Sunday, January 25, 2015

காந்தி, கோட்ஸே மற்றும் இந்துத்துவம்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய “கோட்ஸே வீர வழிபாடு” பதிவுக் கண்டு அதிர்ச்சியுற்றேன். நீங்கள் காந்தியைப் புரிந்து கொண்ட அளவு அவரின் எதிரிகளைப் புரிந்து கொள்ளவில்லையோ எனத்தோன்றுகிறது. இன்று தமிழகத்தில் காந்தியைப்பற்றி எழுதுவதோடல்லாமல் திராவிட அவதூறுகளை ஆணித்தரமாக எதிர்கொள்ளுவதில் நீங்கள் செய்யும் பணி அளப்பரியது. உங்களைக்குறித்து எனக்குள்ள பல விமர்சனங்களைத்தாண்டி நான் ரசிக்கும் மற்றும் மதிப்பனவற்றுள் உங்களுடைய காந்திப் பற்றிய பதிவுகள் நிச்சயம் அடங்கும்.

சமீபத்தில் நான் பார்த்த “Lee Daniels ‘The Butler’” எனும் படத்தில் ஒருக் காட்சி. வட கரோலினா மாகாணத்தில் கிரீண்ஸ்பரோ எனும் ஊரில் சிலக் கல்லூரி மாணவர்கள் உணவகங்களில் (Lunch counters) வெள்ளைக்காரர்களோடு சமமாக உட்கார்ந்து உணவருந்தும் போராட்டம் நடத்தத் திட்டமிடுவார்கள். அந்த மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர் காந்தியப் போராட்ட வழிமுறைப் பற்றிக் கூறி அந்த மாணவர்கள் எந்தவிதமான நிலையிலும் எதிர்த்து தாக்கிவிடக் கூடாதென்றுக் கூறுவார். போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் சாப்பாட்டைகொட்டுவர், தண்ணீர் ஊற்றுவர், பின் நையப்புடைக்கவும் செய்வர். இவ்வளவுக்கும் அந்தக் கறுப்பு மாணவர்கள் ஒரு சுண்டு விரலைக்கூட எதிர்த்து தூக்க மாட்டார்கள். அந்தக் காட்சியைப்பார்த்த எந்த இந்தியனுக்கும் தாராசனா உப்புக் களத்தில் நடந்தப் போராட்டம் நினைவுக்கு வரவில்லையென்றால் அவனுக்கு வரலாறு தெரியவில்லையென்று அர்த்தம்





சென்ற வருடம் மார்டின் லூதர் கிங்கின் சரித்திரப் புகழ்ப் பெற்ற “I have a dream” பேருரையின் 50-ஆவது நினைவு வருடம். அப்போது வந்தப் பல கட்டுரைகளில் ஒன்று சுவாரசியமான ஒன்றைச் சொன்னது. அமெரிக்க Civil Rights போரட்டத்தில் காந்தியக் கொள்கைகளின் தாக்கம் நாம் அறிந்த ஒன்று. ஆனால் அதற்கும் மேல் அந்த நிகழ்வின் போது கூடப்போகும் ஜனத்திரளை சமாளிப்பது எப்படி என்பதற்கும் காந்தியே வழிக்காட்டி. ஒரு சிறுக் கலவரம் நடந்தால் கூட மாபெரும் பழி வந்துவிடும் என்றஞ்சிய ஒருங்கினைப்பாளர்கள் காந்தியைக்காண வரும் பல்லாயிரக்கணக்கானோர் எப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டனர் என்று ஆராய்ச்சி செய்தனர்.

தாராசனா உப்புக்களம் ஆகட்டும், கிரீண்ஸ்பரோ போராட்டமாக இருக்கட்டும் எனக்கு நினைவுக்கு வருவது C.E.M Joad காந்திப்பற்றி ராதாகிருஷ்ணனின் தொகுப்பில் எழுதியக்கட்டுரை தான். ஜோட் எழுதுவார்காந்தியின் பங்களிப்பென்பது ஒரு மனிதனின் ஒவ்வொரு எலும்பும் உடைக்கப்பட்டாலும் தன்னை தாக்கியவனை எதிர்த்து ஒரு சுண்டுவிரலைக்கூட தூக்காமல் இருக்கும் மனத்துணிவு மற்றும் moral courage” (என்னுடைய மேற்கோள் சற்றே வேறு பட்டிருக்கலாம்). இன்னும் பல புத்தகங்களின் வாயிலாக நான் காந்தியை இன்றும் அறிந்துக்கொண்டேயிருக்கிறேன். அதில் உங்கள் கட்டுரைகளும் அடங்கும்

உங்கள் பதிவில் மிகவும் வருந்தத்தக்க பகுதி இதுதான்: “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முதிரா இளைஞன் மனதிலும் காந்தியைப்பற்றிய அடிப்படையற்ற கசப்பையும் வன்மத்தையும் விதைத்தவர்கள் யார்? இந்துத்துவர்கள் அல்ல, இங்குள்ள முற்போக்கினரும் இஸ்லாமிய- கிறித்தவ மதவாதிகளும்தான் அதற்கு முதன்மைப்பொறுப்பு. இன்று இந்துத்துவ மதவெறி அமைப்புகளால் கோட்ஸே முன்னிறுத்தப்படும்போது இளைஞர்களிடம் எந்த எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை என்றால் அது இவர்கள் உருவாக்கிய காந்திவெறுப்பு காரணமாகவே.

உங்களுடையக்கேள்வியின் மையத்திற்குள் செல்லுவோம். இவர்களின் விமர்சனங்கள் மற்றும் வன்மம் நிறைந்த தூஷனைகளுக்குக் கிடைக்காத வெளிச்சம் இந்துத்துவ அமைப்புகளோ அல்லது அவர்களோடு ஒண்டிக்கொள்ளும்லும்பன் அமைப்புகளோ செய்யும்போது மட்டும் வெளிச்சம் போட்டுக்காட்டப்படிகிறதே என்பதுதான் உங்கள் குமுறல்.

இங்கே கேட்கப்படவேண்டிய முக்கியமான கேள்வி கோட்ஸேவிற்கு சிலை வைக்க வேண்டுமென்பவர்கள் ‘மைய இந்துத்துவத்தின் விளிம்பு கூட்டமா’ என்பதல்ல. மாறாக “இன்று இப்படி வெளிப்படையாக தொலைகாட்சியில் கேட்குமளவு இப்ப்டிப்பட்ட துனிவு எப்படி வந்தது? எவ்வகையான அறிவுச் சூழல் அதை சாத்தியமாக்கிற்று?”


வெறுப்பின் ஊற்றுக்கண்கள் மற்றும் ஒரு தந்நிலை விளக்கம்:

உங்களுடைய பதிவை முன்னிட்டு கூகிள் பிளஸில் நடந்த விவாதத்தில் உங்கள் நண்பரொருவர் என்னை நோக்கிக்கேட்டார்அதை (காந்தி எதிர்ப்பு) அதீதமாக எடுத்துச்சென்றது அரவிந்தன் கண்ணையன் சார்ந்திருக்கும் கிருத்துவ நிதியியல் அமைப்புகள் ; “கண்ணையன் எந்த கிருத்துவ அமைப்பையும் சாராதவரா?” 

என் தந்தை கிறித்தவரே, ஆதலால், இந்திய வழக்கப்படி, நானும் கிறித்தவனே. மற்றப்படி நான் வாழும் தெருவில் இருக்கும் தேவாலயத்தில் கூட நான் உறுப்பினன் கிடையாது.

என் முதல் ஆச்சரியம் என் மதம் குறித்து இணைய ஜேம்ஸ் பாண்டுகளின் துப்பறியும் திறன் குறித்துதான். என் மதத்தை நான் மறைத்ததுமில்லை பறை சாற்றியதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் என் கிறித்தவ உறவினர்களால் எனக்கு கிறித்தவத்தில் ஈடுபாடில்லை என்றே ஒரு கருத்துண்டு. நான் ஏதோ என் ஓய்வு நேரத்தில் ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள் எழுதுகிறேன் என்றே நினைத்தேன் இந்த வெளிச்சம் எனக்கு புதிது. என் வீட்டு நூலகத்தில் காந்தி, நேரு, இந்தியா, இந்திய வரலாறு, இந்து மதம், இந்திய தத்துவம் பற்றிய நூல்கள் (குறிப்பாக ராதாகிருஷ்ணனின் நூல்கள்), ஆகியனப்பற்றி மிகக் கறாரான மதிப்பீடுகளின் பின்பு தேடித்தேடி சேகரித்த நூல்களுண்டு. அவை பெரும் பொருட்செலவு மற்றும் தொடர்ந்த ஊக்கத்தில் சேகரிக்கப்பட்டவை

நீங்கள் அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வீர்கள்  நீங்கள் எழுதியதைப்படிக்காமல் உங்களைப்பற்றிய பிம்பத்தை மனதுள் கொண்டு அதை வைத்தே விவாதம் செய்கிறார்கள் என்று. நான் ஒரு சாமானியனாக இருந்தப்போதும், காந்தியைப்பற்றி, நேருவைப்பற்றிப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்தரத்தில் எழுதையவைகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு என் பிறப்பில், ஒரு விபத்தாக, நிகழ்ந்துவிட்ட ஒரு நிகழ்வை வைத்து எடைப்போடுவது எப்படி சாத்தியமாயிற்று? துரதிர்ஷ்ட்டவசமாக உங்கள் எழுத்தே அந்த வெறுப்பின் ஊற்றுக்கண்.

அருந்ததி ராயின் கருத்துகள் எனக்கு ஒவ்வாமைத் தருபவை (allergic). அவருடைய காந்தி எதிர்ப்பு, மார்க்ஸியப் பார்வை, மாவோயிஸ ஆதரவு ஆகியவை எனக்குச் சிறிதும் ஒப்புமையில்லாதவை. ஒருவருடைய கருத்து பின்புலம் குறித்த ஆய்வு அவர் கொண்டுள்ள கருத்தியலை ஆராய்வதற்கு அவசியமான ஒன்றே, இனம் மற்றும் பிறப்புக்கூட அந்த வகையில் relevant-தான். பிரச்னை நீங்களோ உங்கள் நண்பரோ என் மதத்தையோ அருந்ததி ராயின் மதத்தையோ விவாதத்துக்குள் கொண்டுவந்ததல்ல. எங்களை எங்கள் மதம் கொண்டு மட்டுமே, எங்கள் மற்றக் கருத்தியல்களை புறங்கையால் ஒதுக்கிவிட்டு, எங்கள் கருத்துகளுக்கு ரிஷி மூலம் கண்டுப்பிடித்துவிட்டதாய் குதூகலிப்பதுதான் வருத்தம் தரத்தக்கது.

அருந்ததி ராயின் காந்தி எதிர்ப்பிலோ, அம்பேத்கர் ஆதரவிலோ நேர்மையோ scholarship தரமோக் கிடையாது. அவரும், நீங்கள் கூறுவதைப்போல, தெருமுனை அரசியல்வாதியே. என்னக் கொஞ்சம் அழகாக ஆங்கிலம் பேசுவார். ஆனால் அவரின் காந்தி எதிர்ப்புக்கு முழு முதற் காரணம் அவர் பிறந்த மதமே எனக் குற்றம் சாட்டுவதுதான் இங்கு நெருடுகிறது. பாவம் அவர் தந்தை ஒரு இந்துவாம். இந்துவை மணந்ததாலேயே அவர் தாய் அவரது கிறித்தவக் குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர் என்று நியுயார்க் டைம்ஸ் கட்டுரைக்கூறுகிறது (http://www.nytimes.com/2014/03/09/magazine/arundhati-roy-the-not-so-reluctant-renegade.html) . இது நடந்தது ராயின் குழத்தைப்பருவத்தில்

இன்னொரு வேடிக்கை என்னவெனில் அவர் அம்பேத்கரை முன்னிறுத்தி எழுதியப்புத்தகத்தை தலித் சிந்தனையாளர்களே இப்போது நிராகரிக்கிறார்கள்( http://www.independent.co.uk/arts-entertainment/books/features/arundhati-roys-book-on-caste-rejected-by-some-anticaste-activists-9929233.html). அம்பேத்கரை அவர் காந்தியை வசைப்பாடுவற்கு ஒரு Trojan Horse போல பயன்படுத்துகிறார் என்று அவர்களே நிராகரிப்பதோடல்லாமல் அவர் அம்பேத்கரை சரி வர புரிந்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். இந்தியாவின் சோகமே ராய் போன்றவர்களெல்லாம் ஆராய்ச்சியாளர்களாய் பம்மாத்துக் காட்டுவது தான்

வெறுப்பு ஊழி வெள்ளமென பெருக்கெடுத்து ஓடிய போதும் காந்தி தனி மனிதனின் ஆன்மாவை நோக்கிப் பேசினார். பிறந்த மதமன்றி வேறெதுவும் ஒருவரின் கருத்துகளுக்கு காரணியாக இருக்க முடியாது எனும் குற்றம் சாட்டுதல் காந்தியத்திற்கு இழுக்கு. அதை நீங்கள் செய்வது துரதிர்ஷ்டம்.

காந்தியை வசைப்பாடும் கிறித்தவர்கள் பைபிளையும், கிறிஸ்துவையும் புரிந்துக்கொள்ளவில்லை என்றேக் கூறுவேன். நான் கத்தோலிக்கப்பள்ளிகளில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் (தஞ்சையி அவை அந்தக் காலத்தில் சிறந்தப் பள்ளிகள் என்பதாலேயே. வேறு காரணம் கிடையாது. நான் காருண்யாவில் முதலில் சேர்ந்து பிறகு அது பிடிக்காமல் பிராமணர்கள் நடத்திய ஷண்முகா கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மிக மகிழ்ச்சியாக நான்கு வருடம் படித்தேன்). எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் பள்ளிகளிலோ அவ்வப்போது சென்ற தேவாலயங்களிலோ அரசியலோ காந்தி நிந்தனையோக் கேட்டதில்லை. ரொமய்ன் ரோலண்ட் முதல் வில்லியம் ஷைரர் வரை காந்தியில் கிறிஸ்துவைப்பார்த்த கிறித்தவர்கள் ஏராளம். நான் காந்தியை பற்றி எழுதுகிறேன் என்று சொன்ன போது என் தந்தை அவர் சிறு வயதில் கற்றப் பாடலை பாடினார். “மஹாத்மா காந்தியைப் போல் சாந்த சொரூபியை காண்பதும் எளிதாமோ?…ஆத்ம சோதனையில் அவர் இயேசு கிரிஸ்து அல்லவோ?”. என் தந்தை இந்தப் பாட்டினை அவர் மாமாவிடமிருந்து கற்றாராம். அவர் மாமா அதை ஒரு கிறித்தவ ஆஸ்ரமத்தில் தான் கற்றார்.

உங்கள் வாசகர் எழுதியதைப் போலவே இன்னொரு நிகழ்வு. ஒரு உறவினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட சில தலித் குடும்பங்களுக்கு ஜெர்மானிய கிறித்தவ தொண்டு நிறுவனங்களின் உதவிக்கொண்டு வீடுகள் கட்டிக்கொடுத்தார். கவனிக்கவும் வீடு கட்டும் பணி மட்டுமே நடந்தது. மத மாற்றம் நிகழவில்லை அது குறிக்கோளும் அல்ல. வீடு ஒப்படைக்கும் விழாவில் யாரோ தலித் தலைவர் சம்பந்தமில்லாமல் காந்தியைப்பற்றி அவதூறாக பேச ஆரம்பிக்க என் உறவினரும் மற்றக் கிறித்துவர்களும் அதை தடுத்து நிறுத்தினர் என்று கேள்விப்பட்டேன்.

என் உறவினரில் ஒருவர் கிறித்தவ பாதிரியார். நான் அவரைக்கேட்டேன்நீங்கள் படித்த இறைக் கல்லூரி மற்றும் வேலைப் பார்த்த பல கிராமங்களில் காந்தியை எதிர்த்துப் பேசிக் கேள்விப்பட்டதுண்டா என்று. அவர் சொன்னார்கிடையவே கிடையாது ஆனால் தலித் கிறித்தவர்கள் அவதூறாகப் பேசிக் கேட்டிருக்கிறேன்”. தலித் கிறித்தவர்களின் காந்தி எதிர்ப்பினை நாம் தனியாக தலித் அரசியலுடன் பேச வேண்டும்

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோட்சேவிற்கு சிலை வைப்போம் என்று சொல்ல கிறித்தவர் மட்டுமல்ல எந்த மார்க்ஸிட் மற்றும் இஸ்லாமியருக்கோ துணிவிருக்காது. தான் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவன் என்கிற தைரியம் (அல்லது திமிர்) தான் அப்படி ஒருவரை சொல்ல வைக்கும்.

தலித் காந்தி வெறுப்பு மற்றும் அம்பேத்கர்

காந்தி-அம்பேத்கர் உறவைப் போன்று மிக சிக்கலானதும் அதிகம் தவறாக சித்தரிக்கப்பட்டதுமான உறவு வேறெதுவுமிருக்காது. அம்பேத்கரை இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்கு செல்வதற்கு முன் சந்தித்த காந்திக்கு அம்பேத்கரை ஒரு பிராமணர் என்றே நினைத்திருந்தார். தான் படிக்கும் பள்ளியில் ஒரு சாக்குப்பையின் மீது உட்காரும்படி, அதுவும் அந்த சாக்குபையை அவனே கொண்டுவர வேண்டும், நிர்பந்திக்கப்பட்ட பையனிடம்நீ பிறப்பால் தான் தாழ்ந்தவன் நானோ by choice தாழ்ந்தவன் என்பதால் உன்னைவிட தாழ்ந்தவன் என்று சொன்னால் அந்த பையனுக்கு கனன்று வந்ததில் என்ன ஆச்சரியம். தோலின் நிறத்தால் ரயிலில் காந்தி தூக்கியெறியப்பட்டார். ஆனால் பிறகு அதே ரயிலில் அவரால் அதே முதல் வகுப்பில் செல்ல முடிந்தது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பலப் பட்டங்கள் வாங்கி ஒரு ராஜாவிடம் பணி செய்த அம்பேத்கருக்கோ இருக்க வீடு கிடைக்கவில்லை. அவர்களிருவரின் உலகங்கள் வேறு வேறு. Gandhi’s claims of walking in the shoes of a Dalit could justifiably irritate a Dalit, that too in those days. 

தலித் அமைப்புகளின் காந்தி வெறுப்பு. உங்களுக்கே நன்றாக தெரியும் அதன் முழு முதற்காரணம்அம்பேத்கர் என்று. தங்களை முற்போக்காளர்களாய் காண்பித்துக்கொள்ள இன்றுள்ள மிக எளிய மற்றும் சிறந்த வழி அம்பேத்கர் நிழலில் உட்கார்ந்துக்கொண்டு காந்தியின் மேல் காறித்துப்புவது. தமிழக தலித்துகளுக்கு அம்பேத்கரோடு சேர்ந்து ராமசாமியாரின் வன்மம் நிறைந்த பிரசாரமும் சேர்ந்துக்கொண்டது

அருந்ததி ராய் எழுதிய அரைவேக்காட்டு வெறுப்பு பிரசார புத்தகமெல்லாம் ஒன்றும் பெரிய அலையை ஏற்படுத்தாது. ஒரு சில புத்தகங்கள் இந்தியாவில் பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்துவிடாது என்பது உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அப்படியே அருந்ததி ராயின் புத்தகம் பெரிய விஷயமென்றால் அதற்காக இந்துத்துவர்கள் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது அருண் ஷோரி எழுதிய ‘False Prophet’. அம்பேத்கரை ஏதோ ஏகாதிபத்தியக் கைக்கூலி என்பதுப் போல சித்தரித்திருப்பார். காந்தியை எதிர்த்தார் என்ற ஒற்றைப்புள்ளியை வைத்து அம்பேத்கரின் எந்த வாதத்திலும் நியாயம் சற்றும் இல்லை என அவருக்கே உரியப் பாணியில் ஷோரி எழுதியிருப்பார்.

அம்பேத்கரின் காந்தி எதிர்ப்பில் சில நியாயங்கள் கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. நேரு, காந்தியின் புத்தகங்கள் கிடைப்பதுப் போல் அம்பேத்கரின் எழுத்துகள் கிடைப்பதில்லை ஆதலால் சமீபத்தில் தான் எனக்கு அம்பேத்கரைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நேரு அளவுக்கு ஆங்கிலத்தை மிக லாவகமாக கையாள்கிறார் அம்பேத்கர். அவரின் கட்டுரை முறை மேற்கத்தியப் பல்கலைக் கழகங்களின் ஆய்வு முறை நேர்த்தியைக் கொண்டிருக்கின்றன

காந்தி ஒரு சனாதன இந்து என்று நான் நினைக்கவில்லை. தி. மேடைகளில் உரைப்பதுப் போல் அவர் மொண்ணைத்தனமாக வர்ணாஸ்ரமத்தை தூக்கிப் பிடிக்கவில்லை. அதே சமயத்தில் அவர் வர்ணாஸ்ரமித்தின் கூறுகளை முற்றாக நிராகரிக்கவுமில்லை. மலமும் கூளமும் அள்ளுவதெற்கென்றே விதிக்கப்பட்ட சமூகத்திடம் போய்எனக்கு மறு பிறப்பென்று ஒன்றிருக்குமென்றால் நான் அதி-சூத்திரனாகப் பிறக்க வேண்டுகிறேன் அப்படிப்பிறந்து நானும் குப்பை அள்ள விழைகிறேன் என்றார். அதைக் கேட்டு அம்பேத்கரின் ரத்தம் சூடானதில் என்ன ஆச்சரியம். ஜகஜீவன் ராமின் கோரிக்கைகளை விவாதிக்கும் போது மதன் மோகன் மாளவியா தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக்கோரும் விதமாக தன் தலைப்பாகையை கழற்றி வைத்தாரென ஒருவர் பெருமைப்பொங்க கூறுகிறார். மாளவியாவின் தலைப்பாகையை வைத்துக்கொண்டு தலித்துகள் என்ன செய்ய முடியும் என்று அவர் எதிர் பார்க்கிறார்? மத மாற்றம் எனும் அச்சுறுத்தலும், இந்து ஒற்றுமை என்ற அரசியல் நிர்பந்தமும் இல்லையென்றால் மாளவியா தலைப்பாகையென்ன தன் கால் செருப்பைக்கூட தலித்துகளுக்காக கழற்றியிருப்பாரா என்பது கேள்விக்குறியதே.

சொத்துரிமை மறுக்கப்பட்ட மற்றும் சொத்து சேர்ப்பதற்கான எந்த வழிமுறையுமற்ற சமூகத்திடம் போய்சொத்துகள் ஏதும் இல்லாத உங்கள் வாழ்வு, சொத்துகளை சேர்க்கும் முனைப்பில்லாத வாழ்வு மேலானது. உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள், உங்களை தேவர்கள் பூக்களைக் கொண்டு வாழ்த்துவர் என்றெல்லாம் சொன்னால் அவர்கள் காதுகளில் தேனா பாயும்? அம்பேத்கர் சூடாகஏன் இதையே இவர் ஆசிரமங்களுக்கு நன்கொடை அளிக்கும் உயர் ஜாதியிடம் சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார்.

ஆனால் அம்பேத்கரின் தவறு என்னவெனில் காந்தியின் அத்தகைய கூற்றுகளை ஏதோ மேட்டுக்குடி சதிப் போல சித்தரிப்பதுதான். ஜான் ரஸ்கினின் ‘unto the last’ படித்துவிட்டு தன் உடைமைகளையெல்லாம் விட்டொழித்த பனியாவிற்கு அம்பேத்கர் ஒரு ‘benefit of doubt’ கூட குடுப்பதில்லை. அங்கேயே நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. ஐரோப்பாவில் யூதர்களை எப்படிப் பேசுவார்களோ அதை விட கேவலமாக பனியாக்களைப் பற்றி சித்தரிக்கிறார்

இன்று இந்துத்துவர்கள் அம்பேத்கரை தலையில் தூக்கி வைத்தாடுவதற்கு காரணங்களுண்டு. ஒரு இந்துக்குழு, உங்கள் பாஷையில் சொன்னால் லும்பன் குரூப், சுவரொட்டி ஒன்றில் கூறுகிறதுஇட ஒதுக்கீட்டை இந்துக்களுக்கு மட்டும் என வரையறுத்த அம்பேத்கர் வாழ்க என்று. நேருப் பற்றிய என்னுடைய கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒரு இந்துத்துவர் மீண்டும் மீண்டும் அம்பேத்கர் 1941-இல் எழுதிய ‘Thoughts on Pakistan’ கட்டுரையை மேற்கோள் காட்டிஅன்றே அம்பேத்கர் ஜனத்தொகை பரிமாற்றமே தீர்வென்று சொன்னார்”. 

நீங்களும் உங்களைப்போன்றோரும் மீண்டும் மீண்டும் நேரு மீது வைக்கும் குற்றசாட்டு அவர் இந்தியாவை மேற்கத்திய விழுமியங்களைக்கொண்டு நோக்கியதால் அவருக்கு காந்தியைப் போல் இந்தியாவைப் புரியவில்லையென்பதே. அம்பேத்கரை படிக்கும் போது, குறிப்பாக அந்தக் கட்டுரையைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியதுஇவரல்லவோ மேற்கின் விழுமியங்களை அப்படியே விழுங்கியிருகிறார்”. காந்தி ஒருவர் மட்டுமே பிரிவினையென்பது தாயின் கர்ப்பத்தைக்கிழிப்பது போலிருக்கும் என்று சரியாக கணித்தார். நமது துரதிர்ஷ்டம் 1950-இல், பிரிவினையின் பயங்கரகளுக்குப் பிறகு, அம்பேத்கரின் எண்ணங்கள் என்ன என்பது தெரியாது. அந்த அன்பருக்கு பதில் கூறுமுகமாக நான் பிரிவினை எத்தகைய கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பயங்கரங்களையும் சிக்கல்களையும் கட்டவிழ்த்து விட்டதென எழுதினேன்

வில்லியம் ஷைரெர் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டைப் பற்றியும் அதில் காந்திக்கு நேர்ந்த சிக்கல்கள், குறிப்பாக அவமானங்களை, எழுதுகிறார். அம்பேத்கர் காந்தியை மிக வன்மத்தோடு தாக்கினார் என்று ஷைரெர் எழுதுகிறார். பார்ஸி பிரதிநிதியோ பச்சையாக ஆங்கிலேயரின் கைத்தடியாகவே செயல்பட்டு காந்தியை காழ்ப்போடு ஏசுகிறார். கிலாபத் கிளர்ச்சியின் போது காந்தியோடு கைக்கோர்த்த முஸ்லிம் தலைவர் ராம்சே மேக்டொனால்டின் மனம் மகிழும்படி நடந்தார் என்கிறார் ஷைரெர்.





பூனா ஒப்பந்தம் பற்றி கோயபல்ஸே வெட்கப்படும் அளவிற்கு காந்தி தூற்றப்பட்டுவிட்டார். ஒரு வரியில் சொல்வதென்றால் அம்பேத்கர் ராம்சே மேக்டொனால்டிடம் பெற்றதை விட காந்தியிடம் பெற்றார்.

அம்பேத்கர் மார்க்ஸியத்தையும் பௌத்தத்தையும் ஒப்பு நோக்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் மார்க்ஸியம் பௌத்ததோடு இணைந்து செயல்படவேண்டும் என விரும்பியிருப்பார். எனக்குபின் தொடரும் நிழலின் குரல் நினைவுக்கு வந்தது. தமிழில் படிக்க விழைவோருக்கு அந்த நாவல் மிக முக்கியமான ஒன்று. அது குறித்து விரிவான விமர்சனத்தை சீக்கிரம் எழுதுவேன் என நினைக்கிறேன்.

காந்தி எனும் colossus இன்றும் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு பேசுப் பொருள். இதனாலேயே இன்றும் காந்திப்பற்றியே எல்லோரும் எழுத முற்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மேற்குலகின் பதிப்பாளர்களிடம்காந்தியைப்பற்றி எழுதுகிறேன் என்று சொன்னால் கொஞ்சமாவது செவிக் கொடுப்பார்கள் ஆனால் அம்பேத்கருக்கு அந்த வெளிச்சம் இன்னும் கிட்டவில்லை. நேருவுக்கு கொஞ்சம் பரவாயில்லை. தண்டியாத்திரைப் பற்றி எழுதாதவர்களில்லை. ஆனால் மஹத் சத்தியாகிரகம் பற்றி எத்தனை குறிப்புகள் உள்ளன, in popular public domain? அம்பேத்கர் வாசிக்கப்பட வேண்டிய அளவு இன்னும் வாசிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

சமீபத்தில் வெளியான NCERT புத்தகத்தில் ஒரு கேலிச் சித்திரம் இடம் பெற்றது. அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புக் குழு ‘நத்தைப் போல்’ செயல்படுவதாகவும் அதை சாட்டைக் கொண்டு நேரு விரைவுப் படுத்திவத்துவதாகவும் சித்தரிக்கப்பட்டது. நத்தையாக சித்தரிக்கப்பட்டவர் அம்பேத்கர். 1949-இல் அந்த கேலிச் சித்திரம் வரைந்தவர் சங்கர் பிள்ளை. அதுப் போல் நிறைய காந்திப் பற்றியும், நேரு பற்றியும் இருக்கும் ஆனால் 2012 அவை பள்ளிப் புத்தகங்களில் இடம் பெறுமா?

இஸ்லாமியர்களும் காந்தி வெறுப்பும்:

உங்கள் கட்டுரையில் அபாண்டம் என்றும் வரலாற்றை திரிப்பதும் என்றும் சொன்னால் அது கட்டுரையின் முடிவில் நீங்கள் ஒட்டுமொத்தமாக காந்திய வெறுப்பைமார்க்ஸியர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர் மேல் பழியைப்போட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அந்தப் பழியிலிருந்து விலக்களிப்பது தான்.

 அரசியலதிகாரமெனும் பயங்கர சதுரங்க விளையாட்டில் இஸ்லாமியரும், இந்துக்களும் தங்களுக்கேத் தெரியாமலும், தெரிந்தும் ஈடுபட்டனர். ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சியும் அதை ஊக்குவித்ததுமுஸ்லிம் லீகும், இந்து மஹாசபையும் ஆங்கிலேய ஆட்சியின் கொடைகள். கிட்டத்தட்ட ஐநூறாண்டு காலம் அரசியலதிகாரத்திலிருந்த இஸ்லாமியர்கள் சில பத்தாண்டுகளுக்குள் தங்கள் சாராஜ்யங்கள் சரியக் கண்டனர். அவர்களுக்கென்று அரசியலமைப்பில் இட ஒதுக்கீட்டினை Minto-Morley Reforms (India Councils Act 1909) ஸ்தாபனம் செய்தது. அப்படி தங்களுக்கு ஒதுக்கீடு கோரியதற்காக முஸ்லீம்களை நாம் குறை சொல்ல முடியாது ஏனெனில் இன்று அதேக் காரணங்கள் தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்கு ஆதரவாக கூறுகின்றனர். இன்று எப்படி இட ஒதுக்கீடு அது ஒட்டிய சாதி அரசியலை ஊக்குவிக்கிறதோ அதேதான் அன்று இஸ்லாமியர்களின் விஷயத்திலும் நடந்தது. இஸ்லாமியர்கள் ஒருமித்த சக்தியாக திரள்வது இந்து மஹாசபை பிறக்கக் காரணமானது. அதனாலேயே முஸ்லிம் லீகும், மஹாசபையும் மிண்டோ-மார்லே பிரகடனத்தின் குழந்தைகள்

இந்தப் பிளவுக்குள் வரலாறு புரட்டிப்போட்ட அதிகார மையங்கள், 500 ஆண்டுகளுக்கு மேலான வஞ்சங்கள் ஒரு பெரிய அணையில் சிறிதாக ஆரம்பித்த நீர்கசிவு எப்படி அந்த அணையைக்காவு வாங்கிப் பின் வெள்ளமெனப்பாய்ந்து ஊரையே நாசம் செய்யுமோ அதுப்போல நாடு பிளவுப்பட்டது

இந்த குழப்பமானக் காலக்கட்டத்தில் தான் காந்தி இந்திய அரசியலில் 1915 முதல் நுழைந்தார். 1919-ஆம் வருடம் கிலாபத் கிளர்ச்சி. கிலாபத் பற்றிய உங்கள் பதிவு மிக முக்கியமானது (http://www.jeyamohan.in/26133). அந்த கிளர்ச்சியின் வெற்றித் தோல்விகளைப் பெரும்பாலும் துல்லியமாகவே கண்டு சொல்லியிருக்கிறீர்கள். காந்தியின் வெகு ஜனப் போராட்ட முறைகள் மற்றும் மதக்கொள்கைக்கானப்போரட்டத்தை தேசியப் போராட்டத்துடன் கலந்தது என ஜின்னாவுக்குள் ஒரு வெறுப்பு வேரூன்றியது. இங்கே தான் காந்தி எனும் மதத்தலைவர் பற்றியும் பேச வேண்டும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிடவேண்டும். மதத்தை ஒரு அரசியல் ஆயுதமாக, ஒருங்கிணைக்கும் சக்தியாக, பிரயோகித்தவர் திலகர். காந்தியும், திலகரைப் பின்பற்றியே, கீதைக்கு உரை எழுதினார்

To blame Muslim leadership as the sole communal force or communalized party belies the facts about overt religiosity of Congress leadership and their explicit use of religion as a tool in politics. Casteism and racism was rampant amongst Congress leadership with the exception of Nehru and Gandhi. 

இங்கே இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நவகாளி இரத்தத்தில் மிதந்த போதும் காந்தி அங்கே தன் உயிருக்கு பங்கமில்லாமல் நடை பயணம் மேற்கொள்ள முடிந்தது. நூற்றுக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்த இஸ்லாமியர்கள் ஒரு நிராயுதபாணி கிழவரை சீண்ட கூட முடியவில்லை.ஏன்? அவர்களுக்குத் தெரியும் அவருடைய ஒரு உயிரைக் காவு வாங்கினால் அதற்கான விலையை இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியனும் தர வேண்டியிருக்குமென்று. ஆனால் பூனாவில் பிராமண குலத்தில் பிறந்த நதுராம் கோட்ஸேவிற்கோ அந்த பயம் இல்லை.

காந்தி எனும் மதத்தலைவர்

நீட்ஷேவை நாஜிக்கள் சுவீகரித்துக்கொண்டு அவருக்கு என்றென்றும் அவப்பெயர் தேடித்தந்தனர். பல தளங்களில் செயல்பட்ட காந்திப்போன்ற ஒருவரை ஆர்.எஸ்.எஸ் போன்றவொரு இயக்கம் எப்படி ‘selective’-ஆக சுவீகரிக்கிறது என்பதை மிகக்கவணாமக ஆராய வேண்டும்

ஒரு உலகளாவிய ஏகாதிபத்தியத்தை அல்லது ஒரு மாபெரும் அதிகார மையத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் இறை நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமல்ல, அது நல்லதும் கூட. ஆனால் காந்தியே, திலகரை விட, அதிகமாக தன் இறை நம்பிக்கையை மட்டுமல்லாமல் தன் மதத்தையும் தன் போராட்டத்தின் அங்கமாகவும் ஆன்மாவகவும் முன்னிறுத்தினார்

நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் ஆர்.எஸ்.எஸ்மகாத்மா காந்தியை மகத்தான இந்துத் தலைவராக ஏற்றுக்கொண்டது என்று. யாரை எதன் பொருட்டு ஏற்றுக்கொள்கிறோம், அவர்களில் எதை ஏற்கிறோம், முக்கியமாக, எதை நிராகரிக்கிறோம், மிக முக்கியமாக, ஏன் நிராகரிக்கிறோம் என்பதெல்லாம் தெளிவாக பிரித்தாராய வேண்டும்

காந்தியை ஒரு மதத்தலைவராக குறுக்கியதற்கு நீங்கள் ஆர்.எஸ்.எஸை வறுத்தெடுப்பீர்கள் என்று பிழையாக நம்பிவிட்டேன். நீங்கள் அதையே ஆர்.எஸ்.எஸுக்கு நன்னடத்தை சான்றிதழாக மாற்றிவிட்டீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால் KKK MLK-வை மதத்தலைவராக ஒப்புக்கொண்டார்கள் ஆகவே அவர்களுக்கு MLK Jr மீது மதிப்புண்டு என்று சொல்வதுப்போல்

காந்தி மட்டும் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்தியிராவிட்டால் நேருவை இன்றளவும் வசைப்பாடுவதுப்போல் அவரையும் தூஷித்திருப்பார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். காந்தியின் ராம ராஜ்யம் வேறு இந்துத்துவர்களின் ராம ராஜ்யம் வேறு. இந்துத்துவர்களின் காந்தி கீதைக்கு உரை எழுதியவர், ‘இந்து ராஷ்டிரம் எழுதியவர்.

காந்தி அரசியல், கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்த கதையாடல்கள், மத சீரமைப்பு, மத நல்லினக்க முயற்சிகள் என்று ஒரு explosive mix- மிக ஜாக்கிரதையாகக் கையாண்டார். ஆனால் அவருடைய மதம்+அரசியல் எனும் செயலாற்றும் விதம் பல தரப்பிலும் பல்வேறுக்காரணங்களுக்காக ஐயப்பாட்டுடனும், சில சமயம் எரிச்சலுடனும், சில சமயம் பயத்தோடும் பார்க்கப்பட்டது. அத்தகைய அணுகுமுறையின் சாதக பாதகங்கள் குறித்து ஒருப்பெரும் விவாதமே நிகழ்த்தலாம்

காந்தியை ஓரளவாவது ஒப்புக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் (மற்றும் உங்களைப்போன்ற காந்தியை ஆராதிப்பவர்கள்) எங்கே நேருவை முற்றாக நிராகரிப்பதோடல்லாமல் நேருவை நிந்தனை செய்வார்களென்றால் காந்தி மற்றும் நேருவின் மேற்குலகு குறித்த சிந்தனைகளில். ‘Discovery of India’  எழுதிய நேருவை, தன் அஸ்தியை இந்தியாவெங்கும் தூவச் செய்த நேருவை மூப்பனாருடன் ஒப்பிட்டுநேரு ஒரு அசடர் என்று நீங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது (அதைப்படித்து நான் விக்கித்துப்போனது வேறு விஷயம்).

டால்ஸ்டாய், தோரூ, விவிலியம், ஜான் ரஸ்கின், எமெர்ஸன் என காந்தியின் மேல் மேற்குலகின் பல மேன்மையான் விழுமியங்கள் ஆழ்ந்த பாதிப்புகளுண்டு என்றாலும் அவர் அவற்றை பின்னுக்குத்தள்ளி இந்திய விழுமியங்களின் தாக்கம் குறித்தே அதிகம் பேசினார்.

காந்தியை மதத் தலைவராகப் பார்க்கும் நோக்கின் இன்னொரு அபாயம் அவர் மஹாத்மாவனதே அவர் இந்து ஞான மரபில் தோன்றியதும், இந்தியாவில் பிறந்ததுமே காரணம் என்று ஜோடனை செய்வது. வரலாற்று நாயகர்கள் ஒரு சூழலில் தோன்றுவதற்கு எத்தனையோ காரணிகளுள்ளன. ‘கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்கு தான், இரண்டும் சந்திக்காது’ என்றார் ருட்யார்டு கிப்ளிங். ஆனால் காந்தியில் டால்ஸ்டாயும், கீதாசார்யணும் சந்தித்தனர். போர் குணமிக்க பதான்களிடையே தான் எல்லை காந்தி தோன்றினார். MLK-வும், மண்டேலாவும், ஆங்-சாங்-சூ சியும் வெவ்வேறு பன்பாட்டு தளங்களில் தோன்றியவர்கள்.

காந்தியை ஆராதித்து நேருவை தூற்றுவோரிடம் சில விழுமியங்களைக் கட்டாயம் காணலாம், உங்களிடமும். மேற்குலகை நிராகரித்த காந்தி இந்திய மரபென்ற போர்வையில் பழமையையும் மௌடீகத்தையும் ஸ்தாபனம் செய்தார் என்றால் மிகை இல்லை. மரணப்படுக்கையிலிருக்கும் தன் மனைவிக்கு பெனிஸிலின் ஊசிப்போடக்கூடாதென தடுத்தவர். அந்த ந்தியின்ஊசி கஸ்தூரிபாவைப் பிழைக்க வைத்திருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. அது முக்கியமுமல்ல. தன் மகன்களுக்கு, குறிப்பாக ஹரிலாலுக்கு, மேற்கத்திய கல்வியை மறுத்து இந்திய மரபுக் கல்வி என்றெல்லாம் வீணடித்தார். காந்தியின் பொருளாதார கொள்கைகளை கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க மிகுந்த ஆதுரத்துடன் பேசுபவர்கள் யாரும் அந்த பொருளாதார உலகில் ஒரு நாள் கூட ஜீவித்திருக்க முடியாது.

அது என்ன காந்தியவாதி என்றாலே ஆயுர்வேதம், விஞ்ஞானத்தை நம்பாமை, என்று ஒரு கலவை கட்டாயமாக இருக்கிறது. காந்தியை ஏற்று நேருவை அசடர் என்று விளிக்கும் பின்புலம் இதுதான். நீங்கள் இந்திய ஞான மரபைக்கண்டு பிறகு அதன் பதாகையாக காந்தியைக்கண்டு கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

நேரு

இடது சாரிகளில் காந்தியின் எதிர்ப்பாளர்கள் கட்டாயம் உண்டு. ஆனால் அவர்கள் எதிர்ப்பில் பெரும்பாலும் சித்தாந்த ரீதீயான அடி நாதம் இருக்கும். மார்க்ஸின் நிழலில் நின்றுதான் நேரு காந்தியின் பொருளதாரக் கொள்கைகளை எதிர்த்தார் அவரென்ன காந்தி வெறுப்பாளரா? இடது சாரிகள் கோலோச்சிய கல்விக்களனிலிருந்து எத்தனை காந்தி எதிர்ப்பு (விமர்சனமல்ல) நூல்களை உங்களால் எடுத்துப்போட முடியும்? இதிலும் கவனிக்க வேண்டியது இடது சாரிகள் கல்வி மற்றும் கலாசார அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியதெல்லாம் நேரு மற்றும் இந்திரா காந்தியின் ஆட்சிகளில் தான். அத்தகைய ஆட்சிகளில் எவ்வளவு காந்தி எதிர்ப்பினை, அதுவும் அர்ஜுன் சம்பத் ரேஞ்சுக்கு, செய்திருக்க முடியும்?

நேருவின் புத்தகங்களையும், எழுத்துகளையும், என்னுடைய பதின்ம வயது முதல் இன்றளவும் தேடித்தேடிப் படிப்பவன் நான். அத்தனை ஆயிரம் பக்கங்களில் ஒரு வரிக்கூட அந்தஅசடர் இந்திய மரபுகளையும் வரலாற்றையும் கிஞ்சித்தும் எள்ளி நகையாடி எழுதியிருக்க மாட்டார்.

நேருவை ஆர்.எஸ்.எஸ் முதலானோர் துவேஷிப்பதற்கு இன்னொருக்காரணம் அவர் தன்னை கடைசி வரை ஒரு agnostic-ஆகக் காட்டிக்கொண்டதுதான். He was not an atheist but an agnostic. மத சார்பின்மையில் நான் நேருவை காந்தியை விட சிலப்படிகள் அதிகமாக நம்புவேன். நேரு இன்றைய ‘secular’ அரசியல்வாதிகள் போல் தீபாவளிக்கு பகுத்தறிவு பேசிவிட்டு ரம்ஜான் அன்றுக் குல்லாய் போட்டுக்கொண்டதுக்கிடையாது.

இங்குதான் நேருவின் பொருளாதாரக் கொள்கைப் பற்றிச்  சிறிது பேச வேண்டும். மீண்டும் மீண்டும் நேருவின் எதிர்ப்பாளர்களால் வாயில் நுரை ததும்ப சொல்லப்படுவதுநேருவின் பொருளதாரக்கொள்கை இந்தியாவைக் குட்டிச் சுவராக்கிவிட்டது. Of course நேருவின் கொள்கைகளுக்கு மாற்றாக நமக்கு சுட்டப்படுவதெல்லாம்காந்தியம் அல்லதுசுதேசி கிராமம் சார்ந்த சிறு தொழில் எனும் கனவுலகம்

மோடியின் ஆதரவாளர்களான பொருளாதார வல்லுனர்களான அரவிந் பனகரியாவும், ஜகதீஷ் பகவதியும் தாங்கள் இந்திய பொருளதாரம் குறித்து எழுதிய புத்தகங்களில் நேருவின் கொள்கைகள் பற்றி நல்லவிதமாகவே சொல்லி இருக்கின்றனர். ஸ்வாமிநாதன் ஆங்க்லேசரியா ஐயர் (Swamithan Anklesariya Aiyar) எழுதிய சமீபத்தியக்கட்டுரை ஒன்றில் இந்தியா மட்டும் சிங்கப்பூர், தைவான், ஹாங் காங் போல்ஏற்றுமதி பொருளதாரக்கொள்கையைக்கொண்டிருந்தால் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கும் என்கிறார். இந்தியாவில் தான் பொருளாதாரம் பற்றி எழுதுவதாலேயே பொருளதார வரலாறு குறித்தும் எழுதலாம். An ‘economic historian’ is different from an ‘economist’.

நேருவின் பொருளதாரக்கொள்கைகளைப்பற்றி இங்கு விரிவாக பேச வேண்டாமென நினைக்கிறேன். சுருக்கமாக சில விஷயங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று, இந்தியா சுதந்திரம் அடைந்தக்காலச்சூழலைப்பார்க்க வேண்டும். உலகப்போர் முடிவு, ஐரோப்பாவின் பேரழிவு மற்றும் அதன் மீள் உருவாக்கத்தில் இரு வல்லரசுகளின் முனைப்பு, கடுமையான கட்டுபாடுகளோடு வந்த அன்னிய நிதி உதவிகள் (பெரும்பாலும் நான் உனக்கு உதவி செய்தால் நான் சொல்லுவதையெல்லாம் நீ கேட்கவேண்டும்), மனித வரலாற்றிலேயே நடந்தறியாத மானுட இடப்பெயர்வு (Partition and the greatest migration in human history), அது உருவாக்கிய மாபெரும் பொருளாதார நெருக்கடி, எழுத்தறிவில்லாத ஜனத்திரள், மாபெரும் வேளான் சமூகம், அதுவும் மிக பிற்போக்கான வேளாண் முறைகளைக்கொண்ட சமூகம், சில வருஷங்களுக்கு முன்புதான் வங்கத்தில் பல லட்சம் உயிர்களைக்காவு வாங்கிய பஞ்சம், ஏதோ இங்கிலீஷ்காரன் ஆங்காங்கே கட்டிவைத்து விட்டுப்போன கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மருத்துவமனைகள், பேருக்கு சில ஆராய்ச்சி நிறுவனங்கள், இவை தான் இந்தியாப் பிறந்த பொழுதிருந்த மிகச்சுருக்கமான நிலை. என்னமோ உலகமே இந்தியாவிற்கு உதவி செய்யக்காத்திருந்ததுபோல சுவாமிநாதன் பம்மாத்துக் காட்டுகிறார்.

காந்தி கிராமங்களை “romanticise” செய்தார். நேரு, சரியாக, இந்தியாவை கிராமங்களிலிருந்து உயர்த்த வேண்டும் என கொள்ககைகளை வகுத்தார்.

காந்தியும் சுந்தர ராமசாமியும் என்ற உங்கள் பதிவு (http://www.jeyamohan.in/18) முழுக்க காந்தியையும், காந்தியத்தையும் Romanticize செய்து நேருவையும், அவர் போன்ற மற்றவர்களையும், ஏதோ சிந்திக்கத் தெரியாத மூடர்களைப் போல் சித்தரித்திருப்பீர்கள். என்னமோ நேருமேற்கத்திய ஜனநாயகத்தை இறக்குமதி செய்தது போலவும் காந்தி வேறொரு ஜனநாயகத்தை பரிந்துரைத்ததுப் போலவும் போகிறப் போக்கில் அடித்திவிடுகிறீர்கள். இன்றைக்கு நாம் ஜனநாயகம் என்று வரையறுப்பது வெள்ளைக்காரன் கொடுத்து விட்டுப் போனதாகவே இருகட்டுமே அதற்காக அதைத் தூக்கி குப்பைக் கூடையில் போட வேண்டுமா

To be blunt, India did not create the ‘Magna Carta’, the cornerstone of modern jurisprudence. It is not without reason that it is such a venerated document. அமெரிக்காக்காரன் ப்ரிடிஷ்காரனை விரட்டினாலும் ‘Magna Carta’-வை தொழுது அதை தன் அரசியல் சாசனத்தின் அடித்தளமாகக் கொண்டான். நம் இந்தியர்களுக்கு எல்லாமே எப்போதுமே இந்தியாவில் இருந்ததாக காட்டிக் கொள்வதில் தான் எத்தனை குஷி. எதை எங்கிருந்து பெறுகிறோம் என்பதை விட அதை வைத்து நன்மை செய்தோமா என்பதே கேள்வி

காந்தியை மற்றவர்கள் பெண் பித்தர் என்றால் ரத்தம் கொதிக்கிறது ஆனால் போகிற போக்கில், மத்தாய் எழுதிய புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு, "மெளண்ட் பாட்டன் நேருவைகையாள அவருக்கு லேடி மெளண்ட் பாட்டனின் உறவு உதவியது என்று நேரு ஏதோ தலையனை மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தேசத்தை தாரை வார்த்த பெண் பித்தர் போல் நீங்கள் எழுதலாம். தயவு செய்து ஸர்வபள்ளி கோபால் எழுதிய "நேரு"வையும் படியுங்கள். “காந்தியின் பலவீனங்களும் அற்பத்தனங்களும் அவரது வெளிப்படைத்தன்மையாலேயே மன்னிக்கப்படுவது மட்டுமல்ல மகத்துவப்படவும் செய்கின்றன என்றேன்”. காந்திக்கு சற்றும் குறைவில்லாத வெளிப்படையானவர் நேரு. காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளை உங்கள் அத்தனை சாமர்த்தியத்தையும் செலவழித்து நியாயப் படுத்தி விடுகிறீர்கள். அதற்குக் காரணம் ஒருவர் கீதைக்கு உரை எழுதியவர் மற்றவரோ கீதையை இலக்கியமாக பயின்றவர்

இந்திய தத்துவ மரபை பொதுப் பார்வைக்கு கொண்டுவந்ததிலும், அதற்கு ஒரு academic quality கொடுத்ததிலும், மேற்குலகு இந்திய தத்துவ மரபை ஒரு theology போலல்லாமல் philosophy-ஆக பார்க்க வைத்ததில்  ராதாகிருஷ்ணனின் பங்கு அளப்பரியது. ஆனால் உங்களுக்கும் நாராயன குருவுக்கும் அவர் எழுதிய கீதைக்கான உரை தூக்கி வீச வேண்டிய ஒன்று ஏனெனில் அவர் அந்த உரையில் ஒரே ஒரு வரி எழுதியிருப்பார்இந்து மதத்தின் தத்துவ நூல் என்று

காந்தியை ஏற்று நேருவை முற்றாக நிராகரிப்பதின் பின் இந்த மதம் சார்ந்த பார்வையில் அவர்களுக்கு இருந்தப் வேறுமை மற்றும் அதோடு ஒட்டி வருகின்ற இந்திய மரபுகள் குறித்தப் பார்வையில் இருந்த வேறுபாடுகள், உங்களுக்கு ஒரு இன்றியமையாத ‘differentiator’. அதனால் தான் உங்களால் ஸ்ம்ரிதி இரானியை ஏற்றுக் கொள்ள முடிகிறது. எனக்கு அங்கு தான் நீங்கள் உங்கள் இந்துத்துவ சார்பை வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது.

சிறுபான்மையினருக்கு காந்தித் தேவையா?

சிறுபான்மையினருக்கு காந்தியைவிட சிறந்த நண்பர் கிடையாது ஆனால் நண்பர் என்பது வேறு தேவை என்பது வேறுகாந்தியைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சத்தியாகிரஹம் ஒன்றே. ஹிட்லரின் ஜெர்மனியில் அல்லலுற்ற யூதர்களை கூண்டோடு தற்கொலை செய்து ஹிட்லரின் ஆன்மாவோடு பேசச் சொன்னார் காந்தி. பின்னர் அதையே இங்கிலாந்துகாரகளுக்கும் சொன்னார்.

காந்தியின் உலகப் பார்வவையில் தனி மனித உரிமைகள் என்பவை, அவைகள் மறுக்கப்படும் பட்சத்தில், சிறுபான்மையினர் பெரும்பான்மையினரிடம் மன்றாடிப் பெற வேண்டியவை. கோயில் பிரவேசமாகட்டும், தீண்டாமையாகட்டும், உயிருக்கு உத்தரவாதமாகட்டும் காந்தியின் ஒற்றை பதில்மன்றாடுங்கள்’. இன்னும் சொல்லப்போனால் காந்திக்கு தனி மனித உரிமைகளென்பதைக் குறித்து புரிதல்களில்லை என்றேக் கூட சொல்லலாம். அதனால் தான் ஜெயபிரகாஷின் திருமண வாழ்கை, சுசேதா கிருபளானியின் காதல், தேவதாஸ் காந்தியின் காதல், கஸ்தூரிபாவின் வைத்தியம் என சகலத்திலும் தன் ஆதிக்கத்தை செலுத்த தயங்காதவர் காந்தி. தன்னுடைய நம்பிக்கையான பசு வதை தடுப்பை மற்ற மத்தினர் மேலும் தன் மதத்தை சார்ந்த சிலர் மீதும் தினிக்க, மூர்க்கமாக அல்ல, சத்தியாகிரஹியாக அவர்கள் ஆன்மாவை மாற்றி, காந்தி தயங்கவில்லை. அரசியில் சாசனங்களின் மேல் நம்பிக்கையற்ற காந்திக்கு உரிமைகளைக்குறித்து மிக பாமரத்தனமான என்னங்களே இருந்தன என்றால் மிகையாகாது.


எனக்கு காந்தி குறித்து என்றுமே பயம் கிடையாது. ஆனால் கோல்வால்கரும் இந்துத்துவர்களும் அரசியல் சாசனங்களையும், ஜனநாயக நெறி முறைகளையும் மேற்கத்திய இறக்குமதி என நிராகரித்து இந்திய மரபென்று, அவர்கள் புரிந்து கொண்ட வகையில், இந்து மரபை நிலை நாட்ட தலைப்படும் போது நமக்கு காந்திகள் கோல்வால்கர்களாக ஆனாலும் ஒரு அரனாக அரசியல் சாசனங்களும் அதில் நம்பிக்கை வைக்கும் நேரு மற்றும் ஆம்பேத்கருமே தேவை என புரிகிறது.

இந்த மன்றாடும் முறை தான் அம்பேத்கரிடம் காந்திப்பற்றி எரிச்சலடைய வைத்த பலவற்றுள் ஒண்று.

காந்திப் பற்றிய புரிதலும் நம் கல்வி முறையும்

இந்திய கல்வி முறைப் போன்ற வன்கொடுமை வேறொன்று கிடையாது. தமிழக சமச்சீர் கல்வி வரலாறு புத்தகத்தில் தண்டி யாத்திரையை நான்கு வரிகளில் வெறும் தகவல் குப்பையாக சொல்லித் தருகிறார்கள். ஒரு உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் தூண்களை அசைத்துப் பார்த்த ஒரு மாபெரும் போராட்டம் வெறும் தேதிகளாகவும், தூர கணக்காகவும் சொல்லித் தரப்படுகின்றது

இந்துத்துவ அறிவியக்கத்தில் தான் ஜோசியம் அறிவியல் என்றும், என்றோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதென்றும், ஏரோபிளேனுக்கான வரைபடங்கள் இருந்தன, என்பன போன்ற அபத்தங்கள் சாத்தியமாகின்றன. என் மீது யாரும் பாய்வதற்கு முன் தயவு செய்து பி..கிருஷ்ணன் அறிவியில் பற்றி எழுதிய மிகச் செறிவான பதிவுகளை படித்துவிட்டு என்னை திட்டுங்கள். நம் பல்கலைக்கழகளின் அறிவியில் பேராசிரியர்கள் அந்தப் பதிவுகளை தயவு செய்து முதலில் படித்து புரிந்துக் கொள்ள வேண்டும். அந்தப் பதிவிற்காக P.A.K. அவர்கள் இந்துத்துவர்களால் ஏசப் பட்டார்.

செம்மொழி மாநாட்டில்வள்ளுவரும் நேனோ டெக்னாலஜியும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைப் படிக்கப் படுகிறதென்றால் அதற்குக் காரணம் .வே.ரா வின் லெமூரியா பிதற்றலல்லவா ஆணிவேர்? பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த பொன்னவைகோ லெமூரியாவைப் பற்றி உளரியதை நேரில் கேட்டு நொந்துப் போனேன்.

 நேருவின் அறிவியக்க சூழல் நமக்கென்ன அளித்தது? 1947 இந்தியா விடுதலை அடைந்த பொழுது, நான்கே வருடங்களில் MIT-க்கு நிகரானக் கல்லூரி இந்தியாவில் இருக்கும், இன்னும் ஏழே வருடங்களில் அனு ஆராய்ச்சி நிலையம் இருக்கும் என்று யாராவது சொல்லி இருந்தால் கேட்பவர்கள் பலரும் வாயால் சிரித்திருக்க மாட்டார்கள். ஹோமி பாபாவும் நேருவும் பரிமாரிக்கொண்டக் கடிதங்களைப் படித்துப்பாருங்கள் (இணையத்தில் கிடைக்கிறது). எல்லாமே நேரு செய்தார் என்று சொல்லவில்லை ஆனால் நேரு போன்ற மனிதர் ஆட்சியில் இருப்பதால் இவை சாத்தியம் என்று சிலரது மனதில் சில கனவுகள் உருவாகின.

சுப்ரமணியின் சுவாமியும், குருமூர்த்தியும் இந்தியாவின் மிக உயரியக் கல்லூரிகளில்,IITs and IIMs, பெரும்பாலும் இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் உயர் பதவியில் இருக்கும் கல்வி நிலையங்கள், பச்சையான இந்துத்துவ பேருரையாற்றுகின்றனர். ஆனால் இந்தக் கல்லூரிகளில் நான் என்றுமே (இந்துத்துவர்களைப் போன்ற) இஸ்லாமியரோ, கிறித்தவரோ உரையாற்றிப் பார்த்ததில்லை. இந்த வீச்சுதான் இந்துத்துவர்களின் பலம். இந்த வீச்சு வேறு யாருக்கும் இன்று கிடையாது. அதனாலேயே மற்ற வெறுப்பியக்ககங்களைவிட இந்துத்துவ வெறுப்பியக்கம் பயங்கரமானதும் அச்சப்படவேண்டியதுமானது. மற்ற மத அல்லது கோட்பாட்டு (மார்க்ஸியர்கள்) வெறுப்பியக்கங்கள் ஒரு சிறுபான்மைக்குள் தான் செல்வாக்கு செலுத்த முடியும். ஆனால் இந்துத்துவ வெறுப்பியக்கம் ஒரு பெரும்பான்மை ஜனத்திரளை நோக்கியது என்பதாலேயே அதிக வெளிச்சமும், அதிக விமர்சனமும் பெறுகிறது. அது தான் சரியும் கூட.

இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இந்திய பண்பாட்டினை மறுப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி கூறப்படும் ஒன்று. Again, பிராமண கல்வி நிலையங்களில் இந்திய பண்பாடென போதிக்கப்படுவது ஒற்றைப்படையான இந்துத்துவமே. சிற்ப கலைக்கான மிக உயரிய விருதின் பெயர்விஸ்வகர்மா’. அவர் கட்டிய ஒரு கட்டிடத்தை யாராவது காட்ட முடியுமா? ஷாஜஹான் என சிற்ப விருது கொடுக்க இந்துத்துவர்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்துத்துவத்திற்கு வக்காலத்து

லெலிவெல்ட் காந்திக்கு எதிராக மக்கள் திரும்பிய தருணத்தைத் துல்லியமாக கூறுகிறார். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்தி தீண்டாமைக்கெதிராக ஒரு மாபெரும் நடை பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் காந்தி அரசியல் பற்றி பேசுகிறாரா என கண்காணிக்க ஆங்கிலேய அரசு உளவுப் போலீஸாரை நியமனம் செய்தது. அவர்களின் குறிப்புகள் கூறுகின்றன காந்தி செல்லுமிடமெல்லாம் தங்களைசனாதன இந்துக்கள் எனக் கூறிக்கொண்டவர்கள் காந்தியை நோக்கிசெத்துப் போ என்று கூவுவதும், அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்கப் பார்த்ததும், அவர் மேல் காறி உமிழ்ந்ததும், கொலை முயற்சிக் கூட செய்ய முயன்றதும் எனப் பல செயல்களில்,இஸ்லாமியரோ மற்றவரோ செய்ய துனியாத செயல்களில், ஈடுபட்டனர்.
இந்தக் காலக் கட்டத்தில் தான் காந்திக்கு பெண் சீடர்கள் செய்யும் சிசுருஷைகள் குறித்து கிசு கிசு பிரசாரம் செய்யப்பட்டதென்று லெலிவெல்ட் எழுதுகிறார். அப்படி செய்தவர்கள் சனாதன இந்துக்களே
காந்தியின் பிரம்மச்சர்ய சோதனைகளைக் குறித்து முதன் முதலில், 1951, பொது தளத்தில் வெளிப்படையாக எழுதியவர் நிர்மல் போஸ் தான் (My days with Gandhi). போஸ் அது காரணமாகவே காந்தியிடமிருந்து பிரிந்து வந்தார். காந்தியை விமர்சித்து எழுதப்பட்ட இன்னொரு நூல் “Gandhi and Anarchy”. எழுதியவர் சங்கரன் நாயர்.

“The Sangh Parivar: A reader”, edited by Christophe Jaffrelot, எனும் நூல் மிக முக்கியமான கருத்தை முன் வைக்கிறது. காந்தி, நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட அநேகம் பேர் இங்கிலாந்து, பிரென்சு அரசியல் மற்றும் வேறு பல விழுமியங்களை சுவீகரித்த போது கோல்வால்கரும், ஹெட்கெவரும் ஜெர்மானிய பாசிச, குறிப்பாக ஹிட்லரின், விழுமியங்களை ஆர்வத்தோடு கற்று சுவீகரிக்கின்றனர். இது மிக முக்கியமான வரலாற்று செய்தி. என்னமோ காந்தியையும், காந்தியக் கருத்தியலையும் கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும், மார்க்ஸியர்களும் வீழ்த்தியப் பிறகு அந்த வெற்றிடத்தில் இந்துத்துவம் வந்துட்கார்ந்துக் கொண்டதென நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்கள். இல்லை. இல்லவே இல்லை. சங் பரிவார் இஸ்லாமியர்களுக்கெதிராக தோன்றி தன் விழுமியங்களாக பாசிசக் கொள்கைகளை ஆர்வத்தோடும், முனைப்போடும் முன்னெடுத்தது. ஆதனாலேயே அவர்களுக்கு காந்தி ஒரு ‘natural enemy’. 





காந்தியின் மற்றும் நேருவின் அறிவியக்கங்கள் ஈன்றெடுத்ததுதான் இன்றைய இந்தியா. கோல்வால்கர் மற்றும் அத்வானியின் அறிவியக்கங்கள் ஈன்றெடுத்ததுதான் கோட்சேவும் அர்ஜுன் சம்பத்தும். தமிழச்சித் தங்கப்பாண்டியன் ஒரு மேடையில் காந்தியையும், .வே.சா வையும் அவதூறு செய்து கைத்தட்டல் வாங்க முடிந்தின் காரணம் .வெ.ரா விதைத்த விஷ வித்துதான். சமீபமாக நீங்கள் எழுதிய சிலப்பதிவுகளில் ஒரு உத்தியைக்கடைப்பிடிக்கிறீர்கள் என்றேச்சொல்லலாம். அந்த உத்தி இந்துத்துவத்திற்குமைய இந்துத்துவம் என்றுப் பெயரிட்டு ஒரு அரசியல் கௌரவம் கொடுத்து அதன் விஷ விழுதுகளை ஏதோ தானே முளைத்த புல்லுருவிகள் போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறீர்கள்.

நீங்கள் மிகவும் சாதுர்யமாகமைய இந்துத்துவம் என்றும்லும்பன் உதிரிக்கட்சிகள் என்றும் பிரித்து ஏதோ அந்தலும்பன் கட்சிகள் தனித்து இயங்குவதுப்போலவும், ஏதோ அந்த லும்பன் கட்சிகள்இந்துத்துவதிற்கு களங்கம் கற்பிப்பதுப் போலவும் ஒரு சித்திரம் வரைகிறீர்கள்.

இந்து மஹாசபைக்கும் ஆர்.ஸ்.ஸ்க்கும் வித்தியாசமென்பது நாஜிக்களுக்கும் SS-க்கும் வித்தியாசமுள்ளது என்பதைப்போன்றது. Golwalkar, in the words of columnist and author Ramachandra Guha, was ‘the guru of hate’ (http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/the-guru-of-hate/article3232784.ece). 

கோட்சேவிற்கு சிலை என்பது நேற்று முளைத்தக்காளான் அல்ல. அதனுடைய ரிஷிமூலம் அத்வானியின் ரத யாத்திரையில் இருக்கிறது இன்னும் தேடிப்போனால் கோல்வால்கர் மற்றும் சவர்க்கரிடம் தான் செல்ல வேண்டும். கோல்வால்கரும், சவர்க்கரும் இல்லை என்றால் அத்வானியும், வாஜ்பாயும், மோடியும் இல்லை, அவர்களில்லாமல் அர்ஜுன் சம்பத் இல்லை. பெரியார் இல்லாமல் அண்ணாத்துரை இல்லை. கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸோடு பினக்கு கொண்டிருந்தான் என்பதெல்லாம் வெறும் வெளிப்பூச்சு. இது எப்படி இருக்கிறதென்றால் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பெரியாரோடு பிணக்குக் கொண்டார்கள் ஆகவே பெரியாருக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லையென்று சொல்வதைப்போல்.கோபால் கோட்சே Frontline இதழுக்கு அளித்த பேட்டியில் நதுராம் கோட்ஸே தான் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் இல்லையென்று மறுத்ததற்குக் காரணம் கோல்வால்கரைக் காப்பாற்றத் தான் என கூறுகிறார்.

இஸ்லாமியரும், கிறித்தவர்களும், மார்க்ஸியர்களும் காந்தியை வெறுத்திருக்கலாம் ஆனால் அவரைக் கொல்லும் துனிவு, இன்னும் சொல்லப்போனால், அவரை கொன்றால் தான் இந்தியா பிழைக்கும் என்ற நினைப்பு அவர்கள் யாருக்கும் இல்லை. அத்தகைய என்னம் இருந்தது இந்துத்துவ அமைப்புகளுக்குள்ளே தான். அதனால் தான் இந்துத்துவர்களின் காந்திய வெறுப்பு அடிக்கோடிட்டு உச்சஸ்தாயியில் பேச வேண்டியிருக்கிறது. எல்லா வெறுப்பையும் ஒரே தராசில் இதனாலேயே வைக்க முடியாது.

பிரிவினைக் காலங்களில் பல இந்துக்கள் காந்தியை எதிரியாகவே பார்த்தனர் என்பது தான் உண்மை. கோபால் கோட்ஸே எழுதிய  ஒரு நூலில் சொல்லுகிறார் “அன்று (நதுராம் கோட்ஸேவின் வழக்கின் போது) மட்டும் Jury முறை இருந்திருந்தால் நதுராமின் சொற்பொழிவைக் கேட்டு விடுதலை செய்திருப்பார்களென அந்த வழக்கின் நீதிபதியே எழுதினார்”. 

இன்றுவரை அதற்கான (காந்தி கொலைக்கான) பொறுப்பை எவரும் ஏற்கவில்லை. இந்து மகாசபை இப்போது ஏற்கிறது. அத்தனை இந்துத்துவர்களும் ஏற்பதென்றால் அது நல்லதுதான்”. குற்றவாளிக்கூண்டில் நிற்பவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதை என்னமோ நாம் பெரும் பேறுப் போல் சித்தரிக்கின்றீர்கள். அதுவும் என்னமோ நான்கு பேர் சேர்ந்து செய்த கொலையில் ஒருவர் மட்டுமே மனம் வெட்கிப் பழியேற்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறீர்கள். காந்தி கொலை என்பது முற்றும் இந்துத்துவ இயக்கங்களின் செயல். அவர்களுக்கு எந்த பாவ மன்னிப்பும் கிடையாது

அந்தப்பாவத்தில் திளைக்கவே இந்த நாடு முடிவெடுக்குமென்றால் அது கண்ணீராலும் குருதியாலும் அதற்கான விலையைக் கொடுக்கட்டும். அதன்பின் உண்மையை உணரட்டும். காந்தி காத்திருப்பார்”. இது என்ன கண்ணகி சாபமா? இல்லை ஒரு பிரம்ம ரிஷியின் சாபமா? காந்தியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியர் இப்படி சபிப்பது அழகுமல்ல அறமுமல்ல. தான் நடக்கும் வழியெங்கும் மலம் இறைக்கப்பட்டாலும் அதை பொறுமையாக எடுத்துப் போட்டுவிட்டு வெறுப்பைக் கடந்து அமைதி தேடி நடந்தவர் தான் மஹாத்மா

முடிவுரை

எல்லா வெறுப்பும் அடையாளம் காணப்பட்டு களையப் பட வேண்டியது என்பது திண்ணம். மனிதனை மனிதனாக பார்க்க எல்லோரும் கற்றுக் கொள்ளுதல் அவசியம். இந்தியாவின் பல சாபங்களுல் ஒன்று எல்லா நிலைப்பாடுகளும், காந்தி ஆதரவு, அம்பேத்கர் ஆதரவு மற்றும் பல, ஏதோவொரு மறைமுக அஜெண்டாவோடு தான் முன்னிறுத்தப்படுகிறது. அதுவும் அடையாளம் காணப்பட்டு களையப் பட வேண்டியது

சுந்தர ராமசாமியோடு வாதம் செய்யும் போது உங்களுக்கு அந்த காலக் கட்டத்தில்காந்தியைக் காப்பாற்றத் தெரியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டீர்கள். காப்பாற்றப் பட வேண்டியது காந்தியோ, நேருவோ, அம்பேத்கரோ அல்ல. காப்பாற்றப் பட வேண்டியது, தனி மனிதர்களல்லசத்யம் மட்டுமே. இது தான் நான் காந்தியிடம் கற்றது.

‘சிலுவையின் பெயரால்’ எழுதியவர் காந்தியின் மேல் கொண்ட பேரன்பினால் சீக்கிரமே ‘திரிசூலத்தின் பெயரால்’ எழுதுவார் என்று நம்பும் சாமான்யன் நான்.


இப்படிக்கு தினம் உங்களை ஆர்வத்தோடுப் படிக்கும் ஒரு வாசகன்.

A Note: When I decided to write this blog in Tamil I knew that it will be plagued with grammatical mistakes. Thanks to friends some mistakes have been corrected. Nevertheless the content is entirely mine. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எழுத்தாளனுக்கே. And for those who would find the need to satiate their itch to correct grammar or innocuous factual errors my humble request is don't waste your time. I welcome all comments and brickbats as far as they concern the theme of this blog.


References and Recommended Reading:

1. Gandhi a memoir - William Shirer
2. Gandhi - Louis Fischer.
3. Mahatma Gandhi - D.G. Tendulkar
4. My days with Gandhi - Nirmal Bose
5. Jawaharlal Nehru - Sarvapalli Gopal
6. Why I killed Gandhi - Nathuram Godse
7. Ambedkar: Selected Writings - Valerian Rodrigues
8. Reflections on Gandhi by George Orwell http://www.orwell.ru/library/reviews/gandhi/english/e_gandhi
9. Great Soul: Mahatma Gandhi and his struggle with India -- Joseph Lelyveld.
10. The Sangh Parivar: A reader -- edited by Christophe Jaffrelot
11. The men who killed Gandhi -- Manohar Malgaonkar
12. Gandhiji's murder and after - Gopal Godse
13. Gandhi and Anarchy - Sankaran Nair
14. Ambedkar cartoon issue http://en.wikipedia.org/wiki/Ambedkar_controversial_cartoon
15. Mahatma Gandhi - A collection of essays for Gandhi's 75th birthday. Edited by Sarvapalli Radhakrishnan
16. Discovery of India - Jawaharlal Nehru
17. http://www.jeyamohan.in/69039