தமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். பெரியாரை படிக்காமலோ, படித்ததும் புரிந்துக் கொள்ளமலோ, புரிந்தாலும் புரியாதது போல் நடித்தாலோ மிகச் சிறப்பு. அதைச் செய்யத் தவறினாலும் தவறக் கூடாதது ‘இன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் பார்ப்பணீயமும் மனு தர்மமும்’ என்று நரம்பு புடைக்கக் கூவுவது. அறிவு ஜீவியாவதோடு கொஞ்சம் வைரலாகவும் வேண்டும் என்றால் அம்பேத்கரியம், தலித்தியம் என்று சில ஈயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற் சொன்ன எதிலும் வரலாறோ, உண்மைகளோ, நுட்பங்களோ கொஞ்சமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நீங்கள் பேரறிஞர்.
![]() |
| Pa. Ranjith (Image Courtesy Pa-Ranjith-380.jpg) |
திருச்சி BHEL (பெல்) நிறுவனத்திற்கு நான் அடிக்கடி வேலைச் சம்பந்தமாகச் சென்றதுண்டு 1995-98-இல். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. ஓர் உயர் அதிகாரி (Sr. DGM), பிராமணர், தன் அறையில் இருந்து வெளியே வந்து நடக்கும் போது இரு பக்கத்திலும் இருக்கும் அலுவலர்கள் உட்கார்ந்திருப்பதற்கும் நிற்பதற்குமான இடை நிலையில் ஒரு கோமாளித்தனமான போஸை பாவித்து ‘குட் மார்னிங்’ என்பார்கள். உயரதிகாரியோ ஒரு மனுஷ ஜீவன் தன்னருகே வணக்கம் தெரிவிப்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஏதோ ஏகாந்தத்தை அனுஷ்டித்தப்படி வான் நோக்கியப் பார்வையோடு கடந்து செல்வார். ‘ஆஹா பார்ப்பணீயம் பாரீர்’ என்று குதூகலிப்பதற்கு முன் மேலும் படியுங்கள். இந்த வணக்கம் போடுவதில் இருவர் பிராமணரல்லாதோர் அதில் ஒருவர் இன்னொருவரின் கீழ் பணி புரிபவர். அந்த இருவரில் மேலதிகாரியானவர் இன்னொருவரை மனிதராகக் கூட மதித்து நான் பார்த்ததில்லை.
நான் வேலைப் பார்த்த சென்னை கம்பெனியின் மேலாளர் (MD) பிராமணர். வேலையில் சேர்ந்த முதல் நாள் அவர் என்னைக் கடந்து சென்ற போது எழுந்து நின்று “Good Morning Sir” என்றேன். என் தோளில் சிநேகமாய்க் கை வைத்து நான் எப்போதும் அப்படிச் செய்யத் தேவையில்லை என்றார். அங்கு வேலைப் பார்க்கும் கடை நிலை ஊழியரிடம், பிராமணரல்ல, அந்த மேலாளர், கம்பெனி பார்ட்டிகளின் போது, மிகத் தோழமையோடு சகஜமாக உரையாடுவார். அவருடைய தனிப்பட்ட பண்பும் அந்தக் கம்பெனி ஒரு ஆங்கிலேய கம்பெனியின் அங்கம் என்பதாலும் அந்த வழக்கங்கள் கைக்கொள்ளப்பட்டன. பிரிட்டன் என்றில்லை மேலை நாட்டுக் கம்பெனிகளில் மேலாளரும் அவர் கீழ் வேலைச் செய்பவர்களும் சக மனிதர்களாகப் பழகுவதைக் காணலாம். அதற்காக அதிகாரப் படி நிலைகளே இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கூழைக் கும்பிடு போட்டு ‘எஜமான்’ என்று மறுகுவதும் இல்லை. நான் அமெரிக்கா வந்த பிறகும் அந்த மேலாளருக்குத் தொடர்பிலிருந்தேன். அவரை ‘Sir’என்றும் அவர் மனைவியை ‘madam’ என்றும் ஈமெயிலில் குறிப்பிட்டேன். உடனே பதில் வந்தது ‘நீ இன்றிருக்கும் இடத்தில் இத்தகைய பழக்கங்கள் இல்லை நீ என்னையும் என் மனைவியையும் பெயரிட்டே அழைக்கலாம்’ என்றார். என்னை விட 15-20 வயது மூத்தவர். என்னை விடப் படித்தவர், ஒரு கம்பெனியை நிர்வகித்தவர். 20 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் நண்பர்களே.
நான் படித்த கல்லூரி பிராமணர்களால் நடத்தப்பட்ட ஷன்முகா பொறியியல் கல்லூரி (இன்று சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக் கழகம்). காருண்யாவில் முதலில் தெரியாமல் சேர்ந்துவிட்டு வீட்டுச் சாப்பாட்டிற்காகவும் அங்கிருந்த சூழலும் பிடிக்காமல் தஞ்சைக் கல்லூரியில் சேர வந்தேன். தாளாளர் அறைக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். இருவரும் ஒவ்வொரு சேரில் அமர்ந்தோம். தாளாளர், வயதானவர், கொதித்து விட்டார். “குருவுக்கு முன் மாணவன் உட்காரலாமா” என்று சினந்தார். பின்னர்த் தெரியவந்தது அவர் மிகக் கண்டிப்பான, காந்தியவாதியும் எளிமையானவரும் மிக நேர்மையானவரும் என்று. அக்கல்லூரியில் ஓர் ஆங்கிலப் பேச்சுக் கலை கிளப் ஒன்றை ஆங்கிலப் பேராசிரியர் அந்த வருடம் தான் ஆரம்பித்திருந்தார். அதன் முதல் கூட்டத்தில் என் பேச்சு மிகக் கவனம் ஈர்த்தது. அது முதல் அந்தக் கிளப்பின் அடையாளம் ஆனேன். கல்லூரிக்கு மாநில அளவில் பல பரிசுகளை வென்றேன். கடைசி வருடம், கடைசிக் கூட்டத்தில் பேசி விட்டு சபையோரை நோக்கி அது என் கடைசி உரையென்றும் ஒரு நிமிடம் எல்லோரும் ஆசைத் தீரப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லி விடைப்பெற்று இறங்க எத்தனித்த போது அங்க்கிருந்த தாளாளர் என்னை மேடையிலேயே நிற்கச் சொன்னார். அடுத்ததாகக் கூடியிருந்த சபையோரை, பல பேராசிரியகளும் இருந்தனர், எழுந்து நின்று எனக்குக் கரவொலி எழுப்பச் செய்தார். நான்கு வருடம் முன் தனக்கு முன் ஒரு மாணவன் உட்காரக் கூடாது என்று சொன்னவர் இன்று கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் இருக்கும் அரங்கில் எனக்கு “standing ovation” கொடுத்தார். அவருக்கு என் குலம் கோத்திரம் தெரியாது ஆனால் நான் பிராமணனில்லை என்பது நிச்சயமாகத் தெரியும். இன்று அந்தக் கல்லூரி இந்துத்துவக் கூடாரமாகியிருப்பது வருத்தம். அந்த மேலாளர் இறந்துப் பல வருடங்கள் ஆகின்றது.
+2-வில் நான் டியூஷன் படித்த ஆசிரியர்களில் இயற்பியல்-வேதியியல் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணத் தம்பதியர், கணிதம் கற்பித்தவர் பிராமணரல்லாதவர் (கள்ளர்?). மூவரிடமும் நிறைய மாணவர்கள் பயின்றனர். அதில் பலர் பிராமணரல்லாதவர்கள். மூவரும் கடின உழைப்பாளிகள் தங்களிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் 95%, 100% வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள். என்னையும், அப்பாவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் கூட. நான் அப்போதும் மிக வெளிப்படையாகப் பேசுபவனே. இயற்பியல் ஆசிரியை முதலில் எனக்குத் தலைக் கணம் உள்ளதென்றார் பின்னர் “அப்படி நினைத்தது தவறு. ஒன்று நீ வெளிப்படையானவன். இரண்டு உன் போல் பாடத்தைக் கவனமாகக் கேட்பவர்கள் குறைவு”.
பிராமணர்களில் மோசமானவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். நிச்சயமாக. நான் படித்த மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியை விட மிகக் கேவலமாகவும் அருவருப்பாகவும் பேசுவார். இன்னொரு வாத்தியார் பச்சை ரவுடி. மெல்லிய இனவாதத்தை அவ்வப்போது காட்டுபவர்களும் உண்டு. ஆனால் இதெல்லாம் இல்லாத இனங்களை எனக்குக் காட்டுங்கள்!! பிராமணரல்லாதவர்களில் மகத்தான அறிவு ஜீவிகளைப் பார்த்து இருக்கிறேன், பிராமணர்களிடையே சராசரிகளும், மூடர்களையும் பார்த்து இருக்கிறேன்.
டைரக்டர் முன்பு அசிஸ்டண்ட் டைரக்டர் உட்கார்ந்துவிட்டால் துணுக்குறுவது பார்ப்பணீயம், அப்படிச் செய்பவர்கள் பார்ப்பணர்களாக இல்லாத போதும், என்பது பச்சையான இனவாதம். அப்படிப்பட்ட மனோநிலையைச் சித்தரிக்கப் பிரபுத்துவ மனோ நிலை (feudal mindset), எதேச்சாதிகாரம், மேட்டிமைத் தனம், அகங்காரம் என்று எத்தனையோ சொற்கள் இருக்க அதைக் குறிப்பாக ‘பார்ப்பணீயம்’ என்று அழைத்துவிட்டு அது ஒரு இனத்தைக் குறிப்பதல்ல மாறாக ஒரு ஆதிக்க மனோபாவத்தை மரபாகக் கொண்டிருந்தவர்களால் அப்படிப்பட்ட மனோபாவத்தைக் குறிப்பது மட்டுமே என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இன்று வன்னியர்கள் முதல் பட்டியல் இனத்தவர் வரை எல்லோரும் ஏதோ ஒரு ஆண்டப் பரம்பரை கதையைச் சொல்கிறார்கள் அதில் சிலர் தங்கள் ஜாதிப் பெயரோடு ‘ஷத்திரிய’ என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். எந்த ஷத்திரியன் அடக்க ஒடுக்கமாக இருந்தான்? அவர்கள் அடக்கமாக இல்லாத அதிகார மரபினர் என்பதற்காகவே அப்படிப்பட்ட ‘ஆண்ட பரம்பரை’ கதைகளும் உருவாக்கப் படுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ரஞ்சித்துக்குக் கொஞ்சமாவது இலக்கியம் அல்லது சமூகவியலில் உள்ள ஆராய்ச்சிகளின் பரிச்சயமாவது இருந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டார்.
ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘மிருகப்பண்ணை’ கதை அதிகாரம் எப்படிச் சுபாவங்களை மாற்றி அதிகாரத்தை அடந்தவர்கள், முன்பு படி நிலையில் கீழிருந்தவர்கள், எதேச்சாதிகார மனோ நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பதை மிகச் சுவாரசியமாகப் படிமங்களின் வாயிலாகச் சொன்னதற்காக இன்றும் வாசிக்கப்படும் புதினம்.
ஸ்டான்பர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒன்று மிகப் பிரசித்தமானது. சிறையில் கைதிகாளகவும் ஜெயலர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்கள் நடிக்க வைக்கப்பட்டனர். ஆறே நாளில் கைவிடப்பட்ட ஆராய்ச்சியின் போது ஆரம்பத்தில் நடிக்கிறோம் என்ற நினஒவோடு செயல்பட்டவர்கள் மிக விரைவில் கொடுங்கோல் ஜெயலர்களாகவும், அதிகாரத்துக்குக் கீழ் படிகிற கைதிகளாகவும், ஜெயலர்களால் ஏவப்பட்ட சக கைதியை வதைப்பவர்களாகவும் மாணவர்கள் மாறினர்.
அமெரிக்கக் கறுப்பு இனத்தவரிடையே ஆசியர்களை வெறுக்கும் போக்கு உண்டு. வாஷிங்டன் டி.சி. நகரின் கறுப்பு மேயர் ஆசியர்கள் நடத்தும் கடைகளைக் குறித்து மிகக் கேவலமாகப் பேசினார். பால்டிமோரில் நடந்த கலவரத்தின் போது ஆசியர்களின் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. யூத வெறுப்பும் அமெரிக்கக் கறுப்பினத்தவரிடையே உண்டு. உலகத்தின் எல்லா மூலைகளிலும் யாரோ யாரையோ அவர்களின் நிறம், இனம், மொழி, மதம் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எல்.டி.டீயினர் முஸ்லிம்களைத் துரத்திய போது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது மனித இயல்பு. தலித்துகளிடையே கூடத் தீண்டாமை உண்டே!!!
உலக வரலாற்றின் மிகப் பெரிய அழித்தொழிப்பில் இருந்து மீண்டு தங்களுக்கென்று ஒரு நாட்டையும் உருவாக்கிக் கொண்ட இஸ்ரேலின் ராணுவப் பயிற்சி மையத்தில் ஒரு பேராசிரியர் “உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் அரேபியர்களைக் கொலைக்களனுக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டதற்கு மானவர்களில் பலர் “ஆமாம்” என்று கைத் தூக்கினார்களாம். ஆசிரியர் அதிர்ந்து விட்டார். (இஸ்ரேலின் இன்றைய பிரச்சினைகள், பாலஸ்தீனம் எல்லாம் மிகச் சிக்கலானவை. இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் அதிகாரம் மானுட இயல்பை மாற்றுவதைச் சுட்டிக் காட்டத்தான்).
அன்றாட வாழ்வில் அதிகாரப் படி நிலைகளில் உயர்ந்தாரோடு சராசரி மனிதர்கள் பாவிக்கும் உறவு முறையை ஒரு சமன்பாடாய் உருவகித்து அமெரிக்கக் கலாசாரத்தில் இரு வேறு நிலைகளில் இருப்பவரிடையே இருக்கும் தூரச் சமன்பாடு (power distance equation) மற்ற கலாசாரங்களை விடக் குறுகலான தூரம் உடையது என்கிறார் மால்கம் கிளாட்வெல். இதை என் 19 வருட அமெரிக்க வாழ்வில் கண் கூடாய்க் கண்டிருக்கிறேன். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மேலதிகாரியை ‘ஹெல்லோ’ என்பார் அலுவலக உணவகச் சிப்பந்தி. செனட்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தொகுதி மக்களோடு மிகச் சகஜமாகப் பழகுவார்கள். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிவாசிகளைச் சந்திக்கும் கூட்டங்களில் கேள்விகள் சரமாரியாக வந்து விழும். கீழிருக்கும் ஒரு காணொளியைப் பாருங்கள் (சுட்டி https://www.youtube.com/watch?v=_TDkgIEn5Ac )
நவீனப் பல்கலைக்கழகங்களின் பிறப்பிடம் ஜெர்மனி ஆனால் இன்று உலகத்தின் பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில். இது குறித்த எழுதப்பட்ட புத்தகத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வந்த ஜெர்மானியர்கள் அங்குப் பேராசிரியராக இருந்த நோபல் பரிசு வாங்கிய மார்கனை (Thomas Hunt Morgan) அவர் மாணவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்களாம். ஹார்வர்டை மாணவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கட்டுரைல் லாரி ஸம்மர்ஸ் (Larry Summers) தன் பல்கலைக் கழகத்தில் நோபல் பரிசுப் பெற்ற ஆசிரியரை மாணவன் கேள்விக் கேட்கும் சுதந்திரம் உண்டு என்றார். தாமஸ் பிக்கெட்டியின் பல மில்லியன் விற்பனையான பொருளாதாரம் குறித்த புத்தகத்தைக் கேள்விக் கேட்டு பிரசித்தியான கட்டுரையை எழுதியவர் முனைவர் படிப்பை முடிக்காதவர்.
தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினை அடிப்படையான மனிதப் பண்புகளைக் குழித் தோண்டிப் புதைத்த தனி மனித துதியும் அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளும். இதன் முழு முதல் காரணக் கர்த்தா திராவிட இயக்கம். அலங்காரப் பட்டங்கள், போதாக் குறைக்கு மேடைகளில் கிரீடங்களைச் சூட்டிக் கொள்வது, ‘போர்ப்படை தளபதி’ என்று எதற்கெடுத்தாலும் நகைக்கத் தகுந்த சுயத் தம்பட்டங்கள்.
எழுத்தாளர் சமஸின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா” என்ற கட்டுரை இணையத்தில் இந்தக் கட்டுரைக்காகத் தரவுகளைத் தேடியபோது கிடைத்தது. மிகச் சுவாரசியமானதும், நேர்மையானதுமான கட்டுரை. அக்கட்டுரையில் எனக்கு ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன ஆனால் அதைத் தாண்டி அவர் முன் வைத்த முக்கியமான கேள்விகள் உண்டு.
சமஸைப் போல் நானும் தஞ்சையில் வளர்ந்த காலத்தில் கீழ் வெண்மணி பற்றிக் கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் திராவிட இயக்கங்கள் தயாரித்த எந்தப் பாட நூலிலும் அது பற்றிப் படித்ததில்லை. கீழ் வெண்மணி படுகொலைக்குப் பிறகு அங்குப் பெரும் பணியாற்றிய காந்தியவாதியான (பெரியாரிஸ்ட் அல்ல) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சமஸ் சந்திதிக்கிறார்.
சமஸ் “‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார்.
கிருஷ்ணம்மாள் அவரிடம் சொல்கிறார்:
“தமிழ்நாட்டோட விவசாயத் தொழிலாளர்கள்ல அஞ்சுல மூணு பேர் தலித்துகள். நிலம் வெச்சிருக்குற தலித்துகளை எடுத்துக்கிட்டா, தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் கீழ நெலம் வைச்சிருக்குறவங்க; இவ்வளவு ஏன், தலித்துகள்ல நால்ல ஒருத்தருக்குக் கையெழுத்துப் போட தெரிஞ்சா அதிகம். ஆனா, இன்னமும் ஒரு நாளைக்குச் சராசரியா மூணு தலித் பெண்கள் பலாத்காரத்தை எதிர்கொள்றாங்க, ரெண்டு பேர் தாக்கப்படுறாங்க; எங்க? சமூகநீதியில நாட்டுலேயே முன்னேறுன மாநிலமான தமிழ்நாட்டுல. அப்படின்னா, நம்ம நாடு முழுக்க உள்ள நிலை எப்படி இருக்கும்? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷங்களுக்கு அப்புறமும் இதுதான் நிலைமைன்னா, முன்னாடி எப்படி இருந்திருக்கும்? சாதி ஒழிப்பைப் பத்திப் பேசுறவங்க எல்லாரும் இதெல்லாம் எங்கேயோ யாராலேயோ நடத்தப்படுறதாவும், தங்களுக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் இதுல ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குங்கிறதுதான் உண்மை.”
கிருஷ்ணம்மாளின் பேச்சைக் கேட்ட சமஸ், “ ‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார்.
தனக்குள் இருக்கும் ‘பார்ப்பனரை’ அடையாளம் கண்டு கொண்ட சமஸ் கைர்லாஞ்சியில் தலித் குடும்பம் மிகக் கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்டது தன்னை வாட்டியது என்றும் அதன் பின்னனியில் நண்பர்களோடு “அவரவர் சாதிகளின் அயோக்கியத்தனங்களை மனம் திறந்து பேச முயன்றால் என்ன?” என முயன்றிருக்கிறார். “பார்ப்பனர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது.” என்கிறார். “அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு”
அக்கட்டுரையில் இருந்து மேலும் சில பகுதிகள் கீழே:
“இந்து மதத்தின் 10-ல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிரு ந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன்”.
“இன்றைக்கு மிக அரிதாக, விரல் விட்டு எண்ணிவிடத் தக்க அளவில் பொதுத் தளத்தில் வலுவாக ஒலிக்கும் சுயசாதி விமர்சனக் குரல்கள் பார்ப்பனர்களுடையவை என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்க முடியாது”.
“பார்ப்பனர் அல்லாத ஏனைய சாதிகளையோ எதிர்த்துப் பொதுத் தளத்தில் இன்றைக்குப் பேசவோ, எழுதவோ முடியுமா? எங்கேனும் அதற்கான இடம் இருக்கிறதா? அப்படிப் பேசினாலோ, எழுதினாலோ குறைந்தபட்சம் அது சகித்துக்கொள்ளவாவதுபடுமா?”
வேறு எந்தச் சாதியின் பெயரையும் சொல்லத் திராணியில்லாததால் தான் ரஞ்சித் சவுகரியமாக எல்லாவற்றையும் ‘பார்ப்பணீயம்’ என்கிறார்.
ஒரு பேட்டியில் ‘கபாலி’ என்று ரஜினியின் பாத்திரத்திற்குப் பெயர் வைத்தது ஒரு ஸ்டீரியோடைப்பை உடைப்பதற்காக என்கிறார் சமூக விஞ்ஞானி ரஞ்சித். இவரின் ரஜினி என்ன கதையில் பெரிய அறிவு ஜீவியாகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, சமூகச் சேவகராகவோ, ஆசிரியராகவோவா வந்தார்? கோட்டு, சூட்டைப் போட்டாலும் ரவுடி ரவுடி தானே? ரவுடி, அதுவும் ரவுடிகள் ரவுடிகளுக்காகவே நடத்தப்படும் பார்ட்டியில் கலந்து கொண்டு, “காந்திப் போட்ட டிரஸ்ஸூம், அம்பேத்கர் போட்ட டிரஸ்ஸுக்கும் அரசியல் இருக்கு” அப்படீன்னு டயலாக் பேசினா ஸ்டீரியோடைப் உடையுமா? இது என்ன அறிவிலித்தனம். தமிழ் சினிமாவில் எத்தனையோ ஸ்டீரியோடைப். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் பற்றிச் சொல்லப்படாத எதிர்மறை ஸ்டீரியோடப்பா?
ரஞ்சித்தின் பேச்சு உண்மையில் சாரமற்ற பேச்சு. எனக்கு உண்மையில் கொண்டாடப்படுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்பது விளங்கவில்லை. வெறும் உணர்ச்சிக் குவியலான பேச்சு. வீடுகளில் சகோதரர்கள் சகோதரிகளை ‘டீ’ போட்டுப் பேசுவது பார்ப்பனியம் கற்றுக் கொடுத்தது என்கிறார். எந்தச் சுவற்றில் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. சகோதரிகள் சகோதரர்களை ‘டா’ போட்டு பேசுவதைப் பெரியாரா கற்றுக் கொடுத்தார்? இதில் வேடிக்கை இந்த உரையைத் திராவிட இயக்க உடன் பிறப்புகள் மிக மகிழ்ச்சியாகப் பகிர்ந்தது தான். ‘பாப்பானை திட்டுறான்யா, உடனே ஷேர் பண்ணு’ என்று பகிர்ந்தார்கள். பாவம். அதில் ரஞ்சித் திட்டியது 50-ஆண்டுக் காலத் திராவிட இயக்க ஆட்சியினை. ‘சமூக நீதியற்ற தமிழ் நாடு’ என்கிறார். எங்கும் சாதி மறையவில்லை என்கிறார். இடை நிலைச் சாதியினர் தங்களை விலக்குகிறார்கள் என்றார். என்ன இதையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தவர் அப்புறம் யூ-டர்ன் அடித்து எல்லாத்தையும் போடு பாப்பான் தலையில் என்று போட்டுவிட்டுச் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டார். போகிற போக்கில் தமிழ் தேசியம் என்ற சித்தாந்தத்தை வெற்றுக் கோஷம் என்று நிறுவியதும் உடன் பிறப்புகள் மனம் குளிர வைத்த ஒன்று. இந்த ரஞ்சித்தே பேச்சுகளில் அனிதாவை ‘அவள்’ என்று தான் குறிப்பிடுகிறார்.
மேடை மேடையாக ரஞ்சித் அநீதிகள் பற்றிக் கொதிக்கிறார் ஆனால் ஓரிடத்தில் கூட பிரச்சினைகள் குறித்தோ அதற்கான தீர்வுகள் குறித்தோ முறையான எந்த அலசலும் இல்லை. நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கெதிரானது என்று காது கிழிய கத்தினார்கள். இந்த ஆண்டு ஐந்தே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க அட்மிஷன் கிடைத்தது. இதற்கு முன் “சராசரியாக 30 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க” அனுமதிக் கிடைத்தது என்கிறது விகடன் கட்டுரை ஒன்று. கிட்டத்தட்ட 3000 இடங்களில் 30 தான். 1% தான். இது தான் தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளின் லட்சணம். அனிதாவே தனியார் பள்ளியில் தான் +1, +2 படித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு அமர்ந்த 95% விண்ணப்பதாரர்கள் பெயில் தமிழ் நாட்டில். (‘நீட் விவகாரம்: பேசப்படாத கல்வியின் தரம், பேசப்பட்ட நாஜித்தனம்’ என்று இன்னொரு கட்டுரை எழுத திட்டம் அப்போது இது குறித்து விரிவாக எழுதுகிறேன். இன்ஷா அல்லா)
ஏதாவது பள்ளிக்குச் சென்று மாணவர்களின் தேவைகள் என்ன என்று எட்டியாவது பார்த்தாரா ரஞ்சித்? எத்தனை பள்ளிகளில் நூலகங்கள் இருக்கின்றன? எத்தனை மாணவர்களால் தங்கள் பாடப்புத்தகம் அல்லாத எந்தப் புத்தகத்தையாவது படிக்க முடிகிறது? கிராமத்து அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரிக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எத்தனை?
இந்தியை திணிக்கிறது என்று சொல்லி நவோதயாவை எதிர்த்தார் என்று திருமாவளவனின் வலைப் பக்கம் சொன்னது. இது துரோகம். தலித் மாணவர்கள் இந்தியையும், ஆங்கிலத்தையும் நன்றாகப் பயின்றால் அதனால் வரும் லாபங்கள் நிறைய. கருணாநிதியின் குடும்பத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் ரஞ்சித். அவர் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம் ஆங்கிலக் கான்வெண்டுகளில் தான் படித்தார்கள். கருணாநிதி அளவுக்குக் காந்தி நல்ல தகப்பன் இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ் நாட்டு மாணவனுக்குச் சொந்தம். “அறிவை விரிவுச் செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று சொல்லிக் கொடுங்கள். கருணாநிதியைப் பாருங்கள் ஒரு மகனை மாநிலத்தில் துணை முதல்வராக்கினார், இன்னொரு மகனை டில்லியில் மந்திரியாக்கினார். கற்றுக் கொள்ளுங்கள் ஐயா. மாணவர்களை உலகுக்குத் தயார் செய்யும் கல்வியைத் தருமாறு கல்வியாளர்களோடு பேசுங்கள். சும்மா மிஷ்கின், அமீர் இவர்களோடு கூட்டம் போட்டால் ஒன்றுக்கும் உதவாது.
இன்று ரஞ்சித் இருக்கும் உயரத்தில் இருந்து அவர் செய்யக் கூடியது அநேகம். ஆனால் இது போன்ற உணர்ச்சி மயமான பேச்சுகள் பேஸ்புக் ஷேர்களைத் தாண்டி எதையும் செய்யாது. அவனவன் இதைப் பகிர்ந்துவிட்டு “ஆஹா பெரியார்”, ‘பாரீர் ரஞ்சித்’ என்றெல்லாம் சொல்லிவிட்டுத் தத்தம் பிள்ளைகளைக் கான்வெண்டுகளுக்கும், நகரில் விலையுயர்ந்த டியூஷனுக்கும் அனுப்பப் போய் விடுவார்கள்.
கடந்த கருணாநிதி ஆட்சியின் போது சென்னையில் இருக்கும் ஆதி திராவிடர்கள் நல விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் அவர்கள் விடுதியின் அவல நிலையை அரசுக்குக் கவனப்படுத்த. ஒவ்வொரு ஊரிலும் அந்த விடுதிகள் மிருகங்கள் கூட வாழ லாயக்கில்லாதவை என்பது தானே நிஜம். பார்ப்பனீயம் பேசுவது எளிது ரஞ்சித்துக்கு. இதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் மேடையில் பாஜக, பார்ப்பனீயம், 20 வருடங்களுக்குப் பாஜக ஆட்சி வந்து விடுமோ, என்றெல்லாம் பேசுவது கரகோஷமும் திராவிட இயக்க உடன் பிறப்புகளிடம் ‘சமூகப் போராளி’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தரும். அமெரிக்காவில் கறுப்பு விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், நடிகர்கள் அநேகம் பேர் குழந்தைகள் நலன், கல்வி ஆகியவற்றுக்கு மிகப் பெரும் உதவிகள் செய்கிறார்கள். ரஞ்சித் கற்றுக் கொள்ளலாம். அவர்களெல்லாம் நிச்சயமாக இனவாதத்துக்கு எதிராகவும் தேவைப் படும் போது பேசுகிறார்கள், தத்தம் வழியில் போராடுவார்கள் ஆனால் அதைத் தாண்டி ஆக்கப் பூர்வமான உதவிகளைச் செய்கிறார்கள்.
துணை இயக்குனர் உட்கார்ந்தால் வரும் எரிச்சல் பற்றி ரஞ்சித் குறிப்பிட்ட போது எனக்கு ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ புத்தகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
ஜெயகாந்தனும் ஏ.எல். நாரயணனும் ஒரு ‘முக்கியப் புள்ளி’யை சந்திக்கப் போனார்கள். சினிமா உலகுக்கே உரித்தான ‘கூஜா’ ஒருவரும் வந்ததாக ஜெயகாந்தன் சொல்கிறார். நால்வரும் அமர்ந்துப் பேசும் போது ஜெயகாந்தன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டார். மேலும், அந்த முக்கியப் புள்ளி தான் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு சிகரெட் பாக்கெட்டை ஏ.எல். நாராயணனிடம் நீட்ட அவரும் எடுத்துக் கொள்கிறார் ஆனால் ஜெயகாந்தன் தனக்கும் அளித்த முக்கியப் புள்ளியிடம் ‘தாங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு தன் சட்டைப் பையில் இருந்து தன் சொந்த சிகரெட்டை எடுத்துப் புகைத்தாராம். கூஜாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வெளியில் வந்த பிறகு ஜெயகாந்தன் மரியாதைக் கெட்டு நடந்து கொண்டார் என்று கடிந்துக் கொண்டாராம்.
‘பேண்ட்’ போட்டால் “கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் தான் கம்பீரமாயும் அழகாயும் இருக்கும்” என்பது தன் அபிப்பிராயம் என்றும் அப்படி அமர்வதே தன் வழக்கம் என்கிறார். “இந்தத் தேசத்தின் மேலான மரியாதைக்குரிய பல உன்னதமான மனிதர்களோடு கம்யூனிஸ்ட் கட்சியில் சமத்துவமாகப் பழகி வளர்ந்தவன். எங்கள் அகராஇயில் மரியாதை என்பதற்கு எழுந்து நிற்பது, சிகரெட்டை மறைத்துக் கொள்வது என்ற அர்த்தங்களே கிடையாது. ஒரு அடிமையின் மரியாதைப் பண்புகளை நான் எப்போதுமே அறியாதவன்’ என்கிறார். கவனிக்கவும் அவர் ‘அடிமையின் மரியாதைப் பண்பு’ என்றாரே தவிர ‘பார்ப்பனீயம்’ என்று பசப்பவில்லை. அது சரி, அவர் ஜெயகாந்தன் ஆயிற்றே, அவர் என்ன ரஜினிகாந்தை ‘சார்’ என்று அழைத்தவரா?
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த இளையராஜா நிகழ்ச்சியின் நடுவே, ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருந்த அரங்கில், அதில் பலரும் கைப்பேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள், பிழையாக வாசித்த இசைக் குழு அங்கத்தினர் ஒருவரை ‘அறிவிருக்கா’ என்றார். கூட்டம் கைத்தட்டி மகிழ்ந்து, புல்லரித்தது. அடுத்த நாள் பலரும் மிகச் சிலாகித்து ‘அவர் பிழைப் பொறுக்க மாட்டார்’ என்று புல்லரித்தார்கள். அற்பர்கள். சரியாகப் பயிற்சிகள் நடத்தி மேடையேறியிருக்க வேண்டிய பொறுப்பு ராஜாவுடையது. பிழை நடந்ததும் சபையிடம் அவர் தான் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஒரு ஸிம்பனி நிகழ்வில் தவறு நடந்தால் நடத்துனர் தான் மன்னிப்புக் கேட்பார், நடத்துநரைத் தான் குறைச் சொல்வார்கள். ஆனால் நம் அடிமைச் சமூகத்தில் பாவப்பட்ட அந்த வாத்தியக்காரர் வசையை வாங்கிக் கொண்டார். நினைத்துப் பாருங்கள், அந்த மனிதரின் மனைவி, பிள்ளைகள் என்ன பாடுபட்டிருப்பார்கள். இது முதல் முறையல்ல ராஜா இது போன்ற எதேச்சாதிகாரங்களுக்குப் பிரசித்தம். ராஜா தலித். (விநாயக முருகனைக் கேட்டால் ‘கன்வர்ட்டட் பார்ப்பான்’ என்பார்)
பிரச்சினைகளை நேர்மையாகப் பேசாவிடில் பிரச்சினைகள் தீராது. எதெற்கெடுத்தாலும் பிராமணர்களைத் திட்டித் தீர்த்துவிட்டல் பிரச்சினைகள் தீரவும் தீராது இன்னும் சொல்வதானால் இந்த மன நோய் பல சமயங்களில் உண்மையான காரணங்களைப் பதுக்கத்தான் உதவுகிறது.
References:
1. Ranjith video 1 https://www.youtube.com/watch?v=uKy9dDu4EEc
2. Ranjith Video 2 https://www.youtube.com/watch?v=kEcI-UDFZiU
3. Samas Blog http://writersamas.blogspot.com/2014/12/blog-post.html
4. Krishnammal Jagannathan https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணம்மாள்_ஜெகன்னாதன்
5. Stanford Prison Experiment https://en.wikipedia.org/wiki/Stanford_prison_experiment


