தேசமும் ஒன்று என்கிற பார்வையும் காரணம். தேசிய எதிர்க் கட்சியினர் எதற்கு உத்திரப்பிரதேசத்துக்கு விரைகிறார்கள் என்று கேட்பவர்கள் அமித் ஷா ஏன் ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் அதீத கவனம் செலுத்துகிறார், தேஜஸ்வி ஏன் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்கிறார் என்று கேட்பதில்லை. பா...வை பொறுத்தவரை மொத்த தேசத்தில் எல்லா தேர்தலிலும், அது முனிசிபாலிட்டி தேர்தலாக இருந்தாலும், வெற்றிப் பெற்று தங்கள் இந்துத்துவ கொள்கைகளை நிலைநிறுத்துவதே குறிக்கோள். அதனால் தான் உத்திரப் பிரதேசமாக இருந்தாலும் மோடி மீதே விமர்சனம் குவிகிறது.

மோடியின் ஆளுமை அவர் பா.ஜ.க.வின் ஒவ்வொரு அசைவையும், நாடு முழுவதும், தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்கிற பிம்பத்தைக் கொடுக்கிறது. அதனாலேயே எந்த பா.ஜ.க ஆளும் அல்லது அரசில் அங்கம் வகிக்கும் மாநிலத்தில் எது நடந்தாலும் அது மோடியின் மீது கவனத்தை குவித்து எல்லா பிரச்சனைகளையும் தேசிய மயமாக்குகிறது. 

இதோ இன்று வரை மாநில முதல்வரோ, பிரதமரோ நடந்திருக்கும் நிகழ்வு பற்றி வருத்தமோ பத்திரிக்கையாளர் சந்திப்போ நிகழ்த்தவில்லை. மோடியோடு ஒப்பிட்டால் டொனால்ட் டிரம்ப், பத்திரிக்கையாளரை சந்திப்பதில், பெட்டர். 

காந்தி தேசமா கோட்ஸே தேசமா?


இந்தியா அடைந்திருக்கும் ஆன்ம வீழ்ச்சி மிக அபாயகரமானது. இந்தியா காந்தி தேசமாக இருந்த காலம் முடிவுற்றதென்றே சொல்லலாம். கோட்ஸேவை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல காந்திக் கொலையை மீட்டுருவாக்கம் செய்பவர்களே, அதுவும் காமிரா முன்னிலையில், ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள். இப்பேராபத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறோம் என்கிற பெயரில் பகுத்தறிவுவாதிகள் என்று பசப்பிக் கொண்டிருந்தவர்களும் இப்போது பாவ்லாக்களை துறந்து பா.. வழியில் செல்கிறார்கள். பா..கவுக்கும் அவர்களின் மதவாதத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும் அதிகப் பட்ச வித்தியாசம் பிந்தியவர்கள் அப்பட்டமான சிறுபான்மை எதிர்ப்பைக் கைக் கொள்ளவில்லை என்பதே

பாரதியின் வரியைக் கொஞ்சம் மாற்றிவிதியே, விதியே, இந்தியச் சாதியை என் செய்ய நினைத்தாய்?” எனக் கேட்கும் துர்பாக்கிய நிலையிலிருக்கிறோம்.

பி.கு: இக்கட்டுரையின் முதல் பிரதி "சமயம்" இணைய இதழில் வெளியானது. இங்கு சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். https://tamil.samayam.com/latest-news/india-news/lakhimpur-kheri-incident-and-its-aftermaths-are-deeply-disturbing/articleshow/86859974.cms

References:


1. https://www.indiatoday.in/india/story/allahabad-hc-name-shame-posters-anti-caa-protesters-lucknow-1653979-2020-03-09

2. https://www.washingtonpost.com/news/the-fix/wp/2017/08/23/3-in-10-republicans-blame-counterprotesters-for-charlottesville-despite-white-supremacist-allegedly-killing-someone/

3. https://en.wikipedia.org/wiki/Unite_the_Right_rally

4. https://www.hindustantimes.com/india-news/what-happened-in-lakhimpur-kheri-sequence-of-events-according-to-both-sides-101633416583402.html

5. https://indianexpress.com/article/explained/who-is-ajay-mishra-union-mos-lakhimpur-kheri-7555981/

6. https://www.newindianexpress.com/nation/2020/nov/23/assembly-polls-decoded-bjps-strong-shows-tied-to-lesser-muslim-mlas-2226765.html


No comments: