Sunday, October 2, 2016

இந்தியாவின் நாற்றங்கால், காந்தி. செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையா? நீலகண்டனுக்கு மறுப்பு

காந்தியும் நேருவும் "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பங்களில் இருந்து வந்து காங்கிரஸ் தலைமைக்கு வந்ததிலிருந்து இரண்டாம் நிலைத் தலைவர்கள் உருவாகாத "மலட்டுத் தன்மை" உருவானது என்று அரவிந்தன் நீலகண்டன் தன் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். மதிமாறன் எனும் திராவிட இயக்கத்தவர் காந்தியின் உடை ஒரு காஸ்டியூம் என்று பேசியதை மறுத்து எழுதிய போது நான் நீலகண்டன் போன்ற இந்துத்துவர்களின் அவதூறையும் சுட்டிக் காட்டினேன். இன்று காந்தி ஜெயந்தி ஆகவே விரிவான மறுப்புரை.

கருணாநிதிகளையும் நரேந்திர மோடிகளையுமே பார்த்துப் பழகிய கண்களுக்கும் மனங்களுக்கும் காந்தியையும் நேருவையும் புரிந்து கொள்ளும் அறிவுத் திறன் இல்லாதது ஆச்சர்யமல்ல. காந்தி எப்படித் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் என்ற வரலாறைப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம்

அரசியல் அனாதையான காந்தி

ஜனவரி 9 1915 காந்தி மும்பை வந்தடைந்தார். அவருக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு மதிப்பளித்து. வரவேற்புகளும் புகழுரைகளும் காந்தியைச் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்தன. நெடுங்காலமாக இந்தியாவில் வாழாதக் காரணத்தால் இந்தியாவை முதலில் அறிந்து கொள்ளும் வரை மவுனம் காக்கும்படி கூறிய கோகலேவின் கட்டளையை ஏற்றுக் காந்தி அரசியல் தளத்தில் மவுனம் காத்தார். அரசியலில் ஈடுபடாவிடினும் சமூகப் பணியாற்ற விழைந்த காந்தி கோகலே நடத்திய 'ஸர்வண்ட்ஸ் ஆப் இந்தியா'வில் இணைய விண்ணப்பித்தார். கோகலேவின் தோழர்கள் காந்தி சேருவதை விரும்பவில்லை. விண்ணப்பம் ஏற்கப் படவில்லையென்றாலும் பணியாற்ற விரும்பிய காந்தி சங்கத்தின் கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். துணுக்குற்ற கோகலே காந்தியை தடுத்தார். பின்னர் ஆசிரமம் தொடங்க காந்தி எத்தனித்த போது கோகலே தன் சங்கத்திலிருந்து பண உதவி செய்யப் படும் என்றார். ஆனால் ஒரே மாதத்தில் கோகலே இறந்தார். தலைமைப் பொறுப்பேற்ற ஸ்றீனிவாச சாஸ்திரியும் ஏனையோரும் காந்தியிடம் சங்கத்தின் விதிகளின் படி ஒரு வருடம் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டுமென்றனர். அதை ஏற்றுக் காந்தி இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பத்தில் பிறந்தவர் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பணித்தார். அவ்வகுப்புக் கழிப்பறைகளில் மலம் கனுக்கால் வரை தேங்கி நிற்கும் அவலைத்தைப் பின்னர்க் காந்தி எழுதினார். அந்நாட்களில் சென்றவிடமெல்லாம் கொண்டாடப் பட்டாலும் எந்த இயக்கமும் காந்தியை ஏற்கத் தயாரில்லை. காந்தி அரசியல் அனாதையாக உலா வந்த காலம் அது.



தமிழகம் வந்த ஏழை தேசாந்திரித் தம்பதி. மாயவரம் உரை.

பார்ப்பதற்கு வடக்கிலிருந்து வந்த ஏழை தேசாந்திரிகள் போல் துணி மூட்டையுடனும், கசங்கிய உடையிலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் இருந்து காந்தியும் கஸ்தூரிபாவும் சென்னை புகை வண்டி நிலையத்தில் இறங்கினார்கள் என்கிறார் டி.ஜி. டெண்டுல்கர். ஜி.ஏ. நடேசன் வீட்டில் ஒதுக்கப்பட்ட அறையில் மேஜை, நாற்காலி, படுக்கை என்று ஏற்பாடாகியிருந்தது அவற்றை அப்புறப் படுத்த சொன்னார் காந்தி.

டெண்டுல்கரின் புத்தகத்தில் காணப்படும் உரைகளின் தமிழாக்கம் "தமிழ் நாட்டில் காந்தி' எனும் புத்தகத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 21 1915 நடந்த வரவேற்பில் தமக்களிக்கப் பட்ட புகழுரைகளை மறுதலித்த காந்தி தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் உயிர் நீத்த தமிழர்களை நினைவுக் கூர்ந்து "அந்தப் பெரிய மனிதர்களுக்கும் மாது சிரோன்மணிகளுக்கும் நான் உணர்வூட்டியதாக நீங்கள் கூறீயிருப்பதை நான் ஏற்க முடியாது. நம்பிக்கையுடன் எவ்விதமான பலனையும் எதிர்பாராது பணியாற்றிய அந்த எளிய மக்கள் தான் எனக்கு உணர்வூட்டியவர்கள்". அன்றும் இன்றும் இப்படித் தனக்கான புகழுரைகளை மறுத்த தலைவர்கள் சொற்பம். காந்தியின் அடியொற்றி வந்த நேரு அத்தைகயப் பண்பாளராக இருந்தார். அது அவர் காந்தியிடம் பயின்றது.

சென்னையில் அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஸ்தாபனங்களைக் கண்ட காந்தி ஸ்தாபனத்துக்குரிய கட்டிடங்கள் படாடோபமாகவும் 'பஞ்சமர் பள்ளி' தகரக் கொட்டகையில் இயங்குவதையும் கண்டு வெகுண்டார். பின்னர் மாயவரத்தில் பேசிய காந்தி தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசினார்.

"தங்களுடைய தற்கால நிமைமை பூர்வீகத் தவபலத்தால் தலைமுறை தத்துவமாய்க் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்...வெளிநாடுகளில் இருந்து கொண்டு நான் இந்து மதத்தைப் பற்றி அறிந்த வரை தாழ்த்தப்பட்டோர் முதுகில் ஏறி உட்காருவது இந்து மதமல்ல என்றே தெரிந்தது. இது தான் இந்து மதம் என்று என்னிடம் மெய்ப்பிக்கப்பெற்றால், நான் அதன் பகிரங்க விரோதியாவேன்."

காந்தியின் கருத்துகளை வெறும் பேச்சுகள் என்று ஒதுக்கிவிடக் கூடாது. காந்தியைப் போலல்லாது ஏழமையில் பிறந்த திலகர் பெண்கள் கல்வி, குழந்தைகளை மணம் செய்விப்பது, தாழ்ந்த சாதியினரின் கல்வி என்று ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் அதி தீவிர சநாதன இந்துவாகவே இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏழ்மையில் பிறந்தார்களா செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் பிறந்தார்களா என்பதல்ல முக்கியம் என்ன வாழ்க்கை வாழ்ந்தார்கள் யாருக்காகப் பேசினார்கள் எதன் பொருட்டுப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது தான் முக்கியம். ஒரு புறம் சநாதனம் பேசிய திலகர் இன்னொரு புறம் பிராமணீயத்தை தேசிய விழுமியங்களாக முன்னிறுத்திய பெஸண்ட் இவர்களிடையே எல்லோரும் கொண்டாட விரும்பிய ஆனால பின்பற்றத் தயாரில்லாத காந்தி.

மேலும் பேசிய காந்தி "இங்கே வரவேற்புரை ஆங்கிலத்தில் இருந்தது. காங்கிரஸ் மாநாட்டில் சுதேசிக் கொள்கையை ஆங்கிலத்தில் பிரகடனம் செய்கின்றார்கள்....நான் ஆங்கிலத்திற்கு எதிரியல்ல ஆனால் பிராந்திய மொழிகளின் சமாதியின் மீது ஆங்கிலம் எழுப்பப்படுமானால் நீங்கள் உண்மையான சுதேசித்தன்மையை ஆதரிக்கவில்லை என்பேன்". காந்திக்குப் பிறகு தான் காங்கிரஸில் பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸை மையப்படுத்தப் பட்ட ஸ்தாபனமாக இருந்ததைப் பிரதேசக் கிளைகள் திறக்கச் செய்து பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வைத்து எல்லாத் தளத்திலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டத் தலைவர்கள் மலரக் காரணம் காந்தியே.

"காந்தி, உட்கார்" வாரணாசியில் மோதிய காந்தியும் அன்னி பெஸண்டும்

பிப்ரவரி 4 1916 வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத் திறப்பு விழாவில் அன்னி பெஸண்டுடன் பேச அழைக்கப் பட்ட காந்தி வைஸ்ராயும், ராஜா ராணிகளும் செல்வந்தர்களும் வீற்றிருந்த மேடையில் சன்னதம் செய்தார்.

"விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றேன். அக்கோவில் இருக்கும் தெரு அசுத்தமாக இருக்கிறது. இது சரியா? இந்துவாக வலியோடு பேசுகிறேன். நம் கோவில்களே சுத்தத்திற்கும் விசாலத்திற்கும் எடுத்துக் காட்டாக இல்லாமல் போனால் நாம் அமைக்கப் போகும் சுயராஜ்ஜியம் எப்படி இருக்கும்?"

போலீஸ் பாதுகாப்போடு வளைய வந்த வைஸ்ராயை, "இப்படி வாழும்போதே செத்துக் கொண்டிருப்பதை விட வைஸ்ராய் செத்து விடலாம்". தீவிரவாதிகளின் மன நிலை புரிந்து கொள்ளக் கூடியது என்றார் காந்தி. சினத்தின் உச்சிக்குச் சென்ற பெஸண்ட் "காந்தி, உட்கார்" என்று ஆணையிட்டார்.

சம்பரான் போராட்டமும் காந்தி தலைமை நோக்கி நகர்ந்ததும்

கோகலேவின் மறைவுக்குப் பிறகு 1916-இல் கூடிய லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் திலகர் மீண்டும் காங்கிரஸில் இனைந்தார். ஒரு புறம் முஸ்லீம்களூடனான ஒப்பந்தம், திலகர் இனைப்பு, தீர்மானங்கள் என்று மாநாடு முக்கியத்துவம் பெற்ற போது அங்கே எந்தத் தலைமைப் பொறுப்பிலுமில்லாத காந்தியை ஓர் ஏழை விவசாயி அனுகினான்.

வடக்கே நேபாளத்தை ஒட்டிய பீகார் மாநிலத்தைச் சார்ந்த சம்பரான் எனும் கிராமத்து விவசாயிகளின் கண்ணீர் கதையைக் காந்தியிடம் சொன்னான் அந்த விவசாயி. அம்மாநாட்டில் குழுமியிருந்த அத்தனை தலைவர்களிடமும் செல்லத் துணியாத அந்த விவசாயி காந்தியை, ஒரு குஜராத்தியை, அணுக முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு அவ்வாறே செய்கிறான்.

சம்பரான் போராட்டம் பற்றி அறிய சிறந்த புத்தகம் ஜூடித் பிரவுன் எழுதிய "Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922". காந்தியின் தலைமை மலட்டுத் தன்மை வாய்ந்தது என்று விஷம் கக்கும் நீலகண்டன் போன்றோர் படிக்க வேண்டிய புத்தகம் அது.

ராஜேந்திர பிரசாத், கிருபளாணி என்று ஒரு சிறு அணி ஏற்கனவே சம்பரானில் இயங்கி வந்தது. தொண்டாற்றும் வழக்கறிஞர்கள் காசு பெறலாகாது என்று அவர்களுக்குக் காந்தி உணர்த்தினார். பின்னர்த் தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாகச் சொல்லி "எனக்குப் பிறகு இப்போராட்டத்தை யார் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று வினவினார்". "நீங்கள் சிறைக்குச் சென்று விட்டால் அதன் பிறகு எங்களுக்கு இங்கென்ன வேலை நாங்கள் எங்கள் ஊருக்குப் போய் விடுவோம்" என்றார்கள் அந்த வழக்கறிஞர்கள். பதிலைச் சொன்னப் பிறகு தான் காந்தி எதிர்ப்பார்ப்பது அவரைப் பின் தொடர்ந்து தாங்களும் சிறைச் செல்லத் தயாராக வேண்டுமென்பதே. உண்மை உரைத்த தொண்டர்கள் இசைந்தனர்.

பிரவுன் சொல்கிறார், "சம்பரான் போராட்டத்தின் போது காந்தி அக்கிராமத்தின் உயர் குடியினரின் தொடர்பை தவிர்த்தார்". "காந்தியின் முக்கியமான உதவியாளர்கள் நடுத்தர வர்க்க படித்தவர்களும் குக்கிராமங்களிலுள்ள சிறு வியாபாரிகளும்". ஒரு வெகுஜனப் போராட்டத்தில் முரன்பாடுகளுடைய தூய எண்ணமற்றவர்களும் இணைவார்கள் அவர்களையும் ஒதுக்காமலே தான் முன் செல்ல வேண்டுமென்று காந்தி உணர்ந்திருந்தார்.

காந்தியின் போராட்ட முறைகளைப் பற்றிப் பிரவுன் ஒரு வித வியப்புடனே விவரிக்கிறார். சம்பரானை ஒரு விவசாயப் போராட்டமாக மட்டுமே காந்தி முன்னிறுத்தினார். அதில் எவ்விதமான விடுதலைப் போராட்டத்தின் சாயலையும் அவர் அனுமதிக்கவில்லை ஏனென்றால் அது பிரச்சினையைத் திசை திருப்பி விடுமென்பதால். பத்திரிக்கைகளுக்குச் செல்லும் செய்திகளைக் கவனமாக ஒழுங்குப் படுத்தினார். போராட்டத்திற்கு விளம்பர வெளிச்சம் தேவைப் படும் போது மட்டும் செய்திகளை ஊக்குவித்து மற்ற நேரங்களில் செய்திகள் பரவுவதையோ அவை போராட்டத்தின் தன்மையைச் சிதைத்துவிடுவதையோ தடுத்தார். பிரசாத்தும், கிருபளானியும் ஆயிர கணக்கான விவசாயிகளிடம் நேர்முகம் நடத்தி ஆய்வறிக்கையைத் தயார் செய்தனர். காந்தியும் அவர் குழுவும் அதற்கு முன்னர் எந்த அரசியல் வாதியும் செல்லாத குக்கிராமங்களுக்குச் சென்றனர். காங்கிரஸில் இதற்கு முன்னர் யாரும் இப்படிச் செய்ததில்லை.

காந்தி எப்போதும் முழுமையான விடுதலை நோக்கி நகர்தலையே விரும்பினார். சம்பரானில் வெறும் விவசாயக் கஷ்டங்களை நிவர்த்திச் செய்வது என்பது அவர் வழியல்ல. அம்மக்களின் வறுமை அவரை வருத்தியது. பள்ளிகள் நிறுவினார், அதற்குத் தன்னார்வலர்களைச் சேர்த்தார். மக்கள் அழுக்கையே உடுத்துவது கண்டு சுத்தமான உடைகள் அணிய வேண்டுமென்றார். கஸ்தூரிபாவை தன் குடிசைக்கு அழைத்துச் சென்ற ஓர் ஏழைப்பெண்மணி தன்னிடம் இருப்பதே ஓர் ஆடை தான் ஆகவே துவைத்து வேறு உடை அணிய முடியாதென்று காட்டி கலங்க வைத்தார். காந்திக்கு முன்பிருந்த அரசியல் வாதிகள் யாரும் இது பற்றியெல்லாம் அறிந்ததுமில்லை இவற்றைப் பொருட்படுத்தியதுமில்லை.

திலகர் இந்திய வரலாற்றில் முக்கியப் பங்காற்றினார் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் காந்தியே முதன் முதலில் சுதந்திரம் என்பது வெறும் காலணியாதிக்கத்திடமிருந்து விடுதலைப் பெறுவதல்ல மாறாகச் சமூகமும் அதை உருவாக்கும் தனி மனிதனும் விடுதலையடை வேண்டுமென்று அதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பனித்தார். திலகர் சிறைச் சென்ற காலங்களில் சிறைகள் மனிதத் தன்மையற்றவையாக இருந்தது உண்மை ஆனால் திலகர் ஒன்றும் வெகுஜனப் போராட்டத்திற்காகச் சிறைச் செல்லவில்லை என்பதும் கசப்பான உண்மை. காந்திக்கு முன் எத்தனை வெகுஜனப் போராட்டங்களைக் காங்கிரஸ் முன்னெடுத்தது? காந்திக்குப் பின் எத்தனை?

சாதாரணப் பிரதேசத் தொண்டனாக இருந்த பிரசாத் பின்னர்த் தேசத் தலைவரானார். சம்பரானைத் தொடர்ந்து குஜராத்தில் கேதா மற்றும் அகமெதாபாத் ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சார்பில் முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்தார். குஜராத்தில் இப்போராட்டங்களில் காந்திக்குத் துணையாக இருந்த பின்னாளில் சர்தார் என்று பெயரெடுத்த வல்லபாய் பட்டேல். வரலாற்றில் சீஸரும் அலெக்ஸாந்தரும் இத்தனை தளபதிகளை உருவாக்கியதில்லை. அமெரிக்கச் சுதந்திர வரலாற்றில் வாஷிங்டன் யாரையுமே உருவாக்கவில்லை என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சியும் அப்படியே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உருவான அளவு இரண்டாம் நிலை தலைவர்கள் வேறெங்கும் வேறெப்போதும் உருவானார்களா என்பது சந்தேகம். அப்படி உருவானவர்கள் எல்லோரும், காந்தியை எதிர்த்தவர்கள் உட்பட, காந்தியோடும் அவர் உருவாக்கியச் சூழலோடும் தொடர்புடையவர்களே.

1919-20 நெருங்கிய போது பிரசாத் என்ற பீகாரி, நேரு என்ற காஷ்மீரி, ராஜாஜி என்ற தமிழர், பட்டேல் என்ற குஜராத்தி, கிருபளானி, மகாதேவ் தேசாய் என்று தேசம் தழுவிய முரன்பாடுகளுடைய ஒரு பெரும் கூட்டம் காந்தியின் பின் அணிவகுத்து நின்றது. பஞ்சாப் படுகொலைக்குப் பிறகு 1920 ஆகஸ்டு 1-ஆம் தேதி மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தார் காந்தி. அதே நாளில் திலகர் மறைந்தார். அதன் பின் முப்பதாண்டு காலம் காந்தி இந்தியாவில் விஸ்வரூபமெடுத்தார் என்றால் மிகையாகாது.

போலீஸ் தடியடியில் காயம்பட்ட ஜவஹர்லாலும் ஸ்வரூப் ராணியும்

நேரு குடும்பத்தினரின் செல்வ செழிப்பு மிகுந்த காழ்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தியாகம் மெச்சத் தக்கது. ஆனால் இழப்பதற்கு நிறைய இருந்து அவற்றை இழக்கத் தேவையில்லாதவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு இழப்புகளைச் சுமந்ததும் வணங்கத் தக்கதே. சுதந்திரத்தின் பின் நேருவும் அவர் தங்கையும் அடைந்த புகழும் அதிகார பீடங்களில் அமர்ந்ததும் பலருக்கு இன்றும் ஒவ்வாமையைத் தருகிறது. நேரு குடும்பத்தினர் செல்வ செழிப்போடு கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் நீலகண்டன் அவர்கள் பின்னாளில் காந்தியினால் ஈர்க்கப்பட்டு இந்திய உடைகளைத் தரித்ததும் சிறைச் சென்றதும் போலீஸ் தடியடிகளில் காயம் பட்டதையும் சேர்த்திருக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஓர் அடிப்படை நேர்மை வேண்டுமே.

போலீஸ் தடியடியில் அடி வாங்கியது பற்றி நேரு ஓர் அத்தியாயமே எழுதியிருப்பார் தன் சுயசரிதையில். தான் அடிப்பட்டதைப் பிரலாபிக்கும் நோக்கத்தில் எழுதவில்லை மாறாக ஒரு இளைஞனாகத் தான் திருப்பி அடிக்கும் உணர்வைக் கட்டுப் படுத்தியதையும் அத்தகைய வன்முறைகளை எதிர் கொண்ட மன நிலையையும் விவரித்திருப்பார் நேரு. நேருவின் அம்மா ஸ்வரூப் ராணி செல்வ சீமாட்டி அவரும் வீதிக்கு வந்து போராடுகிறார் அதுவுமில்லாமல் தடியடியில் காயப்பட்டார். காந்தி எவ்வகையான குடும்பத்தில் பிறந்தார் என்பதை விட இங்கே நாம் ஆச்சர்யப்பட வேண்டியது பல செல்வந்தர்களும், செல்வம் ஈட்டும் கல்விப் பெற்றவர்களும் அதையெல்லாம் துறந்து துயர் அனுபவிக்கத் தயாரானது தான். அதுவும் வசதியான வீட்டுப் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டது மாபெரும் புரட்சி. கேதா போராட்டத்தில் மண் சுமந்த அனுசுயா பென் பணக்கார முதலாளியின் பெண்.

நேருக் குடும்பத்தில் சிறைச் செல்லாத பெண்ணே கிடையாது. சிறைவாசத்தின் நடுவே நோய்வாய்ப்பட்ட தன்னைக் காணவந்த நேரு சிறைக்குத் திரும்பிச் செல்லும் முன் அவரைத் தன்னருகே அழைத்து ஈனஸ்வரத்தில் "அரசாங்கத்திற்கு ஏதும் உத்தரவாதம் கொடுத்து விடாதீர்கள்" என்று கூறுகிறார் எங்கே தன் கணவன் தன் பொருட்டு மண்டியிட்டுவிடுவாரோ என அச்சப்பட்டு. நேரு தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார்.

வன்முறைக்கு எதிர்வினை வன்முறையல்ல என்ற கருத்துடைய ஷெல்லியின் "மாஸ்க் ஆப் அனார்க்கி" (Mask of Anarchy) காந்திக்கும் நேருவுக்கும் உவப்பான ஒரு கவிதை. இருவரும் அதை மேற்கோள் சொன்னதுண்டு.

And if then the tyrants dare
Let them ride among you there,
Slash, and stab, and maim, and hew,-
What they like, that let them do.

'With folded arms and steady eyes,
And little fear, and less surprise,
Look upon them as they slay
Till their rage has died away.

தடியடியில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக லாலா லஜபதி ராய் இறக்கவும் நேர்ந்தது. "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா" என்று பாரதி ஆருடமாக எழுதினான்.

காந்தி-பிர்லா உறவு: செல்வந்தர்களும் காங்கிரஸும்

அகாகான் மாளிகையில் சிறைவாசம் இருந்ததையும் கடைசி நாட்களில் பிர்லா மாளிகையில் தங்கி இருந்ததையும் வைத்தே காந்தி என்னமோ செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தது போலவும் காங்கிரஸை மிட்டா மிராசுகளுக்குத் தாரை வார்த்தார் என்றும் திமுக மேடைகள் முதல் இந்துத்துவ முகாம்கள் வரை ஒரு அவதூறு பரப்பப்படுகிறது.

"In search of Gandhi" என்ற புத்தகத்தில் பி.ஆர்.நந்தா இந்த அவதூறை திட்டவட்டமாக மறுப்பதுடன் இந்திய முதலாளிகளுடனான காந்தியின் உறவு பற்றி அழகான கட்டுரை ஒன்றைத் தருகிறார்.

இந்திய முதலாளிகள் காங்கிரஸை பயன்படுத்திக் கொண்டது தான் அதிகம் காங்கிரஸ் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டதை விட. சுதேசி தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காகக் காங்கிரஸின் உதவியை நாடி அதில் பயனும் பெற்ற பிறகு தேர்தல் நிதி கோரிய மோதிலால் நேருவிடம் அகங்காரத்தோடு காந்தி உட்பட மற்ற காங்கிரஸ் தலைவர்களோடு நேர்முகம் வேண்டும் என்று கேட்டபோது மிகக் கடுமையான கடிதமொன்று எழுதி மறுத்தார் மோதிலால் நேரு.

ஜம்னாலால் பஜாஜ் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே முதலாளிகள் காங்கிரசிற்கு உதவினர். பிர்லா தன் உறவு காந்தியோடு தான் காங்கிரசோடு அல்ல என்பதை அரசுக்குத் தெளிவுப் படுத்தினார். 1920 ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது டாடா உட்படப் பல முதலாளிகள் இயக்கித்திற்கு உதவ மறுத்ததோடு எதிர் அணியையே துவக்கி மும்முரமாக எதிர்த்தனர். பின்னாளில் ஜவஹர்லால் நேரு, பூலாபாய் தேசாய், கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் நிதித் திரட்ட செல்வந்தர்களை அணுகியபோது கல்லில் நார் உரிப்பதை விட அதிகம் கஷ்டப்பட்டனர்.

காந்தி எப்போதும் தில்லியில் சேரிகளில் தான் தங்குவார். ஜனவரி 1948-இல் கலவர பூமியான தில்லியில் சேரியில் தங்குவது அங்கிருப்போருக்குச் சங்கடத்தை உண்டாக்கும் என்று தான் பிர்லா மாளிகையில் தங்கினார். காந்தி சேரியில் தங்கினால் அதிகாரிகளும், செல்வந்தர்களும் அங்கே சென்றனர்; மாளிகையில் தங்கினாலோ சாமான்யர்களும் அங்கே சென்றனர். காந்தி எங்கே தங்கினாலும் அதைச் சமத்துவப் பூங்காவாக்கினார் என்பது தான் முக்கியம்.

விவிலியத்தில் பணக்காரன் கொடுக்கும் கொடையை விட ஏழைப் பெண்மனி கொடுக்கும் கொடையே சிறந்தது என்பார் இயேசு. இயேசு என்பவர் வாழ்ந்தாரோ இல்லையோ காந்தி என்பவர் வாழ்ந்தார்.

'காந்தியின் வருகை' - நேரு

ஜவஹர்லால் நேரு "டிஸ்கவரி ஆப் இந்தியா" (Discover of India) புத்தகத்தில் காந்தியின் வருகை எத்தகைய மாற்றத்தை உண்டுப் பண்ணியது என்று அவருக்கேயுரிய நுண்ணுணர்வுடன் விவரித்தது எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம்.

"He was like a powerful current of fresh air that made us stretch ourselves and take deep breaths; like a beam of light that pierced the darkness and removed the scales from our eyes; like a whirlwind that upset many things, but most of all the working of people's minds. He did not descend from the top; he seemed to emerge from the millions of India, speaking their language and incessantly drawing attention to them and their appalling condition.....The greatest gift for an individual or a nation, so we had been told in our ancient books, was abhaya, not merely bodily courage but the absence of fear from the mind....against all pervading fear that Gandhi's quiet and determined voice was raised: Be not afraid.

Gandhi influenced millions of people in India in varying degree. Some changed the whole texture of their values, others were only partly affected, or the effect wore off; and yet not quite, for some part of it could not be wholly shaken off."

இன்றளவும் என் அரசியல் பார்வையை, அமெரிக்க அரசியலோ இந்திய அரசியலோ எதுவாயினும், காந்தியப் பார்வை ஆக்கிரமித்திருக்கிறது.



காந்தியின் எளிமைப் பற்றி ஜெயமோகன்

காந்தியின் எளிமைப் பற்றிய எள்ளி நகையாடல்களுக்கு பதில் சொல்லும் முகமாக ஜெயமோகன் எழுதியக் கட்டுரை முக்கியமானப் பார்வையை முன் வைக்கிறது. அக்கிட்டுரையில் நேருப் பற்றிய காழ்ப்பு மிகுந்த கருத்துகளை அவர் இன்றும் அப்படியே கொண்டுள்ளாரா என்றுத் தெரியாது அது முக்கியமுமல்ல. அக்கட்டுரையில் இருந்து ஒருப் பகுதி:

"காங்கிரசுக்கு காந்தி காலத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தார்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள்.  அவர்களுக்கு மாதம் எட்டணா ஊதியம் அளிக்கப்பட்டது. படுகேவலமான வறுமையில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். வக்கீல்கள், ஜமீந்தார் பிள்ளைகள், பட்டதாரிகள் அந்த ‘வருமானத்துக்குள்’ வாழ்ந்து ஊர் ஊராகச் சென்று பணியாற்றினார்கள். வெறுந்தரையில் படுத்து இரந்து உண்டு கால்நடையாக அலைந்தார்கள். 

எண்ணிப்பாருங்கள், காந்திவரும்வரை காங்கிரஸில் அந்தப் பண்பாடு இருந்ததா? சட்டமேதைகளும் பேராசிரியர்களும் முதல்வகுப்பில் சென்று கட்சிகட்டிய காலம் அது. வருடம்தோறும் மாநாடு போடுவதற்கு அல்லாமல் எதற்கும் காங்கிரஸ் கூடாமலிருந்த காலம். [உண்மையில் காங்கிரஸ் என்ற பேரே மாநாடு என்ற பொருளில்  போடப்பட்டது. வெறுமெ கூட்டங்கள் நடத்துவதற்கு மேலாக காங்கிரஸை ஒருவெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்கமேதும் முன்னோடிகளுக்கு இருந்ததில்லை.] எளிய மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை. காந்தி எப்படி பலலட்சம் ஊழியர்களை கவர்ந்தார்? கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை."

வரலாற்றுத் திரிப்பே தொழிலாக.

மதிமாறன் பெரியார் திடலில் விநியோகிக்கப்படும் துண்டறிக்கைகளைத் தாண்டி வேறெதுவும் படித்து விடக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். நீலகண்டன் அப்படியல்ல. அதனாலேயே நீலகண்டனுக்குப் பரவலாக ஒரு பிம்பம் உண்டு. நீலகண்டனின் பார்வைகளோடு ஒத்துப் போகாதவர்கள் கூட அவரை ஒரு ஆராய்ச்சியாளராக முன்னிறுத்துவதைக் கண்டிருக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனைப் போல் வரலாறைத் திரிப்பதற்கும், தேர்ந்தெடுத்த உண்மைகளின் (selective truth telling or half truths) துணைக் கொண்டு தன் தரப்பை நிறுவுவதற்கும், அடிப்படை நேர்மையைக் காற்றில் பறக்க விட்டு எழுதுவதற்கும் இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவருடைய கட்டுரைகள் முதல் சமீபத்தில் வெளிவந்த 'இந்திய அறிதல் முறைகள்' வரை கொஞ்சம் நெருங்கி தகவல்களைச் சரி பார்த்தால் திரிபுகள் அம்பலம் ஆகும். ('இந்திய அறிதல் முறைகள்' குறித்து விரிவான விமர்சணம் அல்லது கட்டுடைப்புச் செய்ய உத்தேசம். காலம் கனிய வேண்டும்).

டான் அஷோக் என்னும் திமுக அனுதாபி ஒருவர் இன்று (காந்தி ஜெயந்தி) எழுதுகிறார் காந்தி சாதி ஒழிப்புக்குப் பாடு படவில்லையென்று. திமுக அனுதாபி அல்லவா திமுக மேடைப் பேச்சுகளைத் தவிர வேறொன்றும் படித்தறியாதவர் போலும். ஜோசப் லெலிவெல்ட் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு யாத்திரைப் பற்றி ஆச்சர்யம் பொங்க எழுதியுள்ளார். தன் வாழ்நாளெல்லாம் தீண்டாமைக்கெதிராக உழைத்தவர் காந்தி. 'பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்' என்ற பிரகடணத்தோடு உதயமான ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களெல்லாம் தீண்டாமை ஒழிப்புக்கு என்ன செய்து கிழித்தார்கள் அவரவர் ஜாதியில் எல்லாம் தீண்டாமையை ஒழித்துச் சமபந்தி போஜனம் நடத்தி விட்டார்களா என்ன?

காந்தியை விமர்சிக்கவே கூடாதா என்று கேட்பவர்களுக்கு என் பதில் என்றும் "காந்தியே அவரின் முதல் விமர்சகர்". சம காலத்தில் காந்தி விமர்சிக்கப் பட்டார், சிலரால் முழுவதுமாக நிராகரிக்கவும் செய்யப் பட்டார்.

ஜூடித் பிரவுன் தொகுத்த "The Cambridge Companion to Gandhi" அற்புதமான கட்டுரைகளைக் கொண்டது. தனிகா சர்க்கார் என்பவர் துல்லியமாக "காந்திக்குச் சாமான்யனை நோக்கிப் பேசத் தெரிந்தது. ஆனால் அவர் எப்போதும் சாமான்யனுக்காகப் பேசினார் என்று சொல்ல முடியாது". நகர்புற வாழ்க்கை, நகர்புறத்தாரின் விழுமியங்கள் குறித்த காந்தியின் பார்வை, குஹா காந்தி பற்றி முன் வைத்த விமர்சனங்கள் ஆகியவற்றைச் சரமாகத் தொகுத்துள்ளார்.

நம் சமூகத்தில் இன்றும் அவதூறூக்கும் விமர்சனத்திற்கும் வித்தியாசம் தெரியாததே மிகப் பெரிய நோய்.

இந்தியாவின் நாற்றங்கால்

காந்தியை கடுமையாக விமர்சிக்கவும் நிராகரிக்கவும் செய்யலாம் ஆனால் அதில் ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அது அரவிந்தன் நீலகண்டன், மதிமாறன் போன்றோரிடம் கிடையாது. காந்தியை நிராகரிப்பதில் இந்துத்துவர்களும் பெரியாரிஸ்டுகளும் கைக்கோர்த்தே செயல்படுகிறார்கள். திராவிட இயக்கத்தினரின் எழுத்துகள் புறங்கையால் எளிதாகத் தள்ளிவிடக் கூடியவை. இந்துத்துவர்களின் பிரச்சார உத்திகள் கோயபல்ஸையே பள்ளி மாணவன் தரத்தில் பின் தள்ளக் கூடியவை.

நியு ஜெர்ஸியில் உரையாற்றிய ஜெயமோகன் இந்திய இலக்கியத்தின் ஆளுமைகளுக்குக் காந்தி எப்படியொரு மைய ஈர்ப்பாக இருந்தார் என்று நிறுவி இந்திய இலக்கியத்தின் நாற்றங்கால் காந்தி என்றார். அதை இன்னும் நீட்டித்து இந்தியாவின் நாற்றங்கால் என்பது மிகப் பொறுத்தம்.


References:

1. அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை http://www.tamilhindu.com/2013/11/tea2/
2. 'Mahatma' by D.G. Tendulkar Vol 1. Pages 156-234
3. 'The Life of Mahatma Gandhi' by Louis Fischer. Pages 157-176, 189-197
4. 'Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922' by Judith Brown. Pages 16-123
5. 'Jawaharlal Nehru' by Sarvepalli Gopal - Vol 1. Pages 172-193
6. 'Discovery of India' by Jawaharlal Nehru pages 358-359
7. 'In search of Gandhi: Essays and Reflections' by B.R. Nanda. Pages 124-138
8. 'தமிழ் நாட்டில் காந்தி' - அ.ராமசாமி pages 166-170
9. 'காந்தியின் எளிமையின் செலவு' - ஜெயமோகன் கட்டுரை http://www.jeyamohan.in/557#.V_Gwljvijoo
10. 'The Cambridge Companion to Gandhi' Edited by Judith Brown and Anthony Parel. Pages 173-199
11. Autobiography by Jawaharlal Nehru

3 comments:

Chitra said...

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்களால் புண்பட்ட நெஞ்சுக்கு ஆறுதல் அளித்துள்ளீர்கள்

மகேஷ் said...

அண்ணலின்பிறந்த நாளை ஒட்டி அருமையான பதிவு. அதே நேரம் அரவிந்தன் நீலகண்டன் மற்றும் மதிமாறன் இருவரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. மதிமாறன் பெரியாரிய சிந்தனையை ஏற்காத எவர் மீதும் சகட்டு மேனிக்கு நரகல் கலந்த மொழிநடையில் அள்ளி வீசுபவர். இணையத்தில் எழுதத் தெரிந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்.

sound said...

Write more. Bring out true history. Though I know facts my weakness is I do not know how to put words so effectively. Only in our country even recent history can be distorted so effectively by so called intellectuals. I request read more, answer them point blank, tear their masks, for the sack of our young men of our nation. All the best. Write more opposing them on every front bluntly in a language that they understand, no criticisms of great men by them should go unanswered. May God bless you.