முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்” என்ற தலைப்பில் சுதந்திர போராட்டக் காலத்து அற உணர்வுக் கொண்ட நடுத்தர வர்க்கம் இன்று சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை முதல் பலவற்றையும் கண்டும் காணாமல் இருக்கிறதே என்று வினவியிருந்தார். அக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுத்தாளர் பாலா முத்துசுவாமி “காலம் மாறிப் போச்சு காங்கிரஸாரே” என்று தலைப்பிட்ட கட்டுரையில் காங்கிரஸின் செயலின்மையே பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார். இரண்டு கட்டுரைகளிலும் உண்மைகள் உண்டு. ஆயினும், இரு கட்டுரையாளர்களும் தொடாத ஒரு கோணமும் உண்டு, அது வாக்காளர்களின் மதவாதம் பற்றி. எந்த அரசியலும் வாக்காளர்களின் பெருவாரியான ஏற்பில்லாமல் வெற்றிப் பெற முடியாது ஆனால் வாக்காளர்களின் தேர்வுகளின் நோக்கத்தை கேள்விக் கேட்கவேக் கூடாதென்று ஒரு பொது மவுனம் நிலவுகிறது. அதனை உடைத்துப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2016 அமெரிக்க தேர்தல் அளித்தப் பாடம்:
2016 அமெரிக்க தேர்தல் சூடு உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பின் வாக்காளர்களில் சிலரை இனவாதம், பெண் வெறுப்பால் உந்தப் பட்டவர்கள் என்று குறிக்கும் வண்ணம் இழிவானவர்கள் (“basket of deplorable”) என்று சீறினார். ஹிலாரிக்கு எதிராக கண்டனக் கனைகள் பறந்து வந்தன. வாக்காளர்களின் நோக்கம் எதுவாயினும் அவர்களை பழிச் சொல்லலாகாது அவர்களை தன் தரப்புக்கு ஈர்ப்பதே ஒரு அரசியல்வாதியின் கடமை என்று ஹிலாரியை கண்டித்தார்கள். இந்த களேபரத்தில் டொனால்ட் டிரம்ப் கறுப்பினத்தவரை, பெண்களை, ஹிஸ்பானிக்குகளை எல்லாம் வெள்ளை பேரினவாதிகளின் மனம் குளிர ஆபாசமாகப் பேசியதெல்லாம் மறக்கப்பட்டது. தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மூன்று மாநிலத்தில் ஹிலாரி தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் ஜனாதிபதியானார்.
தேர்தலுக்குப் பின் புள்ளி விபரங்கள் கருத்துக் கணிப்புகள் ஹிலாரியின் அந்த பேச்சு உண்மையென்று நிரூபித்தன. பல வெள்ளைக்கார வாக்காளர்கள் இனவாதத்தாலும் பெண் வெறுப்பாலும் தூண்டப் பட்டே வாக்களித்தார்கள் என்று தெளிவானது. ஹிலாரி டிரம்பை விட பொது வாக்கெடுப்பில் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் வாங்கியிருந்தார், அதில் கணிசனமானவை வெள்ளைக்காரர்களும் தான். டிரம்பின் வெற்றியில் இனவாதத்தின் பங்களிப்புப் பற்றி தொடர்ச்சியாக புத்தகங்கள் வெளியாயின.
இந்திய வாக்காளர்கள் சாதியத்தால் உந்தப்பட்டு வாக்களிப்பவர்கள் என்பதை ஆங்கிலத்தில் அழகான பகடியாக “They don’t cast their vote they vote their caste” என்பார்கள். அந்த வாக்காளர்கள் இப்போது மத ரீதியாகவும் யோசித்து வாக்களிக்கிறார்கள். பாஜகவின் அரசியல் வெற்றிகள் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் புத்தகங்கள் அனைத்தும் இதை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை ஆனால் தமிழ்ச் சூழலில் அந்த ஆய்வுகள் பரவலாகப் பேசப்படுவதில்லை. தமிழ் கட்டுரைகள் பெரும்பாலும் பாஜக உயர்ஜாதியினர் கட்சி, சனாதன இந்து மத கட்சி என்ற எளிமையான கட்டமைப்புகளையேச் சொல்கின்றன. சிதம்பரமும் பாலாவும் அந்த புள்ளியைக் கூடத் தொடவில்லை.
காங்கிரஸ் செயலற்று கிடக்கிறதா?
காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவிழந்து கிட்டத்தட்ட வெறுங்கூடு என்கிற அளவுக்கு சுருங்கியது இந்திய அரசியலுக்கு அரோக்கியமானதல்ல. காங்கிரசின் உட்கட்சி பூசல்கள் உலகப் பிரசித்தம். சோனியாவின் உடல் நலக்குறைவு, ராகுலின் விலகி-விலகாத நிலை, அடுத்தக் கட்ட தேசியத் தலைமை இல்லாமை என்று காங்கிரஸ் வலுவிழந்து வீழ்ந்ததற்கு காங்கிரஸ் தரப்பிலான காரணங்களுண்டு. அதே சமயம் காங்கிரசும் மற்ற கட்சிகளும் பாஜக ரூபத்தில் சந்திப்பது இந்திய ஜனநாயகமும் வரலாறும் காணாத ஒரு ராட்சத தேர்தல் இயந்திரத்தை. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருக்கமாக பாலா முத்துசுவாமியின் சில விமர்சனங்களை காண்போம்.
பாலா முத்துசுவாமி காங்கிரஸ் செயலற்று இருக்கிறதென்றும், மாநிலங்களில் மக்களிடமிருந்து விலகிவிட்டது என்றும், சமூக நீதி முன்னெடுப்புகளின் வழியே தான் இனி ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை அது நெருங்கி அரசியலில் வெற்றி பெற முடியுமென்கிறார்.
ஜெயிப்பவர்கள் எதையோ சரியாகச் செய்கிறார்கள், தோற்பவர்கள் எங்கோ தவறிழைக்கிறார்கள் என்று எண்ணுவது மனித இயல்பு. அதுவும் ஜெயிக்கும் கட்சி ராட்சத வெற்றிகளையும் தோற்பவர்கள் பரிதாப தோல்விகளையும் தழுவும் போதும் அந்த எண்ணம் வலுப் பெறுகிறது.
காங்கிரஸ் முக்கியமானப் போராட்டங்களை முன் எடுத்திருக்கிறது என்பதை பாலா கணக்கில் கொள்ளாமல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்கிறார். உத்தர பிரதேசத்தில் ஹத்திராஸில் நடந்த படுகொலையைக் கண்டித்து களத்துக்கு ராகுலும் பிரயங்காவும் விரைந்தனர். போலீஸார் பிரயங்காவின் மேலாடையை பிடித்து இழுத்து தள்ளியப் புகைப்படம் இணையத்தில் பிரபலமாகவே வந்தது. இத்தனைக்கும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக கிட்டத்தட்ட அழிந்து விட்டது. ராகுலே அமேதியில் தோற்றார். ராகுல் காந்தி தற்போது இந்தியா நெடுகிலும் நடைபயணம் ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யே தவறு என்கிறார் பாலா. அது வேறு விவாதம். பொருளாதார வல்லுனர்களின் துணைக் கொண்டு தான் அது உருவானது. காங்கிரஸ் தான் வழிச் செய்தது. இன்று காங்கிரஸ் அதன் குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவது இட ஒதுக்கீடு இழப்பால் ஒடுக்கப்பட்டவர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கிறது என்று பாலா சொல்வது கணக்கில் கொள்ள வேண்டும். அதற்காக நஷ்டத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே தனியார் மயமாக்க வேண்டும் லாபகரமானதையெல்லாம் அரசே நடத்த வேண்டும் என்று சொல்வதை பொருளாதார வல்லுனர்கள் ஏற்க மாட்டார்கள். தொலைப்பேசி, புகைப்படச் சுருள், விளக்குக் கம்பம், கார், யூரியா என்று இந்திய அரசு தயாரித்து விற்ற பொருட்கள் அநேகம். பலவும் நஷ்டத்திலோ தரமற்ற பொருள் தயாரிப்பிலோ தத்தளித்தவை தான். சஷி தரூரின் “From Midnight to Millennium” புத்தகத்தில் தொலைப்பேசிகள் அடிக்கடி செயலிழக்கின்றன என்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அன்றைய அமைச்சர் “அந்த வேலைச் செய்யாத கருவிக்கு பலர் லைனில் நிற்கிறார்கள்” என்று எகத்தாளமாக பதில் சொன்னதை சுட்டிக் காட்டியிருப்பார்.
காங்கிரஸ் சமூக நீதியை முன்னெடுக்க வேண்டுமென்கிறார் பாலா. பாஜக வளர்ச்சியைப் பற்றிய எந்த ஆய்வாளரின் கட்டுரையும், ஆவணப் படங்களும் வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரை அமலாக்கத்தின் அதிர்வலைகளையும் உயர் ஜாதியின் ஒட்டுகள் மொத்தமாக காங்கிரஸ் அல்லது முன்னாள் காங்கிரசாரின் கட்சிகளிடமிருந்து விலகி பாஜகவை நெருங்க காரணமாயிற்று என்கிறார்கள். மண்டல்-மஸ்ஜித் என்ற சொற்றொடரே பிறந்தது. மன்மோகன் சிங்குக்கு அரசியல் நெருக்கடி அளிக்கவே அர்ஜுன் சிங் ஐஐடி போன்ற இந்திய உயர் கல்வி நிலையங்களுக்கு மண்டல் பரிந்துரையை நீட்டித்து அமல் செய்தார் என்பதை நாம் மறக்கலாகாது. அதன் அதிர்வுகளை இன்றும் அக்கல்வி நிலையங்களில் காண முடியும். ஆக சமூக நீதி அரசியல் காங்கிரசுக்கு பாதகமாகவே முடிய வாய்ப்புண்டு. இன்னொரு விஷயம், சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு என்று பலராலும் சுருக்கப்படுகிறது. சமூக நீதியென்பதி இட ஒதுக்கீட்டையும் தாண்டி பல முன்னெடுப்புகளை உள்ளடக்கியது, அவற்றுள் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றி இருக்கிறது.
ஒரு கட்சி அல்லது சித்தாந்தம் வெற்றி அடையும் போது, குறிப்பாக ராட்சத வெற்றி அடையும் போது, எதிர் தரப்பின் போதாமைகளைத் தாண்டி வெற்றிப் பெற்றவர்கள் எந்த வகையில் வாக்காளர்களை ஈர்த்தனர் என்றும் ஆராய வேண்டும். வாஜ்பாயிக்கும், அத்வானிக்கும் கிடைக்காத பெரும்பான்மை மோடிக்கு ஏன் இரண்டு முறை, அதுவும் இரண்டாம் முறை இன்னும் அதிகமாக, கிடைத்தது என்று கேட்டுக் கொள்வோம்.
மாறிய நடுத்தர வர்க்கம்:
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஆய்வாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலாட் “பிஸினஸ் ஸ்டாண்டர்டு” நாளேடுக்கு அளித்தப் பேட்டியில் சிதம்பரம் நடுத்தர வர்க்கத்தின் மீது சொல்லும் விமர்சனத்தை அப்போதே சொன்னார். “தாராளமயமாக்கலினால் புதிய வகை நடுத்தர வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவர்கள் முன்பை விட அரசியல் ஈடுபாடுள்ளவர்களாகவும் ஊழலை எதிர்ப்பவர்களாகவும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கண்டு கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்….வளர்ச்சி எப்படியாவது நடந்தால் சரி என்று நினைக்கிறார்கள், சுற்றுச் சூழல், பொருளாதார ஏற்றத் தாழ்வு இவர்களுக்கு பொருட்டல்ல….இவர்கள் பாஜகவை ஆதரிக்க இன்னொரு காரணம் தங்கள் பொருள்மயமான வாழ்க்கை நோக்கை அதீத மத நம்பிக்கைக் கொண்டு ஈடு செய்ய நினைப்பதும் அதற்கு சமஸ்கிருதமயமாக்கல்லை சுவீகரித்து இந்து அடையாளத்தை வரித்துக் கொள்வதே. மேலும் இந்த நடுத்தர வர்க்கம் இட ஒதுக்கீடு “மெரிட்டுக்கு” எதிர் என்று நினைப்பவர்களாயிருக்கிறார்கள். இவ்விரண்டிலும் இவர்கள் தேர்வு பாஜகவாக இருக்கிறது”. பாஜகவின் அரசியல் ஏறுமுகத்துடன் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் இறங்குமுகமாகிறதென அப்போதே ஜாஃப்ரலாட் கணித்தார். இன்று பாஜகவுக்கு இருக்கும் 350+ பாராளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
ஷேகர் குப்தா “Why India’s middle classes are Modi’s ‘Muslims?” என்று தலைப்பிட்ட கட்டுரையில் இன்றைய நடுத்தர வர்க்கத்தினர் ஒரு காலத்தில் காங்கிரசுக்கு வாக்கு வங்கியாக இருந்த இஸ்லாமியர் போல் மோடிக்கு வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்கிறார். காங்கிரஸ் என்றாலே சோஷலிஸ அரசு பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினரிடம் பிடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் என்று ஒரு பிம்பம் பாஜகவினரிடம் உண்டு. உண்மையில் இன்று பாஜக ஏழைகளுக்கு அளிக்கும் பல திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மீது நேரடி மற்றும் மறைமுக வரிகளால் சாத்தியப்படுத்தப் படுகிறது என்கிறார் குப்தா. பண மதிப்பிழப்பு போன்ற இமாலய குழப்பத்துக்கு அப்புறமும் இந்த வாக்கு வங்கி அசராததற்கு முக்கியக் காரணம் இஸ்லாமியர் மீதான வெறுப்பு.
லீலா பெர்னாண்டஸின் புத்தகம், “India’s New Middle Class: Democratic Politics in an Era of Economic Reform”, மாறிய நடுத்தர வர்க்கம் பற்றி சில வாதங்களையும் புரிதல்களையும் முன் வைக்கிறது. நடுத்தர வர்க்கம் ஜனநாயகம் ஊழல் மயமானது என்ற பார்வையைக் கொண்டு அதற்கு பதிலாக சர்வாதிகாரமே இந்தியாவுக்கு சரியென்று நம்புகிறது. மேலும் ஜனநாயகம் என்பது வாக்காளர்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் பார்வையில் தாழ்ந்த ஜாதியினர், சிறுபான்மையினருக்கும் மட்டுமே செவி சாய்க்கும் என்றும் தங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லையென்றும் நம்புகிறது. மேலும், புதிய நடுத்தர வர்க்கம் தான் ஒரு குடிமகன் என்ற நிலையில் இருந்து மாறி அரசின் இயந்திரம் என்பது நுகர்பொருளாகவும் அதனை பிரயோகிக்கும் பிரஜையாகவும், ஒரு consumer-citizen ஆக, உருவகித்துக் கொண்டது என்கிறார் பெர்னாண்டஸ். இதனால் தான் இன்று பாஜக புகழ் பாடும் பல நடுத்தர வர்க்கத்தினர் பாஸ்போர்ட் எளிதில் கிடைக்கிறது போன்ற காரணங்களைச் சுட்டுக் காட்டுகின்றனர்.
நவதாராளமயமான பொருளாதாரம், ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவற்றை வைத்து நடுத்தர வர்க்கத்தின் அரசியலை தட்டையாகவும் புரிந்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பெர்னாண்டஸ். நடுத்தர வர்க்கம் என்பதே ஒரு ஒற்றைப் படையான கூட்டமுமல்ல. இவ்விடத்தில் அவர் 2004-இல் பாஜக முன்னெடுத்த இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் தோல்வியையும் சுட்டிக் காட்டுகிறார். இதனை இன்றைய பாஜக நன்கு உணர்ந்திருப்பதால் தான் நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி மற்றவர்களை உள்ளிழுக்க பல தந்திரோபாயங்களை அது செய்கிறது.
பாஜக பற்றி இரண்டு முக்கியமான பிம்பங்கள் ஓரளவு நியாயத்தோடு கட்டமைக்கப்பட்டது, அதாவது, ஒன்று, அக்கட்சி உயர் ஜாதிகளுக்கானது, இரண்டு, அக்கட்சி ஏழைகளுக்கு எதிரானது. இரண்டையுமே மோடி மாற்றியிருக்கிறார் என்பதே நிஜம். அந்த் மாற்றங்களுக்காக நடுத்தர வர்க்கம், குறிப்பாக உயர் ஜாதியினர், பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் ஆனால் அது நடவடிக்கவில்லை. அது ஏன் என்று காண்பதற்கு முன் இந்த பிம்பங்களை அவர் எப்படி மாற்றினார் என்று பார்ப்போம்.
பயனாளர்களுக்கு நேரடி பணப் பட்டுவாடா அரசு:
நளின் மேத்தா எழுதிய “The New BJP: Modi and the making of the world’s largest political party” அநேக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்ட புத்தகம். மேத்தா மோடி எப்படி காங்கிரஸ் விட்டுச் சென்ற பயனாளர்களுக்கு நேரடி பணப் பட்டுவாடா செய்யும் கட்டமைப்பை விஸ்தீரணப்படுத்தி ஏழைகளின் வாக்கு வங்கியைக் கவர்ந்தார் என்று சொல்கிறார். 2013 ஜனவரி 1-ஆம் தேதி “உங்கள் காசு உங்கள் கைகளில்” கோஷத்தோடு காங்கிரசின் அமைச்சர் ஹெய்ராம் ரமேஷ் ஆதார் திட்டத்தை உபயோகித்து பணப் பட்டுவாடா திட்டத்தை அறிவித்தார். 43 நகரங்களில் 20 அரசு திட்டங்களுக்கு பரிசோதனை முயற்சியாக இத்தட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்துக்கான மென்பொருள் முதலான கட்டமைப்பு அத்தனையும் காங்கிரசுடையது. 2014-இல் தேர்தல் நெருங்கும் போது இது தங்கள் வெற்றிக்கு உதவுமென்றே காங்கிரஸ் நினைத்தது.
2014-இல் வெற்றி பெற்றவுடன் காங்கிரசின் திட்டத்தை மோடி சுவீகாரம் செய்ததோடு அதனை முடுக்கிவிட்டார். கவனிக்கவும் இதில் இடைத் தரகர்களோ அரசு இயந்திரமோ இடையீடு செய்யாமல் ஏழைகளுக்கு பணம் செல்கிறது. 2013-14-இல் இம்மாதிரி 10.8 கோடி பேருக்கு ரூ 7,367 கோடி அளிக்கப்பட்டது. 2018-19-இல் 76.3 கோடி பேருக்கு 2,14,092 கோடிகள் அளிக்கப்பட்டது. இது 29 மடங்கு வளர்ச்சி. இம்மதிரி திட்டங்களை நேரடியாக மோடியின் பிம்பத்தோடு தொடர்புபடுத்தி வாக்குகளை பாஜக அறுவடைச் செய்தது.
பாஜக உயர் ஜாதி கட்சியா?
பாஜக-வை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், கட்சி என்று பிம்பம் நிலவுகிறது. அதில் உண்மையுண்டு ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. உலகின் ஐம்பது ஜனநாயகங்களை ஆராய்ந்து அரசியல் பிளவுகள் பற்றி பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கட்டி முதலானோர் எழுதிய புத்தகத்தில் இந்தியா பற்றிய அத்தியாயத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் மத, சாதிய வாக்காளர் விகிதத்தை அளிக்கிறார்கள்.
1967 தேர்தலில் ஓவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: தோராயமாக, இஸ்லாமியர் 48%, பட்டியல் இனத்தவர் 52%, பிற்படுத்தப்பட்டவர் 45%, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் 35%, பிராமணர்கள் 41% காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
அப்போது பாஜகவுக்கு ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் வாக்களித்தோர்: (அப்போதைய ஜன சங்கமும் கூட்டணிக் கட்சியினரும்) இஸ்லாமியர் 9%, பட்டியலினத்தவர் 12%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 35%, பிராமணர்கள் 40%
2014 தேர்தலில் காட்சி மாறுகிறது. ஓவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: இஸ்லாமியர் 47% (20 வருடங்களாக இது மாறவேயில்லை), பட்டியலினத்தவர் 38%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 28%, பிராமணர்கள் 18% காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
பாஜகவுக்கு ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் வாக்களித்தோர்: இஸ்லாமியர் 10% (20 வருடங்களாக இது மாறவே இல்லை), பட்டியல் இனத்தவர் 30% (1967-இல் இருந்து இரு மடங்கு), பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 50%, பிராமணர்கள் 60%.
கிட்டத்தட்ட 50 ஆண்டு தேர்தல் வரலாற்றை பார்க்கும் போது மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, காங்கிரஸ் 1962-2009 காலம் வரை பரந்துப் பட்ட ஆதரவுடனேயே, இஸ்லாமியர் உட்பட, வாக்குகளைப் பெற்று இருக்கிறது. இரண்டு, 1967-2014 வரை பாஜக-வால் இஸ்லாமியர் வாக்கினை பெருவாரியாக கூட அல்ல 10% தாண்டுவதே கடினமாக இருந்திருக்கிறது (2019-இலும் அப்படியே). மூன்று, இஸ்லாமியர் தவிர, உயர் ஜாதியினர் பெருவாரியாகவும் மற்றவர்கள் கணிசமாகவும், பாஜக பக்கம் சென்று விட்டார்கள்.
2019 தேர்தலை அலசிய ‘தி இந்து’-லோக்நிதி கணிப்பு பாஜக இந்துக்கள் வாக்கினை 44% வென்றது என்கிறது. அதில் உயர்ஜாதியினர் 52%, தலித்துகள் 34%, பழங்குடியினர் 44%. இஸ்லாமியரின் ஓட்டு (மேலுள்ளா படத்தில் காண்பிக்கப்படவில்லை) 8%, கிறிஸ்தவர்கள் 11%. மாநிலவாரியாக பிரித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமியர் அங்கிருக்கும் பிரதான பாஜக எதிர்ப்புக் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ஆக, பாஜக இன்று இந்துக்களின், எல்லா சாதியினரும் உள்ளடக்கி, பெருவாரியான தேர்வாக இருக்கிறது. பாஜகவை உயர் ஜாதியினரின் கட்சி என்று வகைப்படுத்துவது தவறு மட்டுமல்ல அவர்கள் வாக்கு வங்கியை புரிந்துக் கொள்ளாமை. ஒரு கட்சியின் வாக்கு வங்கியை எதிர் கட்சியினர் சரியாகப் புரிந்துக் கொள்வது மிக அவசியம்.
பாஜக மிகத் துல்லியமாக சாதிய அரசியலை கைக் கொள்கிறது என்று மேற்சொன்ன புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன. சமீபத்திய உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியின் ஜாதவ் சாதி தவிர்த்த பட்டியலினத்தவர் பாஜகவுக்கு கணிசமாக வாக்களித்தனர். கவனிக்கவும் அகிலேஷ் யாதவுக்கு இஸ்லாமியரும் யாதவ சாதியினருமே வாக்களித்தனர்.
பாஜக தலித்துகளின் வாக்குகளை பெறுவதற்கு முயல்கிறது அதற்காகவே அம்பேத்கரையும் சுவீகரிக்கிறார்கள். இதனை நாம் அங்கீகரிக்கும் போதே இன்னொரு உண்மையையும் அங்கீகரிக்க வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் தான் பாஜக தலித்துகளின் வாக்கு வங்கியை குறி வைக்கிறது. இது வரை தங்களை சமூக நீதிக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டவர்களின் ஆட்சிகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களே தலித்துகளை பாஜக பக்கம் நகர்த்துகிறது. பாஜக இதனாலெல்லாம் உயர் ஜாதியினர் கட்சி என்ற அடையாளத்தை முற்றும் துறந்து விட்டதாக சொல்ல முடியாது. மஹாராஷ்டிரா தலித்துகளை பீமா கோரேகான் கிளர்ச்சியில் வேட்டையாடப்பட்டதோடு பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சாட்சியங்கள் அதி நுட்பமான தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று பத்திரிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களுள் அம்பேத்கரின் பேரனும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்ப்டேவும் ஒருவர். தலித்துகள் பண்பாட்டு ரீதியாக பௌத்த மீட்பு பேசினால் பாஜக உயர் ஜாதியினரிடமிருந்து வரும் எதிர் வினைகள் சொல்லும் அக்கட்சியின் ஆன்மா யாரென்று. அம்பேத்கரை இந்துத்துவம் சுவீகரிப்பது போன்ற ஒரு பித்தலாட்டம் வேறொன்றில்லை.
பாஜக வெற்றிபெற பிற காரணங்கள்:
2019 படு தோல்விக்குப் பின் ‘தி இந்து’ பத்திரிக்கையில் வெளிவந்த ராகுல் காந்தியின் கட்டுரை ஒன்றில் (நினைவில் இருந்து சொல்கிறேன்) அவர் தோல்விக்கு பொறுப்பேற்கும் அதே சமயம் எத்தகையதொரு அரசியல் கட்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று சுட்டிக் காட்டினார். முக்கியமாக தேர்தல் கமிஷனின் பாரபட்சம், நீதிமன்றங்கள் அரசுக்கு வளைந்து கொடுப்பது, பல அரசு ஸ்தாபனங்கள் பாஜகவுக்கு துணை நின்றதை எல்லாம் பட்டியலிட்டார்.
ஜாஃப்ரலாட் தேர்தல் கமிஷன் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக 2019-இல் செயல்பட்டதென தொகுத்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 84 இடங்களில் வருமான வரி ரெய்டுகள் நடந்தன. அனைத்தும் எதிர்கட்சியினரின் இடங்கள். மோடி மீதும் அமித் ஷா மீதும் அவர்கள் தேர்தல் பரப்புரைகள் பற்றி அளிக்கப்பட்ட 11 புகார்களையும் கமிஷன் தள்ளுபடிச் செய்தது. அதே கமிஷன் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் என்று மாயாவதியை 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய விடாமல் தடை விதித்தது. யோகி ஆதித்யாநாத் மீதும் அப்படி ஒரு தடை விதிக்கப்பட்ட போது அவர் “தேர்தல் பிரச்சார மேடையில் பஜனையா செய்ய முடியும்?” என்று கேட்டு விட்டு எதிர்கட்சியினரை “பாபரின் வழித் தோன்றல்கள்” என்று ஏசினார்.
2018 முதல் கட்சிகள் தேர்தல் நிதியை சந்தை பத்திரம் (Electoral Bonds) மூலமாக திரட்டலாம் என்று சட்டம் அமலானது. அப்படி திரட்டப்பட்ட நிதிகளில் பாஜக 67.9% (ரூ 4,215 கோடி); காங்கிரஸ் 11.3% (ரூ 706 கோடி) பெற்றிருக்கின்றன. இக்கட்சிகளுக்கு யார் அல்லது எந்த நிறுவனங்கள் பணம் கொடையளித்தன என்று வெளியிடத் தேவையில்லை. அயல்நாடுகளிலிருந்தும் பணம் சேகரிக்கலாம். உண்மையில் இப்படி ஒரு சட்டம் அமெரிக்காவில் சாத்தியமேயில்லை, அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒருவர் அரசியல் கட்சிக்கு பணம் கொடையளிக்க முடியாது. பொதுவாகவே எல்லா ஜனநாயகத்திலும் ஆளும் கட்சிக்கு தனியார் நிறுவனங்களும் மற்றவர்களும் அதிகமாகவும் பிரதான எதிர்கட்சிக்கு சற்று குறையவும் கொடையளிப்பார்கள் ஆனால் இந்தியாவில் மட்டும் ஆளும் கட்சி மிகப் பெரும் பங்கை அள்ளுகிறது. இந்த அசுர பண பலம் பாஜகவுக்கு பிரச்சாரங்களுக்கு, இணைய தள விளம்பரங்களுக்கு உதவுகிறது. பெரும்பாலான இவ்வகை நிதிகள், 91%, ஒரு கோடியை தாண்டும் என்கிறது குவிண்ட் பத்திரிக்கை, அப்படியானால் அவை பணக்காரர்களும் பெரும் நிறுவனங்களும் அளித்தவை தான். இது ஆரோக்கியமே அல்ல.
பாஜக வெற்றியில் பெரும்பங்கு வகிப்பது சமூக வலைதளங்களில் அக்கட்சி செலுத்தும் செல்வாக்கு. அதுவே அக்கட்சி மதவாத வாக்காளர்களை உருவாக்கவும் பின் தேர்தல் சமயத்தில் அவர்கள் வாக்குகளை அறுவடை செய்யவும் உதவும் முக்கியமான அஸ்திரம். மதவாதம் ஏன் பாஜகவுக்கு தேவைப்படுகிறது, ஒரு கட்சியின் மதவாதம் எப்படி வாக்காளர்களின் தேர்தல் நேர தேர்வுகளில் முக்கியமாகிறது என்று புரிந்துக் கொள்ள முதலில் பாஜக வெற்றியில் சமூக வலை தளங்களின் பங்கினை பார்ப்போம்
சமுக வலைதளங்களும் வெறுப்பு பிரச்சாரமும்:
சென்ற வருடம் “ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமித்துகிறது” என்ற தலைப்பில் அருஞ்சொல் தளத்தில் வெளியான என் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.
“2019 தேர்தலுக்கு “ஐ.டி. படை வீரர்கள்” (I.T. Yoddhas) என்று ஒரு அணியையே அமித் ஷா தயார் செய்தார். அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாக சொல்கிறார். இவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக “நானும் சௌகிதார்” என்று உறுதி மொழி எடுத்துக் கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் (influrence)செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர்.
2019-இல் பா.ஜ.க 200,000-300,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் காங்கிரஸ் 80,000-100,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறாது. பேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலி அக்கவுண்டுகளை முடக்கியதில் முக்கியமானது பா.ஜ.க சார்பான “India Eye”. ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பது போலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “ பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்தும் கொண்டு சேர்க்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்” என்றார்.”
“பேஸ்புக்கில் இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பா.ஜ.க இருப்பதை பற்றி ஆகஸ்டு 2020-இல் WSJ முதலில் விரிவான கட்டுரை வெளியிட்டது.
பா.ஜ.க எம்.பி அணந்தகுமார் ஹெக்டே இந்திய முஸ்லிம்கள் கொரோனா தொற்றினை பரவச் செய்கின்றனர் என்று சமூக வலைத் தளங்களில் பதிவுகள் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது, ஆனால் பேஸ்புக்கோ WSJ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும் வரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று பேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. CrowdTangle என்கிற பேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்த பதிவுக்கு முன் ஒரு