Saturday, December 2, 2023

சல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி தாக்குதல்: மதமும் மத வெறியும்

 ஆகஸ்டு 12, 2022 அன்று புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நியூ யார்க் மாநிலத்திலுள்ள ஷுடாக்வா (Chautauqua) நகரில் ஹாடி மடாரால், 24 வயது, கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார். ருஷ்டி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இச்சய்தி வெளியானவுடன் பெரும் அதிர்வு அலைகள் அமெரிக்காவில் எழுந்தன. என் மனம் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. இக்கொலை முயற்சி இன்றையச் சூழலில் வெறும் மத வெறி சார்ந்த நிகழ்வாக முடிந்து விடாது. சர்வதேச அமெரிக்க-ஈரானிய உறவுகள் தத்தளிக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் மதம் சார்ந்த மோதல்கள் இந்தியாவில் கூர்மையடைந்துள்ள சூழலில் இதன் அதிர்வுகள் வேறு தளங்களில் இந்தியாவில் எதிரொலிக்கும். கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து வரலாற்றையும் அதன் பின் சமகால விளைவுகளையும் இக்கட்டுரையில் சொல்ல விழைகிறேன். என் பார்வையில்.




புத்தக வெளியீடும் இந்தியாவின் இடையீடும் கொமேனியின் பத்வாவும்


சல்மான் ருஷ்டியின் புத்தகம் வெளிவந்து தடை செய்யப்பட்ட போது நான் பள்ளி இறுதியாண்டில் இருந்தேன். அப்போதைய பதின்மங்களில் அருண் ஷோரி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ராஜீவின் அரசியல், வி.பி.சிங்கின் எழுச்சி ஆகியவை என் தீரா அரசியல் பசிக்கு உணவாகியிருந்த காலம். அதனாலேயே சமீபத்திய நிகழ்வு எனக்கு மனத்தில் பல எண்ணங்களை கிளர்ந்தெழச் செய்தது. மேலும் ருஷ்டியும் இந்தியாவில் பிறந்தவர், அமெரிக்காவில் சம்பவம் நடந்ததெல்லாம் கூடுதல் காரணங்கள்


செப்டெம்பர் 1988-இல் ருஷ்டியின் “Satanic Verses” இங்கிலாந்தில் வெளியானது. அக்டோபர் 5-ஆம் தேதி 1988-இல் உலகிலேயே அந்நூலை தடைச் செய்த அரசு இந்தியாவின் ராஜீவ் காந்தி அரசு. அத்தடைக்குக் காரணமானவர்கள். அக்டோபர் 19 ருஷ்டி நியூ யார்க் டைம்ஸில் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதமெழுதினார். அக்கடிதத்தில் ருஷ்டி தடைக்கு முக்கியக் காரணமானவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சையத் சாஹாபுதீனையும் சல்மான் குர்ஷீதையும் குற்றம் சாட்டி அவர்களை தீவிரவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் சாடினார். அவர்கள் இருவரும் இன்றிருக்கும் அடைப்படைவாத தலைவர்களுடன் ஒப்பிட்டால் மிகச் சாதாரணர்கள் என்பது ஒரு வகையில் இந்தியா வந்தடைந்திருக்கும் மதச் சூழலுக்கு அடையாளம். சாஹாபுதீனூம் குர்ஷிதும் புத்தகத்தை படிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. புத்தக பதிப்பகமான பெங்குவினின் இலக்கிய ஆலோசகர் குஷ்வந்த் சிங் அப்புத்தகம் சர்ச்சையை உண்டாக்கும் என்று கூறியதாகவும் அவர் வெளியிட்ட புத்தக மதிப்புரை தடைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.


ருஷ்டியின் நாவல் வெளிவந்த போது ராஜீவின் அரசு இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை மாறி, மாறி மனம் குளிர்விக்க அரை வேக்காடுத் தனமான, அதே சமயம் மிக அபாயகரமான, முடிவுகளை எடுத்து இந்தியாவை தத்தளிக்க வைத்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் புதிதாக முளைத்திருந்த விஷ்வ இந்து பரிஷத் ராம ஜென்ம பூமி சர்ச்சையையும் கையிலெடுத்து வட இந்தியாவை கொந்தளிக்க வைத்துக் கொண்டிருந்தது.

இந்தியாவில் பாஜகவும் இந்துத்துவ மதவாதத்தின் எழுச்சியும் பற்றி இன்று எழுதும் அநேக ஆய்வாளர்கள், முன்னர் சொன்ன காரணங்களோடு, சுட்டிக் காட்டும் வேறு காரணங்கள் அக்காலத்தில் தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பப்பட்ட ராமாயணம் (1987) மஹாபாரதம் (1988) தொடர்கள் ஆகும். அவை இந்தியாவின் காப்பியங்கள், இந்தியர்கள் எல்லோருக்குமானது என்பதெல்லாம் உண்மையே. அதே சமயம் இந்துக்களுக்கு அவை வெறும் இலக்கிய ஆக்கமோ தத்துவத் தேடலோ அல்ல மாறாக அவர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கைக்களின் தூண்களுமாகும். அக்காலத்தில் ஓரளவேனும் அறிதலுடன் இருந்த யாருக்கும் அத்தொடர்களின் கலாசார தாக்கம் தெளிவாக நினைவில் இருக்கும். அதே காலத்தில் ஜவஹர்லால் நேருவின்இந்தியாவை கண்டடைதல்நூலும்பாரத் ஏக் கோஜ்என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டதெனினும் அதன் தாக்கம் மிகச் சொற்பம்


ருஷ்டி நாவலின் சர்ச்சைக்கு முன்பே ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம் பெண்ணுக்கு வழங்கிய ஜீவனாம்ச  உரிமையை ரத்து செய்து பாராளுமன்றத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடி பணிந்து, 1985-இல் ராஜீவ் அரசு ஒரு சட்டத்தை அமல் செய்தது இந்தியாவெங்கும் அதிர்ச்சி அளித்தது. சுதந்திர இந்தியாவில் இந்துத்துவத்துக்கு வித்திட்ட தருணம் என்றால் அது தான். அதையடுத்து இந்த்துவர்களின் மனம் குளிர 1986-இல் பாப்ரி மஸ்ஜித்தை ராஜீவ் அரசு திறந்துவிட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளும் பிறகு தொடர்ந்து ராமாயண, மகாபாரத சீரியல்களும், தேர்தல் களத்தில் அருண் கோவில் காங்கிரஸ் மேடைகளில் ராமனாக தோன்றி பிரச்சாரம் செய்ததெல்லாம் மதச் சார்பின்மைக்கு சாவு மணி அடித்தத் தருணங்கள். ராஜீவின் முதிர்ச்சியின்மை, இந்திய அரசியல் பற்றிய அறியாமை எல்லாம் இந்த அபாயகரமான முடிவுகளுக்கு காரணமாயின. இச்சூழலில் தான் 1989-இல் ருஷ்டி நாவல் வெளிவந்து தடையைச் சந்தித்தது


பாஜகவின் எழுச்சியில் ஷா பானோ வழக்குக்கு எந்தளவு முக்கியத்துவம் உண்டோ அதே அளவு ருஷ்டி நாவலின் தடைக்கும் முக்கியத்துவம் உண்டு. புத்தகத்துக்கு எதிராக, தடை செய்த பின்பும், இந்தியாவில் வெடித்த முஸ்லிம் கிளர்ச்சிகளில் மும்பையில் பிப்ரவரி 1989-இல் 2000 முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது கலவரம் வெடித்தது, போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிர் இழந்தனர், 50 பேர் காயமுற்றனர். இக்கிளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஈரானின் அதிபர் அயத்தொல்லா கொமேனி, பிப்ரவரி 14 அன்று, ருஷ்டியைக் கொல்வதற்கு ஆணையிட்ட பத்வா தான்.


செப்டம்பர் 1988-இல் புத்தகம் வெளியானதை தொடர்ந்து இங்கிலாந்தில் புதிதாக குடியேறி இருந்த அநேக முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக இங்கிலாந்தில் தொடர்ச்சியாக புத்தக எரிப்புகள், தடைச் செய்யக் கோரிக்கை, தங்கள் கடவுளை அவமதித்து விட்டதாக வழக்கு (இங்கிலாந்தில் மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதற்கு எதிராக கிறிஸ்தவத்தை பாதுகாக்கும் பொருட்டு இருந்த, பெருமளவு பயன் இழந்துப் போன சட்டம் இருந்தது) ஆகியவை தொடர்ந்தன. புத்தகங்களை எரிப்பதை நாஜிக்களோடு தொடர்பு படுத்தும் மேற்குலகுக்கு, குறிப்பாக ஹிட்லரை எதிர்ப்பதில் முன்னனியில் இருந்ததாக கருதிக் கொள்ளும் இங்கிலாந்துகாரர்களுக்கு ருஷ்டியின் புத்தகத்தை எரிப்பது நாஜித்தனமாகத் தெரிந்தது. இவையெல்லாம் உலகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானதை கொமேனி பார்த்தார்.


1980-88 வரை நடந்த ஈரான் - ஈராக் போர் யாருக்கும் வெற்றி என்று முடியாமல் ஏதோ ஒரு தேக்க நிலையில் முடிவடைந்தது. ஈரானின் பொருளாதாரம் வெகுவாக நசிந்த நிலையில் இருந்தது. 1979-இல் புரட்சி வெடித்து கொமேனி பதவிக்கு வந்த புதிதில் அமெரிக்க தூதரக அதிகாரிகளை சிறைப் பிடித்து ஒரு வருடம் பணையக் கைதிகளாக வைத்திருந்தது மேற்குலகை மொத்தமாக ஈராக் பக்கம் இழுத்தது. நலிவடைந்த பொருளாதாரத்தையும் நிமிர்த்த போதிய வழிகள் இல்லாத கொமேனிக்கு ருஷ்டி விவகாரம், வரலாற்றில் எப்போதும் நடப்பதுப் போல், வகையான திசைத் திருப்பலுக்கு உதவியது என்று சொல்ல இடமுண்டு. அதற்காக மதப்பற்றுக் காரணமேயில்லை என்று சொல்லி விட முடியாது


பத்வாவுக்குப் பின் ருஷ்டி பல வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி அதன் பின் அதை பற்றி “Joseph Anton” என்ற தலைப்பில் புத்தகமும் வெளியிட்டார். அது அவ்ர தலைமறைவு வாழ்க்கையின் போது சூடிக் கொண்ட சங்கேத பெயர், ஜோசப் கான்ராட், ஆண்டன் செகாவ் ஆகித இருவரின் பெயர்களில் இருந்து உருவானது. ருஷ்டி அக்காலத்தில் பிரிடிஷ் பிரதமர் தாட்சரின் கடும் விமர்சகர் என்ற போதும் அரசு அவரை பாதுகாத்தது என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.


ருஷ்டியை கைவிட்ட முற்போக்காளர்கள்


2019-இல் பி.பி.சி ருஷ்டி மீதான பத்வாவின் 30-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ஒரு ஆவணப் படம் வெளியிட்டது. உரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது முற்போக்காளர்கள், லிபரல்கள், எப்படி ருஷ்டி விவகாரத்தில் சறுக்கினார்கள் என்று. ருஷ்டியே ‘New York Review of Books’ பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில் லிபரல் கட்சியை சேர்ந்த மூவரை சுட்டி அவர்கள் எப்படி மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தை (Blasphemy laws) இன்னும் விரிவாக்க ஆதரவளித்தார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆவணப் படத்தில் தோன்றும் பீட்டர் தாச்சல் எனும் மனித உரிமையாளர் மேற்குலக முற்போக்காளர்கள் எப்படி பத்வாவை எதிர்க்கும் போதே ஒருஆனால்சேர்த்து ருஷ்டி எல்லை மீறினார் என கண்டித்ததைச் சுட்டிக் காட்டி அவ்வகை முரண்பாடே வலது சாரிகளுக்கு வழி வகுத்தது என்கிறார்


கிர்ஜா குமார் என்பவர் எழுதிய புத்தகத்தில் இந்திய முற்போக்காளர்கள் எப்படி சறுக்கினார்கள் என்று பட்டியலிட்டார். இக்பால் மசூத் மத நம்பிக்கையற்ற ருஷ்டி இப்படி எழுதி இருக்கக் கூடாதென்றார். ரபீக் ஸக்காரியாருஷ்டி தான் எழுதியது புனைவு என்று சொன்னால் அவர் பொய்யர்என்றார். .ஜி.நூரனி இஸ்லாமியர் ருஷ்டியின் நாவலுக்கு தடைக் கோருவதை விட இழிவாகக் கருதி ஒதுக்கி விடலாம் என்று யோசனை சொன்னார்


ஜாமிய மில்லியாவில் பணியாற்றிய முஷிருல் ஹசன் ருஷ்டிக்கு மெலிதான ஆதரவு கொடுத்ததற்கே கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்து அவர் உயிருக்கே உத்தரவாதமில்லை என்ற நிலையை உருவாக்கினர். இதில் கல்லூரி அரசியலும் சில பணி சார்ந்த காழ்ப்புகளும் இருந்தன. முஷிருல் ஹசன் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி மிக மழுப்பலாக நழுவினார்


தாச்சல் சொன்னது போல் இந்தியாவிலும் வலது சாரிகள் இந்த லிபரல்களின் சறுக்கல்களை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் அருண் ஷோரி. அக்காலக்கட்டத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எடிட்டராக அருண் ஷோரி ராஜீவ் அரசுடன் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மிகப் பெரிய போர் தொடுத்திருந்தார். ஊழலுக்கு எதிரான துணிச்சலான பத்திரிக்கையாளராக என் போன்ற இளம் வயதினர் பலருக்கு ஹீரோவாக இருந்த அவர் தன் காவி நிறத்தை வெளிக் கொணர்ந்தார். “What about the verses themselves?” என்ற தலைப்பில் குரானிலும் பைபிளிலும் இருக்கும் வன்முறை தொனிக்கும் மேற்கோள்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில் இந்து மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் இருந்ததாக நினைவில்லை. பின்னர் பத்வாக்கள் பற்றி அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்புடன் கொஞ்சம் அறிவு நேர்மையில்லாமல் ஒரு புத்தகமே எழுதினார்


இன்று வரை முற்போக்காளர்கள் சிறுபான்மையினரை விமர்சித்தால் தாங்கள் குற்றம் சாட்டப்படுவோமோ என்றும் விமர்சனங்களை மதவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்வார்களோ என்றும் அஞ்சி மௌனமாயிருப்பதோ அல்லது முட்டுக் கொடுப்பதோ செய்கிறார்கள். இது கடைசியில் எதற்கும் உதவாமல் அருண் ஷோரிகள் உருவாவதில் தான் முடிகிறது. விமர்சனங்களை நேர்மையுடனமும் தெளிவுடனும் உரையாடக் கூடிய சாத்தியக் கூறுகளுடனும் முன் வைப்பதே முக்கியம். அடுத்தது சிறு பான்மையினரிடம் நேர்மையான விமர்சனங்களை வைக்க அஞ்சுவதே ஒரு வகையில் அவர்களை சிறு பிள்ளைத் தனமாக நடத்துவதே


இந்துத்துவர்களின் மாய்மாலம்


தமிழை ஆண்டாள்என்ற தலைப்பில் வைரமுத்து தினமணியில் ஆண்டாள் பற்றியக் கட்டுரையில் கேசவன் வேலுதாட் எழுதிய ஆய்வை குறிப்பிட்டு ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என எழுதப் போய் பெரும் சர்ச்சை வெடித்தது. முடிவில் தினமணி ஆசிரியர் ஆண்டாள் கோயிலுக்குப் போய் இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்து நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்டார். இப்படியொரு துராக்கிரதமான செயலுக்கு இந்திய பத்திரிக்கை உலகமே வெகுண்டு எழுந்திருக்க வேண்டும் ஆனால் பேரமைதி தான் பதிலாக கிடைத்தது


சமீப காலம் வரை இந்து மதத்தைக் கூட விமர்சித்தோ, ஏன் கிண்டலடித்தோ கூட, பேசி விட முடியும் ஆனால் சாதிகளை, தமிழகத்தில் இது பிராமணர்களை தவிர்த்து என்று புரிந்துக் கொள்ள வேண்டும், எதுவும் சொல்லி விட முடியாது. ‘மாதொரு பாகன்நாவலுக்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரும் அச்சுறுத்தலை ஒரு சாதியினரால் சந்தித்தார். சுஜாதாவின் ஒரு தொடர்கதை ஒரு சாதிப் பெண்ணை கவர்ச்சியாக வர்ணித்ததற்காகவே நிறுத்தப்பட்டதென கேள்விப் பட்டிருக்கிறேன். இந்துத்துவ வளர்ச்சிக்குப் பின் இப்போது இந்து மதம் பற்றிய எந்த சொல்லாடலும் ஆபத்தானது தான். இன்று கமல்ஹாசனால்காதலா காதலாமாதிரியான படத்தை, பல முக்கிய கதாபாத்திரங்களிலும் படத்தின் ஆக்கத்திலும் பிராமணர்களே இருந்த போதிலும். வெளியிட்டுவிட முடியாது


நாங்கள் என்ன கொலையா செய்தோம்?” என்பார்கள் இந்துத்துவர்கள். பல சமயங்களில் இந்துக்கள் வெறும் விரலசைப்பிலேயே காரியத்தை முடித்துக் கொள்ள முடியும். மேலும் கௌரி லங்கேஷ், தாபோல்கர் ஆகியோரின் கொலைகளை நாம் மறக்க முடியுமா


இஸ்லாமியரும் விமர்சனங்களை எதிர் நோக்குதலும்


மத அடிப்படைவாதிகளல்லாத சாமானியர்களிடையே கூட இஸ்லாமியர் மதம் சார்ந்த எந்த மிக மெலிதான விமர்சனத்தைக் கூட ஏற்க மாட்டார்கள், வன்முறையான எதிர்வினையும் நிகழலாம், என்கிற அபிப்ராயம் நிலவுகிறது.


நபியை சித்தரித்த சார்லி ஹெப்டோவின் சித்திரங்களுக்காக அப்பத்திரிக்கை பணியாளர்கள் கொல்லப்பட்ட போது செய்தியுடன் தொடர்புடைய அச்சித்திரங்களை அமெரிக்க செய்தி நிறுவனங்கள்இஸ்லாம் மீதுள்ள மரியாதைக்காக காண்பிக்கவில்லைஎன்று சொன்னாலும் எல்லோருக்கும் அது அச்சத்தின் வெளிப்பாடே என்று தெளிவாகத் தெரிந்தது. அந்த உலகளாவிய சர்ச்சை பற்றிய ஓர் அமெரிக்க பல்கலைக் கழக புத்தகம் கூட அச்சித்திரங்களை வெளியிடாமல் புத்தகத்தை வெளியிட்ட போது பலர் இது பல்கலைக் கழக அறிவுச் செயல்பாட்டையே அச்சுறுத்தும் அவலச் சூழல் என்றனர்


சமீபத்திய நூபுர் ஷர்மா சர்ச்சையின் போது ஒரு இஸ்லாமியர் (எந்த பத்திரிக்கையில் வெளி வந்த கட்டுரை என்று நினைவில்லை) எழுதிய கட்டுரையில் தங்கள் சமூகம் இனியும் இப்படி இஸ்லாம் பற்றியோ நபிகளார் பற்றியோ தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டுமா என்று கேட்டார். எதிர்வினையே கூடாதென்பதல்ல அவர் வாதம்


இஸ்லாமியரிடையே சுய விமர்சனமே இல்லையென்று சொல்லி விடவும் முடியாது. இந்த ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்திலேயே இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் பேஸ்புக்கில், “உண்மையில் ருஷ்டி மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் இலக்கியப் புலத்தில் இல்லாதவர்கள். வாசிப்புப் பழக்கமற்றவர்கள். அல்லது ருஷ்டியின் படைப்புகளின் ஒரு பக்கத்தைத்தானும் வாசிக்காதவர்கள். அல்லது ருஷ்டி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள். கடும் போக்காளர்களால் உணர்ச்சியூட்டப்பட்டவர்கள்.” என்று எழுதினார். பலர் இஸ்லாமியர் அதற்காக அவரை கடிந்துக் கொள்ளவும் செய்தார்கள்



இந்திய இஸ்லாமிய சமூகத்தின் எதிர்வினைகள் குறித்து ஒரு அவதானிப்பை முன் வைக்க விழைகிறேன். ருஷ்டி விவகாரத்துக்கு 6 வருடம் முன்பு தான் 1983-இல் அசாமில் நடந்த தேர்தலின் போது நெல்லியில் 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். அசாம் அமைதி உடன்படிக்கை 1985-இல் கையெழுத்தான போது ராஜீவ் அரசு குற்றம் சாட்டப்பட்ட சொற்பமான வழக்குகளையும் ரத்து செய்தது. காஷ்மீர் 370 ரத்து, குடியுரிமைச் சட்டம், அயோத்தியா தீர்ப்பு இவை எதற்கும் இஸ்லாமியர் வன்முறை போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய சத்தியாகிரகப் போராட்டமே முன் எடுத்தார்கள். ஆனால் நூபுர் ஷர்மாவின் பேச்சுக்கும், அது போன்ற பிற தருணங்களிலும், வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேற்றுமைக்கான காரணம் தெரியவில்லை


இன்னொன்றையும் சுட்டிக் காட்ட வேண்டும். ருஷ்டி, 9/11 போன்று இந்தியாவுக்கு வெளியிலான பிரச்சனைகளில் இந்திய இஸ்லாமியர் கருத்துக் கூறல் என்கிற நிலையைத் தாண்டி கிளர்ச்சிகள் என்று, மதத்தை முன் வைத்து, ஈடுபடும் போது சராசரி இந்து இந்தியன் இந்த தேசம் கடந்த, மதம் சார்ந்த, அக்கறையினை கேள்விக் குறியோடு தான் எதிர்கொள்வான். இன்று இதன் இன்னொரு பக்கமாக கடல் கடந்த இந்துத்துவத்தையும் சொல்ல வேண்டும். அமெரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலருக்கு அமெரிக்க இந்துத்துவர்கள் ஓர் அச்சுறுத்தும் சூழலையே உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. ஆனால் இந்திய இந்துக்கள் பிந்தியதை கணக்கில் கொள்வதில்லை


ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரானிய பத்திரிக்கைகளில் சில மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றன. சிலர் இந்நிகழ்வு ஈரானை பாதிக்கும் என்றும் அஞ்சுகின்றனர். இது ஈரானை மேலும் தனிமைப் படுத்தும் என்கிறார் ஒரு முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி


கொலை முயற்சியும் சர்வதேச தாக்கமும்


கொலை முயற்சி சார்ந்த சர்வதேச தாக்கத்தைப் பார்க்கும் முன் கொஞ்சம் வரலாற்றை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்


ஜான் காஸ்வினியனின் (John Ghazvinian) “America and Iran: A History, 1720 to the Present” புத்தகம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இருக்கும் மிக நீண்ட வரலாற்றைப் பேசுகிறது. 1790-களில் தாமஸ் ஜெபர்ஸனும் ஜான் குவின்ஸி ஆடம்ஸும், இருவரும் ஜனாதிபதிகளானார்கள், பெர்ஷியாவின் வரலாற்றை அமெரிக்காவை வழி நடத்த உதவும் வழிகள் இருக்குமா என்பதற்காக தேடிப் படித்தார்கள். 1919-இல் டெஹ்ரானில் அமெரிக்காவுக்கு ஆதரவாக கிளர்ச்ச்சிகள் நடந்துள்ளன. அப்படிப்பட்ட உறவில் இருந்து அமெரிக்க சி.. நடத்திய ஆட்சி கவிழ்ப்பு, கொமேனியின் மேற்குலக எதிர்ப்பு என்று உறவுகள் பாதாளத்துக்கு சென்றது


மத்தியக் கிழக்கு நாடுகளில் கணிம வளத்துக்காகவும் தங்கள் காலனியாதிக்கத்துக்காகவும் மேற்குலகம் தாயக் கட்டை விளையாடியதை எலிஸபத் தாம்ஸன் “How the West Stole Democracy from the Arabs: The Syrian Congress of 1920 and the Destruction of Its Historic Liberal-Islamic Alliance” புத்தகத்தில் சிரியாவில் பிரான்ஸும் இங்கிலாந்தும் எப்படி அங்கு ஜனநாயக மரபுகள் மலர்வதை குழித் தோண்டி புதைத்தனர் என்று விவரிக்கிறார். உலகத்துக்கே தேவைப்படும் கணிம வளம் கொட்டிக் கிடப்பது மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ஒரு சாபக் கேடு தான். இச்செய்திகளை நாம் கொஞ்சம் நினைவில் நிறுத்தி தான் மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய மரபுகளையும் அவற்றின் சிக்கல்களையும் புரிந்துக் கொள்ள வேண்டும்


ஹாதி மடார், 24 வயது, என்கிற நியூ ஜெர்ஸியை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடையவர் ருஷ்டியின் மீதான கொலை முயற்சிக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார். மடார் கிட்டத்தட்ட 6 மணி நேரம் பயணம் செய்து ஷுடாக்வா நகரில் நடைபெறும் ருஷ்டியின் நிகழ்வுக்குச் சென்று திடீரென்று மேடை மீதேறி 10 முறை ருஷ்டியின் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தினார். ஐந்து பேர் கஷ்டப்பட்டு தான் அவரை ருஷ்டியிடமிருந்து பிரித்து கைப்பற்றினர். இது திட்டமிட்ட கொலை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலும் மடாரின் வயதை வைத்துப் பார்க்கும் போது அவர் ருஷ்டியின் நாவல் வெளியான போது கொமேனேயின் பத்வா வெளியான போதோ பிறக்கவேயில்லை. அப்படியென்றால் அந்த பத்வாவால் உந்தப் பட்டாரா என்று தெரியவில்லை ஆனால் இவர் ஈரானிய அடிப்படைவாதத்துடன் ஒத்துப் போகிறவராக இருந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.


இவ்விடத்தில் சில சர்வதேச கோணங்களைப் பார்போம். ஈரானின் அணு ஆராய்ச்சி பல காலம் மேற்குலக நாடுகளால், குறிப்பாக அமெரிக்காவால், அச்சத்தோடு பார்க்கப்பட்டது. ஒரு முறை ஈரானின் அணு உலையை கணிணி மூலம் கட்டுடைத்து செயலிழக்க செய்தனர் அமெரிக்காவும் இஸ்ரேலும். 2016-இல் பராக் ஒபாமா ஈரானுடன் அவர்கள் அணு ஆராய்ச்சியை கட்டுபடுத்தும் ஒப்பந்தத்தை சொந்த கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு இருந்த போதும் கையெழுத்திட்டார். பின்னர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை குப்பையில் போட்டார், ஈரானியர்களும் அதைத் தான் விரும்பினர். ஜோ பைடன் பதவியேற்றதும் மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுக்க நினைத்து முயற்சிகளை முடுக்கி விட்டார். இத்தருணத்தில் இந்த தாக்குதல் நடந்ததோடு அமெரிக்க மண்ணிலேயே நடந்துள்ளது மிகப் பெரிய பின்னடைவு


ஈரானிய அரசை சார்ந்தவர்கள் டிரம்ப் அரசில் முக்கிய பாதுகாப்பு பொறுப்பில் இருந்த ஜான் போல்டன், மைக் பாம்பேயோ ஆகிய இருவரையும் கொலை செய்ய முயல்கிறார்கள் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் சொல்கின்றன. ருஷ்டி மீதான தாக்குதலையும் இப்பின்னணியில் பார்த்தால் இதன் சர்வதேச கோணங்கள் எப்படி விரிகின்றது என்று புரியும்



இனி என்ன?


விசாரணையும் வழக்கும் நடக்கும் போது தான் ஹாதி மடாரின் உண்மையான நோக்கங்கள் தெளிவாகும். இஸ்லாமிய சமூகம் எப்படி இதனை எதிர்கொள்கிறார்கள் என பலரும் உற்று நோக்குகிறார்கள். ஈரானிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள், இந்திய இஸ்லாமியருள்ளும் வன்முறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். இக்குரல்கள் வலுப்பெற வேண்டும். இது ஏதோ வலது சாரி அரசியலுக்கு பயந்தோ வேறு எதையும் நிரூபிப்பதற்காகவோ இஸ்லாமியர் செய்யத் தேவையில்லை. அதுவல்ல நோக்கம். அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் சமீபத்தில் வலுப்பெற்றிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடமிருந்து கிறிஸ்தவத்தை காக்க வேண்டும், அதுவே இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் இந்துத்துவத்திடமிருந்து இந்து மதத்தை மீட்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் இறை நம்பிக்கையாளனல்ல ஆனல் என் தந்தையின் மூலம் இறை நம்பிக்கையின் மேன்மைகளை மறுக்காதவன் மதங்களின் அளப்பரிய பண்பாட்டு பங்களிப்புகளை மறுக்காதவன். அதே சமயம் மத அடிப்படைவாதிகளிடமிருந்து மதங்களைக் காப்பதும் இன்றியமையாத கடமையென்றும் நம்புகிறேன்.


வெறுப்புச் சொல்லாடல்கள் எப்போதும் ஆபத்தானவை அவை எப்போதேனும் தனக்கான இரத்த பலியைக் கோரும் என்று நாம் உணர வேண்டும். ருஷ்டி மீதான பத்வா 34 வருடம் கழித்து அவரை வீழ்த்த முயன்றதெனினும் இதற்கு முன்பே அப்புத்தகத்தின் ஜப்பானிய மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டதையும் வேறொரு பதிப்பாளர் தாக்கப்பட்டதையும் நாம் மறக்கக் கூடாது. கூடவே அந்த பத்வாவினால் நடந்த கிளர்ச்சிகள் உயிர் இழந்தது எல்லோரும் இஸ்லாமியர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 10-க்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியர் ஓர் ஆங்கிலேயர் எழுதிய நூலுக்காக தங்கள் உயிரை இழந்துள்ளனர்.


ஷுடாக்வா என்ற பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது ராபர்ட் பிர்ஸிக்கின் “Zen and the Art of Motorcycle Maintenance” புத்தகத்தில். அன்று முதல் அந்நகருக்கு செல்ல வேண்டுமென ஆசைப் பட்டேன். இப்போதோ அந்நகரின் பெயரை கூகிளில் போட்டாலே இந்த கொலை முயற்சி பற்றிய செய்தி தான் வருகிறது. ருஷ்டி பேசவிருந்த தலைப்பு அமெரிக்கா எழுத்தாளர்களுக்கு புகலிடமாக இருப்பது பற்றி. இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின் அலெக்ஸாண்டர் ஸோல்சினிட்சின் போன்றவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டில் அதுவும் இலக்கியம் பண்பாடுகளைப் பேணும் நியூ யார்க் மாநிலத்தில் ருஷ்டி தாக்கப்பட்டிருப்பது சோகம். இதே நியூ யார்க் மாநிலத்தில் தான் நியூ யார்க் நகரின் பூங்காவில் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் லென்னன் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு துயரமான ஒற்றுமை


இக்கட்டுரை முதலில் அருஞ்சொல்லில் வெளிவந்தது https://www.arunchol.com/aravindhan-kannaiyan-on-salman-rushdie


Referencences.


  1. https://www.facebook.com/arvindkannaiyan/posts/pfbid0r1qzRPuPe2zz239feEanrPURVZAmSF4m5zi1fjTZSJUV38NcXfwpG8xovBqavaPWl 
  1. https://en.wikipedia.org/wiki/The_Satanic_Verses_controversy#1988 
  1. https://www.thehindu.com/news/national/rajiv-gandhi-govt-decision-to-ban-rushdies-book-was-justified-taken-for-law-order-reasons-natwar-singh/article65765097.ece 
  1. https://www.opindia.com/2022/08/salman-rushdie-rajiv-gandhi-india-first-country-ban/ 
  1. https://en.wikipedia.org/wiki/Syed_Shahabuddin 
  1. https://en.wikipedia.org/wiki/Mohd._Ahmed_Khan_v._Shah_Bano_Begum 
  1. https://www.theguardian.com/books/2009/feb/14/salman-rushdie-ayatollah-khomeini-fatwa 
  1. https://www.theguardian.com/books/2012/sep/14/looking-at-salman-rushdies-satanic-verses 
  1. https://www.indiatoday.in/magazine/society-the-arts/books/story/19951130-book-review-arun-shourie-world-of-fatwas-807981-1995-11-30 
  1. https://www.csmonitor.com/1992/0505/05042.html 
  1. https://www.nytimes.com/1988/10/19/opinion/india-bans-a-book-for-its-own-good.html 
  1. https://apnews.com/article/e403d028139bda7dd8c054545c0cf063 
  1. https://en.wikipedia.org/wiki/Ramayan_(1987_TV_series) 
  1. https://en.wikipedia.org/wiki/Mahabharat_(1988_TV_series) 
  1. https://en.wikipedia.org/wiki/Bharat_Ek_Khoj 
  1. https://en.wikipedia.org/wiki/Bible_Ki_Kahaniyan 
  1. https://www.theguardian.com/books/2012/sep/14/looking-at-salman-rushdies-satanic-verses 
  1. https://www.upi.com/Archives/1989/02/24/Police-fired-Friday-on-2000-Moslems-rioting-in-Bombay/6389604299600/ 
  1. https://en.wikipedia.org/wiki/Iran_hostage_crisis 
  1. https://www.nybooks.com/articles/1989/03/02/the-book-burning/ 
  1. https://www.google.com/books/edition/The_Book_on_Trial/n-KUICFfA00C?hl=en&gbpv=1&kptab=getbook&bsq=mushirul%20hasan 
  1. https://www.csmonitor.com/1992/0505/05042.html 
  1. https://www.nytimes.com/1989/02/27/world/new-york-muslims-pledge-more-protests-on-rushdie-s-book.html 
  1. https://indianexpress.com/article/opinion/columns/ayodhya-ram-temple-bhoomi-pujan-destination-janmasthan-6541313/ 
  2. https://www.youtube.com/watch?v=42iV2U_nsfY 
  1. https://en.wikipedia.org/wiki/Peter_Tatchell 
  1. https://www.facebook.com/jiffry.hassan.31/posts/pfbid037thnm4vtDkUsSbSAhPDBxpbdkPZMFrhtTKcjDySr7xHjHMLHNRMbqkBrmRYFGLctl 
  1. https://www.aljazeera.com/news/2022/8/13/iran-lebanon-reaction-to-salman-rushdie-attack 
  1. https://contrarianworld.blogspot.com/2018/01/andal-vairamuthu-and-people-gone-berserk.html 
  1. https://www.nytimes.com/2022/08/13/nyregion/rushdie-video-stabbed-ny.html 

No comments: