Tuesday, March 13, 2018

"நீர் ஒரு பிராமணனா?" - ஜெயகாந்தனும் வர்ணாசிரமும்.

வர்ணாசிரமம் என்பது நெகிழ்வுத் தன்மை கொண்டது, உறைந்தது அல்ல மேலும் அது வேறு ஜாதி அமைப்பு வேறு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எதையோ பிடிக்கப் போய்க் குரங்கானது வர்ணாசிரமம் என்பது தான் சரி.  இதற்கு முதல் உதாரணம் ஜெயகாந்தனே தான்.

ஜெயகாந்தன் கம்யூனிஸ்டா என்றே ஒரு விவாதம் செய்யலாம். அவர் கம்யூனிஸம் பேசினார், மார்க்ஸை படித்தார், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார் என்பதெல்லாம் சரி ஆனால் அவர் கம்யூனிஸ்டா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர் காந்தியை, நேருவை, தேசியவாதத்தைப் போற்றினார் என்பதால் மட்டும் அப்படிச் சொல்லவில்லை. அவர் ஜாதி அமைப்பை ஆதரித்தார், வர்ணாசிரமத்தை 'சுரண்டல் அற்ற' அமைப்பு என்றார். ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுமில்லை என்றார். அவர் மார்க்ஸையும் ஜாதிய அமைப்பையும் புரிந்துக் கொண்டாரா என்றே கூடக் கேட்கலாம்.

சென்னை நகரின் கார்ப்பரேஷன் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றது (1950s). முக்கியக் காரணங்களுள் ஒன்று ராஜாஜியின் சுதந்திரா கட்சியினர் பிராமணர்களைத் திமுக நோக்கி இழுத்தது. பிற காரணங்களும் உண்டு. தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு அன்று இன்றும் ராஜாஜி ஓர் ஆதர்சம் தான்.

தோல்வியுற்ற தேசிய அணி பிராமணர்களையும், இஸ்லாமியரையும் தூற்றியது என்கிறார் ஜெயகாந்தன். 'முஸ்லிம்களும், பிராமணர்களும் இந்தத் தேசத்துக்கு எப்போதுமே துரோகிகள்' என்று மேடைகளில் பகிரங்கமாகப் பேசப்பட்டது என்கிறார் ('ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்'). இந்தப் பொய்யுரைக்கு எதிர் வினை ஆற்றுவதற்காகச் 'சென்னை நகரில் பிராமண வகுப்பினர் அதிகமாய் வாழுகின்ற மாம்பலத்தில் தென் சென்னை பிராமண இளைஞர்கள் மாநாடு ஒன்றைக் கூட்ட அவர்கள் முடிவு செய்தனர்'. அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற ஜெயகாந்தன் அழைக்கப் பட்டார். மாநாடு கிருஷ்ண கான சபையில் நடைப் பெற்றது (1950-களில் கர்நாடக சங்கீத சபாக்கள் ஜாதிகளை ஒட்டி இடம் பெயர்ந்தன என்ற அமெண்டா வீட்மெனின் குறிப்பு இதைப் படித்த போது நினைவுக்கு வந்தது). அடுத்து வரும் செய்திகள் ஜெயகாந்தனின் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

காலையில் பிரதிநிதிகளின் கூட்டம் என்றும் தான் பார்வையாளனாகப் போயிருந்ததாகவும் ஜெயகாந்தன் சொல்கிறார். திமுக, சுதந்திரா கட்சி ஆதரவாளர்களும் அக்கட்சிகளுக்கு ஆதரவான பிராமணர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள். அம்மாநாட்டைப் பிராமணர்கள் மாநாடு என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுந்த போது மாநாட்டு ஒருங்கினைப்பாளர்கள் ஜெயகாந்தனை மேடைக்கு அழைத்து விளக்கச் சொன்னார்கள். ஜெயகாந்தன் அம்மாநாடு 'குறிப்பிட்ட சமூகத்தினரை ஒரு தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டுவதை'ச் சுட்டி அதை மறுக்கவே கூட்டப்பட்டது என்கிறார்.

மேலும் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை ஜாதி ஒழிப்புக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். ஜாதிகளுக்கிடையே பேதங்களும் பகைமையும் நிலவுவதையே மாற்ற வேண்டும்" என்கிறார். பேதங்கள் இருந்தால் தான் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட முடியும் என்பது அடிப்படை அறிவியல் விதி. பிராமணன் இதைச் செய்ய வேண்டும், சத்திரியன் அதைச் செய்ய வேண்டும் என்ற பேதமில்லாவிட்டால் அப்புறம் அங்கே ஜாதி எதற்கு? ஜெயகாந்தனும் காந்தியும் வழுக்கிய இடம் வர்ணாசிரமம்.

இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கையிலே சலசலப்புகளை அடக்கும் விதமாகவும் எதிர்ப்பாளர்களின் குரலாகவும் கேள்விகள் ஆங்காரத்தோடு கேட்கப்பட்டது, "நீர் ஒரு பிராமணனா? இந்த மாநாட்டில் நீர் எப்படிக் கலந்து கொள்ளலாம்?". பிராமணப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் பேசலாமா என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்கப்பட்டது. மாநாட்டு ஒருங்கினைப்பாளர் ஒருவர் "ஜெயகாந்தன் பிராமணன்தான்" என்று தவறாகச் சொன்னாராம். இதை ஜெயகாந்தன் "தவறாக அறிந்திருந்த விஷயம்" என்று குறிப்பிடுகிறார். இல்லை. படித்தவனும், இலக்கையம் படைப்பவனும் பிராமணனாகவே இருக்கக் கூடும் என்ற மனச்சாய்வின் வெளிப்பாடு அது. அக்காலத்தில் இலக்கியவாதிகள் பலரும் பிராமணர்கள் என்பதும் காரணம். அம்பேத்கரை சந்தித்த காந்தி அவரைப் பிராமணர் என்று எண்ணி விடுகிறார். படித்து, கோட்டும், சூட்டும் போட்டிருந்தாரே!!!



மாலையில் நடந்த 'Open forum'இல் ஜெயகாந்தன் கிட்டத்தட்ட 'யார் பிராமணன்' என்றே பேசினார். "பிராமணன் என்பவன் யார்? இங்குள்ளவர்களில் யார் பிராமணன்?". அவர் பேசியதை மேற்கோள்களிலும் என் எதிர் வினைகளையும் சேர்த்தே தருகிறேன்.

"நான் பிறவியில் பிராமணன் அல்லன். நான் வேளாளர் மரபில் பிறந்தவன். அதாவது சூத்திரன். இந்த வார்த்தையில் எனக்கு அவமானமோ ஆத்திரமோ இல்லை. சூத்திரன் என்பவன் நால்வருண அமைப்பின் அடிப்படை, அவனே வருணாசிரம தர்மத்தின் 'சூத்திர'தாரி."

ஜெயகாந்தனுக்குத் தன்னைச் சூத்திரன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதில் சங்கடமோ அவமானமோ இல்லை என்பது அவர் சமூகத்தில் அடைந்திருக்கும் முதன்மைக்கும் அவருக்கு அவர் மீதே இருக்கும் மதிப்பீடும் காரணம். சமூகம் என்பது ஜெயகாந்தன்களை மட்டுமே உள்ளடக்கியது இல்லை. தலித் வியாபார எஜமானர்கள் கூடத் தங்கள் ஜாதியை பிரகடனப் படுத்திக் கொள்ள முனைவது இல்லை என்பது நிதர்சனம். காரணங்களை யூகிக்கக் கூட வேண்டாம். மேலும் சமூகக் கட்டமைப்பில், வர்ணாசிரம அமைப்பில், வேளாளர்கள் என்பவர்கள் தலித்துகளை விட மேலானவர்கள் ஆதலால் பொத்தாம் பொதுவாக 'நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் அவருக்கு மற்றவர்களின் அனுபவமோ அல்லது வலியோ இருந்திருக்காது. ஜெயகாந்தன் மேற்கொண்ட வாழ்வு பலரின் வாழ்வு அல்ல. ஒரு பள்ளியிலோ, அலுவலகத்திலோ அவர் வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால் அந்த அமைப்பின் மிருகத் தன்மை விளங்கியிருக்கும். பள்ளியில் பொதுக் குழாயில் தண்ணீர் அருந்தியதற்காகத் தனம் என்ற ஆறு வயது சிறுமியை பிரம்பால் வாத்தியார் விளாச குழந்தையின் கண் பாதிக்கப்பட்டது. என்பதுகளில் விகடன் இச்செய்தியை வெளியிட அந்த ஏழைக் குழந்தைக்குப் பார்வைக் கிடைக்கக் கமல் உதவினார். பரதம் பயிலும் இடத்தில் பிராமணரல்லாத மாணவி "சூ குட்டி" என்று அழைக்கப்பட்டதைப் பிராமண நண்பர் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படித்துப் பட்டம் பெற்ற அம்பேத்கர் அவர் வேலைப் பார்த்த அலுவலகத்தில் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அவ்வளவு தூரம் போக வேண்டாம். 40-கள், 50-களில் பள்ளிகளில் பயின்ற தாழ்ந்த ஜாதியினரைக் கேட்டுப் பாருங்கள். நண்பர் ஒருவர், தலித், மத்திய அரசு பயிற்சி நிலயத்தில் அவருக்குக் கணிதப் பாடத்தை ஒதுக்க ஆசிரியர்கள் தயங்கினர் என்கிறார். இதெல்லாம் தான் நிதர்சனம். இந்த நெகிழுவுத் தன்மை, விஸ்வாமித்திரன் பிரம்ம ரிஷி ஆனான் என்பதெல்லாம் தொன்மம் சரித்திரமல்ல.

சூத்திரர்கள் நான்கு வருணத்திற்கும் 'சூத்திரதாரி' என்று சொன்னால் நான்கு வருணத்தில் சேராத அவர்ணத்தை என்னவென்று சொல்வது? புருஷ சூக்தத்திற்கு அப்பைக் கட்டுச் சப்பைக் கட்டுகிறார்கள் பலர். காந்தி உள்பட. உடம்புக்கு எல்லாப் பாகமும் முக்கியம் காலிலிருந்து வந்தவர்கள் என்று சொன்னால் கேவலமில்லை என்பது பசப்பு. முடமாக ஒருவன் வாழ முடியும், முண்டமாக வாழ முடியுமா? தலையை இன்னொருவர் காலின் முன்பு தாழ்த்துவது அதிகப் பட்ச மரியாதை என்பதால் தானே?

"பிறவியில் சூத்திரனான நான், கடமையில் பிராமணனின் தொழிலைச் செய்கிறவன்" என்று அந்த பிராமணர்கல் அடங்கிய சபையில் சொல்கிறார் ஜெயகாந்தன். சொல்லிவிட்டு, முன்பொருமுறை ஈ.வெ.ரா இருந்த மேடையிலேயே அவரை எதிர்த்து மஹாபாரத, சமஸ்கிருதம், பிராமணர்களின் மேன்மை அகியவற்றை, "ஓர் உண்மையான பிராமணனுக்கே உரிய ஞானாவேசத்தோடு கொதித்தெழுந்து அவரை நான் மறுத்துரைத்துப் பேசினேனே, அப்போது வந்து என்னை யாரும் கேட்கவில்லையே, 'உனக்கென்ன போயிற்று? நீ பிராமணனா?" என்று யாரும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். இந்த இடம் மிக மிக முக்கியம்.

திருச்சி மாநாட்டில் ஈ.வெ.ரா முன் பேசிய உரையை இந்த இடத்தில் அவர் நீளமாக நினைவு கூர்கிறார். அது இங்கே தேவையில்லாதது. பிராமணச் சங்க மாநாட்டில் பேசியதை தொடரும் முன் அப்போது எழுந்த மன ஓட்டத்தைச் சொல்கிறார். தனித் தமிழ் இயக்கத்தினர் எழுத்தாளர் சங்கத்தில் நுழைந்து ஆக்கிரமித்த போது அதை எதிர்த்ததையும் அதற்காக "பார்ப்பன அடிதாங்கி", "இவனும் ஒரு அக்ரஹாரம் தான்' என்றும் வசைப் படப்பட்ட போது "'இல்லை' என்று சொல்லி ஓடாமல்" இருந்தததையும், அப்போதெல்லாம் ''நீ பிராமணனா?' என்றுக கேள்வி எழவில்லை என்றும் நினைத்துக் கொண்டாராம்.

(சுய புராணம்: நான் என்றுமே என்னை எழுத்தாளன் என்றெல்லாம் எண்ணிக் கொள்வதில்லை. அதெல்லாம் என் தகுதிக்கு மிக மிக அதிகம். ஆனால் மேலே சொன்னதோடு கொஞ்சம் தொடர்புடைய செய்தி. இணையத்திலும், சமூக வலைத் தளத்திலும் பிராமணத் துவேஷத்தையும், ஈ.வெ.ராவையும் மிக மிகக் கடுமையாக விமர்சித்து தொடர்ச்சியாக எழுதும் போதெல்லாம் என்னை நோக்கி, 'நீ என்ன எழுதினாலும் அவர்கள் உன்னைப் பிராமணனாக ஏற்க மாட்டார்கள்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பிராமண எழுத்தாளரும் கிண்டலாக அதை வெளிப்படவையாகவே எழுதினார். அவர்கள் என்னை ஏற்க வேண்டுமென்று எதையும் எழுதுவதில்லை ஆதலால் அப்படிச் சொல்பவர்களை நகைப்போடு கடந்து விடுவேன். யூதர்களைப் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட பேரழிவுப் பற்றியும் எழுதுயிருக்கிறேன். ஆஷ்விட்ஸ் போயிருக்கிறேன். அதற்காக நான் என்ன யூதனாகவா நினைக்கிறேன்? இல்லை. நேர்மையாக எழுத வேண்டும் என்பது தான் குறிக்கோள். தமிழ் பிராமணர்கள் பலரும் இன்று இந்துத்துவர்கள் அவர்களுக்கு நான் இந்துத்துவத்தை எதிர்த்து எழுதும் போதெல்லாம் ஈவெராவை விமர்சிக்கும் போது கேட்காத கேள்விகள் வரும். "நீ இந்துவா" என்பார்கள்)

பிராமணர்களை "பூணூலைப் பிடித்துக் கொண்டு" திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதற்காக ராஜாஜியை கண்டித்ததாலேயே தன்னைப் பார்த்து " 'இதைச் சொல்ல நீ யார்? பிராமணனா?'" என்று கேட்பவர்களை அப்படிக் கேட்பது "என்ன பிராமணத் தர்மம்" என்கிறார். அது தான் வர்ணாசிரம தர்மம் என்பது ஏனோ ஜெயகாந்தன் என்கிற கம்யூனிஸ்டுக்குப் புரியவில்லை. இரண்டு பிராமண வீடுகள் அல்லது இவர் பிறந்த ஜாதி தவிர்த்த வேறெந்த வீட்டிலும் இவர் பெண் கேட்டுப் போயிருந்தால் அவருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கக் கூடும்.

அதன் பிறகு ஜெயகாந்தன் பேசுவதெல்லாம் பெரும்பாலும் அங்கலாய்ப்பு தான். ஆதி சங்கரர் சண்டாளனை குரு என்றது, பாரதி கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டது என்று வெறும் அங்கலாய்ப்புகள். பாரதி, காந்தி ஆகியோரின் எண்ணங்கள் நேர்மையானவை, இதயம் சுத்தம், ஆனால் அவர்கள் தலித்துகளைப் பற்றியும் அவர்களை மேம்படுத்துவது பற்றியும் கொண்டிருந்த எல்லாப் பார்வைகளையுமே அறிவு பூர்வமாக ஏற்க இயலாது. கனகலிங்கத்தின் தேவை பூணூல் அல்ல மனிதனாக மதிக்கப்படும் அடிப்படை மரியாதை தான்.

திருச்சி மாநாட்டில் தன்னை மறுத்துப் பேசிய 24 வயதே ஆன ஜெயகாந்தனை மிகப் பண்போடு ஈ.வெ.ரா நடத்தினார் என்பதைச் சொல்லிவிட்டு, "நீங்க பிராமணப் பிள்ளையா" என்று அவர் கேட்டதாகவும் இல்லை என்று சொன்னதும் "ரொம்பச் சந்தோஷம்" என்று ஈ.வெ.ரா சொன்னதாகவும் சொல்கிறார் ஜெயகாந்தன். அடுத்து அவர் எழுதுவது சுவாரசியமானதும் முக்கியமானதும்.

எழுத்தாளனாக இருப்பதாலும் அவர் பேசும் விதத்தினாலும், தேசியம் மற்றும் பிராமண ஆதரவு, பிராமணராகப் பார்க்கப்பட்டார் ஜெயகாந்தன். பலர் அவரிடம் "நீங்கள் பிராமணரா" என்று கேட்டிருக்கிறார்கள். "எத்தனை சந்தர்ப்பங்களில், எத்தனை விதமான மனிதர்களால் இதே கேள்வி என்னை நோக்கித் திரும்பத் திரும்பக் கேட்கப் பட்டிருக்கிறது" என்கிறார்.

குலங்களும், தொழில்களும் நெகிழ்வுத் தன்மையோடு சரமாரியாகப் பல நூற்றாண்டுகளாக ஏற்றமும் இறக்கமும் பெற்றிருந்தால் அந்தக் கேள்வி வந்திருக்காது. ஆனால் நடந்தது அது இல்லையே. இதை ஏன் மீண்டும் மீண்டும் மழுப்புகிறார்கள்? இந்தியா போன்ற ஒரு பெரு நிலத்தில் ஒரு மிக நீண்ட வரலாறில் எந்த வழக்கமும் மாறாமலேயே 100 சதவீதம் தேசம் முழுதும் பின்பற்றப்பட்டிருக்க முடியாது. ஆங்காங்கே சில மாறுதல்களும் சில மாற்றங்களும் இருந்தன. ஆனால் பொத்தாம் பொதுவாக நெகிழ்வுத் தன்மை இருந்தது என்பது அதீதம். அப்படிப்பட்ட நெகிழுத் தன்மையில்லாமல் பல நூற்றாண்டுகளாக நீடித்ததே வர்ணாசிரமத்தின் பெருமையும் கீமையும். இப்படியொரு சிக்கலான வரலாற்றில் பிராமணர்கள் மட்டுமே படித்தவர்கள் என்று நினைத்துக் கொள்வது முட்டாள் தனம். அப்படி நடக்கவில்லை. ஆனால் அதற்காக எல்லோரும் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கையைப் போட்டுக் கொண்டு சகஜமாக இருந்தார்கள் என்ற ரீதியில் பேசுவதும் சரியல்ல.

ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சமீபத்திய விவாதத்தின் போது ராஜ்மோகன் காந்தி எழுதிய நூலை புரட்டினேன். ராஜாஜியின் மனைவி மிகச் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த சிறுமி. இள வயதில் இறந்தும் விடுகிறார். அவர் அநேகமாக நடுநிலை பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். அவர் குடும்பத்தினரும் அப்படியே. ஆனால் அவருக்குத் தெரிகிறது யாசகமாகக் கொடுக்கும் போது பிராமணருக்கு அரிசியையும் மற்றவர்களுக்கு வரகு, கம்பு போன்றவை தான் என்று. அவருக்கு அந்த அறிவைக் கொடுத்தது எது?

21-ஆம் நூற்றாண்டில் ஒரு முதலியார், மருத்துவர், பொறியியல் படித்த தன் பெண்ணுக்கு வரக் கூடிய முதலியார் பையன் மூன்று தலைமுறைக்கு எந்தக் கலப்படமுமில்லாத முதலியாராக இருக்க வேண்டும் என்று சிநேக பாவத்தோடு சிரித்துக் கொண்டே சொன்னார் என்னிடம். வேறொரு நண்பர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அவரைக் காண தலித் ஒருவர் வீட்டுக்கு வந்து விட்டுப் போன பின்பு அவர் உறவினர் கேட்டாராம், "அவனையெல்லாம் முன் வாசல் வழியாகவா அனுமதித்தாய்". இதெல்லாம் எங்கோ 8-ஆம், 10-ஆம் நூற்றாண்டில் அல்ல இன்று நடந்தவை.

வெள்ளாளரும் மறவரும் கிறித்தவர்களான பின் மதம் மாறிய தலித்துகள் மதம் மாறிவிட்டதாலேயே புதிய உரிமைகளைக் கோரிய போது நீதி மன்றத்துக்கே போய் அவர்களுக்கு அந்த உரிமைகள் இல்லை என்று, இந்து மத வழக்கங்களை மேற்கோள் காட்டி, வென்றனர். இன்றும் கிறித்தவர்களிடையே தலித்துகளின் உரிமைகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது உண்மை. தலித்துகளிடையேவும் இந்த ஏற்றத் தாழ்வுண்டு. அம்பேத்கர் அழகாகச் சொன்னார், "A progressive order of reverance and a graded order of contempt" என்று. இப்படி ஒரு படி நிலை தத்துவம் இவ்வளவு வேரூன்றி இவ்வளவு பரவலாக இத்தனை நூற்றாண்டுகளாக இருப்பது வேறெந்த கலாசாரத்திலும் கிடையாது என்றே நினைக்கிறேன்.

எங்கள் வீடு மற்றும் இந்து உறவினர்கள் வீடுகளில் "சாதம்" என்றே சொல்வார்கள். "சோறு" என்று சொல்பவர்களை அவர்கள் பார்க்கும் பார்வைச் சொல்லும் வர்ணாசிரமத்தின் நெகிழ்வுத்தன்மையின் அலாதி வரலாறை. குழம்பை சாதத்தில் பிசையும் முறையில் கூடச் சாதிய எள்ளல் இருக்கும். "தொம்பன் குடிசை மாதிரி" என்ற சாதிய வசை மிகச் சாதாரணமாக வீசப்படும். அமெரிக்காவில் 35 வருடங்களாக வாழ்ந்து மிக உயரத்தை எட்டிய என் உறவினர் 2015-இல் இந்தியா போய் விட்டு வந்து வருத்தத்தோடு சொன்னது "நம் சமூகத்தில் சாதிய எள்ளல் என்பது சிறிதும் குற்ற உணர்வில்லாமல் மிக மிகச் சகஜமாகப் பேசப்படுகிறது" என்றார்.

வர்ணாசிரமம் என்பது வெறும் பொருளியல் ரீதியான பாகுபாடு அல்ல. காந்தி முதல் இன்று அநேக இந்தியரும் மிக எளிதாகச் சொல்லும் வசனம் "இதெல்லாம் பிறப்புலேயே இருக்கணுங்க". ஜெயகாந்தனை பிராமணராக ஏற்க மறுத்ததும் அதனால் தான். என் பிராமண அலுவலக நண்பர் புலால் உண்பார், துப்பாக்கி சுடுவார், கராத்தேயும் பயில்கிறார். காந்தி வர்ணம் பற்றிச் சொல்கிறார்:

"Varna means pre-determination of the choice of man's profession. The law of varna is that a man shall follow the profession of his ancestors for earning his livelihood. Varna therefore is in a way the law of heredity. Varna is not a thing that is superimposed on Hindus, but men who were trustees for their welfare discovered the law for them. It is not a human invention, but an immutable law of nature—the statement of tendency that is ever present and at work like Newton's law of gravitation. Just as the law of gravitation existed even before it was discovered so did the law of varna. It was given to the Hindus to discover that law. By their discovery and application of certain laws of nature, the people of the West have easily increased their material possessions. Similarly, Hindus by their discovery of this irresistible social tendency have been able to achieve in the spiritual field what no other nation in the world has achieved.Varna has nothing to do with caste.

Down with the monster of caste that masquerades in the guise of varna. It is this travesty of varna that has degraded Hinduism and India. Our failure to follow the law of varna is largely responsible both for our economic and spiritual ruin. It is one cause of unemployment and impoverishment, and it is responsible for untouchability and defections from our faith.

The Rishis after incessant experiment and research arrived at this fourfold division, that of teaching, of defending, of wealth-producing, and of manual service.

In ancient times there were automatic trade guilds, and it was an unwritten law to support all the members of the profession. A hundred years ago, a carpenter's son never wanted to become a lawyer. Today he does, because he finds the profession the easiest way to steal money. "

காந்தியின் வாழ் நாள் போராட்டம் அவர் இந்து மதம் என்று புரிந்துக் கொண்டதையும் அவர் முன்னெடுக்க நினைத்த சீர் திருத்தத்தையும் ஒன்றொடொன்று, முரன்பட்டாலும், இசைந்து போகச் செய்ய நினைத்துத் தத்தளித்தது. மேலேயிருக்கும் மேற்கோள் முட்டாள் தனமானது. புவி ஈர்ப்பு விசையென்பது இயற்கையில் பொதிந்த ஒன்று என்பதற்கும் வருணத்திற்கும் முட்டாள் தனமாக முடிச்சுப் போடுகிறார். இதில் கொடுமை இவர் பிறந்த பனியா குல தர்மத்தின் படி இவர் வெறும் வியாபாரம் செய்திருக்க வேண்டும். இப்படிப் பேசிய ஒருவரை அம்பேத்கர் மிகுந்த எதிர் உணர்வோடும் சந்தேகத்தோடும் பார்த்ததில் ஆச்சர்யமென்ன?

அப்பட்டமான முட்டாள் தனங்கள் அந்த மேற்கோளில் இருக்கிறது. ரிஷிகள் ஆராய்ச்சி செய்து வர்ணாசிரமத்தை கண்டு பிடித்தார்கள் என்கிறார் காந்தி. எந்த விதமான ஆராய்ச்சியும் யாரும் செய்ததாகத் சான்று கிடையாது. ஒரு தொழில் புரியும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டார் என்பது எழுதாத விதி என்கிறார். சான்று? தெரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன் தச்சு வேலைச் செய்பவனின் மகன் வக்கீலாக விரும்பியதில்லை ஆனால் இன்றோ அதிகக் காசு சம்பாதிக்க அதுவே வழி என்பதால் செய்கிறான் என்கிறார். நொந்து கொள்வதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இவர் ஏன் வக்கீலுக்குப் படித்தார்? ராஜகோபாலச்சாரியும் இதே மாதிரி முடி திருத்துபவரின் மகன் படிப்பதற்குப் பட்டனம் போய் விட்டால் கிராமத்தில் யார் முடி வெட்டுவார்கள் என்று உண்மையான கவலையோடு கேட்டார். இவரைத் தான் இன்று பல பிராமணர்கள் சந்தைப் பொருளாதாரத்தின் பிதா என்று கொண்டாடுகிறார்கள். உண்மையில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பிராமணச் சங்க உரையை நிகழ்த்திப் பல ஆண்டுகள் கழித்து இன்னொரு உரையிலும் வர்ணாசிரமத்தைப் போற்றுகிறார் ஜெயகாந்தன். உழவுச் செய்வோரை உயர் நிலையில் வைத்த குறள்களை மேற்கோள் காட்டி நாம் வர்ணாசிரமத்தை ஒப்புக் கொண்டால் தான் உழவுச் செய்வோரை, அத்தொழில் செய்ததற்காகவே, வந்தனைச் செய்ய முடியும் என்கிறார். திருக்குறள் எழுதப்பட்ட காலம் வேறு இன்றைய நிலை வேறு. இறைச்சி வியாபாரம் செய்பவன் நமக்காக உழைக்கவில்லை மாறாகத் தனக்குத் தெரிந்ததைச் செய்கிறான் அவனுக்கு வேறு தொழில் செய்யும் வாய்ப்பும் அதனால் அதிகப் பணமும் வந்தால் அதைத் தான் செய்வான் என்றார் முதலாளித்துவத்தின் தந்தை எனப்படும் ஆடம் ஸ்மித். "நாங்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நீங்கலள் சோற்றில் கை வைக்க முடியாது" என்று தமிழ் சினிமா ஹீரோ பட்டனத்தில் இருந்து வந்திருக்கும் ஹீரோயினிடம் வாய்ச் சவடால் அடிப்பார். ஹீரோயின் குட்டை ஸ்கர்ட் போட்டிருக்க வேண்டும் காமிரா லோ ஆங்கிளில் இருக்க வேண்டும் என்பது சினிமா விதி. கோயில் அர்ச்சகரின் பிள்ளையும் சரி விவசாயியின் பிளையும் சரி தங்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.

பாரதி பிராமணர்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் சொல்வார் அர்ச்சகர் வேலைப் பார்க்கும் பிராமணர்களுக்கு அக்கிராஹரத்தில் வீடு கிடைப்பது கஷ்டம் என்று. அவர்களுக்கே வர்ணாசிரமம் அந்த அளவு தான் உதவியது.

5th BCE-இல் ரோமின் பாட்டாளிகள் அதிகாரப் பங்களிப்புக்குக் கிளர்ச்சி செய்கிறார்கள். 494-287 BCE காலத்தில் நிறைய வேலை நிறுத்தங்கள், கிளர்ச்சிகள் ஆகியவற்றின் பலனாக அதிகார மையங்களும், பாதிரிமார் வேலைகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாட்டாளிகளுக்குத் திறக்கப்பட்டதோடு அவர்கள் இரண்டாம் நிலை குடி மக்கள் என்பது இல்லாமல் ஆனது என்கிறார் வரலாற்றாய்வாளர் மேரி பியர்ட். இந்தியாவில் இப்படியான எந்த உரிமைப் போராட்டங்களும் நிகழாததைத் தான் நீலகண்ட சாஸ்திரி வர்ணாசிரமத்தினால் எந்த உரசலும் சமூக அடுக்குகளுக்குள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்கிறார். அப்படி உரசல் வரவில்லை என்பதும் உண்மை அந்த உரசலை உண்டாக்கும் அறிவுத் தளத்தை மழுங்கடித்ததும் வர்ணாசிரமமே என்பதும் உண்மை. "உனக்கு இது விதிக்கப்பட்டது. இது தான் விதி. இது கடவுளின் விதி. நூற்றாண்டுகளின் விதி" என்று சொல்லி அதைப் பிராமண-சத்திரிய எனும் மிக வலிமையான கூட்டணி கொண்டு நிலை நிறுத்தியதும் உண்மை. அமைதி நிலவியதா என்றால் ஆமாம். அந்த அமைதியின் விலை என்பது தனி மனித உரிமைகள் பற்றி முன்னெடுப்புகள் இல்லாத சமூகமாக இருந்ததா என்றால் அதுவும் உண்மையே. நன்மையைப் பேசுபவர்கள் அதற்குக் கொடுக்கப்பட்ட விலையையும் பேச வேண்டும். தனி மனிதன் என்பதும் தனி மனிதனின் உரிமைகள் என்பதும் இன்றும் இந்திய ஞான மரபுக்கு அந்நியமான ஒன்றே. தயவு செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாக உதாரணங்களை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு மறுப்பு எழுதாதீர்கள்.

தன் உரையிலேயே ஜெயகாந்தன் சொல்கிறார், "மேற்றிசை அர்த்தப்படி உள்ள தனி மனித சுதந்திரம் நமது சமூகத் தர்மத்துக்குப் புறம்பானது". "அந்தரங்கங்கள் புனிதமானவை" எழுதியவர் ஆயிற்றே. அது தத்துவார்த்தமான புரிதலின் மேல் சொன்ன துல்லியமான கருத்து. அதற்கு அடுத்த வரியிலேயே வரலாற்றுப் புரிதல் இல்லாமல் சொல்கிறார், "இன்றைய முதலாளித்துவச் சமூக அமைப்பு முறைகளும், வியாபாரச் சீரழிவுகளும், நிலப் பிரபுத்துவக் கொடுமையும் ஹிந்து தர்மத்துக்குப் புறம்பானவை".

வர்ணாசிரமம் சுரண்டல் அற்ற முறை என்கிறார் ஜெயகாந்தன். அவர் இலக்கியம் பயின்றவர் ஆனால் வரலாறு அறியாதவர். சாஸ்திரப்படி சொத்து வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளை நோக்கி "உங்களை வணங்குகிறேன்" என்றார் காந்தி. அம்பேத்கர் "ஏன் அந்த யோசனையை அவருக்குப் பணம் அளிக்கும் பிர்லாவுக்கும் பஜாஜுக்கும் சொல்லலாமே" என்றார். செட்டியார்களைப் பற்றி அற்புதமான புத்தகம், "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars" by David West Rudner. செட்டியார்கள் எப்படித் தங்கள் ஜாதியினருக்கு ஒரு வட்டி விகிதமும் வேற்று ஜாதியினருக்கு அதிக வட்டி விகிதமும் வைத்திருந்தார்கள் என்பதை அட்டவனை ஒன்று சொல்லும். இந்தியாவில் வால்மார்ட் போன்று பன்னாட்டு நிறுவனங்கள் அங்காடித் தொழிலில் இறங்குவதற்கு முக்கியமான எதிர்ப்பு நாடார் சமூகமும் அவர்களைப் போன்றவர்களிடமிருந்தும் தான் வந்தன. வர்ணாசிரமம் சுரண்டல் அற்றது என்று சொன்னதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயகாந்தனை நீக்கியிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை வேறு காரணங்களுக்குச் செய்தார்கள்.

மீண்டும் மீண்டும் எல்லா ஜாதியினரும் தங்கள் தொழிலில் அல்லது தங்கள் பரம்பரை உரிமைகளில் மற்றவர்கள் நுழைவதை விரும்புவதில்லை. இதைத் தான் வர்ணாசிரமம் சாதித்தது. யூத வெறுப்பு, யூதர்களின் பகிஷ்கரிப்பு, அடிமைத்தனம், கறுப்பினத்தவரின் ஒதுக்குதல் ஆகிய எல்லாவற்றிலும் முயற்சி செய்தால் நெகிழ்வுத் தன்மையைக் காணலாம். ஆனால் இங்கே யாரும் அந்த மாதிரிச் செய்வதில்லை. வர்ணாசிரமம் ஜாதியத்தின் ஆணி வேர். வர்ணாசிரமம் ஜாதியத்தின் ஊற்றுக் கண். இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது ஆனால் இந்த வர்ணாசிரமத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆதரவு தேடுகிறார்கள்?

கடைசியாக ஒன்று. காந்தி, பாரதி, நேரு, ஜெயகாந்தன் ஆகியோர் என்றும் எனக்கு ஆதர்சமே. காந்தி தலித்துகளுக்காக செய்தது மகத்தானவை. பாரதி அவன் காலத்தை கடந்தவன். ஜெயகாந்தனின் அந்த உரையிலும் சரி அவர் திருச்சியில் ஈ.வெ.ராவை மறுத்த உரையிலும் அவர் மிளிறும் தருணங்கள் பல. ராஜாஜி ஜாதி வெறியர் அல்லர் அதற்கு அவர் ஆட்சியில் இயற்றப்பட்ட கோயில் நுழைவுச் சட்டங்களும் அவர் வாழ்வின் நிகழ்வுகளும் சாட்சி. இதுப் போன்ற பதிவுகள் பெரும்பாலும் வேறொருப் பார்வைக்கான எதிர் வினை அவ்வளவு தான். இவை முழுமையான மதிப்பீடுகள் கிடையாது. 

6 comments:

ஜோதிஜி said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக வாசித்த கட்டுரையிது. நன்றி.

டி பாலசுந்தரம் said...

Every word is truth. No exaggeration, no illogic. Worth reading repeatedly in the current context of criticisms of EVR.

shiva said...

இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது // ஸார் இது குறித்து எழுதுவீர்களா?

வன்பாக்கம் விஜயராகவன் said...

இந்திய சட்டம் ஜாதி, மத சாய்வுகளை பொது இடத்தில், பொது வெளியில் அதாவது படிப்பு, வேலையிடம், வாழும் இடம் ஆகியவற்றில் கண்டிக்கிறது, தடுக்கிறது, தண்டிக்கிற்து ; ஆனால் சொந்த வாழ்வில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய சட்டங்களையே சரியாக அமுலாக்கவில்லை - அதற்கு அரசியல்வாதிகளும் , அரசியல் கலாசாரமும் , சோர்வடைந்த நாட்டு நிர்வாகமும் காரணம் . இதில் `முற்ப்போக்கு` அரசியல்வாதிகளும் அடங்குவர் ; முற்ப்போக்கு என்ற போர்வையில் ஜாதீய பேதங்களைத்தான் தூண்டிவிடுகின்றனர்.

பொதுவாழ்க்கை `ஜாதி குருடாக`அமைந்தால் , ஓரிரு தலைமுறைகளில் தனிமனித ஜாதி உணர்வுகள் மங்கிவிடும் என நம்பலாம்; ஆனால் இந்திய அரசியலும் , அரசியல்வாதிகளும் ஜாதிபேதங்களை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்துகின்றன , அதனால் ஜாதீய உணர்வுகளும் கூட்டங்களும் வளர்ந்துகொண்டு இருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூக பேதஙகளை வேறு வழியில் தாக்கின. இதில் குறிப்பிடத்தக்கது பிரான்ஸ். பிரான்ஸ் சட்டம் படி , எல்லா பிரென்ச் குடிமகள்களும் , வெறும் குடிமகள்கள் தான் , மற்றபடி பிரெஞ்ச் அரசாங்கம் சட்டப்படி குடிமகஙளின் மதம், இனம் , மொழி ஆகியவற்றைப் கண்டுகொள்ள முடியாது. அதனால் பிரெஞ்ச் மக்கள் கணக்கெடுப்பில் மதம், இனம், ஜாதி பற்றி கேள்விகள் இல்லை. பிரெஞ்ச் அரசுக்கு எவ்வளவு சதவிகிதம் இந்துக்கள் , முஸ்லிம்கள், ஆப்பிரிக்க இனத்தவர் , என்ற தகவல்கள் தெரியாது, தெரியவும் கூடாது . மத, இன, மொழி, பால் அடிப்படையில் யாருக்கும் ஒரு சலுகை இல்லை. பிரித்தன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் , ஜெர்மனி நாடுகளில் கூட யாருக்கும் ஒரு சலுகையும் இல்ல; ஏனெனில் அவை அந்நாட்டு சட்டத்திற்க்கு புறம்பானவை.

இந்திய அரசியல் வாதிகள் ஜாதி புண்ணை மூடி , சுவஸ்தம் செய்வதை தவிர்த்து, புண்ணை கிளறிக்கிளறி காயங்களை அதிகமாக்குகின்றனர்.

வ.கொ.வி.

Murugan soundar said...

அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது

exerji said...

//இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது ஆனால் இந்த வர்ணாசிரமத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆதரவு தேடுகிறார்கள்?//
Very well said.